under review

புதியமாதவி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
Line 83: Line 83:
* [http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3399&id1=84&issue=20160901 கண்ணுக்குத் தெரியாத கண்னாடிக் கதவுகள்-குங்குமம் தோழி]
* [http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3399&id1=84&issue=20160901 கண்ணுக்குத் தெரியாத கண்னாடிக் கதவுகள்-குங்குமம் தோழி]
* [https://puthu.thinnai.com/archives/24501 புதியமாதவியின் மின்சாரவண்டிகள்-கோவை ஞானி, திண்ணை, பெப்ருவரி 2014]
* [https://puthu.thinnai.com/archives/24501 புதியமாதவியின் மின்சாரவண்டிகள்-கோவை ஞானி, திண்ணை, பெப்ருவரி 2014]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:55, 18 September 2023

oodaru.com

புதியமாதவி(மல்லிகா) (பிறப்பு: மார்ச் 17, 1956) மும்பையை வாழிடமாகக் கொண்ட தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், சமூகப் போராளி, அரசியல் விமரிசகர். மும்பை பெரு நகர வாழ்வை, மாறிவரும் பெண்களின் உலகத்தை, சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளை தன் படைப்புகளில் பதிவு செய்தார். மும்பையின் தமிழ் இலக்கிய முகமாகக் கருதப்படுகிறார்.

பிறப்பு,கல்வி

நன்றி:புதியமாதவி

மல்லிகா நான்காவது தலைமுறை தாராவி (மும்பை) தமிழர். பி எஸ்.வள்ளிநாயகம்-வடிவம்மாள் தம்பதியருக்கு மார்ச் 17, 1956 அன்று மூன்றாவது மகளாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 5 சகோதரிகள், ஒரு சகோதரர். பெற்றோர் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்தவர்கள். தந்தை வள்ளிநாயகம் மும்பை மெர்கண்டைல் வங்கியில் பணியாற்றினார். அண்ணாவின் திராவிட அரசியலோடு தொடர்புடையவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மும்பைக் கிளையைத் தொடங்கினார்.

மல்லிகா தாராவி நகர்மன்றப் பள்ளியில் ஆரம்பக்கல்வியும், பத்தமடை இராமசேஷய்யர் உயர் நிலைப்பள்ளியில் உயர்நிலைக்கல்வியும் கற்றார். புதுமுக வகுப்பும் , இளங்கலையும் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இளங்கலையில் பல்கலைக்கழகத்தில் முதலிடமும், முதுகலையில் தெ.பொ. மீனட்சிசுந்தரனார் நினைவு தங்கப் பதக்கமும் பெற்றார். காமராசர் பல்கலைக்கழகத்தில் தற்காலத் தமிழ் இலக்கிய விமரிசனத்தில் தன்னை மிகவும் ஊக்குவித்தவர்களாக பேராசிரியர் கனக சபாபதி, நவநீத கிருஷ்ணன், நடராஜன், ஜெயராமன் , ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

தனிவாழ்க்கை

மல்லிகா 1980-ல் HSBC வங்கியில் பணியில் சேர்ந்தார். நிர்வாகியாக உயர்ந்து 2004-ல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். நிர்வாகத் திறமைக்காக வங்கியின் 'அம்பாசிடர் விருது' பெற்றார்.

1982-ல் சங்கர நயினாரைத் திருமணம் செய்துகொண்டார். சங்கரநயினார் ONGC நிறுவனத்தில் துணைப் பொது மேலாளர் (DGM) பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர்களுக்கு ஒரு மகள் ப்ரியதர்சிநி ;மகன் வள்ளி மனோரஞ்சன்.

இலக்கிய வாழ்க்கை

புதியமாதவி மாணவப் பருவத்திலிருந்தே வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். கவிதைகளும், சிறுகதைகளும் எழுதினார். தனது சொந்தப் பெயரில் அவற்றை வெளியிட முடியாத சூழலில் அவரது தந்தையின் நண்பர் சண்முகராஜன் அவற்றை மும்பையிலிருந்து வெளிவந்த 'சீர்வரிசை' மாத இதழில் 'புதியமாதவி' என்ற புனைபெயரில் வெளியிட்டார். 'புதியமாதவி' மல்லிகா தன் பள்ளிப்பருவத்தில் எழுதிய முதல் சிறுகதையின் பெயர். புதியமாதவி கவிதை, புத்தக விமர்சனங்கள். சிறுகதை , மொழியாக்கங்கள் செய்தார்.

புதியமாதவி தன் கவிதைகளில் சமகாலத் தன்மையோடு சமூக, அரசியல் நிகழ்வுகளின் மீதான தனது சிந்தனைகளைப் பதிவு செய்தார். முதல் கவிதைத் தொகுப்பு 'சூரிய பயணம்' நாஞ்சில் நாடனின் அணிந்துரையுடன் வெளியானது. 'ஹே ராம்' கவிதைத்தொகுப்பு மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் மதக்கலவரங்களும் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றியது.

