under review

பூண்டி பொன்னி நாதர் கோயில்

From Tamil Wiki
Revision as of 17:45, 24 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "பூண்டி பொன்னி நாதர் கோயில் (பொ.யு. 13ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) வட ஆற்காடு மாவட்டத்தில் பூண்டியில் அமைந்த சமணக் கோயில். இங்கு முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதரு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பூண்டி பொன்னி நாதர் கோயில் (பொ.யு. 13ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) வட ஆற்காடு மாவட்டத்தில் பூண்டியில் அமைந்த சமணக் கோயில். இங்கு முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதருக்கெனக் கட்டப்பட்ட கோயில் உள்ளது.

இடம்

வடஆர்காடு மாவட்டத்தில் ஆரணிக்கு அண்மையிலுள்ள பூண்டியில் பொன்னி நாதர் கோயில் உள்ளது.

வரலாறு

இந்த கோயிலை வீரவீரன் என்ற பட்டப்பெயரைக்கொண்ட சம்புவராய சிற்றரசன் கட்டியமையால், இது வீரவீரஜினாலாயம் எனவும் அழைக்கப் பெற்றிருந்திருக்கிறது.

அமைப்பு

பொன்னி நாதர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய பகுதிகளை உடையது. இதன் அடிதளத்திலிருந்து கூரைவரை கருங்கல்லினாலும், அதற்கு மேலுள்ள விமான பகுதி செங்கல், சுதை ஆகியவற்றாலும் கட்டப்பட்டது. கோயிலின் அடித்தளம் உபானம், ஜகதி, குமுதம், கண்டரம், மேல்ப்பட்டிகை முதலிய உறுப்புகளைக் கொண்டதாகும், வெளிப்புறச்சுவர்களில் சிறிய அளவிலான மாடங்களும், அரைத்தூண்களும் இடம் பெற்றுள்ளது. இந்த அரைத்தூண்கள் சதுர வடிவத்துடன் மேற்பகுதியில் கும்பம், கலசம், பலகை, பூமுனைகளையுடைய போதிகை ஆகியவற்றைக் கொண்டது. மண்டபத்தினுள் நிறுவப்பட்டுள்ள தூண்களும் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டையக் கலைப்பாணியைக் கொண்டது.

ஒரு தளத்தினையுடைய விமானமும், இத்தளத்தில் கூடம், சாலை எனப்பெறும் சிற்றுருவக்கோயில் அமைப்புகளும் அவற்றிற்கிடையில் தீர்த்தங்கரர், யக்ஷன், யக்ஷி ஆகியோரது சுதைவடிவங்களும் உள்ளன. தளத்தின் மேற் பகுதியில் கிரீவமும், உருண்டைவடிவ சிகரமும் உள்ளன. சிகரத்தின் கிரீவப்பகுதியில் தீர்த்தங்கரர் திருவுருவங்களைப் பெற்ற கோட்டங்களும் சிங்கமுக வளைவுகளும் இடம் பெற்றுள்ளன. கோயிலைச் சுற்றி திருச்சுற்றுமதிலும், கோபுரவாயிலும் உள்ளன. கோபுரத்தின் அடிப்பகுதி கருங்கல்லினாலும் தளங்கள் செங்கல்லினாலும் உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு தளத்திலிலும் சிற்றுருவக்கோயில் அமைப்புகளும், சுதை வடிவங்களும் படைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு மேலாகக் கூண்டுவடிவசிகரம் அமைக்கப்பபட்டுள்ளது.

சிற்பங்கள்

மூலவராகிய பொன்னி தருமதேவி, பார்சுவ நாதர் சிற்பங்கள் உள்ளன. கருவறையிலுள்ள மூலவர் திருவுருவம் மூன்று அடி உயரமுடைய புடைப்புச்சிற்பம். மலர்ந்த முகப் பொலிவினையும், பரந்த உடலமைப்பினையும் பெற்றுத் தியானக்கோலத்தில் வீற்றிருக்கும் இத்தீர்த்தங்கரரின் இரு மருங்கிலும் சாமரம் வீசுவோரது சிற்றுருவங்கள் உள்ளன. இவரது தலைக்கு மேல் முக்குடையும் மெல்லியதாக வடிக்கப்பட்டிருக்கிறது ஆனால் இதில் அலங்கார பிரபை வடிவம் தீட்டப்பெறவில்லை.

