பிரான்சுவா குரோ

From Tamil Wiki

பிரான்சுவா குரோ (François Gros, François Édouard Stéphane Gros) (டிசம்பர் 17, 1933 - ஏப்ரல் 25, 2021) பிரெஞ்சு தமிழாய்வாளரும், மொழியியலாளரும் ஆவார். இவர் சங்கத்தமிழ் இலக்கியம் முதல் தற்காலத் தமிழ் இலக்கியங்களான தமிழ் புதுக்கவிதை, தமிழ் சிறுகதை மற்றும் தமிழ் நாவல்கள் வரை பிரெஞ்சு மொழியில் அறிமுகப்படுத்தியதில் முன்னோடி. மேலும் இவர் நாகசாமி அவர்களுடன் சேர்ந்து ஆராய்ந்து வெளியிட்ட வரலாற்று ஆய்வுகள் மதிப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

பிரான்சுவா குரோ டிசம்பர் 17, 1933 ஆம் ஆண்டு பிரான்ஸின் தென்கிழக்கில் உள்ள இலியோன்(Lyon) நகரில் ஆல்பிரட் குரோ(Alfred Gros) - மேரி ப்ராட்(Marie Braud) தம்பதிகளுக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை ஒரு பொறியாளராகப் பணிபுரிந்தார். இவரின் தந்தை இலக்கியத்தின்மேல் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரின் தூண்டுதலின் பேரில் பிரான்சுவா குரோ இலக்கியம் படிக்கச்சென்றார். இவருடைய முதல் புத்தகம் (பரிபாடல் மொழிபெயர்ப்பு-1968) இவரின் தந்தைக்கு அற்பணிக்கப்பட்டுள்ளது.

பிரான்சுவா குரோ பிறந்த ஊராகிய இலியோன் குட்டி இளவரசன் (The Little Prince) எழுதிய அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint-Exupéry) வாழ்ந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்சுவா குரோவின் மிக விருப்பமான எழுத்தாளர்.

பிரான்சுவா குரோ 1954 ஆம் ஆண்டு இலியோன் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார், செவ்வியல் மொழிகளான இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். 1957 ஆம் ஆண்டில் அல்ஜீரிய யுத்தம் ஆரம்பித்தப்போது கட்டாய ராணுவசேவைக்கு அனுப்பப்பட்டார். இவரின் பார்வைத்திறன் குறைபாட்டால் இவரை போரில் ஈடுபடுத்தாமல் அலுவலக வேலையில் அமர்த்தினார்கள். இவர் அங்கிருந்த பள்ளியில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தார்.

பிரான்சுவா குரோ போரில் இருந்து திரும்பியவுடன் INALCO (National Institute of Oriental Languages and Civilizations) வில் பணிபுரிந்த பிய்ர்ரே மெயிலெ (Pierre Meile) என்பவர் இவரை தமிழ் மற்றும் ஹிந்தி கற்றுக்கொள்ள தூண்டினார். முன்னரே இந்தியாவின் மேல் ஆர்வம் கொண்டிருந்த பிரான்சுவா குரோவிற்கு இது மேலும் ஆர்வத்தைத்தூண்டியது. பின்னாளில் புகழ்பெற்ற புதுவை பிரென்சு ஆய்வு நிறுவனத்தை (French Institute of Pondicherry) உருவாக்கியவரான ழீன் பிலோழாட் (Jean Filliozat) அவர்களின் தூண்டுதலின் பேரில் 1963 ஆம் ஆண்டு, தமது 30 வது வயதில் இந்தியாவின் புதுச்சேரிக்கு வந்து பரிபாடல் மொழிபெயர்ப்பில் ஈடுபடலானார். ழீன் பிலோழாட் அவர்கள் 1906 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இந்திய மருத்துவத்தை பயின்றார். மேலும் இவருக்கு சமஸ்கிருதம், பாலி, தமிழ் மொழிகளில் மிகுந்த புலமை உண்டு.

பிரான்ஸில் தமிழ் கற்ற பிரான்சுவா குரோ புதுவை வந்தவுடன் வி.மு.சுப்பிரமணிய ஐயர், முனிசாமி நாயுடு ஆகியோரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். பிரான்சுவா குரோ நீடூர் கந்தசாமி பிள்ளை, தி.வே.கோபாலையர் போன்ற தமிழ் அறிஞர்களிடம் மிகுந்த பற்றுதல் உள்ளவராக இருந்தார்.

