being created

பன்னிரு படைக்களம் (வெண்முரசு நாவலின் பத்தாம் பகுதி)

From Tamil Wiki


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

பன்னிரு படைக்களம் (‘வெண்முரசு’ நாவலின் பத்தாம் பகுதி)

பன்னிரு படைக்களம் (‘வெண்முரசு’ நாவலின் பத்தாம் பகுதி) சேதிநாட்டு அரசன் சிசுபாலன் கிருஷ்ணனராலும் மகதத்தின் அரசான் ஜராசந்தன் பீமனாலும் கொல்லப்படுவதைச் சொல்கிறது. யுதிஷ்டிரன் நாற்கள விளையாட்டில் இந்திரபிரஸ்தத்தை இழக்கிறார். திரௌபதியின் துகிலுரிதலுடன் இது நிறைவு பெறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் பத்தாம் பகுதியான ‘பன்னிரு படைக்களம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் மார்ச் 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூன் 2016இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

பன்னிரு படைக்களத்தைக் கிழக்கு பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் சூதாட்ட நிகழ்வே பன்னிருபடைக்களத்தின் மையப்புள்ளி. இதில்தான் சூதாட்டக்களம் அமைக்கப்படுகிறது. சூதாட்டம் தொடங்கி, உச்சம் பெற்று, நிறைவுறுகிறது. ஒட்டுமொத்த மகாபாரதக் கதைமாந்தர்களின் எண்ணவோட்டம் திசைமாறும் பெருந்திருப்புமுனையாக இந்தச் சூதாட்டக்களமே அமைந்து விடுகிறது. அந்த வகையில், இந்தப் ‘பன்னிருபடைக்களம்’ ஒட்டுமொத்த மகாபாரதத்துக்கும் வெண்முரசு நாவலுக்கும் கதையோட்ட மையத்தையும் கதையின் முக்கிய திருப்பத்தையும் கொண்டுள்ளது.

பன்னிருபடைக்களத்தில்தான் தேசிநாட்டரசர் சிசுபாலனின் முழு வாழ்வும் கூறப்படுகிறது. மகதநாட்டு மன்னர் ஜராசந்தன் நடத்த உள்ள நான்கு வேதங்களுக்கு மாற்றாக நாகவேதத்தை நிலைநாட்டும் வேள்வியைத் தடுக்க இளைய யாதவரும் பீமனும் மகதநாட்டுக்குள் புகுதலும் ஜராசந்தன் தன்னிலை உணர்ந்து தன்னுடைய பொறுப்புகளைத் தன் மகனிடம் ஒப்படைத்தலும் ‘இளைய யாதவர்தான் பரம்பொருள்’ என்று ஜராசந்தன் உய்த்துணர்தலும் சிறப்பான தருணங்கள். ஜராசந்தன்-பீமன் மல்யுத்தமும் மெய்சிலிர்க்க வைக்கிறது.  ஜராசந்தனைக் கொன்ற பின்னர் இளைய யாதவர் மகத நாட்டை ஜராசந்தனின் மகனிடமே ஒப்படைத்தலும் ஜராசந்தனின் மரணத்துக்குப் பிழையீடுசெய்ய சிசுபாலன் பொங்கியெழுதலும் மனநெகிழ்வுக்குரிய திருப்புமுனைகள்.  

