first review completed

பிரம்மராஜன்

From Tamil Wiki
Revision as of 17:25, 9 September 2022 by Madhusaml (talk | contribs)
jeyamohan.in

பிரம்மராஜன் (1953) கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர். 35 இதழ்கள் வெளிவந்த 'மீட்சி' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர்.

பிறப்பு, கல்வி

1953-ஆம் ஆண்டு பிறந்தவர். பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ. ராஜாராம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

தனி வாழ்க்கை

தர்மபுரி அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்தவர். கல்லூரிப்பணியிலிருந்து ஓய்வு பெற்று தர்மபுரியில் தன் பண்ணை வீட்டில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

மீட்சி இதழ் நன்றி amazon.com

இதுவரை ஆறு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. 35 இதழ்கள் வெளிவந்த 'மீட்சி' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர். இலக்கியரீதியான பரிசோதனை முயற்சிகள், உலக இலக்கிய ஆசிரியர்கள், நவீன ஓவியம், இசை, புதிய கோட்பாடுகள், கோட்பாட்டாசிரியர்களை அறிமுகப்படுத்திய இதழ் இது.

1989-ஆம் ஆண்டு வெளிவந்த 'உலகக் கவிதை’ என்ற நூலின் தொகுப்பாசிரியர். முதல் கவிதைத் தொகுப்பு 'அறிந்த நிரந்தரம்’(1980). கடைசியாக வெளிவந்த கவிதைத் தொகுப்பு 'ஜென் மயில்'(2007).

எஸ்ரா பவுண்ட் குறித்து பிரம்மராஜன் எழுதிய அறிமுக நூல் 1985-ஆம் ஆண்டு வெளிவந்தது. 'ப்ரக்ட் கவிதைகள்' இவரால் மொழிபெயர்க்கப்பட்டு செறிவான அறிமுகத்துடன் 1987-ஆம் ஆண்டு வெளிவந்தது. தற்கால உலகக் கவிதை (2007) என்ற நூலின் தொகுப்பாசிரியர்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கிறார். சித்தர் பாடல்களிலிருந்து அவர் தேர்ந்தெடுத்த 64 கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு சாகித்திய அகாதெமியின் இதழான இண்டியன் லிட்டரேச்சரில் (பிப்ரவரி 2000) வெளியாகியது.

போர்ஹெஸ்(கதைகள், கவிதைகள், கட்டுரைகள்) நன்றி panuval.com

போர்ஹே கதைகள்(2000) மற்றும் கால்வினோவின் சிறுகதைகள்(2007) ஆகியவை பிரம்மராஜனின் குறிப்பிடத்தக்க புனைகதை மொழிபெயர்ப்புகள். 'மியூஸ் இந்தியா (http://museindia.com)' என்ற இணைய இலக்கிய மின் இதழுக்கு தமிழுக்கான சிறப்பாசிரியராக இருக்கிறார்.

குற்றாலம் கவிதை பட்டறையை கலாப்ரியாவோடு இணைந்து நடத்தியவர்.

லத்தீன்அமெரிக்க இலக்கியத்தின் பிதாமகராக கொண்டாடப்படுகிறவர் போர்ஹெஸ். அவரது புனைவின் வீச்சை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு பிரம்மராஜன் தொகுத்த 'போர்ஹெஸ் சிறுகதைகள்' நூல் மிகச்சிறந்த வழிகாட்டியாகும்.

பிரம்மராஜன் கவிதைகளில் இசை பிரதான இடத்தை ஆக்கிரமிக்கிறது. சில கவிதைகளில் தமிழ்க் கீர்த்தனைகள் சிலவற்றின் உதிரி வரிகள் அல்லது விளிப்புகள்கூட கவிதைகளின் அங்கமாய் மாறுகின்றன.

ஆத்மாநாமின் கவிதைகளை ஒரு நண்பனாக, இலக்கிய ஆர்வலனாக அவரது மரணத்துக்குப் பிறகு தொகுத்து, பதிப்பித்து ஆத்மாநாம் என்ற கவி ஆளுமையைத் தமிழ்ச் சூழலில் நிலைநிறுத்தியவர் இவர்தான். 'அறிந்த நிரந்தரம்’ கவிதைத் தொகுப்பின் வழியாக அறிமுகமாகி, இன்று வரை செயல்பட்டுவரும் இவரது கவிதை மொழி பல்வேறு மாற்றங்களுக்கும் புதுமைக்கும் உள்ளாகிவருவது.


விருதுகள்

இலக்கிய இடம்

தான் வாசித்த இலக்கியப்படைப்புகள் குறித்து, உலகத்தரமான படைப்பாளிகள் குறித்து அவர்கள் எந்தவிதத்தில் உலகத்தரம் வாய்ந்தவர்களாகிறார்கள் என்பது குறித்து கவி பிரம்மராஜன் எழுதிய கட்டுரைகள், அவை இடம்பெறும் தொகுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

உலக இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்தததில் பிரம்மராஜன் நடத்திய 'மீட்சி' இதழ் பெரும்பங்கு வகித்திருக்கிறது.

"பிரம்மராஜனின் கவிதைகள் தானியக்க எழுத்துமுறையைக் கையாண்டவை" என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்

  • மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்
  • வார்த்தையின் ரஸவாதம்
  • ஜென் மயில்
  • கேள்விகளின் புத்தகம்
  • சமகால உலகக் கவிதை
  • கடல் பற்றிய கவிதைகள்
  • ஆத்மாநாம் படைப்புகள்

கட்டுரைகள்

  • இலையுதிராக் காடு

மொழிபெயர்ப்புகள்

  • போர்ஹெஸ் (கதைகள், கவிதைகள், கட்டுரைகள்)
  • ஏன் கிளாசிக்குகளை படிக்க வேண்டும்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.