பனிக்குடம்
பனிக்குடம் (இதழ்) பெண்ணியச் சிந்தனைகளையும் பெண் எழுத்தையும் மையமாகக் கொண்டு வெளிவந்த காலாண்டு இதழ். ஆசிரியர் குட்டி ரேவதி.
வெளியீடு
பனிக்குடம் குட்டி ரேவதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பெண் சிந்தனைகள், எழுத்துக்கான காலாண்டு இதழ். ஜானி ஜான் கான் சாலை, சென்னையிலிருந்து இதழ் வெளிவந்தது.
நோக்கம்
பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சியைப் பனிக்குடம் தொடர்வதாக இதழின் ஆசிரியர் குறிப்பில் காணப்பட்டது.
உள்ளடக்கம்
பெண் வெளி, பெண்ணியம், பண்போவியம், நேர்காணல், உரையாடல், நூல் அறிமுகம், மதிப்புரை, கவிதை, சிறுகதை, இதழியல் பார்வை, புகைப்படம், ஓவியக் கலைஞர்களின் அறிமுகம் என்று பல்வேறு பகுதிகள் இந்த இதழில் இடம்பெற்றன. புகைப்படம், ஓவியம் என்ற இரண்டு துறைகளிலும் உள்ள பெண் கலைஞர்களைப் பற்றிய அறிமுகப் பக்கம் வெளிவந்தது. இது மேலைநாட்டுக் கலைஞர்களைப் பற்றிய அறிமுகமாக இருக்கிறது. அம்பை, மகாஸ்வேதாதேவி போன்றவர்களுடைய நேர்காணல்களும் குறிப்பிடத்தக்கவை. நவீன கவிதைகளின் பொருட்செறிவைக் கொண்ட நவீன ஓவியங்களைத் தாங்கி பனிக்குடத்தின் முன் அட்டைகள் வெளிவந்தன. ‘இதழியல் பார்வை’ என்னும் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதழியல் துறையில் (குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிக்கைகளில்) பங்களித்த பெண் ஆளுமைகள் குறித்த தகவல்களைத் தந்தது. ‘பெண்வெளி’ என்ற பகுதியில் விவாதங்கள், உரையாடல்கள் உள்ளன. மொழிபெயர்ப்புகள் வெளியாயின. பனிக்குடம் பதிப்பகம் வழியாக பெண் படைப்புகள் வெளியாயின.
பங்களிப்பாளர்கள்
- அம்பை
- கமலா தாஸ்
- வ. கீதா
- க்ருஷாங்கினி
- பூரணி
- பாமா
- சிவகாமி
- பிரசன்னா ராமசாமி
- கனிமொழி
- வெண்ணிலா
- சல்மா
- உமா மகேஸ்வரி
- சுகிர்தராணி
- தமிழச்சி
- தமிழ்ச் செல்வி
- புதிய மாதவி
- காயத்திரி காமஸ்
- சி.பி. கிருஷ்ணப்பிரியா
நிறுத்தம்
2002 முதல் 2007 வரை பனிக்குடம் வெளிவந்தது. அதன்பின் நின்று போனது.
உசாத்துணை
- பனிக்குடம்: இதழ்: இளமதி: bsubra
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.