பாஜாவ் லாவுட்
மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளையும் இணைக்கும் கடற்பகுதியில் நாடோடிகளாக (gypsy) பாஜாவ் லாவுட் (Bajau Laut) இன மக்கள் வாழ்கின்றனர்.
வாழ்க்கை முறை
பாஜாவ் லாவுட் மக்களில் பெரும்பான்மையானோர் நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறி விட்டனர். செம்போர்னா தீவை ஒட்டியப் பகுதியில் இன்னமும் கடலோரங்களில் மரங்கள் ஊன்றப்பட்டுப் பலகைகளால் ஆன வீடுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாஜாவ் லாவுட் மக்கள் வாழ்கின்றனர். கடல் நாடோடிகளாக அறியப்படும் பாரம்பரிய வாழ்விலிருந்து வெளியேறித் தரைப்பகுதிக்குப் பெயர்ந்த பாஜாவ் மக்களைத் தரை மக்கள் என பொருள்படும் பாஜாவ் டாராட் என்றழைக்கின்றனர்.
கடலைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் பாஜாவ் மக்கள் தரைப்பகுதிக்கு வருவது மிகவும் குறைவு. கடலில் கிடைக்கும் மீன்கள், கடல் வாழினங்கள் ஆகியவற்றை விற்பதற்கும், குடிநீரைப் பெறுவதற்கும், படகுகளைச் செய்வதற்கும், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் எனக் குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே தரைப்பகுதிக்கு வருகின்றனர். அவ்வாறு தரைப்பகுதிக்கு வர நேரிடும் போது நலக்குறைவை அடைகின்றனர். பாஜாவ் லாவுட் மக்கள் ஆழ் நீச்சலில் தேர்ந்தவர்கள். மூச்சை அடக்கி நீண்ட நேரமாய் ஆழ்கடலில் முக்குளித்து முத்துகள், சிப்பிகள் ஆகியவற்றைச் சேகரிப்பர். லெப்பா எனப்படும் அழகிய மரவேலைப்பாடுகள் கொண்ட படகு வீட்டைக் கட்டும் நுட்பம் கொண்டவர்கள்.
சமயம் / நம்பிக்கை
பாஜாவ் லாவுட் மக்கள் ஆன்மவாத நம்பிக்கை கொண்டவர்கள். பாஜாவ் மக்களில் சமயப்பரப்புநர்களின் தூண்டுதலால் கிருஸ்த்துவம், இசுலாம் ஆகிய சமயங்களைத் தழுவுகின்றனர். இருப்பினும், சமய வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை முறையாகக் கடைபிடிப்பதில்லை.
மொழி
மலாயோ-போலினேசியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த சமா-பாஜாவ் மொழியின் துணைமொழிகளில் ஒன்றான பாஜாவ் மொழியே பாஜாவ் லாவுட் மக்களின் தாய்மொழியாகும். இம்மொழியைத் தென் பிலிப்பைன்ஸ், கிழக்கு மலேசியா, கிழக்கு இந்தோனேசியா ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 260, 000 பேர் பேசுகின்றனர். பாஜாவ் மொழியில் ஏராளமான வாய்மொழி இலக்கியங்கள் அமைந்திருக்கின்றன. ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டே பாஜாவ் மொழி எழுதப்படுகிறது.
சடங்குகள்
திருமணச் சடங்குகள்
பாஜாவ் லாவுட் மக்களின் திருமணம் பெரும்பாலும் உடன்போக்கு முறையிலே நிகழ்கிறது. வீட்டை விட்டு வெளியேறிப் பிடித்த இணையர்களுடன் தனித்து வாழத் தொடங்குவதே திருமண வாழ்வின் தொடக்கமாய் அமைந்திருக்கிறது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் மணமகன் வீட்டைச் சேர்ந்தவர் மணமகள் வீட்டாரிடம் திருமணத்துக்கான உறுதிப்பாட்டைப் பெறுவார். அதன் பின்னர், மணமகன் வீட்டார் தரவேண்டிய சீர்தொகையும் பொருட்களும் திருமண நாள் ஆகியவை முடிவு செய்யப்படும். திருமண நாளன்று பாஜாவ் இன மக்களின் பாரம்பரிய உடைகளை மணமக்கள் அணிந்திருப்பர். திருமணச் சடங்குகள் முடிந்தபின்னர் களியாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இறப்புச் சடங்குகள்
முன்னர், பாஜாவ் லாவுட் மக்கள் நீண்டகாலமாக நலம் குன்றிச் செயலிழுந்து போயிருக்கும் முதியவர்களைக் பவளப்பாறைத் திட்டுகளில் கைவிட்டு, இறந்த பின்னர் அடக்கம் செய்யும் சடங்கினைக் கொண்டிருந்தனர். பாஜாவ் இன மக்களின் கல்லறைகளில் இறந்தவரின் உருவத்தைப் பொறித்த சிலை வைக்கப்பட்டிருக்கும். வட்டமான சிலைகள் ஆண்களையும் விளிம்புகள் கொண்ட சிலைகள் பெண்களையும் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட கல்லறைக் கொல்லையில் அமைந்திருக்கும் சிலைகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். பெண்களின் கல்லறைகள் வீட்டு வடிவிலும் ஆண்களின் கல்லறைகள் படகு வடிவிலும் அமைந்திருக்கும். இசுலாமியச் சமயத்தைத் தழுவியர்களின் அடையாளமாய்ச் சிலைகளில் முக்காடு அணிவிக்கப்பட்டிருக்கும்.
குடியுரிமைச் சிக்கல்
பாஜாவ் லாவுட் மக்கள் நாடோடி வாழ்க்கை முறையை வாழ்வதால் குடியுரிமை பெறும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். மேற்கு மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் பொதுவான கடல் எல்லையில் பாஜாவ் லாவுட் மக்கள் வாழ்வதால் குடியுரிமை ஆவணங்களைப் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். குடியுரிமை ஆவணங்கள் இன்மையால், பாஜாவ் இனக் குழந்தைகள் பள்ளிக்கல்வியையும் தொடர இயலாமல் போகிறது.