மும்பை சாகித்ய அகாதெமி பன்மொழிக் கவிஞர் கவிதைக் கூடலில் முதன்முதலில் வாசிக்கப்பட்ட தமிழ்க்கவிதைகள் புதியமாதவியுடையவை. தன் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்து அவற்றுக்கு இந்தியில் விளக்கமளித்தார்.

மும்பைக்கு பிழைப்பு தேடி வரும் மனிதர்களின் வலிகளைப் பேசுபொருளாகக் கொண்ட 'தனியறைச் சிறுகதைகள்' 'மும்பை போஸ்ட்' வார இதழில் சிறுகதைத் தொடராக வெளிவந்தன. பல்வேறு சிற்றிதழ்களில் வந்த சிறுகதைகளின் தொகுப்பு ' பெண்வழிபாடு' தமிழ் கலாசார வாழ்வியல் சூழலில் சர்ச்சைக்குறிய கேள்விகளை எழுப்பியது. 'பச்சைக் குதிரை' நாவலில் மதமும் சாதியும் பெண்ணுடல் மீது செலுத்தும் அதிகாரங்களும் மீறல்களும் பேசப்படுகின்றன.

புதியமாதவியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் மதசார்பின்மை, சுற்றுப்புறச்சூழல், பெண் மறுப்பு அரசியல் போன்ற சமகாலப் பிரச்சினைகளைப் பேசுபவை.

புதியமாதவி மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கத்தில் (2000) பெரும்பங்காற்றினார். அதன் நிர்வாகத்திலும் பங்காற்றி வருகிறார். மும்பையில் பன்மொழி இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்தார்.

அமைப்பு/சமூகவியல் செயல்பாடுகள்

  • PUKAR( partnership for urban development and research org),
  • மும்பை சாகித்ய அகாதெமியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார்.
  • ஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபை, ஆதிதிராவிடர் பேரவையின் ஆலோசகராகச் செயல்பட்டார்
  • சுவிட்சர்லாந்திலிருந்து செயல்படும் 'ஊடறு' பெண்கள் அமைப்புடன் இணைந்து பன்னாட்டு பெண்கள் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தார். பாரீஸில் அக்டோபர் 13,14 -ல் நடந்த 26-ஆவது பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
  • இந்திய தேர்தல் சீர்திருத்தம் (CERI Campaign for Electoral Reforms in India ) குறித்து மகாராஷ்டிராவில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தினார்
  • தாராவி மக்கள் (குறிப்பாக பெண்கள், குழந்தைகள்) மேம்பாட்டுக்காகப் பல திட்டங்களை முன்னெடுத்தார்.

இலக்கிய இடம்

புதியமாதவி மும்பை தமிழ் சமூகத்தின் முக்கியமான இலக்கியக் குரலாக மதிக்கப்படுகிறார். சமகாலத் தன்மை கொண்ட அவரது படைப்புகள் நகரவாழ்வின் நெருக்கடிகளையும், சமூக அரசியல் நிகழ்வுகளின் பாதிப்புகளையும் சித்தரித்தன. குறிப்பிடத்தக்க பெண்ணியக் கவிஞராகவும் மதிப்பிடப்படுகிறார்.

"பெண்ணுயிரின் வாதனையை, நேர்படப் பேசி, கைநீட்டி உணர்த்தலும், வீச்சு மொழியும் புதியமாதவியுடையது" என்று பா. செயப்பிரகாசம் குறிப்பிடுகிறார். "தமிழை அவர் எத்தனை அழகாக, நேர்த்தியாக எழுதுகிறார், சிறுகதைக்குரிய சிறப்பான நிகழ்ச்சி சித்தரிப்புகள். இவ்வகை சித்தரிப்பில் இவரிடம் குறை காணவே முடியாது. தமிழுக்குக் கிடைத்திருக்கும் ஓர் அற்புதமான கலைஞர்" என்று கோவை ஞானி குறிப்பிடுகிறார்.