பிரான்சுவா குரோ பிரெஞ்ச், கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் மற்றும் தமிழில் புலமையுடையவராகவும், ஹிந்தி, ஸ்பானிஷ், ஜெர்மன் மொழியும் தெரிந்தவராகவும் விளங்கினார்.

பிரான்சுவா குரோ வரலாற்று ஆய்வாளரான நாகசாமியுடன் நல்ல நட்பில் இருந்தார். வாரலாற்று அறிஞர்களான ரொமீலா தாப்பரின் சகோதரர்  ரோமேஷ் தாப்பர், பிபின் சந்திரா, லோகேஷ் சந்திரா ஆகியோருடனும், கலை வரலாற்று அறிஞர் கபில வட்சாயயன் உடனும் நட்புடன் இருந்தார்.

தனிவாழ்க்கை

பிரான்சுவா குரோ அவர்களின் தாத்தா இவர் வாழ்ந்த பகுதிக்கு மேயராக இருந்தார். இவர் வாழ்ந்த வீதி இவரின் பேரிலே அழைக்கப்படுகிறது (14, rue François Gros, 69200 Vénissieux, FRANCE).

பிரான்சுவா குரோ திருமணம் புரிந்துகொள்ளவில்லை. இவர் தம் கல்லூரிக்காலத்தில் ஒரு பெண்ணை காதலித்தார். அவர் மலையேற்றத்தில் தவறி விழுந்து இறந்துவிட்டார். பிரான்சுவா குரோ கடைசிக்காலங்களில் இவரின் தூரத்து உறவினரின் பாதுகாப்பில் இலியோன் நகரில் வாழ்ந்து வந்தார்.

1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த பிரான்சுவா குரோ பாரீசில், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

1963 ஆம் ஆண்டு புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய பிரான்சுவா குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் (French School of the Far East (EFEO)) இயக்குநராகப் பணிபுரிந்தார்.

பிரான்சுவா குரோ பார்ஸில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி சங்கத்தின் துணைத்தலைவராக 1989 ஆம் ஆண்டு முதல் இருந்தார். இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை தரமணியில் உள்ள உலகத்தமிழாரய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தராக 1979 ஆம் ஆண்டு முதல் இருந்தார். இந்தியாவை தவிர்த்த ஒருவர் இந்த பதவியில் பதவிவகித்தது இதுவே முதல்முறை.

பிரான்சுவா குரோ பாரீஸ் பல்கலைக்கழகத்தின் தென்னிந்திய மொழியியல் மற்றும் வரலாற்றுத்துறையின் இயக்குனராக இருந்து 2002 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

குறள் பீட விருது வழங்கியபோது

விருதுகள்

பிரான்சுவா குரோவிற்கு இந்திய அரசு 2008-2009 ஆம் ஆண்டின் குறள் பீட விருதும், 5 லட்சம் தொகையும் வழங்கி சிறப்பித்தது.

தேவாரம் - மொழிபெயர்ப்பு
நாகலிங்கமரம் - தமிழ் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பங்களிப்பு

பிரான்சுவா குரோ 1968 ஆம் ஆண்டு தம்முடைய முதல் மொழிபெயர்ப்பு நூலான Le Paripātal (பரிபாடல்) வெளியிட்டார். இந்த நூலினை குடந்தை ப.சுந்தரேசனார் என்ற பண்ணாராய்ச்சி நிபுணரின் உதவியுடன் பாடச்செய்து அந்த பாடல்களில் உள்ள இசை செய்திககளை அறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த நூலின் முன்னுரை பிரஞ்சுமொழியில் உள்ளது. ஒரு பக்கம் பிரஞ்சுமொழிலும் மறுபக்கம் மூலவடிவம் தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளது. பிரெஞ்சுமொழி மட்டும் அறிந்தவர்கள் தமிழ் இலக்கியத்தை அறிய இது ஒரு வாய்ப்பாக அமைந்த நூலாகும். இந்த நூலுக்கு புகழ் பெற்ற (Académie Française) பிரான்சிய அகாதமிவின் Saintour prize வழங்கப்பட்டது.

