second review completed

நூறு மசலா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 88: Line 88:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{First review completed}}
{{Second review completed}}

Revision as of 02:10, 6 May 2024

நூறு மசலா, இஸ்லாமியச் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. இஸ்லாமிய மார்க்கம் மற்றும் பொது வாழ்க்கை நெறிமுறைகளின் விளக்கமாக செய்யுள் வகையில் வினா-விடை வடிவில் அமைந்துள்ளது. இந்நூலின் காலம் பற்றியோ, இயற்றியவர் பற்றியோ அறிய இயலவில்லை. இந்நூலின் முதல் பதிப்பு 1876-ல், முகம்மது சாஹிப் என்பவரால் வெளியிடப்பட்டது.

வெளியீடு

நூறு மசலா நூல், 1876-ல், முகம்மது சாஹிப் என்பவரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல பதிப்புகள் வெளியாகின.

நூல் அமைப்பு

‘மசலா’ என்பது அரபி மொழிச்சொல்லான ‘மஸ்லா’ என்பதன் தமிழ் வடிவம். இதற்கு கேள், விசாரி, தெளிவுபெறு என்று பல பொருள்கள் உள்ளன. இச்சொல், வினா-விடை வடிவத்தைக் குறிப்பது. இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான கேள்வி - பதில்களின் தொகுப்பே நூறு மசலா.

’நூறு மசலா’ நூல் அம்மானை வடிவை ஒத்துள்ளது. அம்மானைப் பாடலில் மூன்று பேர் பாடுவது போன்று நூறு மசலாவில் ஆண், பெண் என இரண்டு பேர் பாடினர். அம்மானைப் பாடல்களில் இறுதியடியில் ‘அம்மானை’ என்ற சொல் இடம் பெறுவது போன்று மசலா பாடல்களின் இறுதியில் ‘மசலா’ என்ற சொல் இடம்பெற்றது.

உள்ளடக்கம்

இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்களை, வாழ்க்கை நெறிகளை வினா – விடை வடிவில் நூறு மசலா நூல் கூறுகிறது. நூறு மசலா, 1087 கண்ணிகளைக் கொண்டுள்ளது.

பகுவீறு நாட்டு மன்னனின் மகள் மெஹர்பானுக்கும் அந்துமான் நாட்டு மன்னன் அஹமது ஷாவின் மகன் அப்பாஸுக்குமிடையே நடைபெற்ற வினா-விடைகளின் தொகுப்பே நூறு மசலா.

கதை

அந்துமான் நாட்டு மன்னன் ⁠அஹமது ஷா. நீண்ட நாட்களாகப் பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்திய அவனுக்கு இறையருளால் குழந்தை பிறந்தது. அதற்கு அப்பாஸ் என்று பெயரிட்டு வளர்த்தான். பதினைந்து வயதான இளவரசன் அப்பாஸ் ஒரு நாள் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றான். காடு மேடுகளில் அலைந்து திரிந்த அவன், தாகத்தால் தவித்தான். குடிக்க நீர் கிடைக்காமல் கள்ளாகிய மதுவைக் குடித்து மயக்கமடைந்தான்.

நிகழ்ந்ததை அறிந்த தந்தை மகனின் மயக்கத்தைப் போக்கினான். ஆனாலும், இஸ்லாத்தால் அறவே கூடாது என்று ஒதுக்கிய மதுவை மகன் அப்பாஸ் அருந்திய காரணத்தால் தண்டனையாக அப்பாஸைக் காட்டிற்கு அனுப்பினான். ஒரே மகனை விட்டுத் தனித்திருக்க முடியாமல் அவனும் தன் மனைவியோடு காட்டுக்குச் சென்றான். காட்டில் அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். அதன் பிறகு சீன நாட்டை அடைந்தனர்.

சீன நாட்டு இளவரசி மெஹர்பான், தான் கேட்கும் நூறு கேள்விகளுக்குத் தகுந்த விடை தருபவரையே தான் மணப்பேன் என்றும் விடை கூற இயலாதவர் தங்கள் உயிரை இழப்பர் என்றும் அறிவித்தாள். இம்முயற்சியில் ஈடுபட்டுச் சிலர் தங்கள் உயிரை இழந்தனர். இதனை அறிந்த இளவரசன் அப்பாஸ், இளவரசி மெஹர்பானின் கேள்விகளுக்கு விடை கூற ஒப்புக் கொண்டான். இளவரசி விடுத்த நூறு கேள்விகளுக்கும் தகுந்த விடைகளைக் கூறி வெற்றி பெற்றான். இறுதியில் இளவரசியையும், இழந்த நாட்டையும் மீண்டும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தான்.

