being created

பெர்சியோங் மன்னர் (மலாய் நாட்டார் கதை)

From Tamil Wiki
Revision as of 08:45, 30 April 2023 by Salma Dhineswary (talk | contribs) (Created page with "பெர்சியோங் மன்னரின் கதை மலாய் நாட்டார் வாய்மொழிக்கதைகளில் மிகப் புகழ்பெற்றது. இது மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தின் சிறந்த வரலாற்று இலக்கியப் படைப்பாகும். இக்கதை 'ஹிகாயத் மெ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெர்சியோங் மன்னரின் கதை மலாய் நாட்டார் வாய்மொழிக்கதைகளில் மிகப் புகழ்பெற்றது. இது மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தின் சிறந்த வரலாற்று இலக்கியப் படைப்பாகும். இக்கதை 'ஹிகாயத் மெரோங் மஹாவங்சா' (Hikayat Merong Mahawangsa) என்ற எழுத்துப்படிவ இலக்கியத்தில் காணப்படுகிறது.

பெர்சியோங் மன்னன்

பெர்சியோங் நாட்டார் கதை மன்னரின் கொடுங்கோன்மையை மிக வெளிப்படையாகச் சொல்லும் இலக்கியமாகச்  சித்தரிக்கப்படுகிறது. இக்கதை 1898 இல் ‘சலாசிலா நெகிரி கெடா தார் அல் அமான்’ (Salasilah Negeri Kedah Dar al Aman) என்ற தலைப்பில் ஆர். ஜே வில்கின்சன் ( R. J Wilkinson ) என்பவரால் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1991 இல் சித்தி ஹவா சாலே (Siti Hawa Salleh) என்பவரால் திருத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது.

பெர்சியோங் மன்னரின் வரலாறு

மெரோங் மஹாவங்சா' (Hikayat Merong Mahawangsa) என்ற எழுத்துப்படிவ இலக்கியத்தில் பெர்சியோங் மன்னர்  சியாம் வம்சாவளியைச் சார்ந்தவர் எனவும் கெடா துவாவின் ஐந்தாவது அரசராகப் பதவியேற்றார் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவரின் இயற்பெயர் ராஜா ஓங் மஹா பெரிதா டெரியா (Raja Ong Maha Perita Deria). பெர்சியோங் மன்னர் கடுமையானவராகவும் மனிதாபிமானமற்றவராகவும் சித்தரிக்கப்படுகிறார்

பெர்சியோங் பெயர் வந்த கதை

பெர்சியோங் மன்னர் எப்போதுமே பசலைக்கீரை உணவை விரும்பிச் சாப்பிடுவார், அவ்வாறு உண்ணும்போது ஒருநாள் அதன் சுவை மாறுபட்டு இருப்பதை உணர்ந்து சமையற்காரனை வரச்சொல்லி உத்தரவிட்டார். சமையற்காரனை விசாரித்ததில் அன்று உணவு சமைக்கும் போது கையில் காயம்பட்டு இரத்தம் தற்செயலாக உணவில் கலந்துவிட்டதைப் பயத்தோடு ஒப்புக்கொண்டான். சமையற்காரன் செய்த தவற்றினால் கடுமையாகத்  தண்டிக்கப்படுவான் என அனைவரும் பயந்தனர். ஆனால் தனக்கு இரத்தம் கலந்த பசலைக்கீரையின் சுவை பிடித்துள்ளதாகவும் அதனால் இனி அதையே சமைத்துத் தர வேண்டுமெனவும் பெர்சியோங் மன்னர் கட்டளை யிட்டார். 

தினமும் இரத்தம் கலந்த கீரை சமையலைச் செய்ய சிறையில் தூக்குத்தண்டனைக்காகக் காத்திருந்த கைதிகள் கொல்லப்பட்டனர்.  அதன் பின் நாட்டிலுள்ள சிறுவர்களையும் கொல்ல உத்தரவிட்டார் பெர்சியோங் மன்னர்.   

