first review completed

பா. ராகவன்

From Tamil Wiki
Revision as of 22:49, 25 July 2023 by Shana (talk | contribs) (Removed the extra space at the end of the image line)
எழுத்தாளர் பா. ராகவன்

பா. ராகவன் (அக்டோபர் 08, 1971) தமிழ் எழுத்தாளர்,பதிப்பாளர்,பத்திரிகை ஆசிரியர். ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய வார இதழினை நடத்துகிறார். பல்வேறு வெகுஜன இதழ்களில் ஆசிரியராகவும் கிழக்கு பதிப்பகத்தில் பதிப்பாளராகவும் பங்காற்றினார். எளிய தமிழில் உலக அரசியல், வரலாறு பற்றிய நூல்களை எழுதினார். அபுனைவு நூல்களை எழுதினார். ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய வார இதழை நடத்துகிறார்திரைப்படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு வசன கர்த்தா. இவரின் வசனத்தில் வெளிவந்த வாணி-ராணி என்ற நெடுந்தொடர் 1750 அத்தியாயங்களாக(episodes) வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. படைப்பிலக்கியத்திற்காக ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருதினைப் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

பா. ராகவன் ஆர். பார்த்தசாரதி – ரமாமணி தம்பதியருக்கு அக்டோபர் 08, 1971-ல் சென்னையில் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரு தம்பியர். தந்தை ஆர். பார்த்தசாரதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்வியாளர். ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். மொழிபெயர்ப்பாளர். ராமச்சந்திர குஹாவின் ‘India after Gandhi’, 'பாபர் நாமா', 'மகா வம்சம்' நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

பா. ராகவன் தன் தந்தையின் பணி மாறுதல்கள் காரணமாக காஞ்சிபுரம் கிருஷ்ணா பள்ளி, கோவூர் பஞ்சாயத்துப் பள்ளி, கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பப் பள்ளியில் (Polytechnic) இளங்கலை இயந்திரவியல் பயின்றார். லா.ச. ரா, தி. ஜானகிராமன் போன்றோரின் எழுத்துக்களால் கவரப்பட்டு வாசிப்பில் ஈடுபட்டார்.

தனிவாழ்க்கை

பா. ராகவன் கல்லூரிப் படிப்புக்குப்பின் தேடல் மற்றும் மனக்கொந்தளிப்பின் காரணமாகத் துறவறத்தை நாடி சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் மடம், புரவிபாளையம் கோடி சுவாமிகள் வசிப்பிடம் போன்ற ஆசிரமங்களுக்குச் சென்றார். ராமகிருஷ்ண மடத்தின் அன்றைய தலைவராக இருந்த சுவாமி தபஸ்யானந்தாவின் அறிவுரையால் அந்த எண்ணத்தைக் கைவிட்டார். அமுதசுரபி இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பா. ராகவன் 1997-ல் ரம்யாவைத் திருமணம் செய்துகொண்டார். ஒரே மகள் பாரதி.

இலக்கிய வாழ்க்கை

பா. ராகவன் ஒன்பதாம் வகுப்பில் இருக்கும்போது கவிதைகள் எழுதத் துவங்கினார். முதல் படைப்பு 'குழந்தைப்பாடல்' கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். கவிஞர் நா.சீ. வரதராஜன், ம.வே. சிவகுமார் இருவரும் கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து எழுதினார்.

1992-ல் கல்கி வார இதழில் முதல் சிறுகதை ‘மொஹஞ்சதாரோ’ வெளிவந்தது.

2017-ல் 'பூனைக்கதை' என்ற நாவல் வெளிவந்தது.

இதழியல்

அமுதசுரபியில் பணிபுரிந்த பின் கல்கியில் ஆசிரியராக 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். 2000-ல் குமுதம் இதழில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். குமுதத்தில் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றினைத் தொடராக எழுதினார்.

அரசியல்/வரலாற்று அபுனைவுகள்

பா. ராகவன் பாகிஸ்தான் அரசியல் வரலாற்றுத் தொடரின் வெற்றியத் தொடர்ந்து பத்தாண்டுகாலம் உலக அரசியல் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிய நூல்களை எளிய தமிழில் எழுதினார். 'டாலர் தேசம்' (அமெரிக்க அரசியல் வரலாறு), 'நிலமெல்லாம் ரத்தம்' (இஸ்ரேல்-பாலஸ்தீன் சிக்கல்களின் வரலாறு), 'மாயவலை' (சர்வதேச தீவிரவாத வலைப்பின்னல் குறித்த விரிவான ஆய்வு நூல்) குறிப்பிடத்தக்கவை. தமிழ் மட்டும் அறிந்த மக்களுக்கு உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும், திருப்புமுனைகளையும் அறிமுகப்படுத்தின.

