நொறுங்குண்ட இதயம்

From Tamil Wiki
Revision as of 13:11, 29 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|நொறுங்குண்ட இதயம் நொறுங்குண்ட இதயம் (1914) மங்களநாயகம் தம்பையா எழுதிய நாவல். இலங்கையைச் சேர்ந்தவரான மங்களநாயகம் புகழ்பெற்ற அறிஞரான ஐசக் தம்பையாவின் மனைவி. இது கிறிஸ்தவ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நொறுங்குண்ட இதயம்

நொறுங்குண்ட இதயம் (1914) மங்களநாயகம் தம்பையா எழுதிய நாவல். இலங்கையைச் சேர்ந்தவரான மங்களநாயகம் புகழ்பெற்ற அறிஞரான ஐசக் தம்பையாவின் மனைவி. இது கிறிஸ்தவக் கொள்கைகளை முன்வைக்கும் தொடக்ககால நாவல்களில் ஒன்று.

எழுத்து, பிரசுரம்

மங்களநாயகம் தம்பையா முறையான கல்வி இல்லாதவர். தன் முயற்சியால் ஆங்கிலம், தமிழ் மொழிகளைக் கற்றவர். இவர் எழுதிய இந்ந்நாவல் சென்னை கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தால் 1914 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நூலாசிரியர் புகழ்பெற்ற அறிஞரும் நீதித்துறையாளருமான ஐசக் தம்பையாவின் மனைவி. இவர் 1930ல் உதயதாரகை இதழில் அரியமலர் என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார்.

கதைச்சுருக்கம்

கண்மணி பொன்மணி என்னும் இரு பெண்களின் வாழ்க்கையைப்பற்றியது இந்நாவல். ஒழுக்கமில்லாத ஒருவனுக்கு மனைவியான கண்மணி பல துயர்களை அடைந்தபின் ஒரு மதபோதகரால் கிறிஸ்தவ மதத்தில் சேர்க்கப்படுகிறாள். அவள் அமைதியாக மரணமடைகிறாள். பொன்மணி தான் விரும்பும் கணவனை அடைவதிலும் அதற்கு இடையூறாக இருந்த தன் பெற்றோர் மற்றும் கண்மணியின் கணவன் ஆகியோரை எதிர்த்து நின்று வெல்வதிலும் துணிச்சலை வெளிப்படுத்துகிறாள். துணிவு பெண்களுக்கு தேவை என வலியுறுத்தும் இந்நாவல் கிறிஸ்தவ மதப்பரப்புரைகளை விரிவாக முன்வைக்கிறது.

நடை

இந்நாவல் 19 ஆம் நூற்றாண்டுக்குரிய நடை கொண்டது. பைபிள் சொற்றொரர்களின் செல்வாக்கும் நிறைந்தது (உம்) “நீ சுப்பிரமணியரின் மகளை விவாகஞ்செய்ய நினைத்திருக்கிறாயென்பதாகக் கேள்விப்பட்டேன். உன்னைப்போல் மடையனை நான் காணவில்லை. சுப்பிரமணியரின் குலமென்ன? அவரிடம் என்ன சீதனம் பெறலாமென்று எண்ணியிருக்கிறாய்? அவர் அரசாட்சி உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்டுச் ‘சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே’ என்று திரிந்து சிறிது காலத்திற்கு முன் சொற்ப முதலுடன் வியாபாரத்தில் கையிட்டார். உனக்கு சீதனம் தருவதற்கு அவருக்கு வழிவகையாது?

இலக்கிய இடம்

தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால கிறிஸ்தவ பிரச்சார நாவல்களில் ஒன்று. யாழ்ப்பாணத்து வட்டாரவழக்கு மற்றும் பண்பாட்டுச்சூழல் ஆகியவற்றை காட்டுகிறது

உசாத்துணை

தமிழ் நாவல்- சிட்டி-சிவபாதசுந்தரம் (கிறிஸ்தவ இலக்கிய சங்கம்)

https://thamilodai.blogspot.com/2017/09/blog-post_26.html