நீலகண்ட சிவம்

From Tamil Wiki
Revision as of 17:46, 23 February 2022 by Subhasrees (talk | contribs) (நீலகண்ட சிவம் - முதல் வரைவு)

நீலகண்ட சிவம் (சுப்பிரமணியம் / நீலகண்ட தாசர்) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர். 4000க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர். இவருடைய கீர்த்தனைகள் அடையாறு கலாக்‌ஷேத்ராவால் ஸ்வரப்படுத்தப்பட்டு இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

பிறப்பு, கல்வி

சுப்பிரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட நீலகண்ட சிவம் திருவனந்தபுரம் கரமனை அக்கிரஹாரத்தில் 1839-ல் பிறந்தார்.

இவருடைய முன்னோர் மூன்று தலைமுறை முன்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் குடிபெயர்ந்திருக்கிறார்கள். நீலகண்ட சிவத்தின் தந்தை பத்மநாபசுவாமி ஆலயத்தில் பணிபுரிந்தார். வெகுகாலம் குழந்தையில்லாதிருந்து சிவனருளால் பிறந்த குழந்தை என்பதால் சுப்பிரமணியம் எனப் பெயர் இட்டனர்

தனிவாழ்க்கை

சுப்பிரமணியம் இளமையிலிருந்தே தெய்வபக்தி மிகுந்தவராக பஜனைகளில் காலம் கழிப்பவராக இருந்தார். பெற்றோர் இவருக்குத் திருமணம் செய்து வைத்து, இருபது வயதில் அரசுப்பணியில் (மாஜிஸ்திரேட்) அமர்த்தினர். பதினைந்தாண்டுகள் இவ்வேலையில் இருந்தார்.

இவருக்கு நான்கு புதல்வர்கள் - ஸ்தாணுநாத சிவன், மகள் பார்வதி அம்மாள்.

தென்குளந்தை ஆனந்தவல்லி - நீலகண்டர் மீது மாறா பக்தி கொண்டு இருந்தார். ஒருமுறை அகச்சான்றுக்கு விரோதமாக தீர்ப்பளிக்குமாறு அரசரிடமிருந்து குறிப்பு வந்தது. அவ்விதம் சொல்ல விரும்பாமல், யாரும் அறியாது வெகுகாலம் ஒரு விநாயகர் கோவிலில் ஒளிந்திருந்தார். அதன் பிறகு இறையருளால் பாடல் இயற்றும் திறன் பெற்றவராக வெளிப்பட்டார் எனப்படுகிறது.

இசைப்பணி

நீலகண்ட சிவம் 80க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் இயற்றி இருக்கிறார். பல புண்ணிய தலங்களுக்கு பதிகங்கள் எழுதியிருக்கிறார். பாடல்களின் பண் குறித்தும் கீர்த்தனைகளின் ராகம், தாளம் குறித்தும் குறிப்புகளோடு 936 பாடல்களைக் கொண்ட முதற்பகுதி தோத்திரம் என்ற பெயரிலும் பண்முறை என்ற பெயரில் ஏனைய பாடல்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவரது கீர்த்தனங்களில் 36 ராகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. லலிதபஞ்சமி, தேராவராளி, நாகநந்தினி போன்ற அரிய ராகங்களில் இசையமைத்திருக்கிறார்.

கீர்த்தனைகள் தவிர பண்டாசுர வதம் செய்த லலிதாதேவி மான்மியம் என்ற புராணக்கதையை மிக விரிவாகக் காலட்சேபத்துக்கு ஏற்ற வகையில் சரித்திரக் கீர்த்தனையாக இயற்றினார். இது 1925-ல் ஸ்ரீவனிதாதேவி மான்மியக் கீர்த்தனைகள் என்ற பெயரில் அவரது மகன் ஸ்தாணுநாத சிவனால் வெளியிடப்பட்டது. இந்நூலில் 80 கீர்த்தனைகள் உள்ளன. பல பாடல்கள் ராகமாலிகையாக அவற்றின் சரணங்கள் பல ராகங்களில் அமைக்கப்பட்டிருகின்றன. அதில் ஒரு கீர்த்தனை பல்லவி, அனுபல்லவி தோடியிலும் 9 சரணங்கள் 9 ராகங்களிலும் அமைத்திருக்கிறார். லலிதாம்பிகை புராணம் மட்டுமல்லாது ஸ்ரீவித்யா தத்துவக் கருத்துக்களையும் இவர் பாடல்களில் எழுதியிருப்பது இவரது சாஸ்திரத் தேர்ச்சியைக் காட்டுகிறது. ஈற்றடிக்கும் முந்தைய அடியில் ‘நீலகண்டம்’ என்ற தன் முத்திரையை[1] அமைத்துப் பாடுவார்.