கட்டுரைகள்

ராமானுஜரின் வரலாற்றை 'பொலிக பொலிக' என்ற பெயரில் தினமலரில் 108 வாரத் தொடராக எழுதினார். அத்தொடர் கிழக்குப் பதிப்பக வெளியீடாக 2017-ல் நூலாக வெளிவந்தது.

புனைவு

பா. ராகவன் அலகிலா விளையாட்டு, இறவான், யதி உள்ளிட்ட 12 நாவல்களை எழுதியிருக்கிறார்.

பதிப்பியல்

பா. ராகவன் சபரி பப்ளிகேஷனில் பதிப்பாளராகப் பணியாற்றினார். கிழக்கு பதிப்பகத்தில் இணைந்து அங்கு ஏறத்தாழ 1000 நூல்களைப் பதிப்பித்தார்.

தொலைக்காட்சித் தொடர்கள்

பா ராகவன் சித்தி-2, வாணி-ராணி, கெட்டிமேளம் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதினார். வாணி-ராணி நெடுந்தொடர் சன் தொலைக்காட்சியில் 1750 அத்தியாயங்களைக் (episodes) கடந்து சாதனை படைத்தது. 'வனதேவரு' உட்பட சில கன்னடத் தொடர்களுக்கும் தமிழில் வசனம் எழுதினார். அவை கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன.

இலக்கிய இடம்

பா. ராகவன் தனது அபுனைவு எழுத்துக்களுக்காகவே அதிகம் அறியப்பட்டவர். தமிழ் மட்டும் அறிந்த வாசகர்களுக்கு சர்வதேச அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும் சிக்கலற்ற எளிய மொழியில் விவரிப்பவர் என்ற வகையில் இவரது அபுனைவு வரலாற்று நூல்கள் குறிப்பிடத்தக்கவை. வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் அபுனைவு நூல்களை எழுதியவர். புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள், மாணவ பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு வாய்ப்பினைத் தருவதற்காக ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய வார இதழினை நடத்திவருகிறார்.

விருதுகள்

  • பாரதிய பாஷா பரிஷத்
  • இலக்கியப்பீடம் சிறந்த நாவலாசிரியர் விருது ( அலகிலா விளையாட்டு - 2003)
  • திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு (மெல்லினம் நாவலுக்காக)
  • கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது (இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - 2008)
  • சன் குடும்பம் சிறந்த வசன கர்த்தா விருது - வாணி ராணி தொடருக்காக [2018]
  • வாசகசாலை சிறந்த நாவலாசிரியர் விருது (பூனைக்கதை, 2018)

நூல்கள்

புதினம்
  • அலகிலா விளையாட்டு
  • அலை உறங்கும் கடல்
  • இறவான்
  • கபடவேடதாரி
  • கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
  • கொசு
  • தூணிலும் இருப்பான் நிலாவேட்டை புவியிலோரிடம்
  • புல்புல்தாரா
  • பூனைக்கதை [2017]
  • மெல்லினம்
  • யதி [2018]
  • ரெண்டு
சிறுகதைத் தொகுப்புகள்
  • காந்தி சிலைக் கதைகள்
  • குதிரைகளின் கதை பறவை யுத்தம்
  • மாலுமி [2018]
  • முந்நூறு வயதுப் பெண்
  • மூவர்
  • ஊர்வன
  • நிலா வேட்டை

