ந.பழநிவேலு

From Tamil Wiki
Revision as of 23:32, 18 April 2022 by Latha (talk | contribs) (Created page with "thumb|ந.பழநிவேலு ந. பழநிவேலு (பிறப்பு 20.6.1908 – மறைவு 11.11.2000) சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். சிங்கப்பூரின் முதுபெரும் கவிஞர்களுள் முதன்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ந.பழநிவேலு

ந. பழநிவேலு (பிறப்பு 20.6.1908 – மறைவு 11.11.2000) சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். சிங்கப்பூரின் முதுபெரும் கவிஞர்களுள் முதன்மையானவராக அறியப்படும் ந.பழநிவேலு சிங்கப்பூரில் திராவிட, சுயமரியாதை சிந்தனை சார்ந்த எழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர்களில் முதன்மையானவர். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, இசைப் பாடல்கள் என பல வகைமைகளிலும் ஏராளமான படைப்புகளை எழுதியுள்ளார். சிங்கப்பூரின் வானொலியின் தொடக்ககால ஒலிபரப்பாளர். சிங்கப்பூர் சீர்திருத்தச் சங்கத்தின் தொடக்ககால உறுப்பினர்.

பிறப்பு, கல்வி

சிங்கப்பூர் கிம் கியாட் அவென்யுவில் ந.பழநிவேலு தம்பதி

நடேசன் பழநிவேலு– ஜானகி தம்பதியின் ஒரே பிள்ளையான ந.பழநிவேலு தமிழகம் தஞ்சை மாவட்டம் சிக்கல் எனும் ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நாடக எழுத்தாளர், பாடலாசிரியரான தாத்தாவின் தாக்கத்தில் வளர்ந்தவர். 1929ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்த ந.பழநிவேலு, ஓராண்டிலேயே சிங்கப்பூரில் குடியேறி, இறுதிக் காலம் வரையில் அங்கேயே வாழ்ந்தார். அரசி வணிகக் குடும்பத்தை சேர்ந்த ந.பழநிவேலு தமிழகம், நாகப்பட்டிணத்தில் 10ஆம் வகுப்பு வரை தமிழில் (எஸ்எஸ்எல்சி) படித்தார். சிங்கப்பூரில் சுய கல்வி மூலம் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

மாமன் மகளனா சம்பூரணம்மாளை 1938ஆம்  ஆண்டு மணந்து சிங்கப்பூருக்கு அழைத்து வந்தார். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள்.  அவர்களுள் நால்வர் ஆண்மக்கள்; மூவர் பெண்மக்கள், 13 பேரப் பிள்ளைகள், 10 கொள்ளுப் பேரப்பிள்ளைகள்.

வாழ்க்கைத் தொழில்

1970களில் இடம்பெற்ற தொலைக்காட்சி சீன நாடகம் ஒன்றில் ந.பழநிவேலு
இசைக் கலைஞர் சீர்காழி கோவிந்தராஜன் (வலம்) சிங்கப்பூர் வந்திருந்தபோது, சிங்கப்பூரின் மூத்த படைப்பாளர்களில் ஒருவரான எஸ்.எஸ்.சர்மாவுடன் (இடம்) ந.பழநிவேலு (நடுவில்)

தமது 21ஆவது வயதில் தெலுக் அன்சன் பெங்கான் பாசிர்  தென்னந்தோட்டத்தில் கணக்காளராகப் பணியாற்ற மலாயா வந்தார் ந.பழநிவேலு. காலையில் தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு பகலில் தோட்டப் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றினார். 1930ல் சிங்கப்பூர் வந்ததும், சிங்கப்பூர் டிராக்‌ஷன் கம்பெனி (STC) என்ற பேருந்து சேவை நிறுவனத்தில் கணக்காளராகச் சேர்ந்தார். 1935ஆம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழ் தொடங்கப்பட்டதிலிருந்து பகுதி நேரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு இலக்கியப் படைப்புகளை எழுதினார். 1949ஆம் ஆண்டில் ‘ரேடியோ மலாயா’ வானொலிச் சேவையில் இணைந்தார். ஒலிபரப்பாளராகப் பணியைத் தொடங்கியவர், நிகழ்ச்சித் தயாரிப்பாளராக 1968ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். தமது 20 ஆண்டு கால வானொலிப் பணிக் காலத்தில் இசை நாடகங்கள், சமூக நாடகங்கள், பாடல் நிகழ்ச்சிகள், உரையாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார்.

இலக்கியப் படைப்பு

இவரின் முதல் கவிதை 1931ஆம் ஆண்டு நவநீதம் எனும் இலங்கை இதழில் ‘வலிமை’ எனும் தலைப்பில் வெளிவந்தது.  1936ஆம் ஆண்டு இவரது முதல் மேடை நாடகமான ‘சுகுண சுந்தரம் அல்லது சாதி பேதக் கொடுமை’ அரங்கேற்றம் பெற்றது. முதல் சிறுகதை ‘பிள்ளையார் கோவில் பிரசாதம்’ 1939ஆம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மேல் தீவிர பற்றுக்கொண்டிருந்த ந.பழநிவேறு பாரதிதாசனின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர். கல்கி, கி.வ.ஜகந்நாதன், ரா.பி.சேதுப்பிள்ளை, வாணிதாசன், திருலோகசந்தர்  போன்றவர்கள் இவரது ஆதர்ச எழுத்தாளர்கள். சிங்கப்பூர் – மலேசிய நாளிதழ்களாக தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர் உள்ளிட்ட நாளிதழ்கள், மாதவி, இந்தியன் மூவி நியூஸ், கலைமலர் உள்ளிட்ட பல மாத இதழ்களிலும் மற்றும் தமிழக, இலங்கை இதழ்களிலும் எழுதியுள்ளார்.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகால இலக்கியப் படைத்துள்ள ந.பழநிவேலு பல கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், ஏராளமான மேடை, வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.  இவர் எழுதிய பலநூறு  சிறுவர் பாடல்கள் இசையமைக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1935 முதல் 1960 வரை கிட்டத்தட்ட 50 சிறுகதைகள் எழுதியுள்ளார்.

