நொச்சி நியமங்கிழார்
நொச்சி நியமங்கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய ஐந்து பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
நொச்சி வேலியால் சூழப்பட்ட நியமம் எனும் ஊரில் பிறந்தார். இவ்வூர் திருச்சிராப்பள்ளியிலிருந்து முசிரிக்குச் செல்லும் வழியில் உத்தமர் கோயிலுக்கு அருகில் உள்ள நொச்சியம் எனும் ஊரைக் குறிக்கிறது.
இலக்கிய வாழ்க்கை
இவர் பாடிய ஐந்து பாடல்கள் சங்கநூல் தொகுப்பான அகநானூறு (52), நற்றிணை (17, 208, 209) புறநானூற்றில்(293) உள்ளன.
பாடல்வழி அறியவரும் செய்திகள்
- வேங்கை மரத்தின் உதிர்ந்த 'பொங்கல்' பூக்கள் பொன்னின் துகள்கள் போல உதிர்ந்துகிடக்கும்.
- மலைவாழ் குறத்தியர் வேங்கைப் பூக்களைப் பறிக்கும்போது பூசல்(கூச்சல்) இடுவர்.
பாடல் நடை
- அகநானூறு: 52
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்,
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்' எனச் செப்பாதீமே.
- நற்றிணை: 17
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து,
உரைத்தல் உய்ந்தனனே- தோழி!- சாரல்,
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.
- புறநானூற்றில்: 293
நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/agananooru/agananooru_52.html
- http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai17.html#.Ymt_8NpBzIU
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.