second review completed

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 07:57, 23 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
பள்ளிச் சின்னம்

தேசிய வகை பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளி. சிலாங்கூரின் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

1962-ல் கட்டப்பட்ட புதிய கட்டிடம்

1962--ம் ஆண்டு பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி அதிகாரப்பூர்வமாகப் 'பத்தாங் பெர்ஜூந்தை தமிழ்ப்பள்ளி' என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்டது. 1962-ல் அதிகாரப்பூர்வமாக இப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டாலும் மலாயாவில் ஜப்பானியர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து இப்பள்ளி இயங்கி வருகின்றது. ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் செயலிழந்த பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி 1945-ல் மலாயாவில் மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சி வந்தவுடன் இயங்கத் தொடங்கியது.பள்ளிக்கான நிரந்தரக் கட்டிடம் பெற பள்ளியின் நிர்வாகக் குழுவினர் முயற்சித்து தோல்வியடைந்தனர். 1945--ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 30 மாணவர்களோடு பி.எஸ்.ஐயம் பிள்ளை அவர்களை ஆசிரியராகக் கொண்டு இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.1945--ம் ஆண்டு காலக்கட்டத்தில் மாணவர்கள் தோட்ட மண்டோரான தைரியம் என்பவரின் வீட்டை வகுப்பறையாகப் பயன்படுத்தி பாடம் கற்றனர். மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டும் நன்கொடை திரட்டியும் ஆசிரியருக்கான சம்பளம் வழங்கப்பட்டது.

பள்ளியின் கட்டிடம்(2000)

பள்ளி நிர்வாகிகளின் இடைவிடாத முயற்சியினால் நிரந்தரமான கட்டிடமின்றி 1946--ம் ஆண்டு, சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவில் செயலாற்றிய எல். டி. இராஜன் அவர்களின் உதவியால் இப்பள்ளி அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பள்ளிக்கென அரசாங்கத்தால் நிலம் வழங்கப்பட்டது. பத்தாங் பெர்ஜுந்தையில் ஒரு கூட்டுப் பள்ளி உருவாக அரசாங்கம் பல உதவிகளை நல்கியது.

1961-ல் பள்ளிக் கட்டிடம் எழுப்புவதற்கு அரசு மானியமாகப் பள்ளிக்கு 50,000 மலேசிய ரிங்கிட் வழங்கப்பட்டது. அரசாங்க மானியத்தோடு பொது மக்களிடமிருந்து வசூலான தொகையின் துணையோடு பள்ளிக்கு ஒரு புதிய கட்டிடம் எழுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளியின் வரைபடம் மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவரான ச. சாமிவேலு கோலாலம்பூரிலுள்ள வாங் கின் மென் கட்டிட வரைபடம் வரையும் அலுவலகத்தில் பணிபுரிந்த போது அவரால் வரையப்பட்டது.

பள்ளிக்கூடம் கட்டப் போகும் இடம், மேடு பள்ளமாக இருந்ததால் நிலத்தைச் சமப்படுத்தி கட்டிடம் எழுப்ப அதிக தொகை தேவைப்பட்டது. பள்ளிக் கட்டிடம் எழுப்புவதற்காகத் திரட்டிய தொகை போதவில்லை. இவ்வேளையில் பத்தாங் பெர்ஜூந்தையின் ஈய வயல் நிர்வாகி  ஹாரிசன் மற்றும் பத்தாங் பெர்ஜூந்தை ஈய வயலில் பணி புரிந்த சுகுமாரன் ஆகிய இருவரும் நிலத்தைச் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உதவினர். ஆகஸ்ட் 13, 1961-ல் ஹாரிசான் அவர்கள் தலைமையில் பள்ளியின் புதிய கட்டிடத்திற்கான கல்நாட்டு விழா நடைபெற்றது. ஆகஸ்ட் 2, 1962-ல் புதிய கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி கற்றனர்.

பள்ளியின் பெயர் மாற்றம்

1962-ல் 'பத்தாங் பெர்ஜூந்தை தமிழ்ப்பள்ளி' என்ற பெயரில் அழைக்கப்பட்ட பள்ளி 2007--ம் ஆண்டு 'பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி' என்று பெயர் மாற்றம் கண்டது.

கட்டிடம்

பள்ளியின் இணைக்கட்டிடம்

1962-ல் பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்டப்பட்டும் மாணவர்களின் எண்ணிக்கையின் காரணத்தால் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை சிக்கல் நிலவியது. பெற்றோர்களின் முயற்சியாலும் பள்ளி நிர்வாகத்தின் செயல் நடவடிக்கையாலும் மேலும் பள்ளியில் சில இணைக்கட்டிடங்கள் எழுப்பப்பட வேண்டிய கட்டாயங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக,பத்தாங் பெர்ஜுந்தை பொதுமக்கள், நன்கொடையாளர்கள் ஆகியோரின் ஆதரவால் பள்ளிக்கு ஓர் இணைக்கட்டிடம் கிடைக்கப் பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்ததால், பள்ளியில் மீண்டும் வகுப்பறைப் பற்றாக்குறை சிக்கல் ஏற்பட்டது. இச்சிக்கலைக் களைய பள்ளியின் நிர்வாகம் மீண்டும், புதிய இணைக்கட்டிடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டது. இதன் விளைவாக, அரசாங்க உதவியுடன் 2000--ம் ஆண்டில் மூன்று மாடி கொண்ட ஒரு புதிய கட்டிடம் பள்ளியில் எழுப்பப்பட்டது. இக்கட்டிடத்தில் அறிவியல் அறை, கருவூள மையம், ஆசிரியர் அறை போன்றவற்றை கொண்டிருந்தது.

பள்ளியின் வளர்ச்சிக்கேற்ப, அரசாங்கத்தின் உதவியால் பள்ளி வளாகத்தில் ஒரு கணினி அறை அமைக்கப்பட்டது. பள்ளியில் பாலர் வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டு, பாலர் பள்ளிக்கான வகுப்பறைக் கட்டிடமும் அரசாங்கத்தால் கட்டப்பட்டது.

சிறந்த கல்வி வளர்ச்சி நிலையினால் இப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. எல்லாக் காலங்களிலும் வகுப்பறை பற்றாக்குறை சிக்கலை எதிர்நோக்கிய பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி காலை, மதியம் என இரு நேர பள்ளியாகவே செயல்பட்டது. இந்தச் சிக்கலைக் களைய பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளியின் நிர்வாகம் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் பள்ளிக்கு நான்கு மாடி இணைக்கட்டிடம் ஒன்று கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஈஜோக் சட்டமன்ற உறுப்பினராகச் செயலாற்றிய கரு.பார்த்திபன் அவர்களின் முயற்சியில் 2012-ம் ஆண்டு நான்கு மாடி இணைக்கட்டிடத்தை இப்பள்ளி பெற்றது. 2013--ம் ஆண்டு தொடங்கி இப்பள்ளி, ஒரு வேளை பள்ளியாகப் பகலில் செயல்பட்டு வருகின்றது.

பள்ளியின் புதிய கட்டிடம் (2012)

இன்றைய நிலை

பெஸ்தாரி ஜெயா வட்டாரத்தில் பல வளர்ச்சிகளோடு இப்பள்ளி இயங்கி வருகின்றது. கல்வி, இணைப்பாடம் என இவ்வட்டாரத்தில் சிறந்து விளங்கும் பள்ளியாகப் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி விளங்குகின்றது.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியக் கல்வி அமைச்சு, மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.