விருத்தம், பதிகம், சிந்து எனப்பல வகைகளில் பாடல்கள் எழுதினார். இவர் இயற்றிய 4446 பாடல்கள் 1895ல் திருநீலகண்டபோதம் என்ற பெயரில் 640 பக்கங்கள் கொண்ட பெரிய நூலாக இவரது மகன் சுப்பிரமணிய சிவத்தால் அச்சிடப்பட்டன.

இவரது கீர்த்தனைகளில் ஒன்று:

ராகம்: முகாரி, ஆதி தாளம்

பல்லவி:

என்றைக்கு சிவகிருபை வருமோ - ஏழை

என் மனச் சஞ்சலம் அறுமோ (என்றைக்கு)

அனுபல்லவி:

கன்று குரலைக்கேட்டுக் கனியும் பசுபோல நோக்கி

ஒன்றுக்கும் அஞ்சாதென்றன் உள்ளத் துயரம் நீக்கி (என்றைக்கு)

சரணம்:

உண்டானபோது வெகுறவுண்டு இத்தரையிற்

கொண்டாடித் தொண்டாகிக் கொள்வார் தனங்குறையிற்

கண்டாலும் பேசாரிந்தக் கைதவமான பொல்லாச்

சண்டாள உலகத்தைத் தள்ளி சற்கதி சொல்ல (என்றைக்கு)

மற்றொன்று:

ராகம்: அமீர்கல்யாணி, ஆதிதாளம்

பல்லவி:

சிவனை நினைமனமே ஸாம்பஸதா

சிவனை நினைமனமே (சிவனை)

அனுபல்லவி:

பவவினை அகன்றுபோகும்படி கிருபை தந்தாளும்

பரனைப் பரமதயாகரனை உமாவரனை (சிவனை)

பாடல்கள்

  • நீலகண்ட சிவனின் 10 பாடல்கள் அவரது மகள் பார்வதியம்மாள் பாடிக்காட்டிய விதத்தில் ஸ்வரப்படுத்தப்பட்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தாரின் இசை நூல் வரிசையின் மூன்றாம் தொகுதியில் வெளியிடப்பட்டது.
  • நீலகண்டருடைய கீர்த்தனைகள் 1955-ல் சென்னை அடையாறு கலாக்‌ஷேத்ரா வெளியீடாக இரு தொகுதிகளாக ஸ்வரக்குறிப்புகளுடன் வெளியாகின
  • ஸ்ரீவனிதாதேவி மான்மியக் கீர்த்தனைகள் என்ற சரித்திரக்கீர்த்தனைகள் 1925-ல் வெளியிடப்பட்டது
  • 1895ல் இயல், இசை ஆக்கங்களின் தொகுதியான 4446 பாடல்கள் திருநீலகண்டபோதம் என்ற பெயரில் 640 பக்கங்கள் கொண்ட பெரிய நூலாக வெளியிடப்பட்டது
  • பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இசைக்கீர்த்தனைகள்(நாடகங்கள்)
  • திருவனந்தபுரத்தில் ஞானஸ்கந்தைய்யா என்பவர் 130 பாடல்களை பஜனைக் கீர்த்தனங்கள் என்ற பெயரில் வெளியிட்டார்.
  • புகழ்பெற்றிருந்த சில கீர்த்தனைகள்:
    • என்றைக்கு சிவகிருபை
    • ஒருநாள் ஒருதரமாகிலும்
    • சம்போ மகாதேவா
    • இகபரம்தரும்
    • தாயே ரதிநீயே
    • தயவுசெய்ய இன்னும் தாமதமேன்

மறைவு

தன் மறைவுக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே வரும் திங்கட்கிழமை அன்று தான் சிவபதம் அடையவிருப்பதாக அறிவித்து அதன்படியே 1900 ஆம் ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் தேதி ஊர் திரண்டிருக்க எல்லோருக்கும் திருநீற்றுப் பிரசாதம் கொடுத்துவிட்டு மறைந்தார்.

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் ஒவ்வொரு பாடலிலும் இடம்பெறும் வகையில் எழுதுவார்கள். அச்சொல் முத்திரை எனப்படும்.