புகையிலை விடு தூது
தலைவியைப் பிரிந்து வாடும் தலைவனோ, அல்லது தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியோ, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பறவைகளையோ, விலங்குகளையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூதாக அனுப்புவதே ‘தூது’ இலக்கியமாகும். இது தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று. கலி வெண்பாவால் பாடப்படுவது. அன்னம் விடு தூது, அழகர் கிள்ளை விடு தூது, நாரை விடு தூது, மான் விடு தூது, வண்டு விடு தூது, தென்றல் விடு தூது, முகில் விடு தூது, தமிழ் விடு தூது என்று பல்வேறு நூல்கள் தூது இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. புகையிலை விடு தூது நூலும் அவற்றுள் ஒன்று.
பதிப்பு, வரலாறு
’புகையிலை விடு தூது’ நூலை எழுதியவர் சீனிச்சர்க்கரைப் புலவர். கண்டறிந்து, பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். 1939-ல், இந்நூல் பதிக்கப்பட்டது. நூலின் விலை : இரண்டனா. சென்னை கபீர் அச்சுக்கூடத்தில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
நூலின் முகவுரையில், உ.வே.சா., “பாட்டுடைத் தலைவரான பழனியாண்டவருக்குப் புகையிலைச் சுருட்டு நிவேதனமுண்டென்று சிலர் சொல்லக் கேட்டதுண்டு. விராலிமலையில் அத்தகைய நிவேதன முண்டென்று தெரிகின்றது. இந்தப் புலவருக்கும் புகையிலை போடும் வழக்கம் இருக்கலாம். இந்த இயைபுகளே இந்தப் பிரபந்தத்தைப் பாடுவதற்கு காரணமாக இருந்தன போலும். புகையிலை மிகுதியாகப் பயிரிடப்படுகின்ற இடங்கள் சூழ்ந்த பழனிக்கு அருகில் வசித்த உபகாரி ஒருவர் கேட்டுக்கொள்ள இயற்றியதாகக் கூறுவதும் உண்டு.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நூல் அமைப்பு
பழநி மலையில் குடிகொண்டுள்ள பால சுப்பிரமணியக் கடவுளின் மீது, தலைவி ஒருத்தி புகையிலையைத் தூதாக விடுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. 59 கண்ணிகளைக் கொண்ட இந்தத் தூது இலக்கியத்தில் 53 கண்ணிகள் புகையிலையைப் போற்றியே எழுதப்பட்டுள்ளன. இறைவனின் மீதான காதலைவிட, புகையிலையின் மீதான காதலே இந்த நூலில் அதிகம் காணப்படுகிறது. தமிழுக்கும் புகையிலைக்கும் சிலேடையாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன.
நூலின் ஆசிரியர்
இந்த நூலை எழுதியவர் சீனிச்சர்க்கரைப் புலவர். இவர் புலவர் பரம்பரையில் தோன்றியவர். ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த சர்க்கரைப் புலவரின் மகன். மயூரகிரிக்கோவை இயற்றிய சாந்துப்புலவரின் தம்பி. இவருடைய காலம் பொதுயுகம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி. இவர் ‘திருச்செந்தூர்ப் பரணி’ என்ற தலைப்பில் மற்றொரு இலக்கியத்தையும் தந்துள்ளார்.
முக்கிய பொருண்மைகள்
புகையிலையின் பெருமை, அதிலிருந்து உருவாகும் மூக்குப்பொடியின் சிறப்புப் பற்றி பல்வேறு பாடல்களில் குறிப்பிடுகிறார்.
நன்கு கற்றறிந்த புலவர்கள் கூட புகையிலைக்கு அடிமையாகிவிடுவதை,
"கற்றுத் தெளிந்த கனப்பிரபல வான்களுமுன்
சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ?”