பட்டினப்பாலை

From Tamil Wiki
Revision as of 13:50, 23 June 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

பட்டினப்பாலை,   சங்க இலக்கிய தொகுப்புகளின் பத்துப்பாட்டு நூல் வரிசையில் ஒன்பதாவது நூலாகும்.  பட்டினப்பாலை நூலை இயற்றியவர்  கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

ஆசிரியர் வரலாறு

பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை என்ற நூலினையும் இவர்தான் இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன்  என்னும் அரசன் மீது பாடப்பட்டது. பட்டினப்பாலை கரிகால்சோழன் மீது பாடப்பட்டது. ஆகவே இவர் கரிகாலன், இளந்திரையன் என்ற இரண்டு மன்னர்களின் அன்புக்குரியவராக வாழ்ந்தார் என்பதை அறியலாம். இவரின் வரலாற்றினை அறிவதற்கான சான்று எதுவும் இல்லை. கடியலூர் என்பதை இவர் பிறந்த ஊராகக் கருதுகின்றனர். இவ்வூர் எதுவெனத் தெரியவில்லை. இவர் தொண்டைமானையும், சோழனையும் பாடியிருப்பதால் இந்த ஊர் சோழ நாட்டிலோ, தொண்டை நாட்டிலோதான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் படைப்புகள்;
  • பெரும்பாணாற்றுப்படை (500 அடிகள்)
  • பட்டினப்பாலை (301 அடிகள்)
  • குறுந்தொகை- 352- வது பாடல்
  • அகநானூறு - 167 - வது பாடல்
அடிகள்

பண்டைய. சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்பு, அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் பட்டினப்பாலை நூல்  301 அடிகள் கொண்டுள்ளது.. பட்டினப்பாலையின் செய்யுள்கள்  ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டிருந்தாலும் இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகளும் விரவி வந்துள்ளன.

பொருண்மை

பட்டினப்பாலை பாடலில்  சோழ மன்னன்  கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக் கூறுகிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். கரிகால் சோழன், திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.

பெயர்க்காரணம்

பட்டினப்பாலை நூலிலுள்ள பட்டினம் மற்றும் பாலை தனித்தனி பொருள் பொதிந்தவை

  • பட்டினம்

துறைமுகத்தை ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இது தமிழகத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்போது இது ஒரு சிறிய ஊராகும். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது.

  • பாலை

பாலை என்பது பாலைத்திணை ஆகும். பிரிவைப் பற்றிக் கூறுவது பாலைத்திணையாகும். கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து போவது - அல்லது பிரிந்து போக நினைப்பது - அல்லது பிரிந்து போக வேண்டுமே என நினைத்து வருந்துவது இவை பாலைத்திணையின்கண் அடங்கும். கணவன் தான் பொருள் தேடப் பிரிந்து செல்வதைத் தன் மனைவிக்கு அறிவிப்பதும், அதை அவள் தடுப்பதும் பாலைத் திணையில் அடங்கும். பட்டினப்பாலை என்பது பட்டினம்- பாலை என்ற இரு சொற்களைக் கொண்ட தொடர். "பட்டினத்தின் சிறப்பைக் கூறிப் பிரிவின் துன்பத்தை உணர்த்துவது" என்பது இதன் பொருளாகும்.

பாட்டின் அமைப்பு

பட்டினப்பாலை தூலில் "தலைவன், தலைவியுடன் இல்லறம் நடத்தும்போது வறுமையால் வருந்தினார். தன் வறுமை நீங்கப் பரிசு பெறும்பொருட்டுக் கரிகால்வளவனிடம் போக நினைத்தார். அவர் கருத்தை அறிந்த அவர் தலைவி அவரைப் பிரிந்திருக்கவேண்டுமே என்றெண்ணி வருந்தினாள். அவளுடைய வருத்தம் தீர "நான் காவிரிப்பூம் பட்டினத்தையே பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் பிரிந்து செல்லமாட்டேன்" என்று அப்பொழுது தன் உள்ளத்தை நோக்கி தலைவன் உரைத்தான்" என்ற முறையில் நூலாசிரியராகிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் இப்பாடலைப் பாடியிருக்கின்றார். காவிரிப் பூம்பட்டினத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கியவர் முதலில் காவிரியாற்றின் பெருமையைக் கூறுகின்றார். பிறகு சோழநாட்டின் வளத்தைப் பாடுகின்றார். அதன்பின் காவிரிப்பூம் பட்டினத்தின் புறநகர்ப்பகுதிகள்; காவிரித்துறையின் பெருமை; நகருக்குள் இரவிலும் பகலிலும்

