படுதலம் சுகுமாரன்
படுதலம் சுகுமாரன் (பிறப்பு: மே 5. 1965) எழுத்தாளர், இதழாளர். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதினார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்து எழுத்துலகில் இயங்கினார்.
பிறப்பு, கல்வி
படுதலம் சுகுமாரன், (சுகுமார்) மே 5. 1965 அன்று, திருவள்ளூர் மாவட்டம், குமாரராஜுப் பேட்டையை அடுத்துள்ள படுதலம் என்ற குக்கிராமத்தில், வினாயகம் -வள்ளியம்மாள் இணையருக்குப் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். உறவினர்களின் ஆதரவில் கல்வி பயின்றார். மேல் நிலைக் கல்வி வரை படித்தார். தொழில் நுட்பக் கல்வி (டி.எம்.இ-D.M.E.) பயின்று சில சூழல்களால் இடை நின்றார். இளங்கலை மனோதத்துவம் பயின்று பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
படுதலம் சுகுமாரன், காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் முகவராகப் பணியாற்றினார். இதழாளராகப் பணிபுரிந்தார். சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். மணமானவர். மனைவி: சரஸ்வதி. மகன்: ராஜ் சுகுமாரன், எழுத்தாளர், குறும்பட இயக்குநர், திருமணப் புகைப்பட நிபுணர்.
இலக்கிய வாழ்க்கை
படுதலம் சுகுமாரன் நண்பர்களுடன் இணைந்து ‘இலக்கியச் சந்திப்பு’ என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். நகைச்சுவைத் துணுக்குகள், செய்தித் துணுக்குகள், கவிதைகள் போன்றவை ஆனந்த விகடனில் வெளியாகின. 1987-ல், படுதலம் சுகுமாரன் எழுதிய நகைச்சுவைத் துணுக்கை வெளியிட்டதன் காரணமாக, விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன் சிறை சென்றார். அதன் மூலம் படுதலம் சுகுமாரன், இதழியல் உலகில் பரவலான கவனம் பெற்றார்.
படுதலம் சுகுமாரன் சிறுகதைகள் பலவற்றை எழுதினார். விகடன், குமுதம், சாவி தொடங்கி தேவி வரை முன்னணி இதழ்களில் இவரது சிறுகதைகள், தொடர்கதைகள் வெளியாகின. மாலைமதி, ராணி முத்து, குங்குமச்சிமிழ், கண்மணி, தேவதையின் கொலுசு, நாவல் லீடர், ஜூப்ளி போன்ற இதழ்களில் நாவல்கள் பலவற்றை எழுதினார். ’ப்ரீதா’ என்ற புனைபெயரிலும் எழுதினார்.
படுதலம் சுகுமாரன், ரத்தப் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மீண்டும் எழுத்துலகில் இயங்கினார். பல நூற்றுக்கணக்கான துணுக்குகள், 700-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட நாவல்களை படுதலம் சுகுமாரன் எழுதினார். அவற்றில் பல நூல்களாக வெளியாகின. படுதலம் சுகுமாரனின் பல கதைகள் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதழியல்
படுதலம் சுகுமாரன், ஆனந்தவிகடனில் இதழியல் பயிற்சி பெற்று, ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். சூப்பர் நியூஸ் மற்றும் ஜூப்ளி இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர இதழாளராக, எழுத்தாளராகச் செயல்பட்டார்.
விருதுகள்
- முன்னணி இதழ்கள் நடத்திய சிறுகதை, நாவல் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகள்.
- சிறந்த சிறுகதைகளை எழுதியதற்காக இலக்கியச் சிந்தனை பரிசு: மூன்று முறை (1999, 2000, 2001).
- பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு.
- அன்னை ராஜலட்சுமி இலக்கிய விருது.
- பொற்றாமரை அமைப்பு அளித்த சிறந்த படைப்பாளிக்கான விருது.
- அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் அளித்த பரிசு.
மதிப்பீடு
படுதலம் சுகுமாரன், குடும்பம், காதல், சமூகம், க்ரைம் எனப் பல வகைமைகளில், பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். எழுத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்தார். சிறுகதைகள் பலவற்றை உண்மை நிகழ்வுகளையும், சுய வாழ்வியல் அனுபவங்களையும் அடிப்படையாக வைத்து எழுதினார். வெகு ஜன வாசகர்களுக்காக எளிய மொழியில் பல படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களுள் ஒருவராக படுதலம் சுகுமாரன் அறியப்படுகிறார்.
நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- கொக்கு
- ஒரு பட்டாம்பூச்சியும் சிறைக்கதவும்
நாவல்கள்
- அவளும் சொல்வாள் தீர்ப்பு
- நட்புக்காக கொலை செய்
- கடமைக்காக ஒரு கத்தி
- பூக்களின் போர்க்களம்
- நீயா, நானா?
- கண்ணாமூச்சி விளையாட்டு
- ஒரு கண்ணீர்த்துளி; ஒரு கையசைப்பு
- வாடகைக் குற்றவாளி
- அவள் பெயர் மோகனா
- பார்கவியின் மரணம்
- மர்மங்கள் தொடரும்
- குற்ற வளையம்
- ரத்த சங்கிலி
- என் உயிர்த் தோழி
- கத்தி - பணம் - கல்யாணம்
- பெண்ணை சொல்லி குற்றமில்லை
- பூவெல்லாம் பொன்னாகும்
- சிறகடிக்கும் பூக்கள்
- துணையாக அவன் வருவான்
- அதே காதல்
குறு நாவல்கள்
- சோளிங்கர் ரோடு
- விபரீதத்தின் வேர்
உசாத்துணை
- சூரியன் சந்திப்பு: நேர்காணல் - தொகுதி – 2, ஆர்னிகா நாசர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு, செப்டம்பர் 2002
- படுதலம் சுகுமாரன் ஃபேஸ்புக் பக்கம்
- படுதலம் சுகுமாரன் சிறுகதைகள்: சிறுகதைகள் தளம்
- படுதலம் சுகுமாரன் நூல்கள்: நூலகம் தளம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.