நவீனத் தமிழிலக்கியம்

From Tamil Wiki
Revision as of 17:33, 10 February 2022 by Jeyamohan (talk | contribs)

நவீனத் தமிழிலக்கியம் :நவீன காலகட்டத்தில் தமிழில் உருவான இலக்கியம். பொதுவாக அச்சுத்தொழில்நுட்பம், உரைநடை ஆகியவை உருவானபிறகு எழுதப்படும் இலக்கியம் நவீன இலக்கியம் எனப்படுகிறது. Modern Literature என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாக புழக்கத்திற்கு வந்த சொல் இது. பொதுவாக இது காலகட்டத்தை குறிப்பதானாலும் குறிப்பிடத்தக்க தனி இயல்புகளையும் இலக்கணங்களையும் கொண்டுள்ளது

நவீன இலக்கியம் வரையறை

நவீன இலக்கியம் நவீன காலகட்டத்தின் சில அடிப்படை இயல்புகளில் இருந்து உருவான இலக்கிய எழுத்துமுறை. நவீன காலகட்டம் என்பது நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவாக உருவானது. நவீனத் தொழில்நுட்பம் மானுட இனத்திற்கு கீழ்க்கண்ட நலன்களை அளித்தது

  • பெருந்தொழில் உற்பத்தி முறை
  • நவீனப் போக்குவரத்து
  • நவீனச் செய்தித்தொடர்பு
  • அச்சுத்தொழில்நுட்பம்

இந்த தொழில்நுட்பங்களால் உலகளாவிய அளவில் மானுட சமூக அமைப்பில் மாற்றங்கள் உருவாயின. இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெருந்தொழில்கள் உருவானபோது கைத்தொழில்களைச் சார்ந்து அமைக்கப்பட்டிருந்த சமூக அமைப்பு உடைந்தது. ஆலைத் தொழிலாளர்கள், பொதுத்தொழிலாளர்கள் என்னும் புதிய வகை திறனாளர் தோன்றினர். குடிமரபாக தொழில்களைச் செய்யும் முறை இல்லாமலாகியது. கிராமங்களைச் சார்ந்த வாழ்க்கைமுறையும் மாறத்தொடங்கியது.

பெருந்தொழில்களின் விளைவாக நவீன போக்குவரத்தும் நவீனச் செய்தித் தொடர்பும் உருவாயின. மக்கள் விரைவாக பயணம்செய்யவும், செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் தொடங்கியபோது சிறுசிறு சமூகவட்டங்களாக வாழ்ந்த வாழ்க்கைமுறை மறைந்தது. அச்சமூக வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பொதுச்சமூகம் உருவாகியது. அது செய்தித்தொடர்பால் ஒருங்கு திரட்டப்பட்டது.

அந்த பொதுச்சமூகத்தில் பொதுக்கல்விமுறை உருவாகி வந்தது. முன்பு ஒவ்வொருவருக்கும் அவரவர் குடித்தொழில் சார்ந்த கல்வியே அளிக்கப்பட்டது. நவீனச் சமூகத்தில் அனைவருக்கும் சமமான, ஒரே கல்வி அளிக்கப்பட்டது. பொதுக்கல்வியின் விளைவாக பொதுவான இயல்பு கொண்ட குடிமக்கள் உருவானார்கள். பொதுக்கல்வி கற்ற பொதுச்சமூகம் உருவானபோது அவர்களை நோக்கி எழுதப்படும் இலக்கியம் உருவானது. அதுவே நவீன இலக்கியம் எனப்படுகிறது.

பழைய இலக்கியமும் நவீன இலக்கியமும்

பழைய இலக்கியத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் அடிப்படையான வேறுபாடுகள் மூன்று.

  • பழைய இலக்கியம் அவ்விலக்கியத்தை கற்க முன்வரும் மாணவர்களையும், அக்கல்வியில் தேர்ந்த அறிஞர்களையும் நோக்கி பேசுகிறது. அதற்கான வாசகர்கள் தனித்திறனும் தனிப்பயிற்சியும் கொண்டவர்கள். நவீன இலக்கியம் பொதுவாசகர்களை நோக்கி நேரடியாகவே பேசுகிறது.
  • பழைய இலக்கியம் ஆசிரியர் -மாணவர் உறவின் வழியாக, மரபான கல்வியமைப்புகள் வழியாக கற்பிக்கப்பட்டது. பழைய இலக்கியம் ஆசிரியர்களிடம் சுவடி வடிவிலோ நினைவு வடிவிலோ இருந்தது. அவர்களை அணுகியே அதைக் கற்கமுடியும். நவீன இலக்கியம் நேரடியாகவே வாசகர்களிடம் அச்சுநூல் வடிவில் வந்து சேர்ந்தது. பழைய இலக்கியத்தை மாணவன் தேடிச்செல்லவேண்டும், நவீன இலக்கியம் வாசகனை தேடி வந்தது.