"புதிய மாதவி தமிழின் முதன்மையான பெண்ணியக் கவிகளில் ஒருவர். அவரது புனைகதைகள் உள்ளடக்கத்தில் தொடர்ந்து விசாரணைகளை முன்வைத்துக்கொண்டே இருப்பவை. அதற்கேற்பப் புதிய வடிவச் சோதனைகளையும் செய்பவர். தொடர்ச்சியாகப் பயணங்களை மேற்கொண்டு புதியபுதிய பெண்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அவர் பெண்கள் சந்திப்பின் வெளிப்பாடாக இருக்கும் ஊடறுவின் முதன்மையான பங்கேற்பாளராகவும் இருக்கிறார். அவரது குரல் தமிழின் பெண்ணியக்குரல்களில் தனித்துவமானது" என்று அ. ராமசாமி குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • கவிதைகளுக்கான சிற்பி இலக்கிய விருது ( நிழல்களைத் தேடி கவிதை தொகுப்பிற்காக)
  • ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது (பெண்வழிபாடு சிறுகதை தொகுப்பிற்காக
  • மணல்வீடு களரி கலை இலக்கிய விருது (புதிய ஆரம்பங்கள் சிறுகதை தொகுப்பிற்காக)
  • பெரியார் விருது (மின்சார வண்டிகள் சிறுகதை தொகுப்பிற்காக)
  • அறிஞர் அண்ணா விருது – (மும்பை இலெமுரியா அறக்கட்டளை புதியமாதவியின் எழுத்துப்பணிக்காக)
  • எழுத்து” அமைப்பு தேர்வு செய்து வெளியிட்ட முதல் கவிதை நூல் : புதியமாதவியின் “மெளனத்தின் பிளிறல்”
  • சிறந்த புதினம் விருது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா – 2022 பச்சைக்குதிரை” நாவலுக்கு
  • மாநில விடுதலை பண்பாட்டுக் கழகம் -2020 (ரசூலின் மனைவியாகிய நான்)
  • செளமா இலக்கிய விருது – 2020 (பச்சைக்குதிரை நாவலுக்காக)
  • கவண் கவிதை இலக்கிய விருது 2020 (அவள்களின் நாட்குறிப்புகள் கவிதை தொகுப்பிற்காக)

படைப்புகள்

கவிதை
  • சூரியபயணம் – (2000) (ராஜா பதிப்பகம், மும்பை)
  • ஹேராம் –(2003) (மராத்திய மா நில தமிழ் எழுத்தாளர் மன்றம், மும்பை)
  • நிழல்களைத் தேடி – (2005) (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)
  • ஐந்திணை –(2011) (இருவாட்சி, சென்னை )
  • மெளனத்தின் பிளிறல் – (2015) (எழுத்து அமைப்பு. சென்னை)
  • பாலைத்திணை – (2019) (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)
  • அவள்களின் நாட்குறிப்புகள் 2020- அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்)
  • கதவுகள் திறக்கும் வானம் – மொழியாக்க கவிதைகள் 2015 (இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைகள்) (காவ்யா பதிப்பகம், சென்னை)
புனைவு
  • மின்சாரவண்டிகள் – சிறுகதைகள் தொகுப்பு (2005)(மருதா பதிப்பகம் – சென்னை)
  • தனியறை – சிறுகதைகள் தொகுப்பு (2007) (மருதா பதிப்பகம், சென்னை)
  • புதிய ஆரம்பங்கள் – சிறுகதைகள் தொகுப்பு (2007) (மருதா பதிப்பகம் , சென்னை)
  • பெண் வழிபாடு – சிறுகதைகள் தொகுப்பு (2013) (இருவாட்சி – சென்னை)
  • ரசூலின் மனைவியாகிய நான் – சிறுகதைகள் தொகுப்பு. (2019) (காவ்யா பதிப்பகம், சென்னை)
  • பச்சைக்குதிரை – நாவல் (2019) (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)
  • சிறகொடிந்த வலசை – நாவல் 2021 (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,சென்னை)
அ-புனைவு
  • சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள் – இலக்கிய சமூகவியல்– கட்டுரைகள் (2012)(வள்ளிசுந்தர் பதிப்பகம், சென்னை)
  • மழைக்கால மின்னலாய் – இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் (2008) (ராஜம் வெளியீடு- சென்னை)
  • ஊமைத்தசும்புகள் – பெண்ணியம் தலித்தியம் கட்டுரைகள் (2008) ( நடராஜ் பப்ளிகேஷன்ஸ், சென்னை)
  • செய்திகளின் அதிர்வலைகள் – அரசியல் கட்டுரைகள் (2011) (வள்ளிசுந்தர் பதிப்பகம், சென்னை)
  • பெண்ணுடல் பேராயுதம் – பெண்ணியக் கட்டுரைகள் (2016) (இருவாட்சி, சென்னை)
  • சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் (2019).சர்வதேசப் பெண் ஆளுமைகள் , நேர்காணல்களின் மொழியாக்கம் (தொகுப்பாசிரியர்: ஊடறு றஞ்சியுடன் இணைந்து) (காவ்யா பதிப்பகம், சென்னை)
  • சைத்யபூமி – மராட்டிய மண்ணில் தலித்திய வரலாறு கட்டுரைகள் . (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியீடு,
  • 2022)
மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகள்
  • HORSELEAP (பச்சைக்குதிரை நாவல் ஆங்கில மொழியாக்கம்-ozone books)
  • KALAKILLAकालकिल्ल (புதியமாதவியின் கவிதைகள் - மராத்தி மொழியாக்கம்-(Lokvangmaya Griha, Prabhadevi, Mumbai))

உசாத்துணை


✅Finalised Page