being created

புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 09:32, 31 October 2023 by Saalini (talk | contribs) (Created page with "thumb|363x363px தேசிய வகை புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் ஜெராம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளி கோலா சிலாங்கூர் மா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி.jpg

தேசிய வகை புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் ஜெராம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளி கோலா சிலாங்கூர் மாவட்டத்தைச் சார்ந்த பள்ளியாகும்.

வரலாறு

புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி 1936இல் தோற்றுவிக்கப்பட்டது.  ஆரம்பக்காலக்கட்டத்தில் வயது கட்டுப்பாடின்றி சிறுவர்களும் தோட்டத்தில் வேலை செய்யும் பெரியவர்களும் புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றனர். சிறுவர்களுக்குக் காலை 7.30க்கும் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்குக் காலை மணி 11க்கும், மதியம் மணி 2 முதல் மாலை மணி 5.30 வரைக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டன. புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராக திரு. சோனமுத்து பணியாற்றினார்.

மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிப்பு

புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி 2.jpg

இரண்டாம் உலகப் போருக்குப்பின் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. மாணவர்களின் எண்ணிக்கையைச் சமாளிக்கும் வகையில் 1964ஆம் இரண்டு ஆசிரியர்கள் திரு. எம். சங்கரனும் திரு.எ. சண்முகமும் ஆசிரியராக நியமிக்கப்பட்டனர். திரு.சோனமுத்துக்குப் பிறகு திரு.பூ.முருகன் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியேற்றார்.

1957இல் மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, மீண்டும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாணவர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தால் பள்ளிக்கு மேலும் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாணவர்கள் எண்ணிக்கையோடு ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன.

கட்டடம்

1936ஆம் ஆண்டு புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி பலகை சுவர்களாலும் தகரக் கூரைகளாலும் கட்டப்பட்டிருந்தது  அக்கட்டடத்தில் உள்ள வகுப்பறைகள் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானது.  சுதந்திரத்திற்குப் பிறகு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியவுடன் இடப்பற்றாக்குறையை நிவர்த்திச் செய்வதற்காக பள்ளியில் மேலும் மூன்று வகுப்பறைகள் கொண்ட ஓர் இணைக்கட்டடம் கட்டப்பட்டது.

பழைய கட்டடம்

1958ஆம் ஆண்டு புக்கிட் செராக்கா தோட்ட வட்டாரத்தில் அமைந்துள்ள பசுமலைத் தமிழ்ப்பள்ளி புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளியோடு இணைக்கப்பட்டது. பின்னர் 1960இல் அதே வட்டாரத்தில் இயங்கிய புக்கிட் குளோ தமிழ்ப்பள்ளியும், புக்கிட் செராக்கா தமிழ்ப்பள்ளியோடு இணைக்கப்பட்டு கூட்டுப் பள்ளியாக மாற்றம் கண்டது. கூட்டுப்பள்ளியாக உருமாறிய பிறகு பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

கூட்டுப்பள்ளியாக மாறிய காலக்கட்டத்தில் திரு. கண்ணன் இப்பள்ளிக்குப் புதிய தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். திரு. கண்ணன் நிர்வாகத்தின்போது பள்ளியின் தேவைக்கான குடிநீர், கழிவறைகள் போன்ற அத்தியாவசியப் பிரச்சனைகள் களையப்பட்டன. மாணவர்களும் சீரிய முறையில் கல்வி கற்றனர். புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குப் புதிய கட்டடம் வேண்டும் என்ற முயற்சியும் திரு. கண்ணன் அவர்களால் தீவிரமானது.

திரு. கண்ணன் அவர்களின் விடா முயற்சியிலும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தூண்டுதலாலும் 1981ஆம் ஆண்டு, பசுமலை தோட்டத்திற்குப் பக்கத்தில், நெடுஞ்சாலையின் அருகே இரண்டு மாடிகளையும், நவீன வசதிகளையும் கொண்ட ஒரு புதிய கல் கட்டடம், நான்கு ஏக்கர் நிலத்தில் விசாலமான விளையாட்டு மைதானத்தோடு எழுப்பப்பட்டது. இக்கட்டடமானது கோலா சிலாங்கூர் மாவட்டத்திலேயே கட்டப்பட்ட முதல் இரட்டை மாடி கட்டடத்துடன், நவீன வசதிகளைக் கொண்ட தமிழ்ப்பள்ளியாகக் கருதப்பட்டது.

பிப்பரவரி 25, 1982ஆம் ஆண்டு மாணவர்கள் புதிய கட்டடத்தில் கல்வி பெற தொடங்கினர். பின்னர் ஜூன் 1, 1983இல் புக்கிட் பாஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் இப்பள்ளியோடு இணைந்தது. இதன்வழி பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 192லிருந்து 234ஆக உயர்ந்தது.

ஆசிரியர் குழுப்படம்,1955

பள்ளியின் வளர்ச்சிக்கேற்ப மாணவர்களின் பெருக்கமும் அதிகரிக்கத் தொடங்கியவுடன் பள்ளியில் இணைக்கட்டடங்கள் எழுப்பப்பட்டன. பள்ளியில் பல மேம்பாடுகள் கொண்டு வரப்பட்டன. பள்ளி மாணவர்கள் கணினிக் கல்வியில் சிறந்து விளங்க, பள்ளியில் கணினி வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. ஓரளவு போதிய அடிப்படை வசதிகள் கொண்ட புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குக் கல்வி அமைச்சின் வழி பாலர் பள்ளிக்கான கட்டடம் கட்டப்பட்டது.

இன்றைய நிலை

புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலும் சிறப்பாக இயங்கி வருகின்றது. போதிய வசதிகளுடன் புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி பெற்று வருகின்றனர்.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.