being created

நீலம் (வெண்முரசு நாவலின் நான்காம் பகுதி)

From Tamil Wiki
Revision as of 12:35, 26 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

நீலம் (‘வெண்முரசு’ நாவலின் நான்காம் பகுதி)  

நீலம் (‘வெண்முரசு’ நாவலின் நான்காம் பகுதி) ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல் அவரின் பதினைந்தாவது வயதுவரை நிகழ்ந்தவற்றை விவரிக்கிறது. மகாபாரத வரிசையில் இருந்து விலகி, பாகவத மறு ஆக்கமாக அமைகிறது. கிருஷ்ணனின் இளமைக் காலத்தை ராதையின் வழியாகச் சொல்கிறது. கவித்துமான நடை கொண்ட ஆக்கம். ‘ராதாமாதவ’ மனநிலையைக் கொண்டாடும் பகுதி இது.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் நான்காம் பகுதியான ‘நீலம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஆகஸ்ட் 2014இல் முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு செப்டம்பர் 2014இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

நீலத்தை முதலில் நற்றிணை பதிப்பகமும் பின்னர், கிழக்கு பதிப்பகமும் அச்சுப் பதிப்பாக வெளியிட்டன.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

நீலம் நிழலாய், ஒளியாய் இந்தப் பிரபஞ்சத்தில் பட்டு, உலகம் தூக்கத்திலிருந்து மீள்வதில் தொடங்குகிறது இந்த நீலம். தூக்கம் நீங்கி எழும்போது ஏற்படும் சோம்பல் பர்சானபுரியில் உள்ள யாருக்கும் எவற்றுக்கும் ஏற்படுவதில்லை. காரணம், அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் அறாத குழலிசையில் மயங்கி, தியானத்தில் அல்லவா இருக்கிறார்கள்!. பர்சானபுரியில் உள்ள ஒவ்வொரு உயிரும் மாயக் குழலிசையைக் கேட்டு, தியானத்தில் மூழ்கியுள்ளது. தியானத்தில் இருந்து எழுபவர்கள் சோம்பல் அடைவதில்லையே!

நீலத்தின் தொடக்கம் உலகம் தியானம் கலைந்து எழுவதைக் காட்டுகிறது. தென்றல் தவழ்ந்து வந்து ராதையை எழுப்புகிறது. ஆண்டாளின் ‘திருப்பாவை’யில், விடியற்காலையில் ஆயர்குலப் பெண்களை எழுப்புவதாகப் பாடல் அமைந்திருக்கும். முன்னெழுந்தவர்கள் திருமாலின் புகழைப் பாடி உறக்கத்தில் உள்ள அனைத்து ராதையர்களையும் (பெண்களையும்) எழுப்புவார்கள். நீலத்தில் தென்றல் பர்சானபுரிக்குள் நுழைந்து, ஸ்ரீகிருஷ்ணருக்காகவே உடற்கனிந்துவரும் ராதையை, அவளுக்கு அவளின் அகவிழிப்பினை அறிவிக்க எழுப்புகிறது. காலந்தோறும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்துபடும் எண்ணற்ற ராதையர் வரிசையில் அவளும் ஒருத்தி.

நீலத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல் அவரின் பதினைந்தாவது வயதுவரை நிகழ்ந்தவற்றை  ஆழ்நிலைக் கண்ணோட்டத்தோடு எழுதியுள்ளார் ஜெயமோகன். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்து புலம்பெயர்வது தொடங்கி, மதுராவின் முடிசூடுவது வரையிலான நிகழ்ச்சிகளே இந்த நாவலின் மையச் சரடு. இதுவே, மையச் சரடாக இருந்தபோதிலும் ‘ஸ்ரீகிருஷ்ணர் இந்த நீலத்தில் வந்துபோகிறார்’ என்றுதான் கூறத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த நாவல் முழுக்க ராதையே நிறைந்திருக்கிறார்.

