first review completed

பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 64: Line 64:
[[Category:இசைக்கலைஞர்கள்]]
[[Category:இசைக்கலைஞர்கள்]]


{{Standardised}}
{{first review completed}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:06, 23 April 2022

பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார்
பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார்

பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் (ராமநாதபுரம் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார்) (ஆகஸ்ட் 16, 1860 - ஜூலை 20, 1919) தியாகராஜர் இசைமரபு வழி வந்த புகழ்பெற்ற கர்னாடக இசைக்கலைஞர். 100 கீர்த்தனைகளுக்கு மேல் இயற்றியவர். தமிழ் இசையிலும் தெலுங்கு கீர்த்தனைகள் பாடுவதிலும் புகழ் பெற்றவர்.

இளமை, கல்வி

ஸ்ரீனிவாசன் ராமநாதபுரத்தில் நாராயண ஐயங்கார் - லக்ஷ்மி அம்மாள் இணையருக்கு ஆகஸ்ட் 16, 1860 அன்று பிறந்தார்.

இவர் பள்ளியில் பயிலும் போது பாண்டித்துரைத் தேவரின் நட்பு கிடைத்தது. இவரது இசைத்திறமையைக் கண்டு பாண்டித்துரைத் தேவர் இவரை பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடம் இசை பயிற்சி பெற அனுப்பி வைத்தார். அதன் பின்னர் மகா வைத்தியநாதையரிடமும் பல்லவி பாடுவதிலும், ராக ஆலாபனை செய்வதிலும் பயிற்சி பெற்றார்.

இசைப்பணி

ஸ்ரீனிவாச ஐயங்காரின் இசைப்பயிற்சிக்குப் பிறகு பல இசைக்கலைஞர்கள் நடுவே ராமநாதபுர தர்பார் அவையில் அவரது இசைக்கச்சேரி நிகழ்ந்தது. அவரது இசைபாடும் திறனில் மகிழ்ச்சியடைந்த ராமநாதபுர அரசர் பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தார்.

ராமநாதபுர சமஸ்தானத்தில் இசைக்கலைஞராக இருந்தார். சிறந்த குரல் வளத்துக்காகப் புகழ் பெற்றிருந்த பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் பல சமஸ்தானங்களில் பாராட்டுக்களும் விருதுகளும் பெற்றிருக்கிறார். தேனீ போல ரீங்கரிக்கும் குரல் கொண்டவர் என்பதால் ’பூச்சி’ ஸ்ரீனிவாச ஐயங்கார் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். ஸ்ரீனிவாச ஐயங்கார் தனது குரு பட்டணம் சுப்பிரமணிய ஐயர் கற்றுக்கொடுத்த மரபின் படியே முறை வழுவாமல் பாடியவர் என மைசூர் வரதாச்சார் குறிப்பிட்டுள்ளார்.

தியாகராஜரின் கீர்த்தனைகள் பாடுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். திருவையாறு ஆராதனையில் பாடி வந்தார். ரீதிகௌளை ராகத்தில் தியாகராஜர் மீது கீர்த்தனம் இயற்றியிருக்கிறார். மரபார்ந்த முறையில் 100 கீர்த்தனைகளுக்கு மேலாக எழுதியவர். மைசூர், ராமநாதபுரம், சிவகங்கை மன்னர்களைப் புகழ்ந்து தில்லானா இயற்றியிருக்கிறார்.

பல வர்ணங்கள், ஜாவளிகள், கீர்த்தனைகள், தில்லானாக்கள், நவரத்னமாலிகா போன்ற பாடல்வகைகளை இயற்றியிருக்கிறார். இவர் இயற்றிய இரண்டு தில்லானாக்கள் மிகவும் சவலான தாள அமைப்புகளைக் கொண்டவை. (காபி ராக தில்லானா - லக்‌ஷ்மீச தாளம் - ஒரு தாளச்சுற்றில் 108 அங்கங்கள் கொண்டது, பந்துவராளி ராக தில்லானா - ராகவர்தினி தாளம் - ஒரு தாளச்சுற்றில் 72 அங்கங்கள் கொண்டது) ஸ்ரீனிவாச ஐயங்கார் இயற்றிய பல கீர்த்தனைகள் இன்றும் கர்னாடக இசை மேடைகளில் மிகவும் புகழ்பெற்றிருக்கின்றன. இவர் “ஸ்ரீனிவாச” என்ற முத்திரையைப்[1] பயன்படுத்தினார்.

அவருடைய பல பாடல்கள் அச்சாகி இருக்கின்றன.

மாணவர்கள்

புகழ்பெற்ற சில மாணவர்கள்:

  • அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
  • சேலம் துரைசாமி ஐயங்கார்
  • கடையநல்லூர் ஸ்ரீனிவாச ஐயங்கார்
  • காரைக்குடி ராஜாமணி
  • குற்றாலம் ஸ்ரீனிவாச ஐயர்

பாடல்கள்

புகழ்பெற்ற வர்ணங்கள்:

  • நின்னுகோரி யுன்னானுரா - ராகம் மோகனம்
  • நேரா நம்மிதி - ராகம் கானடா
  • சாமி நின்னே - ராகம் ஹிந்தோளம்

புகழ்பெற்ற சில கீர்த்தனைகள்:

  • வனஜாக்‌ஷிரோ - ராகம் கல்யாணி
  • நீ பாதமுலே கதியனி - ராகம் நவரச கானடா
  • சத்குரு ஸ்வாமிகி - ராகம் ரீதிகௌளை

பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மாணவர் சேலம் துரைசாமி ஐயங்காரின் மகன் சேலம் செல்லம் ஐயங்கார் இவரது பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார்.

மறைவு

ஜூலை 20, 1919 அன்று காலமானார்[2].

இதர இணைப்புகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் ஒவ்வொரு பாடலிலும் இடம்பெறும் வகையில் எழுதுவார்கள். அச்சொல் முத்திரை எனப்படும்.
  2. Royal Carpet Carnatic Composers: Ramanadapuram (Puchi) Srinivasa Iyengar (karnatik.com)



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.