under review

பசிகோவிந்தம்

From Tamil Wiki
Revision as of 06:14, 27 November 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Pasigivindam.jpg

பசிகோவிந்தம் (1956), முற்போக்கு கருத்துக்களைக் கொண்ட கவிதை நூல். ராஜாஜியின் பஜகோவிந்தத்துக்கு புடைநூலாக (எதிர்வினையாக) எழுத்தாளர் விந்தனால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

பசிகோவிந்தம் எழுதியவர் எழுத்தாளர் விந்தன். திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது படைப்புகள் பொதுவுடைமை, பகுத்தறிவுக் கொள்கை, உழைக்கும் எளிய மக்களின் பாடுகள் ஆகியவற்றைப் பேசுபொருளாகக் கொண்டவை.

தோற்றம்

ராஜாஜி 'பஜகோவிந்தம்' நூலை எழுதியபோது அதற்குப் புடைநூலாக (எதிர்வினை) பசிகோவிந்தம் நூலை விந்தன் எழுதினார். புடைநூலுக்கான இலக்கணத்தை

இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும் (நன்னூல் 8)

என்று நன்னூல் கூறுகிறது. விந்தன் பசிகோவிந்தத்தின் முதல்நூலாக ஆதிசங்கரரின் 'மோகமுத்கரத்தையும்' (மோகத்தை உடைக்கும் சம்மட்டி) வழி நூலாக ராஜாஜியின் பஜகோவிந்தத்தையும் குறிப்பிடுகிறார். 'பசிகோவிந்தம்' பாடல் மற்றும் நூல் அமைப்பில் இவ்விரண்டை ஒத்தும், பாடுபொருள் இந்த நூல்களுக்கு எதிர்வினையாகவும், மாறுபட்டும் இருப்பதால் புடைநூலாகிறது.

நூல் அமைப்பு

பஜ கோவிந்தம் உலக இன்பங்களை நாடாமல் இறைவனை வணங்கவும், பந்தபாசங்களை விலக்கவும் அறிவுறுத்துகிறது. அன்றாட உணவுக்கே வழியில்லாத ஏழைக்கு இவை பொருந்துமா என்ற கேள்வியையும், கடவுள், மதம், கலை மூன்றும் எளிய மனிதர்களின் தன்னம்பிக்கையைக் கொல்கின்றன என்ற கருத்தையும் விந்தன் இந்நூலில் முன்வைக்கிறார்

"எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்!" என்றும் ஒருவரின் துன்பத்துக்குக் காரணம் அவரது விதியே என்றும் சொல்லி மனிதனின் தன்னம்பிக்கையைக் கடவுள் கொன்று கொண்டிருக்கிறார். ‘இந்த உலகத்தில் அநுபவிக்கும் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாதே; மறு உலகத்தில் இன்பம் உனக்காகக் காத்துக் கொண்டிருக் கிறது’ என்று சொல்லி மனிதனை மதம், சாவை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. கலை கடவுளையும் மதத்தையும் சிருஷ்டி செய்து, முதலாளிகளின் ஆயுதமாக மாறிவிட்டது-ஓர் எளிய மனிதன் என்ன செய்யக்கூடும்?"- என்ற கேள்வியை இந்நூல் முன்வைக்கிறது.

பாடல் நடை

படிக்காதிரு

பசிகோவிந்தம் பசிகோவிந்தம்
பசிகோவிந்தம் பாடு,
பரலோகத்தில் இடந்தேடலாம்
பசிகோவிந்தம் பாடு!
படிக்கா திரு. படிக்காதிரு,
படிக்கா திரு, பயலே!
படித்தால் எமன் வரும்போதுனைப்
பகவான் கைவிடுவார்!

சாவேவாழ்க்கை

இகலோகத்தில் இடமேனடா
இடமேனடா, பயலே?
பரலோகத்தில் இடந்தேடலாம்
பஜகோவிந்தம் பாடு!
வாழ்க்கைஎது வாழ்க்கைஎது
வாழ்க்கைஎது பயலே?
சாவேவாழ்க்கை சாவேவாழ்க்கை
சாவேவாழ்க்கை, அறிவாய்!

உசாத்துணை


✅Finalised Page