being created

பரிபாடல்

From Tamil Wiki
Revision as of 13:51, 10 June 2022 by Siva Angammal (talk | contribs)

This page is created by ka. Siva

பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

பரிபாடல் இலக்கணம்

தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப்பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.

  • நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
  • வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
  • வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
  • கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.
  • சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.
  • 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.
  • பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • இந்நுால் 'பாிபாட்டு' எனவும் வழங்கப்படும்.

பரிபாடல் நூல் தொகுப்பு

பரிபாடலில் அமைந்த பாடல்களின் தொகுப்பை,

"திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்

தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய

வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப

செய்யபரி பாடற் றிறம்".

மேற்கண்ட வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்.

வெண்பாவின் விளக்கம்:

பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்கள், காடுகாளுக்கு  1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல்கள், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. காடுகாள் என்றது காளியை. 'காடுகாட்கு' என்பதற்குப் பதில் 'கார்கோளுக்கு' என்றும் பாடபேதம் உண்டு. கார்கோள் என்பது கடல். அந்த ஒரு பாடல் காளியைப் பற்றியதா? கடலைப் பற்றியதா? என்று இப்பொழுது அறிய வழியில்லை. இவை முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றுள், திருமாலுக்கு 6 பாடல்கள், முருகனுக்கு 8 பாடல்கள், வையைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்களே உள்ளன. எஞ்சியவை இறந்துபட்டன. எனினும்,

பழைய உரைகளிலிருந்தும், புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் 2 முழுப் பாடல்களும், சில பாடல்களின் உறுப்புகளும்

தெரியவருகின்றன. இவை 'பரிபாடல்-திரட்டு' என்னும் தலைப்பில்  பரிபாடல் நூலின் இறுதியில் சேர்க்கப் பெற்றுள்ளன. 22 பாடல்களில் 6 திருமாலுக்கும், 8 முருகனுக்கும், 8 வையைக்கும் உரியனவாயுள்ளன. பரிபாடல் திரட்டில் உள்ள 2 முழுப்பாடல்களுள் ஒன்று திருமாலைப் பற்றியும், மற்றொன்று வையையைப் பற்றியும் அமைந்தவை. பாடற் பகுதிகளுள் சில மதுரையையும் வையையையும் குறித்தன. ஒரு சில உறுப்புகள் இன்னவற்றைச் சார்ந்தவை என்று தெரியக் கூடவில்லை.

தொகுத்தவர்

பரிபாடல்  நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர், பெயர் ஒன்றும் அறியக் முடியவில்லை. தொகுத்த பாடல்களின் அடிவரையறை பற்றிய குறிப்பும் கிடைக்கவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும், தொல்காப்பியர் வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, இயற்றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர்,பற்றிய

பழங் குறிப்புகள் உள்ளன. ஆயினும், பிரதிகளின் சிதைவினால் முதற் பாடலுக்கும் 22- ஆம் பாடலுக்கும் இக் குறிப்புகள் கிடைக்கவில்லை. 13- ஆம் பாடலுக்கு இசை வகுத்தோர் பெயர் காணப்படவில்லை. முதற் பாடலில் ராகமாக வருகின்ற 14 ஆம் வரி முதல் 28 ஆம் வரி வரையிலுள்ள பகுதி தெளிவின்றி உள்ளது. இப் பகுதியில் பொருள் வரையறை செய்வதற்குப் பிரதிகளின் உதவியும் பழைய உரையின் உதவியும் கிடைக்கவில்லை. இவ்வாறே ஏனைய பாடல்கள் சிலவற்றிலும் ஒருசில இடங்கள் உள்ளன.

22 பாடல்களில் 'கடவுள் வாழ்த்து'ப் பொருளில் வந்தவை 14. ஏனைய எட்டுப் பாடல்களும் வையையைப் பற்றியன. இந்த எட்டிலும் அகப்பொருள் பற்றி எழுதப் பெற்ற பழைய கருத்துகளும் உள்ளன. பரிபாடல் நூல் செய்யுள்கள் மிக நீண்டனவாய் இருப்பதால்,

பாடல்களின் இடையிடையே, கருத்து விளங்கும் வகையில் தலைப்புகள் இடப்பட்டு சில பதிப்புகள்  அமைக்கப் பெற்றுள்ளன.

ஆசிரியர்கள்

பரிபாடலில் உள்ள 22 பாடல்களில் 20 பாடல்களை 13 புலவர்கள் இயற்றியுள்ளனர். அவர்கள்;