ஒவ்வொரு சிறு சிறு விஷயத்துக்கும் மணிக்கணக்காக அரசுசூழும் தர்மர், இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்த விதுரர் அவரிடம், ‘அஸ்தினபுரிக்கு வந்து கௌரவர்களோடு சூதாடு’ என அழைக்கும்போது, உடனே ஒப்புக்கொள்கிறார். விதுரர் தர்மரைச் சந்திக்கும் விநாடிக்கு முன்புவரை தருமரின் நெஞ்சு பெரும்போரைத் தவிர்க்கும் வழிமுறைகளைப் பற்றியே எண்ணி, ஏங்கிக் கொண்டிருந்தது. அதனால்தான் விதுரரின் இந்தச் சொற்கள் தருமரின் எண்ணச் சுழலுக்குப் பெருவிடுதலையைத் தந்துவிடுகிறார். அது விடுதலையா அல்லது சிறையா? என்பதைச் சற்றும் சிந்திக்காமல், ‘மறு எண்ணம் இல்லாமல் உவகைப் பெருக்குடன்’ ஒப்புதல் தருகிறார். தர்மர் தான் முடிவெடுத்த பின்னர் ‘அது பற்றி, மற்றவர்களிடம் தன் முடிவை நியாயப்படுத்தி, அவர்களையும் ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும்’ என்பதற்காகவே அவர் பலரிடம் இது பற்றிச் கருத்துக் கேட்கிறார். அவர்கள் தன் கருத்துக்கு முரணான கருத்தைத் தெரிவிக்கும் போதெல்லாம்  தன்னுடைய வாழ்நாள் அறத்தாலும் பகடையில் இதுநாள்வரை தான் பெற்ற வெற்றியினால் அடைந்த இறுமாப்பினாலும் நீக்கி, அவர்களை அமைதியடையவும் தன்னுடய முடிவுக்குக் கட்டுப்படவும் வைத்துவிடுகிறார். ஆனால், நகுலன் மட்டும் தர்மரிடம் தயக்கத்தோடு தன் கருத்தை முன்வைக்கிறான்.

ஊழின் திரை அங்கிருந்த பலரின் கண்களை மறைத்துவிடுகிறது. அதனால், அவர்களுள் யாருக்குமே இளைய யாதவரைப் பற்றிய நினைவு எழவேயில்லை. ஊழின் திரையால் விழி மறைக்கப்படாத, நகுலனுக்கு மட்டுமே அந்தத் தருணத்தில், இளைய யாதவர் நினைவுக்கு வருகிறார். ஆனாலும், காலம் கடந்துவிடுகிறது. ‘தர்மர் சூதாட்டத்தில் தோற்பது உறுதி’ என்பதைப் பலமுறை கூறுகிறான் பீமன். அதைத் தர்மரிடமும் நேடியாகவே கூறுகிறான். ஆனால், தர்மர் அதை மறுத்து, ‘பெரும்போர் நடக்காமல், துளிக்குருதியும் சிந்தாமல், இந்தச் சூதாட்டத்தின் வழியாகவே நீ வெற்றி பெறுவாய்’ என்று தன் உள்ளம் தனக்குத் தந்த தவறான வாழ்த்தையே பீமனிடம் திடமாகக் கூறுகிறார்.

தருமர் தன்னுடைய அறத்தின் மீதும் பகடையாடும் திறனின் மீதும் அதீத நம்பிக்கைகொண்டுள்ளார். எப்போதுமே நமது அதீத நம்பிக்கை நம்மை நோக்கியே அறைகூவல் விடுக்கும். அந்த அறைகூவல் விதுரரின் மீதேறிவந்து தருமருக்கு முன்பாக நின்றது. அதற்குத் தருமர் செவிசாய்த்தார். அதன் பின்னர் அவர் வேறு எவர் பேச்சையும் உள்வாங்கிக் கொள்ளும் திறனை இழந்துவிட்டார். தர்மர் பிறிதொருவராக மாறிவிடுகிறார். துரியோதனன் எப்படி இந்திரப்பிரஸ்தத்தில் திரௌபதியின் முன் விழுந்து, அஸ்தினபுரிக்குத் திரும்பியதும் பிறிதொருவராக மாறினானோ அதுபோலவே, இங்குத் தர்மர் மாறிவிட்டார்.