இந்த சிற்பம் கோயில் தோற்றுவிக்கப்பட்ட பொ.யு. 13ஆம் நூற்றாண்டில் பிரதிட்டை செய்யப்பெற்ற பழைய திருவடிவம். மண்டபத்தின் ஒருபுறத்தில் அழகிய தருமதேவிச் சிற்பம் நிறுவப்பெற்றுள்ளது. கரண்டமகுடம். குண்டலங்கள். அடுக்கடுக்கான கழுத்தணிகள் கேயூரங்கள்; கைவளைகள், மேகலை ஆகியவை அணிந்துள்ளாள். அருளுணர்வினைப் பிரதிபலிக்கும் கனிந்த முகமும் தாய்மையினை அறிவுறுத்தும் பருத்துத்திரண்ட மார்பகங்களும் ஒடுங்கிய இடையும், தசை மடிப்புகளையுடைய வயிற்றுப்பகுதியும் இச்சிற்பத்திற்கு உயிரோட்டம் அளிப்பவையாகும். வீற்றிருக்கும் பீடத்தில் இவளது இருமைந்தரும், பணிப்பெண்ணும் சிற்றுருவங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அழகிய கலைச்செல்வமும் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தாகும் இது புடைப்புச் சிற்பமாக இன்றி தனிச்சிற்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கோயிலில் காணப்படும் பார்சுவநாதர் சிற்பம் மிகுந்த வேலைப் பாடுகளுடன் திகழ்கிறது. பார்சுவதேவர் அணியாத அழகராய் அசைவற்ற தவக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இவரது தலைக்கு மேல் ஐந்து தலைப் பாம்பு காணப்படுகிறது. இத்தீர்த்தங்கரர் திருவுருவத்தைச் சுற்றிலும் பெரிய அளவில் அமைக்கப்பட்டிருக்கும் பிரபை அலங்கார வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பூ வேலைப் பாடுகளுடைய இந்த திருவாசியின் மேற் பகுதி பரந்து காணப்படுவதால், அழகிய தோரண வாயிலைப் போன்று விளங்குகிறது. இச் சிற்பம் பொ.யு. 16 ஆம் நூற்றாண்டைய கலைப்பாணியைக் கொண்டிலங்குவதால் பிற்காலத்தில் இங்கு நிறுவப்பட்டிருக்கிறதென்பது தெளிவாகிறது. இந்த கோயிலில் காணப்படும் உலோகத் திருமேனிகள் யாவும் காலத்தால் பிந்தியவையாகும். எனவேதான் இவை அழகிய கலையம்சங்களைப் பெற்றிலங்கவில்லை.