ஸ்ரீகிருஷ்ணர் தன் குழந்தைப் பருவத்தில் செய்த கோடிக் குறும்புகளையும் அவர் வளர வளர புரிந்த அரும்பெருஞ்செயல்களையும் தொட்டு தொட்டு வளர்ந்துள்ளது இந்த நீலம். ஸ்ரீகிருஷ்ணரை மையமாகக் கொண்ட இதில் முழுக்க நிறைந்திருக்கிறார் ராதை. ஸ்ரீ கிருஷ்ணரின் மையம் ராதைதானே! ஸ்ரீ கிருஷ்ணரை நிறைத்ததும் அவருக்கு ஓர் அடி முன்னின்று, உலகுக்கே பேரன்னையாகத் திகழ்பவரும் அந்த ராதையே!

ராதையின் அகமும் புறமும் ஸ்ரீகிருஷ்ணரே நிறைந்திருக்கிறார். ராதையின் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய நினைவுகள் மிகப்பெரிய நீர்க்கொடி போல இந்த ‘நீலம்’ நாவலைச் சுற்றிப் படர்ந்திருக்கிறது. ராதையின் வழியாகவே ஸ்ரீகிருஷ்ணரை நாம் அறியமுடிகிறது. அதுவே, ஸ்ரீகிருஷ்ணருக்கான ‘ராஜபாட்டை’.

நீலத்தில் ராதையின் ‘காத்திருப்பு’ யுகங்களைக் கடந்ததாகவும் அளக்க முடியாத விரிவும் ஆழமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணருக்காக ராதை கணந்தோறும் முடிவின்றிக் காத்திருக்க நேர்கிறது. மின்னி மின்னி மறையும் ஒளிபோல ஒரு கணம் ஸ்ரீகிருஷ்ணர் ராதைக்குப் புலப்படுகிறார். மறுகணம் மறைந்து மாயமாகிறார்.

ஸ்ரீகிருஷ்ணரின் வருகைக்காகவே, அவரைப் பார்ப்பதற்காகவே ராதை தன் இருவிழிகளையும் இமைக்காமலிருக்க நேர்கிறது. ராதையின் மனத்திற்குள் ஓடும் முடிவற்ற கற்பனையில், கனவில் ஸ்ரீகிருஷ்ணரின் பாதச்சுவடுகளும் குழலிசையும் அழியாமல் இருக்கின்றன. அவற்றைப் பார்த்தபடியேயும் கேட்டபடியேயும் ராதை காத்திருக்கிறார்.   

இந்த ‘நீலம்’ முழுவதும் ஆயிரம் அன்னையர் வந்துசெல்கின்றனர். அனைவருமே ராதைதான். காலந்தோறும் உள்ளத்தாலும் கருத்தாலும் காதலாலும் கருணையாளும் மாறாத ராதையர்கள். ஆனால், வெவ்வேறு உருக்கொண்ட ராதையர்கள். அவர்களுள் ஒரு ராதையை மட்டும் எடுத்து, அவளுக்குள் உறையும் ஆயிரம் ராதைகளை நமக்குக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

நீலத்தின் கதைக்களங்கள் பர்சானபுரி, கோகுலம், விருந்தாவனம், மதுரா ஆகிய நான்கும் ஆகும். முல்லைப்பாட்டிலும் கலித்தொகையில் முல்லைக்கலியிலும் நாம் காணும் அதே ஆயர்குலமே இங்கும் சூழ்ந்துள்ளது. இதற்கு முன்னர் எந்த இலக்கியமும் விரிவாக எடுத்துரைக்காத ஆயர்குலத்தின் வாழ்வியல் பெருநெறியை இந்த ‘நீலம்’ தன்போக்கில், கதைநகர்வுக்காகச் சொல்லிச் செல்கிறது. ஆயர்குலத்தின் வீரம், தொழில்நேர்த்தி, கற்புநெறி எனப் பலவற்றை விளக்கி, அந்தக் குலத்தினர் மீது நம்மைப் பொறாமைகொள்ளச் செய்துவிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.  

