under review

பி.ஆர். ராஜம் ஐயர்

From Tamil Wiki
Revision as of 16:51, 6 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Standardised)
ராஜம் அய்யர்
ராஜம் ஐயர்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


பி. ஆர். ராஜமய்யர் [பி. ஆர். ராஜம் அய்யர்/பி.ஆர். ராஜம் ஐயர்] (ஜனவரி 25, 1872 - மே 13, 1898) எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவ நாட்டம் கொண்ட சிந்தனையாளர். இவரது முழுப்பெயர் பி.ஆர். சிவசுப்பிரமணிய ஐயர். தமிழில் வெளியாகிய முதல் சில நாவல்களில் ஒன்றாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை எழுதியவர். தமிழில் யதார்த்தவாத எழுத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

தனிவாழ்க்கை

பி.ஆர். ராஜம் ஐயர், ஜனவரி 25, 1872 இல் தமிழ்நாட்டில் வத்தலகுண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை ராமையா சாஸ்திரி உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். தந்தைக்கு இருந்த சிறிதளவு நிலபுலன்களை வைத்துக் குடும்பம் நடந்தது.

இவருக்கு 13 வயதில் திருமணம் ஆனது. மனைவி 9 வயதான ராமலெட்சுமி.[1]

மதுரை சேதுபதி உயர்பள்ளியில் பள்ளி படிப்பும், மதுரை பாண்டித்ய சாலையில் எஃப்.ஏ.யு-வும் முடித்த ராஜம் அய்யர் 1889இல் சென்னை கிறிஸ்துவக் கல்லூரில் சரித்திரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். பி.ஏ. முடித்ததும், சட்டம் பயில்வதற்காக சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், இறுதித்தேர்வில் வெற்றிபெற இயலவில்லை. அந்தத் தோல்வி இவரை நிலைகுலையச் செய்தது. ஏற்கனவே உள்ளொடுங்கியவரும் தனிமை உணர்ச்சி மிக்கவருமாக இருந்த ராஜமைய்யர், மேலும் தன்னுள் ஒடுங்கினார். விரக்தி மனநிலையில் இருந்த இவருக்குத் தாயுமானவரின் நூல்தொகுப்பு கிடைத்தது. வேதாந்த தத்துவ சிந்தனைகளில் ஆர்வம் செலுத்தினார். கைவல்ய நவநீதம், தத்துவராய சுவாமிகளின் பாடல்கள் போன்றவை இவரை ஞானமார்க்கத்தில் செலுத்தின.

இலக்கிய வாழ்க்கை

தமிழ் இலக்கியத்தில் புலமை கொண்டிருந்த ராஜம் ஐயர், கிறிஸ்தவக் கல்லூரி பத்திரிகையில், தன்னுடைய 17ஆம் வயதில் அன்று பிரபலமான பூண்டி அரங்கநாத முதலியார் அவர்களால் இயற்றப்பட்ட கச்சிக்கலம்பகத்தின் பாடல்களுக்கு விளக்கவுரை எழுதினார். அதுவே அச்சில் வந்த இவரது முதல் படைப்பாகும். அக்கட்டுரை மூலம் ராஜம் ஐயரின் தமிழ்த்திறனும், புலமையும் தெரியவந்தன.

இந்த காலகட்டத்தில் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. கல்லூரி நூலகத்தில் இவர் படித்திருந்த ஷெல்லி, வேர்ட்ஸ்வெர்த், டென்னிசன் போன்றோரின் படைப்புகள் இவருக்கு கவிதை மேல் ஆர்வத்தை ஏற்படுத்தின. கம்பன் பாடல்கள் இவரை மிகவும் கவர்ந்தன.

கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை 1893 ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத இதழில் தொடராக எழுத வாய்ப்பு வந்தது. தமிழின் இரண்டாம் நாவலாகிய இப்படைப்பை எழுதும்போது அவருக்கு வயது 21. "இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஓர் அமைதியற்ற ஆன்மா, பல கஷ்டங்களை அனுபவித்து, இறுதியில் நிர்மலமான ஓர் இன்ப நிலையை அடைந்ததை விவரிப்பதே இந்த கிரந்தத்தின் முக்கிய நோக்கம்" என்பதைக் நோக்கமாகக் கொண்டு அந்த நாவலை எழுதுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். பல்வேறு பழமொழிகளை, குட்டிக் கதைகளை, வேத, வேதாந்தக் கருத்துக்களை மிக எளிய நடையில் மனதில் பதியும்படி அந்த நாவலில் அவர் சொல்லியிருக்கிறார். மேலும் இந்நாவலில் கம்பராமாயணம், திருக்குறள், நளவெண்பா, தாயுமானவர் பாடல், அரிச்சந்திர புராணம், பட்டினத்தார் பாடல், நீதிநெறி விளக்கம் போன்ற பல பாடல்களை மேற்கோள் காட்டியிருப்பதோடு, ஷேக்ஸ்பியரின் நடுவேனிற்கனவு (A Midsummer Night's Dream) நாடகத்தில் வரும் ‘பக்’ என்னும் குட்டிப்பேய் பற்றியும் குறிப்பிட்டிருப்பது அவரது இலக்கிய ஆர்வத்தின் சான்று.

ராஜமய்யர் வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம், எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், அவருடைய வாழ்வியல் நோக்கும் கலைத்திறனும் கொண்டு எழுதப்பட்ட படைப்பாக இருந்தது. அதன் வழியாக தமிழில் புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார்.

இது தவிர, கம்பராமாயணத்தை அடிப்படையாக வைத்து சீதையின் பெருமையையும், கம்பனின் கவிச்சிறப்பையும், ஜானகி-நடராஜன் என்ற இருவர் வியந்து உரையாடுவதுபோல் 'சீதை' என்ற தொடரையும் விவேக சிந்தாமணி இதழில் ராஜம் ஐயர் எழுதியிருக்கிறார். (இது நூலாக வெளிவரவில்லை.)

ஆன்மீகம்

பிரபுத்த பாரதா இதழ்
பிரபுத்த பாரதா இதழ்

சென்னை திருவல்லிக்கேணியில் ராஜம் ஐயர் வசித்த வீட்டுக்கு அருகாமையில் ஒரு சன்னியாசினி அம்மாள் உபந்நியாசம் செய்து வந்தார். நாள்தோறும் அங்கு சென்று உபந்நியாசம் கேட்டு வந்த ராஜமைய்யரின் மனநிலையையும் ஆன்மீக நாட்டத்தையும் அறிந்த அந்த அம்மாள் அவரது தலையைத் தொட்டு ஆசி வழங்கினார். அது அவருக்கு அரிய ஆன்மீக அனுபவத்தை அளித்தது.[2] அதனால் ஆன்மீக நாட்டம் அதிகரித்து உலகியலில் ஆர்வம் குறைந்தது.

சாந்தானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் - ராஜம் அய்யரின் குரு
சாந்தானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் - ராஜம் அய்யரின் குரு

1896ல் விவேகானந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய தத்துவம் மற்றும் வேதாந்த சிந்தனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கோடு ‘பிரம்மவாதின்’ என்ற ஆங்கில மாத இதழ் விவேகானந்தரின் சீடராக இருந்த எம்.சி. அளசிங்கப் பெருமாள் என்பவரால் தொடங்கப்பட்டது. அந்த இதழில் 'மனிதனின் பெருமையும் சிறுமையும்' (’Man his littleness and greatness’) என்ற தனது முதல் கட்டுரையை ராஜம் ஐயர் எழுதினார். இவருடைய உள்ளார்ந்த ஆன்மிகத் தேடல் இவரது எழுத்துக்களில் பிரதிபலித்தன. அக்காலகட்டத்தில் சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் என்ற மகானின் அறிமுகம் கிடைத்தது. அவரையே தனது குருவாகக் கொண்டு அவரிடம் குரு உபதேசம் பெற்று, தனது ஆன்மிக, தியான, யோக மார்க்க முறைகளைப் பயின்று வந்தார்.