தமிழ்மக்களின் நம்பிக்கை,பண்பாடு,பழக்கவழக்கம் பற்றி நன்கு அறிந்துவைத்து பிரான்சுவா குரோ அவர்கள் அவை தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டவர். பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டிருந்த காரைக்கால் ஊர் பற்றியும் அதன் சிறப்புகள் குறித்தும் பிரெஞ்சுமொழியில் பிரான்சுவா குரோ அவர்கள் எழுதியுள்ளார். அதுபோல் குடவோலை முறை பற்றிய விரிவான செய்திகளைத் தரும் உத்திரமேரூர் பற்றிய வரலாற்றை மிகச்சிறப்பாக குரோ அவர்கள் பிரெஞ்சுமொழியில் எழுதியுள்ளார்(1970)

பிரான்சுவா குரோ 70 வது வயது நினைவு மலர் நன்றி-http://muelangovan.blogspot.com/

பிரான்சுவா குரோ 1982 ஆம் ஆண்டு காரைக்காலம்மையார் இயற்றிய இலக்கியங்களைப் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த நூலில் காரைக்காலம்மையார் பற்றிய தெளிவான வரலாறு பிரெஞ்சுமொழியில் உள்ளது. காரைக்காலம்மையார் இயற்றிய அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவாலங் காட்டுத்திருப்பதிகம், சேக்கிழார் பாடிய காரைக்காலம்மையார் புராணம்    (66 பாடல்கள்) பிரஞ்சுமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வகையில் பிரான்சுவா குரோ காரைக்காலம்மையாரை பிரெஞ்சு மொழியில் நன்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

பிரான்சுவா குரோ 1992 ஆம் ஆண்டில் திருக்குறளின் இன்பத்துப்பால் மட்டும் பிரென்சு மொழியில் மொழிபெயர்த்து Le Livre de l'Amour de Tiruvalluvar என்ற பெயரில் வெளியிட்டார்.

பிரான்சுவா குரோ தி.வே.கோபாலையருடன் இணைந்து 1985 ஆம் ஆண்டு தேவாரம் (பண்முறையில் அமைந்த பதிப்பு) வெளியிட்டுள்ளார். இதில் அப்பர். சுந்தரர் பாடிய பாடல்கள் பண்முறையில் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

பிரான்சுவா குரோ இடைக்காலத் தென்னிந்திய வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த நூல்களும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக உத்திரமேரூர், திருவண்ணாமலை  உள்ளிட்ட கோயில் நகரங்களின் வரலாறு  பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

பிரான்சுவா குரோ, கண்ணன்.எம். ஆகியோர் இணைந்து பாரதியார் தொடங்கி ஆத்மாநாம், பிரமிள், வில்வரத்னம் (இலங்கை) போன்றோரது கவிதைகள் உள்ளடக்கிய 200 கவிதைகளைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர். அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுகதைகளையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர்.  

தென்னிந்திய வரலாற்று அட்லஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் கி.பி. 1600  வரலாற்றுக்கு முந்தைய தென்னிந்திய வரலாற்றை வரைபடங்களாகச் சித்தரித்துள்ளார்.  இது உலகிலேயே சிறந்த, அரிய தொகுப்பு என்கிறார் கண்ணன்.எம்.

பிரான்சுவா குரோ புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்டசோழபுரம் கோயில் குறித்த நூல்கள் வெளிவர காரணமாக இருந்துள்ளார்.

சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம்வரை நல்ல பயிற்சியுடைய குரோ அவர்கள் தலித் இலக்கியம் பற்றிய நல்ல புரிதல் உடையவர். தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து நாகலிங்கமரம் (L'Arbre Nagalinga) என்னும் பெயரில் பிரெஞ்ச் ஆய்வு நிறுவனத்தின் கண்ணனுடன் இணைந்து 2002 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.

பரிபாடல் (முதல் மொழிபெயர்ப்பு - 1968) நன்றி - http://muelangovan.blogspot.com/

இந்த நூலில் சூடாமணி, புதுமைப்பித்தன், மௌனி, சி.சு.செல்லப்பா, தொ.மு.சி. இரகுநாதன், இலா.சா.இராமாமிருதம், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன் , கு.அழகிரிசாமி, சம்பத், வண்ணநிலவன், பூமணி, தமிழ்ச்செல்வன், பிரமிள், நாஞ்சில்நாடன், கண்ணகி, கா.நா.சுப்பிரமணியன், வேல இராமமூர்த்தி ஆகியோரின் சிறந்த கதைகள் பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழின் சமகாலப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், மௌனி, பிரபஞ்சன், இமையம் உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த நல்ல மதிப்பீடுகளும் இவரிடம் உண்டு.

