பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்

From Tamil Wiki
Revision as of 18:30, 19 February 2022 by Subhasrees (talk | contribs) (பெரிய திருக்குன்றம் சுப்பராமையர் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுப்பராமையர் (1750-1835) தமிழ் கர்நாடக இசையில் இசைப்பாடல்கள் இயற்றிய முன்னோடி. தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் சிவாஜி மீது குறவஞ்சி நாடகம் எழுதியவர்.

இளமை, கல்வி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார் பாளையம் தாலுகாவில் உள்ள பெரிய திருக்குன்றமென்னும் கிராமத்தில், 1750-ல், பரம்பரையாக சங்கீதப்புலமை கொண்டிருந்த அந்தண குடும்பத்தில் இராமசாமி ஐயருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அவர் அந்தணர்களுள் அஷ்டஸஹஸ்ரமென்னும் வகுப்பைச் சார்ந்தவர். இராமசாமி ஐயருக்கு ஐந்து குமாரர்களும் ஒரு பெண்ணும் உண்டு. பரம்பரையாக இருந்துவந்த இசைச் செல்வத்தால் பல சிற்றரசர்கள் வழங்கிய பொருளும் பூமியும் இருந்தன. அதனால் சுப்பராமையருடைய தந்தையாருக்கு வறுமை இல்லை. தம்முடைய நில வருமானங்களை வைத்துக்கொண்டு அவர் சங்கீதக் கலையையும் வளர்த்து வாழ்ந்திருந்தார். அக்காலத்தில் கபிஸ்தலத்தில் இருந்த முத்தைய மூப்பனாருக்கும் இராமசாமி ஐயருக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்தது. இராமசாமி ஐயருக்கு அவ்வப்போது மூப்பனாருடைய உதவியும் கிடைத்து வந்தது.

சுப்பராமையர் முதலில் தன் தந்தையிடம் தமிழும் இசையும் பயின்றார். அரியலூர் சண்பகமன்னார் தமிழிலும் இசையிலும் திறமை வாய்ந்தவர்; பல கீர்த்தனங்களை இயற்றியவர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் வேதாந்த சாஸ்திரங்களையும் அவரிடம் சுப்பராமையர் கற்றார். அக்காலத்தில் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் பச்சை மிரியன் ஆதிப்பையரென்பவர் பெரும்புகழ் பெற்ற சங்கீத ஆசிரியராக இருந்தார். இராமசாமி ஐயர் ஆதிப்பையரிடம் தன் மகன்களை இசை கற்க அனுப்பினார்.

சுப்பராமையர் சங்கீதத்தோடு தமிழையும் இடைவிடாமல் கற்று வந்தார். அவ்வப்போது சில கீர்த்தனங்களையும் பாடல்களையும் இயற்றிப் பழகினார். தனது இஷ்ட தெய்வமாகிய முருகக்கடவுள் மீது பாடிய கீர்த்தனங்களைத் ஆதிப்பையரிடம் காட்டுவது வழக்கம். அக்கீர்த்தனங்களைக் கேட்டு அவருடைய குரு சங்கீதமும் சாஹித்தியமும் ஒன்றோடு ஒன்று நன்றாக பொருந்தி விளங்கியதைப் பாராட்டினார்[1].

தனிவாழ்க்கை

சுப்பராமையர் மூன்று மனைவியரை மணந்தனர். முதல் தாரத்திற்குச் சுப்பையர் என்ற பிள்ளை ஒருவர் பிறந்தார். அவரும் சங்கீதப் பயிற்சி பெற்றவர். அதுதவிர மூன்று பெண்களும் பிறந்தனர்.

இசைப்பணி

சுப்பராமையர், தஞ்சை சரபோஜி மன்னன் (1799-1832) சபையிலும் அவர் மகன் சிவாஜி மன்னன் சபையிலும் அவைவித்துவானாக இருந்தார். தஞ்சைப் பெருவுடையார் மீது ஒரு குறவஞ்சி நாடகம் பாடினார். பிறகு சிவாஜி மன்னன் மீதும் ஒரு குறவஞ்சி பாடினார். பிறகு சில அதி காரிகள் விரும்பியபடி சிவாஜி மன்னர்மீது ஐந்து ராகங்களில் பஞ்சரத்தினமாக ஐந்து கீர்த்தனங்களையும் இயற்றினார். சுப்பராமையர் புகழ் மீது பொறாமை கொண்ட சிலர் தமிழ்ப் பாடல்களைக் கேட்டால் குலம் அழிந்துவிடும் என மன்னனை அச்சுறுத்தினர். சிவாஜி மன்னனும் தமிழ்ப் பாடல்கள் கேட்பதை நிறுத்துவிட்டார். அதன் பிறகு சமஸ்தான பதவியிலிருந்து விலகி, தனிப்பாடல்களாக இயற்றத் தொடங்கினார்.