விப்ரர் தன்னால் இயன்ற இறுதிச் சொல்லையும் எடுத்துக் கூறி, விதுரரிடம் சூதாட்டத்தைத் தவிர்க்குமாறு கூறுகிறார். திருதராஷ்டிரரும் சூதாட்டத்தை விரும்பவில்லை. விப்ரரின் இறப்பு ஒரு திருப்புமுனை என்றே கூற வேண்டும். அதுவரை தன் நிலையழியாது இருந்த திருதராஷ்டிரர் மனம் மாறிவிடுகிறார். சூதாட்டத்திற்கு ஒப்புக்கொள்கிறார். சூதாட்டக்களத்தில் கௌரவர் விகர்ணனுடன் மகிடன் முதலானவர்கள் மனத்தளவில் உரையாடுவதும் தர்மருடன் தெய்வங்கள் மாறி மாறி உரையாடுவதும் மிகச் சிறந்த நாடகீயம்.

திரௌபதியின் ஆடைபறிப்பு நிகழ்வையும் திரௌபதியின் மானம் காக்கப்படும் தருணத்தையும் ‘மாயங்கள்’ இன்றி, இயல்பாகவும் பொதுஅறிவுக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்ற வகையிலும் எளிய மற்றும் நுட்பமான வாசகர்களும் ஒப்புக்கொள்ளும் விதத்திலும் எழுத்தாளர் ஜெயமோகன் காட்டியிருக்கிறார். திரௌபதியின் ஆடைபறிப்பு நிகழ்வில், திரௌபதி வேறு வழியின்றி, இறுதியாக, தன்  ஆடையைப் பிடிக்காமல் தன்னிரு கைகளையும் உயர்த்தி இளைய யாதவரைக் கூவியழைக்கிறாள். அத்தருணத்தில் உப்பரிகை மேடையிலிருந்த அசலை தன்னுடைய ஆடையைக் களைந்து, அதைத் திரௌபதியின் மீது வீசுகிறாள். திரௌபதியின் மானம் காக்கப்படுகிறது. எங்கும் தெய்வம் நேரில் வந்து நின்று அருள்வதில்லை. தெய்வத்தின் அருள் எளிய மானுடர்களின் உடலிலிருந்தே வெளிப்படுகிறது. காலந்தோறும் தெய்வம் தான் நின்றாடும் களமாகவும் நின்றருளும் பீடமாகவும் எளிய மானுடரையே தேர்ந்தெடுக்கிறது. இந்த அற்புதமான, மெய்யான கருத்தோட்டத்தை மிக இயல்பாகவும் அழுத்தமாகவும் எழுத்தாளர் ஜெயமோகன் காட்டிவிடுகிறார். இந்த நிகழ்வைப் போலவே, ‘வெண்முரசு’ நாவலில் பல முக்கிய தருணங்களை எழுத்தாளர் ஜெயமோகன் பொதுஅறிவுக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்ற வகையில், மாயங்களுக்கு இடந்தராமல் எழுதியிருக்கிறார். அதனாலேயே மகாபாரதத்தை ‘அது மிகைக்கற்பனைப் புனைவு அல்ல; அது ஓர் உண்மைப்பெருவாழ்வு’ என்று நம் மனம் உறுதியுடன் ஏற்கத் துணிகிறது.

பன்னிருபடைக்களத்திற்கு மற்றொரு சிறப்பு ‘இரட்டையர்கள்’. சமக்ஞை-சாயை, ரம்பன் -– கரம்பன், நரன் -– நாரணன், ஹம்சன் -– டிம்பகன், சலன் - – அசலன், அணிகை –- அன்னதை, அஸ்வினி - தேவர்கள் எனப் பன்னிருபடைக்களம் நெடுகிலும் இரட்டையர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வரலாறும் வாழ்வனுபவங்களும் அதிகற்பனையாக மாறி வாசகரைத் திகைக்கச் செய்கின்றன.

கதை மாந்தர்

தருமர், திரௌபதி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் திருதராஷ்டிரர், துரியோதனன், துச்சாதனன், விகர்ணன், பீமன், நகுலன் மற்றும் சமக்ஞை-சாயை, ரம்பன் -– கரம்பன், நரன் -– நாரணன், ஹம்சன் -– டிம்பகன், சலன் - – அசலன், அணிகை –- அன்னதை, அஸ்வினி - தேவர்கள் ஆகிய இரட்டையர்களும் துணைமைக் கதைமாந்தர்களாக இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

[[Category:Tamil Content]]