தல வரலாறு

பூண்டியிலுள்ள கோயிலைப் பற்றிய சுவையான தல வர வாற்றுச் செய்தியொன்று மெக்கன்சி சுவடித் தொகுப்பில் காணப்படுகிறது. முன் பொருகால் இத்தலத்திலுள்ள காட்டில் இரும்பன், பாண்டன் என்னும் வேடர்கள் வள்ளிக்கிழங் கெடுப்பதற்காக எறும்புப் புற்று ஒன்றினைத் தோண்டினர். அவ்வாறு செய்யுங் கால் அப்புற்றினுள் பன்னெடுங்காலமாகத் தவமியற்றி வந்த முனிவரது மார்பில் அவர்களது தோண்டு கருவி படலாயிற்று. அம் முனிவரது திருவுருவத்தைக் கண்ட வேடர்கள் வியப்பு மிகுதியால் பழம், தேன் முதலியவற்றைப் படைத்து அவருக்கு வழிபாடு செய் தனர். அப்போது அவ்வழியாக வந்த சமய நாதர் என்னும் சமணத் துறவியிடம் வேடர்கள் இச் செய்தியினைக் கூறவும், அவரும் விரைந்து அங்கு சென்று பார்த்தார். புற்றினுள் தவ மிருந்த முனிவர் அருக தேவனேயன்றி வேறொருவருமில்லை என்பதை உணர்ந்த துறவி, முனிவரைத் தரிசித்து விட்டு அங்கு அருகக் கடவுளுக்குக் கோயில் ஒன்று எழுப்ப வேண்டுமெனத் தம் மனதில் எண்ணுவாராயினர். இதனை அறிந்த வேடர்கள் அப் போது அரசாட்சி செய்த இராயனிடம் சென்று இந்த அதிசயச் செயல் பற்றி விளக்கிக் கூறவும், மன்னன் மனமுவந்து அங்கு ஒரு கோயில் கட்டுவித்தான். தமது எண்ணம் ஈடேறிய நிலையில் சமய நாதமுனிஸ்வரர் வேடர்களுக்கு நல்லாசி வழங்கி, அவர்களது நனைவாக இரண்டு ஊர்களுக்கு பூண்டி எனவும், இரும்பேடு எனவும் பெயர்கள் சூட்டினார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தல வரலாற்றுச் செய்தியிலிருந்து பூண்டியிலுள்ள இராயன் (சம்புவராயன்) என்னும் சிற்றரசனால் கட்டப்பட்டது என்பது தெரிய வருகிறது. சமய நாதமுனீஸ்வரர் என்னும் துறவியரைப் பற்றிய விரிவான செய்திகள் நமக்குத் தெரிய வரவில்லை. பூண்டி, இரும்பேடு ஆகிய ஊர்களுக்கு ஏற்பட்ட காரணத்தையும் இக்கதையின் வாயிலாக அறிகிறோம். இந்த தல வரலாற்றினைப் போன்று கொண்டையிலுள்ள பார்சுவ நாதர் சிற்பமும் வேடர்கள் கிழங்கெடுப்பதற்காகத் தோண்டிய போது வெளிப்பட்டது எனக் கூறப்பட்டிருப்பது ஈண்டு நினைவு கூரத்தக்க தாகும்.

கல்வெட்டுக்கள்

பொன்னி நாதர் கோயிலில் வீர வீரசம்புவராய சிற்றரசனது ஒரே ஒரு சாசனம் மட்டும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது மேற் கூறப்பட்டுள்ள தல வரலாற்றுச் செய்தியைக் கொண்டு விளங்குவது ஒரு சிறப்பாகும். மேலும் இதில் சம்புவராயன் கோயிலுக்குத் தானமாக அளித்த நிலங்களின் விரிவான செய்தியும் இடம் பெற்றிருக்கிறது. அதாவது செங்கோல் முறை தவறாது ஆட்சி புரிந்த கொற்றவனாகிய சம்புவராயன் மாதவ முனிவரிடம், மெய்யாகிய தவநெறிக்குத்தாம் என்ன செய்ய வேண்டுமென வினவ, தவத்திற் சிறந்த அம்முனிவர் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்தில் பயன் தருகின்ற சோலைகளையுடைய பல்குன்றக் கோட்டத்தில் வேண்டியவற்றையெல்லாம் அளிக்கும் மெய்யூர் நாட்டில் காண்பதற்கு அரிய திருநகராகிய பூண்டியில் வெற்றியை அளிக்க வல்ல சம்புவாகிய அருகனது அற நெறியைப் போற்றி வளரச் செய்ய வேண்டுமெனக் கூறினார். எனவே மன்னர்க்கு மன்னனாகிய வீர ஜினவரன் தனக்கு செம்பொற்கோயில் ஒன்றினைத் எடுப்பித்து அதற்குத் தனது பெயரால் வீரவீரஜினாலயம் எனப்பெயர்சூட்டி மகிழ்ந்தான். இதனால் முனிகள் பூண்டி என்னும் இத்தலத்திலும் இதனையடுத்துள்ள இரும்பேடு என்னும் தலத்திலும் நல்லறம் தழைக்க வழிவகை ஏற்படலாயிற்று.