முருகன், அம்பிகை, சிவன், திருமால் மீது அவர் பல கீர்த்தனங்கள் இயற்றியிருக்கிறார். சுப்பராமையரின் கீர்த்தனைகள் ராகபாவங்களை நன்றாக வெளிப்படுத்தும் வகையிலும், இலக்கணப் பிழையின்றியும், எளிய நடையில் நல்ல பொருள் கொண்டவையாகவும் இருந்ததை தமிழ் வித்வான்கள் பாராட்டினர்.

இவரது கீர்த்தனங்களுக்கு உதாரணமாக இன்று கிடைக்கும் பாடல் கும்பகோணத்தில் திருக்குடந்தைக் கீழ்த்தோட்டம் ஆலயத்தின் பெரியநாயகி மீது பாடப்பட்டது.

ராகம்: பைரவி, தாளம்: ஆதி

பல்லவி

தினம்தினமுன் பதந்தனை நினைந்து நான்

பணிந்திடவும் வரம்தாரும் - என் அம்மா (தினம்)

அனுபல்லவி

அனந்த விதம் நினைந்து பணி அணிந்து

கனம் பெறுமின் னெனும் பெரிய நாயகி (தினம்)

சரணம்

பகுந்தருள வடங்கலவை சேர்பொடி

பதிந்த தனம் மிகுந்த கனி வாய்க்கிளி

திருந்துமொழி தெளிந்த பிறை வாணுதல்

செயங்கொள் சிலை எனும் புருவமும்

பொருந்து செவி அணிந்தமணி ஓலைகள்

புறந்தனிலே இறங்கு கதிர் வீசிட

விரிந்தமலர் புனைந்த குழல் மேகலை

விளங்குமிடை சிலம்பினொலியோடனு (தினம்)

இவருடைய இளைய சகோதரர்கள் சுந்தரையர் கிருஷ்ணையர் இருவரும் சுப்பராமையரைப் போலவே சங்கீதத்தில் திறமை கொண்டு இருந்தனர். கனமார்க்கத்தைத் தமிழ்நாட்டில் பயின்று பாடிப் புகழ்பெற்ற கனம் கிருஷ்ணையர் தான் இவருடைய ஒரு இளைய சகோதரர். இசைப் புலமையால் தஞ்சாவூர் சமஸ்தானத்து வித்துவான்கள் வரிசையிலே சேரும் சிறப்பைச் சுப்பராமையரும், சுந்தரையரும், கிருஷ்ணையரும் பெற்றனர்.

கும்பகோணத்தில் உபய சமஸ்தான திவானாக விளங்கிய ஸ்ரீ வாலீஸ் அப்புராயரென்பவர் இசைக் கலைஞர்களிடம் அன்புடையவராக விளங்கினார். அவர் வீட்டில் அவ்வப்போது இசை விருந்துகள் நடக்கும். ஒருமுறை சங்கராபரணத்தைச் சிலகாலம் அடகு வைத்தவராகிய நரஸையருடைய கச்சேரி நடைபெற்றது. சுப்புராமையர் அதற்கு சென்றிருந்தார். அப்போது வாலீஸ் அப்புராயர் சுப்பராமையரிடம் சங்கராபரணத்தில் புதிதாக ஒரு கீர்த்தனம் பாடுமாறு வேண்டிக்கொண்டார். சுப்பராமையர் அப்போதே சங்கராபரண ராகத்தில் மூன்று காலமும் அமைத்து 'மிஞ்சுதே விரகம்' என்ற பல்லவி அமைத்து ஒரு கீர்த்தனம் பாடினார். இவரது புலமையை விளக்கும் இந்நிகழ்சியை உ.வே. சாமிநாதையர் ‘நினைவு மஞ்சரி’ என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்