under review

புதுக்கழனி குன்று

From Tamil Wiki
Revision as of 07:27, 11 October 2023 by Logamadevi (talk | contribs)

புதுக்கழனி குன்று (பொ.யு. 10-ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) சமணத்தலங்களில் ஒன்று. இங்குள்ள பாறையில் நின்ற நிலையில் பார்சுவநாதரின் சிற்பம் காணப்படுகிறது.

இடம்

விழுப்புரம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள புதுக்கழனி கிராமத்தை ஒட்டியுள்ள மலைப் பகுதியில் சமண சமயச் சான்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமைப்பு

இங்கு மிகவும் சிறிய அளவிலான குகைகள் இருப்பினும் இவற்றில் சமணத்துறவியர் வாழ்ந்தமைக்கு அறிகுறியாக கற்படுக்கைகள் இல்லை. கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக இங்குள்ள பாறையொன்றில் சமணச் சிற்பங்கள் மட்டும் வடிக்கப்பட்டிருக்கின்றன.

பார்சுவநாதர் சிற்பம்

பாறையின் நடுப் பகுதியில் பார்சுவநாதர் நிற்கும் சிற்பத்தைக் காணலாம். அசைவற்ற நெடிய மேனியராய், தாமரை மலரில் நின்றவாறு தவம் புரியும் இவரின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையிலிருக்கிறது. அதற்குச் சிறிது மேலாக முக்குடை வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இவரது இருபுறமும் மென்கோட்டு வடிவங்களாக இரண்டு மானிட வடிவங்கள் தீட்டப் பெற்றிருக்கின்றன. ஆனால் இவற்றின் பெரும் பகுதியும் அழிந்திருக்கிறது. இவை சாமரம் வீசுவோரைக் குறிப்பவையாக இருத்தல் வேண்டும், அலங்கார வேலைப்பாடுகள் இன்றி, இயற்கையான உடல் தோற்றத்துடன் படைக்கப்பட்டிருக்கும் இந்த பார்சுவநாதர் சிற்பம் பொ..யு. 10-ஆம் நூற்றாண்டுக் கலைப் பாணியைக் கொண்டிலங்குகிறது.

உசாத்துணை


✅Finalised Page