வேல ராமமூர்த்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை 2002 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

ஜி. நாகராஜனின் சிறுகதைகளை 2013 ஆம் ஆண்டு மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

பிரான்சுவா குரோ எழுதிய மொழி இலக்கியம் குறித்த சிக்கல்கள் கொள்கைகள் என்ற கட்டுரை மதிப்புவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கட்டுரையில் பிரெஞ்சுமொழியின் நிலை பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார் மேலும் வட்டாரமொழியியல் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரையாகவும் இது உள்ளது. பிரெஞ்சு மொழி அகாதெமி(Académie Française) பற்றியும், பிரெஞ்சு மொழியின் வரலாறு, பயன்பாடு பற்றியும் விளக்கியுள்ளார். பிரெஞ்சுமொழி ஒரு நாட்டின் தனிமொழியாக வளர்ந்த வரலாற்றை மிக விரிவாக விளக்கியுள்ளார். பிரான்ஸ் தவிர்ந்த பிற நாடுகளில் பேசப்படும் பிரெஞ்சுமொழியின் நிலை பற்றியும் இக்கட்டுரை விளக்கியுள்ளது.

பிரான்சுவா குரோ 1994-இல் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த மாநாடு தவிர்த்து, 1996-இல் கோலாலம்பூர் தொடங்கி 1995-இல் தஞ்சாவூரில் நடந்தது வரையில் அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். இம்மாநாடுகளில் கல்விக் கற்பிக்கும் முறைக் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்ததாகவும்  கூறியுள்ளார்.

உத்திரமேரூர் - ஆய்வு நூல்

ஒவ்வோர் ஆண்டும் மூன்று மாதக் காலத்தைப் புதுச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டு வந்த பிரான்சுவா குரோ, பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள லியோன் நகரில் வசித்து வந்தார். பிற்காலத்தில் உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் பிரான்சிலேயே தங்கிவிட்ட பிரான்சுவா குரோ, தன்னிடமிருந்த ஏறத்தாழ 10,000 அரிய நூல்களைக் கனடாவில் உள்ள டொரோண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார்.

இவர் எழுதிய நூல்கள்

  • (fr) Le Paripātal , introduction, translation and notes by François Gros, Publications of the French Institute of Indology, No. 35  , Pondicherry, 1968 (Saintour prize in 1969).
  • (en) Tiruvalluvar, The Book of Love , translated and annotated by François Gros, Knowledge of the Orient, UNESCO Collection of Representative Works, Gallimard, Paris, 1992.
  • (en) The Nâgalinga tree , short stories selected and translated from Tamil by François Gros and M. Kannan, foreword and afterword by François Gros, Éditions de l'Aube, La Tour d'Aigues, 2002.
  • (fr) Sampath et alii , The sage goes to the zoo , short stories selected and translated from Tamil by François Gros and M. Kannan, afterword by François Gros, Éditions de l'Aube, La Tour d'Aigues, 2002.
  • (en) Vêlarâmamûrti et alii , Les 21 chevreaux d'Iralappa Câmi , short stories selected and translated from Tamil by François Gros and M. Kannan, afterword by François Gros, Éditions de l'Aube, La Tour d'Aigues, 2002.
  • (fr) G. Nagarajan, Le vagabond et son ombre , Tamil novels and stories presented and translated by François Gros with the assistance of Elisabeth Séthupathy, introduction by M., Kannan, French Institute of Pondicherry, Regards sur l'Asie du Sud /South Asian Perspectives-2, 2013
  • (en) CS Chellappa, Vâdivâçal, Bulls and Men in Tamil Country , translated from Tamil and presented by François Gros, Regards sur l'Asie du Sud/ South Asian Perspectives - 3, French Institute of Pondicherry, 2014.
  • François Gros, Deep Rivers, Selected writings on Tamil Literature , translation by MP Boseman, edited by M.Kannan, Jennifer Clare, Institute Français de Pondichéry, Publications Hors Série 10, Tamil Chair, Department of South and Southeast Asian Studies, University of California at Berkeley, 2009.
மொழிபெயர்ப்புப் பார்வை

இவர் வரையில் ஒரு மொழி பெயர்ப்பு மிகப்பெரும் புனிதமான ஒரு செயல்பாடாக கருதுகிறார். ஒரு மொழிபெயர்ப்பு வாசகர் மனதில் இரு விஷயங்களை விட்டுச்செல்லவேண்டும் ஒன்று உலகில் மிக அழகானதும், மிக முக்கியமானதுமான ஒரு விஷயத்தை படிக்கின்றோம் என்ற உணர்வு வாசகனுக்கு எழவேண்டும், இரண்டு அதை நாம் மூலமொழியில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் எழவேண்டும். ஒரு மொழிபெயர்ப்பாளராக மிகவும் கண்டிப்பான கொள்கைகளை கைகொள்ளும் தூய்மைவாதியாக பிரான்சுவா குரோ அறியப்படுகிறார்.

