being created

நெட்டிமையார்

From Tamil Wiki
Revision as of 17:00, 6 October 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

நெட்டிமையார்,சங்ககாலப்  பெண்பாற் புலவர்களில்  ஒருவர். இவர் பாடிய 3 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறுவில் இடம் பெற்றுள்ளன.

ஆசிரியர் குறிப்பு

நெட்டிமையார், நீண்ட இமைகளை உடையவர் என்ற ‌காரணத்தால் இப்பெயரை பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் 9, 12, 15 ஆம் எண்வரிசையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இவர் வேறேதும் பாடல்களை பாடியதாக குறிப்புகள் இல்லை.

பாடல்கள்

நெட்டிமையார் இயற்றிய 3  பாடல்கள் புறநானூறு நூலில் 9, 12 மற்றும் 15 - வது பாடல்களாக இடம்பெற்றுள்ளன.

புறநானூறு 9

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என

அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்

கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,

முந்நீர் விழவின், நெடியோன்

நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!

எளிய பொருள்;

பசு, பசுப் போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், நோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது – என்று அறவழி கூறியபின் போரிடும் பாங்குடையவன் இந்த அரசன்.கொல்களிற்றின் மேல் கொடி தோன்ற இருந்துகொண்டு போரிடுபவன். இவன் என் அரசன். பெயர் குடுமித் தங்கோ (குடுமியான் மலை அரசன்). இவன் பஃறுளி ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல்லாண்டுகள் வாழ்வானாக!பஃறுளி ஆறு நெடியோன் நாட்டில் ஓடிய ஆறு. இந்த நெடியோன் முந்நீர் விழா நடத்தியவன். அதில் யாழ் மீட்டும் பாணர்களுக்கு தூய பொன் அணிகளை வழங்கியவன்.

புறநானூறு 12

பாணர் தாமரை மலையவும், புலவர்

பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,

அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!

இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,

இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?

எளிய பொருள்;

உன்னைப் பாடும் பாணர்கள் நீ வழங்கும் பொற்றாமரை விருது அணிகலனைத் தலையில் சூடிக்கொள்கின்றனர். புலவர்கள் நீ வழங்கும் யானைமீதும் தேர்மீதும் ஏறிச் செல்கின்றனர். வெற்றியைக் குவிக்கும் ‘குடுமி’ வேந்தே! பிறர் மண்ணைக் கைப்பற்றும் கொடுமையைச் செய்து அங்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு நீ விரும்புபவர்களுக்கு மட்டும் இன்பம் தரும் செயல்களைச் செய்தல் அறச்செயலோ?

புறநானூறு 15

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்,

பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;

புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்,

வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்

தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;

துளங்கு இயலாற், பணை எருத்தின்,

பா வடியாற்,செறல் நோக்கின்,

ஒளிறு மருப்பின் களிறு அவர

காப் புடைய கயம் படியினை;

அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,

விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு

நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்

ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்,

நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய,

வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்

நற் பனுவல் நால் வேதத்து

அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை

நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்

வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,

யூபம் நட்ட வியன்களம் பலகொல்?

யாபல கொல்லோ? பெரும! வார் உற்று

விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்

பாடினி பாடும் வஞ்சிக்கு

நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

எளிய பொருள்;

நீ சினம் மிக்கவன். அதனால் பகைவர் நாட்டில் தேர் நடத்தினாய். அந்தத் தேர்க்கால் பள்ளத்தில் கழுதை-ஏர் பூட்டி உழுதாய். அவரது கோட்டைகளை அழித்தாய் பறவைகள் மேயும் விளைவயல்கள் உன் குதிரைக் குளம்புகளால் மிதிபடத் தேரோட்டினாய். நடை பயில்வதும், பருத்த முதுகுக் கொட்டேறியும், பரந்த காலடியும், அழிக்கும் பார்வையும், ஒளி வீசும் கொம்புகளையும் கொண்டதுமான உன் யானைகளை ஊர்மக்கள் குடிப்பதற்காகப் பாதுகாக்கப்பட்ட குளத்தில் குளித்துத் திளைக்கும்படி செய்தாய். இப்படிப்பட்ட சீற்றம் கொண்டவன் நீ. பொன்-கேடயமும் வேலும் ஏந்தி பகைவர் நடத்திய காலாள் படையை வெல்லும் ஆசையோடு போரிட்டும், ஏமாந்தும் மக்கள் வசை பாட வாழ்ந்தவர் பலரா? அல்லது…நால்வேதச் சிறப்புக் குழியில் நெய் ஊற்றி ஆவி பொங்க வேள்வி செய்து தூண் நட்டுச் சிறப்பெய்தியவர் பலரா? கனை முழவினை முழக்கிக்கொண்டு உன்னைப் பாடும் பாடினியின் வஞ்சிப் பாடலை விரும்பும் வலிமை மிக்கவனே!

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்

எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.