நிகழ்ச்சிகள்; வாணிகம்; கொடிகள்; வாழும் மக்கள்; செல்வச் சிறப்பு; மன்னன் கரிகாற்சோழனுடைய ஆண்மை, வீரம், கொடை, ஆட்சி இவைகளையெல்லாம் வரிசையாக எடுத்துக்காட்டியிருக்கின்றார். இதுவே இப்பாடலின் அமைப்பாகும். இதனை

" திருமாவளவன்தெவ்வர்க்கு ஓங்கியவேலினும் வெய்ய கானம்;அவன், கோலினும் தண்ணியதடம்மெல் தோளே. முட்டாச் சிறப்பின்பட்டினம் பெறினும்வாரிரும் கூந்தல்வயங்கிழை ஒழியவாரேன் வாழிய நெஞ்சே."

என்று வரும் பட்டினப்பலை அடிகளால் அறியலாம்.

காட்சிகள்

பட்டினப்பாலை நூல் காட்டும் அக்கால தமிழ் நிலக்காட்சிகள் சுருக்கமாக;

காவிரியின் பெருமை

மழை வறண்ட காலத்திலும் காவிரியாற்றின் நீர் வற்றாது; அது மேற்குமலையிலே பிறந்து கிழக்குக் கடலோடு கலப்பது; தண்ணீரை வயல்களிலே நிரப்பிப் பொன்கொழிக்கச் செய்வது.

வான்பொய்ப்பினும் தான்பொய்யா

மலைத்தலைய, கடற்காவிரி

புனல்பரந்து பொன்கொழிக்கும்             (5--7)

சோழ நாட்டிலே என்றும் விளைந்து கொண்டிருக்கின்ற பரந்த வயல்கள் இருக்கின்றன. அங்கே கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் கொட்டில்கள் பல இருக்கின்றன. அக்கொட்டில்களிலிருந்து வரும் தீப்புகையினால் பக்கத்து வயல்களிலே மலர்ந்திருக்கின்ற நெய்தற் பூக்கள் வனப்புக்கெட்டு வாடுகின்றன.

"விளைவுஅறா வியன் கழனிக்

கார்க் கரும்பின் கமழ் ஆலைத்,

தீத்தெறுவில் கவின்வாடி

நீர்ச்செருவின் நீள் நெய்தல்

பூச்சாம்பும் புலத்து ஆங்கண்"                   (8--12)

இவற்றின் மூலம் சோழ நாட்டின் நீர் வளத்திற்கும் நில வளத்திற்கும் காரணம் காவிரியாறே என்பதை பட்டினப்பாலை உணர்த்துகிறது.

செல்வச் சிறப்பு

பெரிய வீட்டின் அகலமான முற்றத்திலே நெல்லைக் காய வைத்திருந்தனர். அந்த நெல்லுக்கு இளம் பெண்கள் காவலாக இருந்தனர். அவர்களுடைய நெற்றி அழகானது; உள்ளமும் பார்வையும் கபடமற்றவை; நல்ல அணிகலன்களைப் பூண்டிருந்தனர்; காய்கின்ற நெல்லைக் கொத்த வரும் கோழிகளைத் தம் காதிலே தரித்திருக்கும் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டினர்; அக்குழைகள் முற்றத்திலே சிதறிக் கிடக்கின்றன. பொன்னணியைக் காலிலே அணிந்த சிறுவர்கள் உருட்டிச் செல்லும் மூன்று சக்கரவண்டியை அவைகள் தடுக்கின்றன. "அகனகர் வியன் முற்றத்துச்,

சுடர்நுதல் மட நோக்கின்

நேர் இழைமகளிர், உணங்குஉணாக் கவரும்

கோழி யெறிந்த கொடுங்கால் கனங்குழை,

பொற்கால் புதல்வர் புரவியின்று உருட்டும்

முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும் "         (20--25)

இதனால் சோழ நாட்டிலே பல செல்வக் குடியினர் வாழ்ந்தனர் என்பதை பட்டினப்பாலை காட்டுகிறது.