இலக்கிய முக்கியத்துவம்

இந்தியவியல் அறிஞர் நளினி பல்பீர் அவர்களின் கருத்துப்படி, இந்தியாவின் பண்பாட்டின் வெகுவான சிறப்புகள் அதன் மொழியில் மட்டுமே உள்ளன என்றும், இருவகையான மொழிவகைமைகள் இந்தியாவில் வழங்கி வருகின்றன என்றும். இவற்றில் இந்தோ-ஆரிய மொழியான சமஸ்கிருதம் தவிர்த்து, திராவிட மொழியான தமிழின் பங்களிப்பு பழமையானதும், தனித்துவமானதும், அரிதானதுமானது என்று வரையறுக்கிறார். மேலும் சமஸ்கிருதம் மட்டுமே இந்தியாவின் செவ்வியல் மொழியாக இல்லை என்பதும்கூறப்படுகிறது. தமிழ் மொழியின் அழகியலையும், தனித்துவத்தையும் நேரடியான பயிற்சி இல்லாமல் அறிய முடியாது என்றும், இதையே உணர்ந்த ழீன் பில்லொழாட்() பிரான்சுவா குரோவை புதுவைக்கு அனுப்பினார். 1955ஆம் ஆண்டு பிரான்ஸ் தன்னுடைய இந்திய ஆதிக்கத்தில் இருந்து புதுவையை விடுவித்த பிறகான நாட்களில் இவர் ஏற்படுத்திய அமைப்பு(IFP) கலாச்சார மையமாக உருவெடுத்து பிரான்ஸ் மற்றும் தமிழ் கலாச்சாரங்களை கொண்டும், கொடுக்கும் ஒரு அமைப்பாக அது மாறியது. அதன் மிக முக்கியமான கண்ணியாக பிரான்சுவா குரோ பங்காற்றினார்.

மறைவு

நன்றி-tamilmurasu.com.ag

இவர் மார்ச் 24, 2021 ஆம் ஆண்டில் தமது 87வது வயதில் பிரான்ஸில் உள்ள இலியோன் நகரத்தில் மறைந்தார்.

வாழ்க்கைப் பதிவுகள்

பிரான்சுவா குரோ வாழ்ந்த காலத்தில் அவர் புதுச்சேரியில் வாழ்ந்த 14 ஆண்டுகள்(1964-1977) இன்பமானதாக இருந்தது என்று பதிவுசெய்துள்ளார். புத்தகப்பிறியரான பிரான்சுவா குரோ கிட்டத்தட்ட 45000 புத்தகங்கள் அவர் நூலக சேகரிப்பில் வைத்திருந்தார். இவற்றில் 10000 புத்தகங்களை டொரண்டோ பல்கலைக்கழகத்திற்கு கொடுத்துவிட்டார்.

பிரான்சுவா குரோபெரிதும் தனிமை வாழ்வை இயல்பாக கொண்டிருந்தார். இவரின் பேச்சுகள் சற்றே நய்யாண்டி கலந்த கூறிய விமர்சனங்களுடன் வெளிப்படுபவை. ஆனால் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றும், இவரை இந்திய நண்பர்கள் தாத்தா என்று அன்புடன் அழைப்பர் என்றும் தெரிகிறது. பல விஷயங்களைப்பற்றி உரையாடத்தெரிந்தவராகவும், மிக முக்கியமான அறிவுரைகள் வழங்குவதில் தேர்ந்தவராகவும் அறியப்படுகிறார்.

பிரான்சுவா குரோ, “தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி அறிவித்தது மட்டும் போதாது. அருங்காட்சியகத்தில் உள்ள செவ்வியல் கலைப்பொருட்கள் இறந்துப் போய்விடுகின்றன. அவற்றை அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். அவற்றை வெகுமக்களின் பொது பண்பாட்டிற்குள் எடுத்துச் செல்ல வேண்டும். இதைச் செய்வதற்கான ஆய்வு, சிறந்த கல்வி கற்பிக்கும் முறைகள், தமிழில் கல்விச் சார்ந்த மொழிநுட்பங்கள் (Education tools in Tamil) உருவாக்க வேண்டும். இது தமிழ்நாடு மேலைநாடுகளுக்குத் தமிழைக் கற்றுத் தர ஏதுவாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

உசாத்துணை

முனைவர் இளங்கோவன் பதிவு

பிரென்ச் விக்கி பக்கம்

https://www.efeo.fr/biographies/notices/gros.htm

நளினி பல்பீர் என்ற இந்தியவியலர் பிரான்சுவா குரோ பற்றி எழுதிய பதிவு

அருந்ததி ராமநாதன் கட்டுரை