அரசியல் வரலாறுகள்

  • மாயவலை - சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு
  • பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தானின் அரசியல் வரலாறு
  • டாலர் தேசம் (அமெரிக்காவின் அரசியல் வரலாறு)
  • 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி (2004)
  • நிலமெல்லாம் ரத்தம் (2005)
  • அல் காயிதா: பயங்கரத்தின் முகவரி (2005)
  • ஹிஸ்புல்லா: பயங்கரத்தின் முகவரி (2006)
  • இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் (2006)
  • ஹிட்லர் (2006)
  • அன்புடையீர் நாங்கள் பயங்கரமானவர்கள் (ஸ்பெயினின் ETA போராளிகளைப்பற்றியது)
  • தாலிபன்
  • மீண்டும் தாலிபன் (2021)
  • ஜமா இஸ்லாமியா
  • ஐ.எஸ்.ஐ: நிழல் அரசின் நிஜ முகம்
  • பர்வேஸ் முஷரஃப்
  • மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும்
  • ஆர்.எஸ்.எஸ் - வரலாறும் அரசியலும்
  • காஷ்மீர்
  • சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு
  • ஆயில் ரேகை
  • பிரபாகரன் - வாழ்வும் மரணமும்
  • கலவரகாலக் குறிப்புகள்
  • ஆடிப்பாரு மங்காத்தா
  • பொன்னான வாக்கு
  • ஐ.எஸ்.ஐ.எஸ் - கொலைகாரன்பேட்டை ஜெயித்த கதை
  • 154 கிலோபைட்
  • 24 கேரட்
  • ஓப்பன் டிக்கெட்
  • எக்சலண்ட்!
  • உக்ரையீனா
கட்டுரைத் தொகுப்பு
  • தொடு வர்மம்
  • எழுதுதல் பற்றிய குறிப்புகள்
  • ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் (சென்னை நினைவுக் குறிப்புகள்)
  • 24 கேரட்
  • 154 கிலோபைட்
  • உணவின் வரலாறு
  • வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்
  • இளைப்பது சுலபம்
  • ருசியியல்
  • மூன்றெழுத்து
  • பின்கதைச் சுருக்கம்
  • எக்ஸலண்ட்: செய்யும் எதிலும் உன்னதம்
  • யானி: இசைப் போராளி
  • மகளிர் மட்டும்
நகைச்சுவை நூல்கள்
  • அன்சைஸ்
  • குற்றியலுலகம்
  • இங்க்கி பிங்க்கி பாங்க்கி
  • சந்து வெளி நாகரிகம்
  • உய் - வரி இலக்கியம்
  • வீட்டோடு மாப்பிள்ளை

வாழ்க்கை வரலாறு

பொலிக பொலிக - ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு

சிறுவர் நூல்கள்

  • அமெரிக்க சுதந்தரப் போர்
  • இஸ்லாம்
  • மொசார்ட்
  • இரண்டாம் உலகப் போர்
  • மகாவீரர்
  • புதையல் தீவு
  • ஐஸ் க்ரீம் பூதம்
  • திரைப்படங்கள்

திரைப்படங்களுக்கு வசனம்

  • கனகவேல் காக்க [2010]
  • தம்பி வெட்டோத்தி சுந்தரம் [2011]

தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம்

  • வாணி ராணி (சன் டிவி) கல்யாணப் பரிசு (சன் டிவி)
  • கண்மணி (சன் டிவி)
  • கெட்டி மேளம் (ஜெயா டிவி)
  • சிவசக்தி (சன் டிவி)
  • உதிரிப்பூக்கள் (சன் டிவி)
  • செல்லமே (சன் டிவி )
  • முந்தானை முடிச்சு (சன் டிவி)
  • மனெ தேவுரு (உதயா டிவி)
  • முத்தாரம் (சன் டிவி)
  • செல்லக்கிளி ( சன் டிவி )
  • தேவதை (சன் டிவி)
  • புதுக்கவிதை (விஜய் டிவி)
  • கல்யாணப்பரிசு (சன் டிவி )
  • சிவசங்கரி (சன் டிவி)
  • என் இனிய தோழியே (ராஜ் டிவி)
  • அருந்ததி (ராஜ் டிவி)
  • கண்மணி (சன் டிவி)
  • சித்தி 2 (சன் டிவி)
  • புதுப்புது அர்த்தங்கள் (ஜீ டிவி)

2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீண்ட வாணி ராணி தொலைக்காட்சித் தொடர் இந்திய சீரியல்களில், தமிழில் வெளிவந்தவற்றுள் மிக நீண்ட தொலைக்காட்சித் தொடராகும். 1750 பகுதிகள் வெளியான இத்தொடர் முழுமைக்கும் வசனம் எழுதியவர் இவரே. இந்திய அளவில் இது ஒரு சாதனையாகக் கணிக்கப்படுகிறது

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.