அன்னசாலைகள்

இவ்வுலகிலே புகழ் நிலைக்கக் கூடிய சொற்கள் பெருகவும், மறுமையிலே இன்புறுவதற்கான அறம் பெருகி நிலைக்கவும் எண்ணியவர்கள் பெரிய சமையல் வீடுகளிலே ஏராளமாகச் சோற்றையாக்கினர். வந்தோர்க்கெல்லாம் அள்ளி வழங்குகின்றனர். அச்சோற்றை வடித்த சத்துள்ள கஞ்சி ஆற்றைப் போலே தெருவிலே ஓடுகின்றது. "புகழ் நிலைஇய மொழிவளர,

அறன் நிலைஇய அகன்அட்டில்,

சோறு வாக்கிய கொழுங் கஞ்சி,

யாறு போலப் பரந்து ஒழுகி" (41 - 44)

என்பதனால் இச்செய்தியைக் காணலாம். இவ்வாறு அறங்கருதிச் சோறிடும் இடங்களுக்கு அறக்கூழ்ச்சாலை என்பது பழந்தமிழ்ப் பெயர். பிற்காலத்திலே இவைகளைத்தான் அன்னசத்திரம், தருமசத்திரம் என்ற பெயர்களால் வழங்கினர். கூழ் என்பது உணவின் பொதுப்பெயர். அறக்கூழ்ச்சாலை - தருமத்திற்கு உணவிடும் இடம்.

சுங்கம்

பிற நாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக வந்த பண்டங்களை நிலத்திலே இறக்கவும், உள்நாட்டிலிருந்து தரைமார்க்கமாக வந்த பண்டங்களைப் பிறநாடுகளுக்கு அனுப்புவதற்காகக் கடலில் உள்ள கப்பல்களில் ஏற்றவும் அளவற்ற பண்டங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. அவைகள் எல்லையில்லாமல் வந்து நிறைந்து கிடக்கின்றன. நல்ல பாதுகாப்பையும் சிறந்த காவலையும் உடைய சுங்கச் சாவடியிலே அவைகளின் மேல் புலி முத்திரை பொறித்து வெளியிலே அனுப்புகின்றனர். நீரினின்று நிலத்தேற்றவும்

நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்,

அளந்தறியாப் பல பண்டம்

வரம்பறியாமை வந்தீண்டி

அரும்கடிப் பெரும்காப்பின்

வலியுடை வல்அணங்கினோன்

புலிபொறித்துப் புறம்போக்கி                 [[1]])

இதனால் சுங்கவரி விதிக்கப்பட்டு வந்ததைக் காணலாம். பண்டங்கள் பாழடையாமலும், திருட்டுப்போகாமலும், சுங்கச்சாவடியிலே பாதுகாக்கப்பட்டன.

குவிந்திருக்கும் பண்டங்கள்

வியாபாரத்திற்காகக் காவிரிப்பூம்பட்டினத்திலே பல பண்டங்கள் வந்து குவிந்திருக்கின்றன. அவை உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்தவை. அப்பண்டங்களைப் பற்றி இந்நூலிலே விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. "நீரின் வந்த நிமிர்பரிப்புரவியும்"

வேற்று நாடுகளிலிருந்து குதிரைகள் கடல் வழியாக வந்திருக்கின்றன; அவைகள் உயரமானவை; விரைந்து ஓடும் தன்மையுடையவை.

"காலின் வந்த கரும்கறி மூடையும்"

நிலத்தின் வழியே வண்டிகளில் கொண்டுவரப்பட்ட கரிய மிளகு மூட்டைகள்

"வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்"

இமயமலையிலே பிறந்த சிறந்த மாணிக்கங்கள்; உயர்ந்த பொன்வகைகள்.

"குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்"

மேற்குத் தொடர்ச்சி மலையிலே விளைந்த சந்தனக்கட்டைகள், அகிற்கட்டைகள்.

"தென்கடல்முத்தும் குணகடல் துகிரும்"

தெற்குக் கடலிலே விளைந்த முத்துக்கள்; கீழைக்கடலிலே தோன்றிய பவழங்கள்.

"கங்கை வாரியும் காவிரிப்பயனும்"

கங்கைநதி பாயும் நிலங்களிலே விளைந்த செல்வங்கள்; காவிரியாற்றுப் பாய்ச்சலால் விளைந்த செல்வங்கள்.

"ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்"

இலங்கையிலிருந்து வந்த உணவுப்பொருள்கள்; பர்மாவிலிருந்து வந்த பலவகையான செல்வங்கள்

"அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு"

இன்னும் பல அருமையான பண்டங்களும் மிகுதியான பண்டங்களும் பூமி தாங்க முடியாமல் நிறைந்து, செல்வங்கள் செழித்துக் கிடக்கின்ற பெரிய வீதிகள்.

இவ்வாறு காவிரிப்பூம்பட்டினத்து வீதிகளிலே குவிந்து கிடக்கும் செல்வங்களைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிகள் [[2]] வரையில் உள்ளவை.

வணிகர்களின் நேர்மை

நீண்ட நுகத்தடியிலே தைத்திருக்கும் நடு ஆணிபோல நடுநிலையிலே நிற்கும் நல்ல உள்ளமுடையவர்கள். பழிக்கு அஞ்சி உண்மையே பேசுவார்கள். தம்முடைய பொருளையும் பிறருடைய பொருளையும் ஒரு தன்மையாகவே நினைப்பார்கள். பொருளை வாங்குவோரிடம் அளவுக்கு மேல் அதிகமாக வாங்கிவிடமாட்டார்கள். தாங்கள் கொடுக்கும் பண்டத்தையும் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். பல பண்டங்களையும் அவ்வவற்றின் நியாயமான விலையைக் கூறி விற்பனை செய்வார்கள். "நெடுநுகத்துப் பகல்போல

நடுவுநின்ற நன்னெஞ்சினோர்

வடுஅஞ்சி வாய்மொழிந்து,

தமவும் பிறவும் ஒப்பநாடிக்,

கொள்வதூஉம் மிகை கொளாது,

கொடுப்பதூஊம் குறை கொடாது

பல் பண்டம் பகர்ந்து வீசும்"                [[3]])

இவ்வடிகள் அக்கால வணிகர்களின் நேர்மையை விளக்குகின்றன.

வேளாளர் சிறப்பு

கொலை செய்வதை வெறுத்தவர்கள்; களவு செய்வதைக் கருதாதவர்கள்; தேவர்களை வணங்குவார்கள்; அவர்களுக்கு வேள்வியின் மூலம் பலிகொடுப்பார்கள்; நல்ல பசுக்களையும், எருதுகளையும் பாதுகாப்பார்கள்; நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களின் புகழைப் பரவச் செய்வார்கள், வந்த விருந்தினர்க்குப் பல பண்டங்களைக் கொடுப்பார்கள்; நல்லொழுக்கத்திலிருந்து தவற மாட்டார்கள்; மேழிச்செல்வமே சிறந்தது என்று அதனை விரும்பிப் பாதுகாக்கும் உழவர்கள். "கொலை கடிந்தும், களவு நீக்கியும்

அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும்,

நல்ஆனொடு பகடு ஓம்பியும்

நான் மறையோர் புகழ் பரப்பியும்,

பண்ணியம் அட்டியும், பசும்பதம் கொடுத்தும்

புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை

கொடுமேழி நசை உழவர்;"                   [[4]])

இவ்வடிகள் காவிரிப்பூம்பட்டினத்திலே வாழ்ந்த வேளாளர்களின் சிறப்பையும், செல்வத்தையும், ஒழுக்கத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றன.