மேலும் இந்த சிற்றரசன் இக்கோயிலுக்கு மிகுதியான நிலங்களையும் தானமாக அளித்திருக்கிறான். இந்த நிலங்கள் கணியிலுப்பைக்கு மேற்காகவும், நெருநற்பாக்கத்திற்கு வடமேற்காகவும், பொரு நற்குன்றுப் புனலாற்றிற்கு வடக்கிலும், ஆதித்தமங்கலத்திற்கு தென்கிழக்காகவும், குண்டிகைக் துறைக்கு வடகிழக்காகவும், ஆதித்த மங்கலத்துக்கு கிழக்காகவும், மெய்யூரிலுள்ள பொய்கைக்குத் தெற்காகவும் மறையோர் ஆதைக்கு (நிலத்திற்கு?) தெற்கிலும், ஆதனூரிலுள்ள மடுவிற்கு தென்மேற்கிலும் ஆகிய எட்டு திசைகளில் உள்ள எல்லைகளுக்குட்பட்டதாக இருந்திருக்கிறது. இத்தகைய எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அதில் குண்டிகைக் கற்களும்நடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தானமாகக் கொடுக்கப்பட்ட கிடைக்கப்பெறும் அந்தராயம், ஆயம் முதலிய வரிகளைக்கொண்டு கோயிலின் மாளிகை எடுக்கப்படுவதற்கு வழி செய்யப்பட்டிருக்கிறது. மற்றும் இந்நிலங்களில் கமுகு, செந்நெல், கரும்பு ஆகியவை பயிர் செய்வதற்கும்; சம்பகம், சாதிப்பூ. செங்கழுநீர்ப்பூ வகைகளைத் தருகின்ற செடிகளை வளர்ப்பதற்கும் மன்னன் ஆவன செய்திருக்கிறான். இவ்வாறு நற்பணிபுரிந்து தருமமும், தவமும் தழைப்பதற்கு வீரவீரன் வழிகோலியமையால் அவனது புகழ் செங்கதிரோன் நிலவுகின்ற வானம் வரையிலும் பரவலாயிற்று எனக்கல்வெட்டு கூறுகிறது.

இந்த சாசனத்திலிருந்து பூண்டி ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் பல்குன்றக்கோட்டத்தின் உட்பிரிவாகிய மெய்யூர்-நாட்டினைச் சார்ந்த ஊர் என்பது தெரியவருகிறது. தலவரலாற்றுச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வேடர்கள் இந்த சாசனத்தில் இடம்பெறவில்லையாயினும், முனிவர் ஒருவரது விருப்பத்திற்கிணங்க இக்கோயிலை வீரவீரசம்புவராயன் கட்டியிருக்கிறான். சோழப்பேரரசர்களுக்கு அடங்கி ஆட்சி செய்த சிற்றரச பரம்பரையினருள் சம்புவராயரும் ஒருவராவர். இச்சாசனம் கூறும் வீரவீரன் என்பது அரசனது பட்டப்பெயரேயன்றி, இயற்பெயரல்ல. பொ.யு. 13ஆம் நூற்றாண்டில் இந்த பட்டப்பெயருடன் திகழ்ந்த சம்புவராய சிற்றரசன் யார் என்பது அறிவதற்கில்லை. எனவே இவனது இயற்பெயரும், ஆட்சிக்காலமும் பற்றி உறுதியாகக் கூறுவதற்கில்லை.

கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் மிகுந்த பரப்பினைக் கொண்டிருந்திருக்கிறது. இவற்றின் எட்டு எல்லைகளும் தெளிவுறக் கூறப்பட்டிருக்கிறது. இதன் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அவற்றில் குண்டிகைச் சின்னம் (கமண்டலம்) பொறிக்கப்பெற்ற கற்கள் நடப்பட்டிருக்கின்றன. இங்குள்ள ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட குண்டிகைத் துறை ஒன்றிருந் திருக்கிறது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்களைச் சுற்றி கணியிலுப்பை, நெரு நற்பாக்ககம், ஆதித்த மங்கலம், மெய்யூர், ஆதனூர் முதலிய ஊர்கள் இருந்ததாக அறிய வருகிறோம். இவற்றுள் மெய்யூர், ஆதனூர் என்ற பெயர்களைத் தவிர எஞ்சியவை தற்போது நிலைத்திருக்கவில்லை.

வழிபாடு

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.