under review

பெருந்தேவி

From Tamil Wiki
பெருந்தேவி

பெருந்தேவி (மே 19, 1966) தமிழில் நவீனக் கவிதைகள் எழுதிவரும் கவிஞர். எதிர்கவிதை இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். கவிதை குறித்த அழகியல் கோட்பாடுகளை எழுதிவருகிறார். சமூகவியல் அரசியல் ஆய்வுகளையும் செய்கிறார்.

பிறப்பு, கல்வி

தஞ்சாவூர் நகரில் மே 19, 1966 ஆண்டு சீனிவாசன் - சீதா இணையருக்கு பிறந்தார். திருவாரூர்,மதுரை ஆகிய ஊர்களில் ஆரம்பக்கல்வி. திருப்பாதிரிப்புலியூர் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி, தி.நகர், சென்னை அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி,திருப்பாதிரிப்புலியூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உயர்நிலைக் கல்வி பயின்றார்.

கடலூர் ,கந்தசாமி நாயுடுக் கல்லூரியில் இளங்கலை (வேதியியல்), சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வேதியியல் பயின்றார். கொடைக்கானல் மதர் தெரஸா பல்கலைக்கழகத்தில் முதுகலை (மகளிரியல்), வாஷிங்டன் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ(சமயவியல்) பயின்றார்.

வாஷிங்டன் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் எம்.ஃபில் பயின்றார். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் (சமயவியல், பண்பாட்டு மானுடவியல், மகளிரியல் துறைகளின் ஊடாக).

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம் சியனா கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

படைப்புகள்

பெருந்தேவியின் முதல் படைப்பு நவீன விருட்சம் இதழில் 1995-ல் வெளிவந்த தலைப்பிடப்படாத ஒரு கவிதை. முன்றில் இதழில் பெண் வேடமிட்ட பெண் என்ற சிறுகதை முதல் புனைவு.

புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஆத்மாநாம், எமிலி டிக்கின்ஸன், ரில்கே, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, நிகனோர் பர்ரா ஆகியோரின் செல்வாக்கு தன் படைப்புகளில் உண்டு என பெருந்தேவி கருதுகிறார்

பங்களிப்பு

பெருந்தேவி பின்நவீனத்துவ, பின் அமைப்புவாதச் சிந்தனைகளால் கவரப்பட்டவர். இலக்கியத்தை கல்வித்துறை சார்ந்த ஆய்வுமுறைமைகளின் படி ஆராய்பவர். சமூகவியல், அரசியல் சார்ந்தும் பெண்ணியம் சார்ந்தும் தொடர்ந்து எழுதியவர். அவ்வகையில் தழிழ்ச் சிந்தனையில் தொடர்ச்சியான ஊடாட்டத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

நிகனோர் பார்ராவின் எதிர்கவிதை இயக்கத்தை தமிழில் முன்வைப்பதன் வழியாக கவிதை அழகியலில் ஒரு தொடர்விவாதத்தை உருவாக்கினார்.

புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றிய ஆய்வுகளை செய்திருக்கிறார். அசோகமித்திரன் பற்றிய ஓர் ஆய்வுக்கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

விருதுகள்

  • 2016: மணல்வீடு (வாசகர் வட்டம்) ராஜம் கிருஷ்ணன் விருது
  • 2021: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது (கவிதைக்காக)

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்புகள்

  • உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான்புணர்ந்திருக்கிறாய் (உயிர்மை, 2021)
  • இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம் (உயிர்மை, 2020)
  • விளையாட வந்த எந்திர பூதம் (யாவரும், 2019)
  • பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் (விருட்சம், 2017)
  • அழுக்கு சாக்ஸ் (விருட்சம், 2016)
  • வாயாடிக் கவிதைகள் (விருட்சம், 2016)
  • உலோக ருசி (காலச்சுவடு, 2010)
  • இக்கடல் இச்சுவை (காலச்சுவடு, 2006)
  • தீயுறைத் தூக்கம் (விருட்சம்-சஹானா, 1998)

தொகுத்தவை

  • அசோகமித்திரனை வாசித்தல் (காலச்சுவடு, 2018)

கட்டுரைத் தொகுப்புகள்

  • தேசம்-சாதி-சமயம்: அதிகாரத்தைப் புரிந்துகொள்ளல் (காலச்சுவடு, 2020)
  • உடல்-பால்- பொருள்: பாலியல் வன்முறை எனும் சமூகச் செயற்பாடு (காலச்சுவடு, 2019)

குறுங்கதைத் தொகுப்புகள்

  • கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன? (காலச்சுவடு, 2022)
  • ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் (சஹானா, 2020)

மொழிபெயர்ப்பு

  • மூச்சே நறுமணமானால், அக்கமகாதேவி (காலச்சுவடு, 2022)

பிற இணைப்புகள்


✅Finalised Page