அரண்மனை அதிகாரிகள் உட்பட கெடா மக்களும் பெர்சியோங் மன்னர் மீது பெருங்கோபமும் வெறுப்பும் கொண்டனர். பெர்சியோங் மன்னர் இரத்தத்தை உணவில் கலந்து உண்டதன் விளைவாக, அவரது வாயில் இரண்டு கோரைப்பற்கள் (‘சியோங்’) நீண்டு வளர்ந்ததாக நம்பப்படுகிறது. அதனால்தான் அவருக்குக் கோரைப்பற்கள் உடைய மன்னர், ‘ராஜா பெர்சியோங்’ (Raja Bersiong) என்ற பட்டப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

பெர்சியோங் மன்னரின் கொடுங்கோன்மை

பெர்சியோங் மன்னர், மக்களும் எதிரிகளும் தன்னைக்கண்டு அச்சமும் மரியாதையும் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால் மக்களைத் துன்புறுத்தினார். மக்களும் அவருக்குப் பயந்து வாழ்ந்தனர். ஒருமுறை, பெர்சியோங் மன்னரின் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவரது சமையல்காரன் ஒருவன் உணவில்  விஷம் வைக்க முயன்றான். ஆனால், மன்னரின் வேட்டைநாய் அந்த உணவைக் கொட்டித் தின்ற சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. உண்மையறிந்த மன்னர் சமையல்காரனைக் கடுமையாகச் சித்திரவதை செய்து கொன்றார்.

பெர்சியோங் மன்னரின் கொடுங்கோன்மையை எதிர்த்து கெடாவில் மீனவர்களும் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்கள் அனைவரையும் தன் வீரர்களைக் கொண்டு கொன்று குவித்தார் பெர்சியோங் மன்னர்.  கொல்லப்பட்டவர்களில் பெர்சியோங்கின் அமைச்சரின் தம்பியும் ஒருவர்.

பெர்சியோங் மன்னன் திரைப்படம்

சம்பவத்தின் போது, அமைச்சர் கெடாவுக்கு வெளியே இருந்தார். அவர் வீடு திரும்பியபோது, கிராமமக்கள் நடந்ததைக் கூறினர். மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட அமைச்சர், நடந்த அட்டூழியங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கருதினார். சரியான நேரத்திற்காக அவர் காத்திருந்தார். பெர்சியோங் மன்னர் வேட்டையாடச் சென்ற ஒருநாளில், அவர் மற்ற அமைச்சர்கள் மற்றும் பெர்சியோங்கின் இராணுவப் படைகளின் ஆதரவைப் பெற்று மன்னரைக் கொல்ல திட்டம் வகுத்தார்.  கொடுங்கோலனான பெர்சியோங் மன்னரை அனைவரும் சுற்றி வளைத்தனர். நிலைமையையறிந்த பெர்சியோங் மன்னர், அமைச்சரைக் கொல்லும்படி உத்தரவிட்டார். இராணுவப் படையினரும் காவலர்களும் அவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. பெர்சியோங் மன்னர் பயந்துபோய் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் காட்டுக்குள் தப்பிச் சென்றார்.

வாய்வழிச் சான்றும் இறப்பும்

பெர்சியோங் மன்னர் இக்குகையில்தான் மறைந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது

தப்பியோடிய பெர்சியோங் மன்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தனது நீண்டு வளர்ந்த ‘சியோங்கை’  வெட்டி வேரோடு பிடுங்கி எறிந்தார். பெர்சியோங் மன்னர் கோரைப்பற்களை வீசிய பகுதிதான் ‘பாலிங்’ என்று அழைக்கப்படுவதாகக் கெடா மாநிலத்தில் வாய்வழிக் கதைகளின் மூலம் அறியமுடிகிறது. அதுமட்டுமல்லாது தப்பியோடியபின் பேராக் மாநிலத்தில் உள்ள ஈஜோக் எனும் இடத்திலுள்ள குகையில் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இன்றுவரை அப்பகுதி ‘கம்போங் கோத்தா ராஜா பெர்சியோங்’ (Kampung Kota Raja Bersiong) என்று அழைக்கப்படுவதாக அங்கு வாழும் மக்கள் நம்புகின்றனர். தனது கொடுங்கோல் ஆட்சியினால் பெர்சியோங் மன்னர் மறைந்து வாழ்ந்து இறந்து போனதாக இந்நாட்டார் கதை முடிவடைகிறது.

உசாத்துணை

Ibnu Ibrahim At-Tawari, 2021. Misteri Raja bersiong. Kuala Lumpur: Karya Publika.

கெடா மாநில வரலாறு: பெர்சியோங் மன்னர்

பெர்சியோங் மன்னர்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.