அப்போது நண்பர்கள் மூலம் சென்னைக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தரின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. விவேகானந்தரது ஆசியுடன் டாக்டர் நஞ்சுண்ட ராவ் என்னும் மற்றொரு சீடரால் துவக்கப்பட்ட 'பிரபுத்தபாரதா' ஆங்கில இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதில் இயற்பெயரிலும், புனைப்பெயர்களிலும் பல்வேறு தத்துவ, வேதாந்த, சமய விசாரணைக் கட்டுரைகளை எழுதினார். அவை, பின்னாளில் 'வேதாந்த ஸஞ்சாரம்' (ஆங்கிலத்தில் Rambles in Vedanta[3]) என்ற தலைப்பில் 900 பக்கங்கள் கொண்ட நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியானது.

பிற எழுத்தாளர்களின் கருத்துக்கள்

”ராஜமய்யர் என்ற சக்தி, ஒரு வால் நட்சத்திரம் போல, அணு ஆயுத வெடிப்பின் பிரம்மாண்டம் போல ஒரு குறுகிய காலத்திற்குள், பல்வேறு திசைகளில் ஓர் அசாதாரண வேகத்தில் துடித்து இயங்கி மறைந்துவிட்டது. இவ்வியக்கத்தின் துடிப்பும், வேகமும், பலதிசை நோக்கும், வாழ்ந்த காலத்தின் சுருக்கமும், இதை அணுகி புரிந்து கொள்ள முயற்சி செய்பவனைத் திக்கித் திணற வைத்துவிடுகிறது. இதன் விளைவு, வெடித்துச் சிதறிய துணுக்குகளில் தனக்கு அகப்பட்டதை வைத்துக் கொண்டு, ராஜமய்யரை, நாவலாசிரியர், தத்துவ ஞானி என்று பலவாறாக மதிப்பிடுகிறோம்” - ’சில இலக்கிய ஆளுமைகள்’ நூலில் வெங்கட் சாமிநாதன்

மறைவு

மே 13, 1898 இல் தன்னுடைய 26ஆம் வயதில் குடற்சிக்கல் நோய் காரணமாக காலமானார். பிரபுத்த பாரதாவின் 1898 ஜூன் மாத இதழில் இராஜமையரின் மறைவினால் இந்த இதழ் நிறுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியிடப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் பெருமுயற்சியால், பி. ஆர். ராஜமய்யரின் மறைவை அடுத்து 1898 ஆகஸ்ட்டில் இருந்து சென்னைக்கு பதிலாக அல்மோராவில் உள்ள அத்வைத ஆசிரமத்தில் இருந்து இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது.

ராஜம் அய்யர் சரிதை நூல்
ராஜம் அய்யர் சரிதை நூல்

வாழ்க்கை வரலாறு

’ராஜம் அய்யர் சரிதை’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் 1909 ஆம் ஆண்டு ஏ.எஸ். கஸ்தூரிரங்கைய்யர் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது.

விவாதங்கள்

1898 ஏப்ரல் மாத இதழில் அவர் எழுதி வெளியிட்ட “வேதாந்தமும் சக்கரவர்த்தி பெருமானும்” என்ற கட்டுரையில் ‘வேதாந்தம் சக்கரவர்த்தி பெருமானது அரசாட்சியை எப்பொழுதும் கவிழ்க்கவே பார்க்கிறது. அது இருக்கிற வரையில் என்றைக்காவது அவருக்கு அபாயம் வருவது திண்ணம்’ என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். அது ராஜநிந்தனையாக இருப்பதாக எண்ணி ஆங்கிலேய அரசு விசாரணைக்காக போலீஸ்காரர்களை அனுப்பியது. ராஜம் அய்யர் இறந்த இரண்டொரு நாளில் அவர்கள் விசாரணைக்கு வந்து அவர் காலமான செய்தியை அறிந்து கொண்டார்கள்.

படைப்புகள்

நாவல்கள்
  • கமலாம்பாள் சரித்திரம்
கட்டுரைகள்
  • வேதாந்த சஞ்சாரம்
  • மனிதனின் பெருமையும் சிறுமையும்

உசாத்துணை

தரவுகள்