வலைஞர்கள்

சினைகொண்ட சுறாமீன் கொம்பை நடுவார்கள். அதிலே கடல்தெய்வம் வாழ்வதாகக் கருதுவார்கள். அதற்குத் தாழைமலரைச் சூட்டுவார்கள். பரந்து கிடக்கும் தலைமயிரையுடைய செம்படவர்கள் கடல் மீது மீன் பிடிக்கப் போகமாட்டார்கள். தமது பெண்டிர்களுடன் விரும்பிய பலவற்றை உண்பார்கள். முழுமதி நாளிலே இவ்வாறு விளையாடுவார்கள். "சினைச்சுறவின் கோடு நட்டு,

மனைச்சேர்த்திய வல்லணங்கினான்

மடல்தாழை மலர் மலைந்தும்,

பிணர்ப் பெண்ணைப் பிழிமாந்தியும்

புன்தலை இரும்பரதவர்

பைந்தழை மாமகளிரொடு

பாயிரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது

உவவு மடிந்து உண்டாடியும்"                    (86--93)

இவ்வடிகளின் மூலம் வலைஞர்களின் வாழ்க்கையைக் காணலாம்.

பல்வேறு வகைக் கொடிகள்

மலர் அணிந்த கோயில் வாசலிலே பலரும் தொழும்படி தெய்வத்தை, ஆவா கனம் செய்து கொடியேற்றப்பட்டிருக்கின்றது.

"மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய

மலர் அணி வாயில் பலர்தொழு கொடியும்"         [[5]])

இது எப்பொழுதும் கோயிலில் கட்டப்பட்டுப் பறந்து கொண்டிருக்கும் கொடி.

திருவிழாக்களைத் தெரிவிப்பதற்காக அரிசிப் பலியிட்டு வணங்கி, நீண்ட மரச் சட்டங்களில் கொடியைக் கட்டி உயரத்திலே பறக்கும்படி நாட்டியிருக்கின்றனர். அவை வெள்ளைத் துணியாலான கொடிகள்; கரும்பு பூத்தது போலக் காணப்படுகின்றன. நெருக்கமாகவும் பறந்து கொண்டிருக்கின்றன.

வருபுனல் தந்த வெண்மணல் கான்யாற்று

உருகெழு கரும்பின் ஒண்பூப் போலக்

கூழுடைக் கொடு மஞ்சிகைத்

தாழுடைத் தண்பணியத்து

வால் அரிசிப் பலி சிதறிப்

பாகு உகுத்த பசு மெழுக்கில்,

காழ் ஊன்றிய கவிகிடுகின்

மேலூன்றிய துகிற் கொடியும்                [[6]])

இவை திருவிழாவுக்கு ஏற்றப்பட்டிருக்கும் கொடிகளாகும்.

"கல்வி கேள்விகளிலே வல்லவர்கள்; முன்னையோர் முறையினின்றும் வழுவாதவர்கள்; நல்ல ஆசிரியர்கள்; "நாங்கள் எதையும் விவாதிக்க வல்லோம். உண்மையை நிலை நாட்டப் பின்வாங்க மாட்டோம். எவரும் எங்களுடன் வழங்கிடலாம்" என்பதை அறிவிக்கக் கொடிகளை நாட்டியிருக்கின்றனர்; பட்டிமன்றங்களிலே இக்கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன.

பல் கேள்வித் துறை போகிய

தொல்லாணை நல்லா சிரியர்,

உறழ்குறித்து எடுத்த உருகெழு கொடியும்"     [[7]])

இது அறிஞர் சபைக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் கொடி. பட்டிமன்றம்- விவாதசபை.

கட்டுத் தறியை அசைக்கின்ற யானைகளைப் போல, காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே பல கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி அசைந்து கொண்டு கிடக்கின்றன. அக்கப்பல்களின் பாய் மரங்களின் மேல் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன.

"வெளில் இளக்கும் களிறு போலத்,

தீம்புகார்த் திரை முன்துறை

தாங்கு நாவாய்த் துவன்றிருக்கை

மிசைக் கூம்பின் அசைக் கொடியும்"          [[8]])

இவ்வடிகள் கப்பல்களின் மேல் கட்டப்பட்டிருக்கும் கொடிகளைக் குறிக்கின்றன.