நல்லந்துவனார்

செவ்வேள் பற்றிய 8-ஆம் பாடல்,

வையை பற்றிய 6, 11, 20 ஆகிய 4 பாடல்கள்

இளம் பெருவழுதியார்

திருமால் பற்றிய 15-ஆம் பாடல்

கடுவன் இளவெயினனார்

திருமால் பற்றிய 3 மற்றும் 4- ஆம் பாடல்கள், செவ்வேள் பற்றிய 5- ஆம் பாடல்

கரும்பிள்ளைப்பூதனார்

வையை பற்றிய 10- ஆம் பாடல்

கீரந்தையார்

திருமால் பற்றிய 2- ஆம் பாடல்

குன்றம்பூதனார்

செவ்வேள் பற்றிய 9 மற்றும் 18- ஆம் பாடல்

கேசவனார்

செவ்வேள் பற்றிய 14- ஆம் பாடல்

நப்பண்ணனார்

செவ்வேள் பற்றிய 19- ஆம் பாடல்

நல்லச்சுதனார்

செவ்வேள் பற்றிய 21- ஆம் பாடல்

நல்லழிசியார்

வையையைப்பற்றி 16-ஆம் பாடல், செவ்வேட்குரிய 17-ஆம் பாடல்

நல்லெழினியார்  

திருமால் பற்றிய 13- ஆம் பாடல்

நல்வழுதியார்

வையை பற்றிய 12- ஆம் பாடல்

மையோடக்கோவனார்

வையை பற்றிய 7- ஆம் பாடல்

பாடல்களின் பண்

பரிபாடல்களில் 2 முதல் 12 வரை அமைந்த 11 பாடல்களின் பண் பாலை யாழ்;  13 முதல் 17 வரை அமைந்த  ஐந்து பாடல்களின் பண் நோதிறம். 18 முதல் 21 வரை அமைந்துள்ள நான்கு பாடல்களின் பண் காந்தாரம்.இவ் வகைப் பண் வரிசையில் பாடல்கள் அமைந்துள்ளதை நோக்கினால்,

தேவாரப் பாடல்களைப் போல், பரிபாடலும் பண்முறை கொண்டு தொகுக்கப் பெற்று, பாடகர்களால் பாடப் பெற்று வந்தன என்று கருத இடமுண்டு.

உவமை சிறப்பு

பரிபாடல் நூலின் புறத்திரட்டில் உள்ள பாடல்;

"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

  பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்

  இதழகத் தனைய தெருவம் இதழகத்

  தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்

  தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்

  பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த

  நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப

  ஏம வின்றுயில் எழுதல் அல்லதை

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

  கோழியின் எழாதெம் பேரூர் துயிலே".

பொருட் சுருக்கம்:

மதுரைநகரம் திருமாலின் உந்தியின் மலர்ந்த தாமரை மலரை ஒக்கும்; அந் நகரத்துள்ள தெருக்கள் அம் மலரின் இதழ்களை ஒக்கும்;

பாண்டியன் அரண்மனை அம்மலரகத்துள்ள பொகுட்டை ஒக்கும்; அந் நகரில்வாழும் தமிழராகிய குடிமக்கள் அம் மலரின் தாதுக்களை ஒப்பர்; அந் நகர்க்கு வரும் இரவலர் தாதுண்ண வரும் வண்டுகளை ஒப்பர். மதுரையிலுள்ள மாந்தர் வேத முழக்கத்தாலே நாள்தோறும் துயிலெழுவரேயன்றி வஞ்சி நகரத்தாரும் உறையூராரும் போலக் கோழி கூவுதலாலே துயிலெழுதலில்லை.

தாமரை மலரின் இதழ், பொகுட்டு, தாது, அதைச் சுற்றும் தேனீக்கள் போன்றவற்றை உவமையாகக் கொண்டு மதுரை நகரை பாடியுள்ளது சிறப்பானதாகும்.

பதிப்பு வரலாறு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918- ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.

பாடல்கள் அட்டவணை

1. தெரியவில்லை -  திருமால்- 65

2. கீராந்தையார் - திருமால் -76- நன்னானகார் - பாலையாழ்

3. கடுவனிள வெயினனார்- திருமால்- 94- பெட்டனாகனார்- பாலையாழ்

4. கடுவனிள வெயினனார்- திருமால்- 73 - பெட்டனாகனார்- பாலையாழ்

5. கடுவனிள வெயினனார்- செவ்வேள்- 81 - கண்ணனாகனார்- பாலையாழ்

6. நல்லந்துவனார்-வையை -106-.மருத்துவன் நல்லச்சுதனார்-

பாலையாழ்

7. மையோடக் கோவனார் - வையை - 86 - பித்தாமத்தர் - பாலையாழ்

8. நல்லந்துவனார் - செவ்வேள் - 130 -  மருத்துவன் நல்லச்சுதனார்-

பாலையாழ்

9. குன்றம்பூதனார் - செவ்வேள் - 130 -  மருத்துவன் நல்லச்சுதனார் - பாலையாழ்

10. கரும்பிள்ளைப் பூதனார் - வையை - 131 -  மருத்துவன் நல்லச்சுதனார் - பாலையாழ்

11. நல்லந்துவனார் - வையை - 140 -  நாகார் - பாலையாழ்

12. நல்வழுதியார் - வையை - 102 -  நந்தாகனார் - பாலையாழ்

13. நல்லெழினியார்- செவ்வேள் - 64 -   - நோதிறம்

14. கேசவனார் - செவ்வேள் - 32 -  மருத்துவன் நல்லச்சுதனார் - பாலையாழ்

15. இளம்பெருவழுதியார்  - திருமால் - 66 -  மருத்துவன் நல்லச்சுதனார் - நோதிறம்

16. நல்லழிசியார்  - வையை - 55 -  மருத்துவன் நல்லச்சுதனார் - நோதிறம்

17.  நல்லழிசியார்  - செவ்வேள் - 53 -  மருத்துவன் நல்லச்சுதனார் -

நோதிறம்

18. குன்றம்பூதனார்  - செவ்வேள் - 53 -  மருத்துவன் நல்லச்சுதனார் - காந்தாரம்

19. நப்பண்ணனார்  - செவ்வேள் - 106 -  மருத்துவன் நல்லச்சுதனார் - காந்தாரம்

20. நல்லந்துவனார்  - வையை - 111 -  மருத்துவன் நல்லச்சுதனார் - காந்தாரம்

21. நல்லச்சுதனார்  - செவ்வேள் - 70 -  கண்ணகனார் - காந்தாரம்

22. 45

உசாத்துணை

தமிழ் இணைய கல்விக்கழகம், பரிபாடல் நூல்

https://www.tamilvu.org/ta/library-l1250-html-l1250ind-124767

பரிபாடல், உரை  பொ. வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.