இந்த நீலம் ராதையின் அதிகனவுகளாலும் அவற்றை அவள் நினைவாக, சொல்லாக மாற்றிப் பார்க்கும் நிகழ்வுகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால், ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்புக்கு முன்னரும் பின்னரும் நடந்த அனைத்தும் வரிசை மாறியே இதில் இடம்பெற்றுள்ளது. இதில் கதை பெரும்பாலும் ராதையின் மனப் போக்கிலும் இடையிடையே சூதர்கள், குறமகள்கள், நிமித்திகர்கள், முதுபெண்டிர்கள் போன்றோரின் சொற்களிலும் தோய்ந்து தோய்ந்து நகர்கிறது.

மகாபாரதத்துக்கும் நீலத்துக்குமான நேரடித் தொடர்பு நான்கு வரிகள் மட்டுமே! ஆயர்குல மலைமருத்துவரும் நிமித்திகருமான ஒருவர் மதுராவின் அரசர் ஸ்ரீகிருஷ்ணரை அணுகி, அவரின் கையைப் பற்றி, நாடியைத் தொட்டு நோக்கி, தியானித்து, “பாண்டவர் முடிமீட்ட கைகள். பார்த்தனுக்கு உரைத்த இதழ்கள். பாரதப்போர் முடித்த கண்கள். அரசர்குழாம் பணியும் அடிகள். ஆற்றுவது ஆற்றி அமைந்த நெஞ்சம்” (நீலம், பக்கம் - 286) என்று கணித்துக் கூறுகிறார். இந்த நான்கு வரிகள் கொண்டே, ‘இந்தப் பகுதி ‘வெண்முரசு’ நாவலோடு இணைகொள்கிறது.

ஒட்டுமொத்த மகாபாரதமும் உருவாகி, நிலைநிற்க மூலக்காரணம் ஸ்ரீகிருஷ்ணரே!. விதையை உருவாக்கி, அதிலிருந்து மரத்தை உருவாக்கி, அதிலிருந்து ஆயிரமாயிரம் விதைகளை உற்பத்தி செய்தது ‘இயற்கை’ என்றால், அந்த இயற்கை செய்த பங்களிப்புக்கு நிகரானதுதான் மகாபாரதம் உருப்பெறுவதற்கு ஸ்ரீகிருஷ்ணரின் பங்களிப்பு. அவரின் அதிதிறனை வெளிப்படுத்தும் களமாகவே ‘நீலம்’ திகழ்கிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த மகாபாரதத்துக்கும் அச்சாணியாக விளங்குவது இந்த ‘நீலம்’தான்.

நீலத்தைப் படிப்பது ஓர் இசைப்பாடலைப் படிப்பதுபோல இருக்கும். ‘திருப்புகழை வாசிப்பதுபோல’ என்றும் கூறலாம். ஸ்ரீகிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை போலவே, மனத்தை மயக்கும் தேர்ந்த செவ்வியற்தமிழ்ச் சொற்களால் மட்டுமே இது எழுதப் பெற்றுள்ளது. இதில் உள்ள அத்தனை வரிகளும் தேர்ந்த செவ்வியற்கவி வரிகளே! உவமைகளும் உருவகங்களுமாகச் சுழித்தோடும் ‘சங்கச்சொற்கவியாறு’ இது.

கதை மாந்தர்

ஸ்ரீகிருஷ்ணர், ராதை ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் கம்சன்,

பிற வடிவங்கள்

விமர்சகர் சுபஸ்ரீ நீலத்தை முழுமையாகத் தம் குரலில் ஒலிப்பதிவு செய்து ‘வெண்முரசு பாடினி’ என்ற பெயரில் யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார்.

உசாத்துணை

இணைப்புகள்

சுபஸ்ரீ - நீலம் - ஒலிவடிவில் - https://www.youtube.com/playlist?list=PL2UBfF641XWLZdz5uObTWE0PYrJ1i2mmN


[[Category:Tamil Content]]