பாடல்கள் நடை

மெஹர்பானுவின் நடையழகு

அன்னமெனும் திருநடையாள் மிகும்
ஆடவரைக் கொலும் விழியாள்
சின்னவிடைத் தனங்கள் விம்ம அந்தச்
சேயிழையாள் மணிகள் மின்ன
சொன்னமணிச் சிலம்பு கொஞ்ச அந்தத்
தோழியுடன் இருவருமாய்க்
கன்னலெனும் திருமொழியாள் மெல்லக்
கடையின் வீதிதனில் நடந்தாள்

மெஹர்பானுவின் கேள்வி (1)

தொல் புவியில் மரமொன்றுண்டு
அதைச் சூழ்ந்த கொப்பு பன்னீரதில்
நல்லவிலை முப்பதுண்டு
அதில் நற்கறுப்பு பாதி வெள்ளை
சொல்கின்ற பூவைந்துண்டாம் இதைச்
சொல்லா விட்டால் கொல்வேனென்றாள்

அப்பாஸின் மறுமொழி (1)

சொல்லுகின்ற வருஷமொன்றே அதைச்
சூழ்ந்த கொப்பு பன்னிருமாதம்
கொல்லுமிலை முப்பது நாள் அதைச்
சூழ்ந்த கறுப்போடு வெள்ளை
நல்லிரவு பகலுமது நீதான்
நாடிச் சொன்ன பூவைந்துகேள்
வல்லவனை வணங்குவதற்கு வகுத்
தானவை ஐந்தாம் என மொழிந்தான்

மெஹர்பானுவின் கேள்வி (2)

மானிலேயும் பெரியமானு அறுபடாத மானுமென்னா?
மீனிலேயும் பெரியமீனு அறுபடாத மீனுமென்னா?
மாவுலேயும் நல்லாமாவு இடிபடாத மாவுமென்னா?
இடிபடாத மாவானதை எந்தனுக்கு சொல்லும் மன்னா
சொன்னால் உயிர்பிழைப்பாய் - மன்னா
சொல்லாவிட்டால் தலையறுப்பேன்.

அப்பாஸின் மறுமொழி (2)

மானிலேயும் பெரிய மானு – பெண்ணே
அறுபடாத மானானது – அது
ஈமானடி மெகர்பானே

மீனிலேயும் பெரியமீனு
அறுபடாத மீனானது – அது
ஆமீன் என்றதாகுமே

மாவுலேயும் நல்ல மாவு – பெண்ணே
இடிபடாத மாவானது
ஐந்து நல்ல கலிமா பெண்ணே..

மதிப்பீடு

வெள்ளாட்டி மசலா, ஆயிரம் மசலா நூல்களில் இல்லாத பல புதிய செய்திகள் நூறு மசலா நூலில் இடம் பெற்றன. மிருகங்கள், பறவைகளைப்பற்றி நூறு மசலாவில் மட்டுமே கேள்விகள் எழுப்பப்பட்டு விடை கூறப்பட்டுள்ளன. நூறு மசலாவில் கேட்கப்படும் கேள்விகள் இஸ்லாமிய நெறி அடிப்படையிலும் பொது அறிவு அடிப்படையிலும் அமைந்தன. சில கேள்விகள் விடுகதைப் புதிர்களைப் போல அமைந்துள்ளன. நூறு மசலாவில் குறைவாகவே அரபிய, பெர்சியச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. நூறு மசலா நூல், பொது அறிவுக்கும் பாத்திரங்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தது.

மொழி நடையிலும் கருத்துணர்த்தும் பாங்கிலும் தனித்து அமைந்துள்ள நூறு மசலா நூல், இலக்கியச் சுவையுடன் எளிய நடையில் அமைந்த சிறந்த இலக்கியப் படைப்பாக இஸ்லாமிய இலக்கிய ஆய்வாளர்கள் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.