மீனையும் இறைச்சியையும் துண்டுகளாக்கி, அவற்றை நெய்யிலே பொரிக்கின்ற ஓசை நிறைந்த முற்றம். இந்த முற்றத்திலே பலரும் புகும்படியான வாசற்படியிலே மணலைக் குவித்து மலரைச் சிந்தி, கள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை அறிவிக்கும் கொடியைக் கட்டியிருக்கின்றனர்.

"மீன்தடிந்து விடக்கு அறுத்து

ஊன் பொரிக்கும் ஒலிமுன்றின்,

மணல்குவைஇ மலர் சிதறிப்

பலர் புகுமனைப் பலிப்புதவின்

நறவுகொடைக் கொடியோடு"                 [[9]])

இது, கள் விற்பனை செய்யும் இடத்தை அறிவிக்கும் கொடி.

இன்னும், பல வெவ்வேறு கொடிகளும் கலந்து காணப்படுகின்றன. அவைகள் பல்வேறு வடிவங்களாக அமைந்தவை. சூரியனுடைய கதிரும் நகரத்தில் நுழைய முடியாதபடி அக்கொடிகள் நெருங்கியிருக்கின்றன: நிழல் செய்து கொண்டிருக்கின்றன.

"பிறபிறவும் நனி விரைஇப்,

பல்வேறு உருவின் பதாகை நீழல்

செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பின்"        [[10]])

இவ்வாறு அந்நகரத்திலே பறந்து கொண்டிருக்கும் கொடி வகைகளைப்பற்றிக் கூறுகிறது பட்டினப்பாலை.

கரிகாற்சோழன்

பழைய வெண்பா ஒன்று கரிகாற்சோழனைப் பற்றி குறிப்பிடுகிறது.

"முச்சக் கரமும் அளப்பதற்கு நீட்டியகால்

இச்சக் கரமே அளந்ததால் - செய்ச்செய்

அரிகால் மேல் தேன்தொடுக்கும் ஆய்புனல்நீர் நாடன்

கரிகாலன் கால்நெருப் புற்று"

எளிய பொருள்;

வயல்கள் தோறும் நெல்லை அரிந்த தாளின் மீது வண்டுகள் அருகில் உள்ள தாமரை முதலிய மலர்களிலிருந்து தேனைக் கொண்டுவந்து கூடு கட்டப் பெற்ற ஆராயத் தக்க மிக்க நீர்வளத்தையுடைய சோழ நாட்டிற்கு உரியவனான கரிகால் சோழனின் பாதம் இளமையில் நெருப்பைப் பொருந்தியதால் மூவுலகங்களையும் அளப்பதற்கு நீட்டிய அந்தக் காலானது இந்நிலவுலகத்தை மட்டுமே அளந்தது. கரிகாலன் மூவுலகத்தையும் ஆளும் தகுதி உடையவன் என்பது கூறப்படுகின்றது. இச்சக்கரமே அளந்தது என்ற தொடர் கரிகாலனின் ஒரு குடைக்கீழ் இவ்வுலகம் முழுவதும் பொருந்தியது என்பதாம். சக்கரம் - வட்டம் ; வட்டமான உலகத்துக்கு ஆகுப்பெயர்.

பட்டினப்பாலை நூலில் கூறப்படும் திருமாவளவன், கரிகாற்சோழன்தான் என நச்சினார்க்கனியார் குறிப்பிடுகிறார். நச்சினார்க்கனியார் குறிப்பிடுவதை  சிலப்பதிகார அடிகளையும் புறநானூறு பாடல்களையும் ஆதாரமாகக்  கொண்டு திருமாவளவனும் கரிகாற்சோழனும் ஒருவனே என்பதை இரா. இராகவையங்கார் நிறுவுகிறார்.

உசாத்துணை

  • பட்டினப்பாலை ஆராய்ச்சியும் உரையும், இரா. இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியீடு
  • பட்டினப்பாலை, தமிழ் இணையக் கல்விக்கழகம் https://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=265&pno=164