ந.பழநிவேலுவின் கவிதைகள் சிங்கப்பூர் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூர் புனைகதைத் தொகுப்பு தொகுதிகள் II, IIa & III - ஆசியான் இலக்கியத் தொகுப்பு (1990), சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மன்ற வெளியீடான சிங்கா (SINGA) இதழ், SingaPoetry: an anthology of Singapore poems (2015) உட்பட பல தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன.  2003ஆம் ஆண்டில் இவரது படைப்புகள் குறித்து தமிழாசிரியர்கள் கருத்தரங்கம் நடத்தினர். இவரது படைப்புகள் குறித்து தமிழக பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலக்கியப் பணி

நன்றி: சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம்

பெரியார் எனப்படும் ஈ.வெ.ராமசாமியின் சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ந.பழநிவேலு ஆரம்பத்தில் இலக்கியம், நாடகங்கள் சீர்த்திருத்தக் கொள்கைகளைப் பரப்பினார். 1933ல் தமிழர் சீர்திருத்தச் சங்க நாடகக் குழுவில் இணைந்த ந.பழநிவேலு, 1933ல் குழுவின் தலைவரானார். 1949 வரையில் அப்பதவியில் நீடித்த அவர், தமிழர் சீர்த்திருத்தச் சிந்தனையை வலியுறுத்தி கவிதைகள், கதைகள், மேடை நாடகங்கள் எழுதினார். சீர்திருத்தச் சங்கத்தின் தொடக்ககால உறுப்பினராக சங்கத்துக்கு நிதி திரட்ட பல பணிகளில் ஈடுபட்டுள்ளார். 1937ஆம் ஆண்டு சங்கத்தின் நிதிக்காக “கெளரி சங்கர்’ எனும் நாடகத்தை அரங்கேற்றினார்.

பல நாடகக்குழுக்களில் நாடகம் எழுதுவது, பாடல் எழுதுவது, நடிப்பது என தொடர்ந்து பங்காற்றியுள்ளார். இயல்பாகவே இசை ஞானம் பெற்றிருந்த ந.பழநிவேலு பல பாடல்களை எழுதி, இசையமைத்துள்ளார். மற்றவர்கள் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். சீர்திருத்தக் கொள்கையாளராக இருந்தபோதிலும் பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

ந.பழநிவேலு

சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய, மூத்த கவிஞராக இடம்பெறுவர் ந.பழநிவேலு.  எளிமையான மொழியில் அறசிக்கல்களைப் பேசும் நீதிக்கதைகள் இவை என்று பொதுவாக வரையறுக்கலாம். இங்கு இலக்கியத்தின் அடிப்படைக் கவலைகளும் நிலைபாடுகளும் உருவாகிவந்த வரலாற்றைக் காட்டும் படைப்புகள் இவை என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்

விருதுகள்

  • 1978- சிங்கப்பூர் நாட்டியப் பள்ளியின் நாடக சிகாமணி  
  • 1980- முத்தமிழ்ச் செம்மல் தமிழர் சங்கத்தின் பட்டம்
  • 1987- இலக்கியப் பங்களிப்புக்காக சிங்கப்பூர்  அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் அளிக்கப்பட்டது.
  • 1987 - சிங்கப்பூர் இந்திய நுண்ககலைக் கழகத்தின் கலா ரத்னா விருது
  • 1997 - சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது

நூல் பட்டியல்

  • கவிதை மலர்கள் – 1947இல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அணிந்துரையுடன் சிங்கப்பூர் தமிழ் முரசின் வெளியீடாக வந்தது.
  • காதற்கிளியும் தியாகக் குயிலும்  (சிறுகதைத் தொகுப்பு, 1976)
  • கலியின் நலிவு (நாடக நூல், 1981)
  • பாப்பா பாடல்கள் (சிறுவர் பாடல்கள், 1990)
  • கவிஞர் ந பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (இரு தொகுப்புகள்) 1997, 1999
  •  பாவலர் ந பழநிவேலுவின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில முத்துக்கள் (ஆங்கில மொழியாக்கத்துடன் தேசிய நூலகம் வெளியிட்ட நூல், 2013)

உசாத்துணைகள்

  • https://www.esplanade.com/offstage/arts/n-palanivelu
  • https://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_2018-12-17_182938.html
  • https://artshouselimited.sg/ourcmstory-recipients/n-palanivelu
  • https://www.jeyamohan.in/90998/
  • சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும் | எழுத்தாளர் ஜெயமோகன்
  • http://maalan.co.in/abstract-voices-of-singapore-tamil-writers/
  • Raman, “Living By His Pen.”
  • Irene Hoe, “Cultural Medallion for 7,” Straits Times, 10 February 1987, 1. (From NewspaperSG)
  • Prabhavathi Dass, “Jewel Award for Two Fine Arts Pioneers,” Straits Times, 25 September 1987, 10. (From NewspaperSG)
  • “தமிழவேள் விருது,” சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், accessed 25 October 2018.
  • “Obituary,” Straits Times, 12 November 2000, 48. (From NewspaperSG)
  • https://singaporetamilwriters.com/namathueluthalar/