நற்போதகம்

From Tamil Wiki
Revision as of 23:48, 26 June 2022 by ASN (talk | contribs) (para created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பணியை கிறிஸ்தவத் தொண்டூழிய நிறுவனங்கள் மேற்கொண்டன. அதற்காக அவை பல இதழ்களைத் தொடங்கி நடத்தின. கிறிஸ்தியானி வணக்கம் (1579), சத்திய தூதன் (1835), உதயதாரகை (1841-ல், இலங்கையிலிருந்து வெளிவந்த இதழ்), சுவிசேஷ பிரபல்ய விளக்கம் (1842) என்ற அவ்வரிசையில் இடம் பெறும் முக்கியமான ஓர் இதழ் ‘நற்போதகம்.’

இதழ்த் தோற்றம்

திருநெல்வேலிப் பகுதிக்கு மிஷனரியாக நியமிக்கப்பட்ட ரெவரண்ட் நியூமன், அப்பகுதி மக்களுக்கு இறைப்பற்றை வளர்க்கும் இதழ் ஒன்றைத் தொடங்க விரும்பினார். அவரது முயற்சியால், 1849, பிப்ரவரியில், பாளையங்கோட்டையில் தொடங்கப்பட்ட இதழ் தான் நற்போதகம். ஆரம்பத்தில் திருநெல்வேலி சன்மார்க்கப் புத்தகச் சங்கத்தாரால் அச்சிடப்பட்ட இந்நூல், பின்னர் பாளையங்கோட்டை சர்ச் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. நியூமன் 1850-ல் சொந்த நாட்டுக்குச் சென்றதும், பொறுப்புக்கு வந்த ரெவரண்ட் சார்ஜென்ட், இதழை மேலும் சிறப்பாக வளர்த்தெடுத்தார். பிற்காலத்தில் எல். தெய்வநாயகம் பிள்ளை என்பவர் இதன் வெளியீட்டாளராக இருந்தார். நற்போதகம் இதழ் ‘திருநெல்வேலி டையோசின் மேகசின்’ என்றும், பின் ‘திருநெல்வேலி ஆத்தியட் சாதின நற்போதகம்’ என்றும் பெயரிடப்பட்டு நடத்தப்பட்டது.

உள்ளடக்கம்

24 பக்கங்களில் இந்த நூல் வெளியானது. விலை பற்றிய விவரங்கள் நூலில் இல்லை. இதழின் நோக்கம் மதப் பிரசாரம் தான் என்றாலும், எளிய தமிழில் சுத்தம், சுகாதாரம், கல்வியின் இன்றியமையாமை எனப் பல விஷயங்களைப் பேசியது இவ்விதழ். இதில் எழுதியவர்கள் அதிகம் கல்வி கற்காத பாமரருக்கும் எளிதில் புரியும் வண்ணம் மிக எளிய தமிழில் எழுதினர். பைபிளில் உள்ள பல்வேறு கதைகளை, போதனைகளை சமூக நிகழ்வுகளுடன் கலந்து புதியதாக மீண்டும் எழுதினர். அவ்வகையில் தமிழில் புதிய உரைநடை ஒன்றை இவ்விதழ்உருவாக்கியது. சிறுகதைகளும் இவ்விதழில் அவ்வப்போது வெளியாகின. ஆனால், அவை மேனாட்டார் வகுத்திருக்கும் சிறுகதை என்ற இலக்கணத்துக்குள் அடங்குபவை அல்ல. நீதிபோதனையாகவும், ஆலோசனையாகவும், சமயப் பிரசாரமாகவும் விளங்கும் அவற்றை சிறுகதைகளின் ஆரம்ப காலகட்ட முயற்சிகள் என்று சொல்லலாம். அவை நவீனச் சிறுகதை இலக்கணச் சட்டகத்துக்குள் அடங்காதவை.

இதழின் உள்ளடக்கமாக பூதத்தத்துவ சாஸ்திரம், யூத புராணம், காலக் கணித விளக்கம், திருச்சபை சரித்திரம், திருட்டாந்த சங்கிரகம், தாயும் மகளும் பண்ணிய சம்பாஷணை, கல்வி ஆலோசனைக் குறிப்புகள், பின்னங்கள் எனப் பல பகுதிகள் மாதந்தோறும் வெளியாகியுள்ளன. ‘நாளது சங்கதிகள்’ என்ற தலைப்பில் உலக நிகழ்வு, உள்நாட்டு நிகழ்வு, தமிழக நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. சுத்தம், சுகாதாரம், உடல் நலம் பேணுதல் இவற்றை வலியுறுத்திப் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

தமிழ் மாதப் பஞ்சாங்கக் குறிப்புகள், ‘விசேஷ நாட்கள்’ என்ற தனிக் குறிப்புடன் ‘அன்றாடத் தியானம்’ என்னும் தலைப்பில் பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட வேத வசனக் குறிப்புகளுடன் இடம் பெற்றுள்ளன. கிறிஸ்துவின் மகிமையைக் கூறும் செய்திகளும், போதனைகளும், அறிவுரைகளும் வெளியாகியுள்ளன. எந்தக் கட்டுரையின் கீழும் எழுதியவரின் பெயர் காணப்படவில்லை. இதழில் ஆசிரியர் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

இதழில் ஆங்காங்கே பல்வேறு பழமொழிகள், அனுபவ மொழிகள், அறிவுரைகள் வெளியாகியுள்ளன. சான்றாக, ‘உழுகிற காலம் ஊர் வழி போனால் அறுக்கிற காலம், ஆள் தேட வேண்டாம்’, ‘ஈழமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் பாதி ராத்திரியில் மழை’, ‘உருட்டும் புரட்டும் சிரட்டைக் கொடுக்கும்’, ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் ஆகாது’, ‘உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்’, ‘அன்ன நடை கற்கப் போய் தன்னடையும் கெட்டது’, ‘ஆறு நாளைக்கு ஓதி நூறு நாளைக்கு விடலாகாது’, ‘அரிசி உழக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்’ போன்றவற்றைச் சொல்லலாம்.

கிராமப் பள்ளிக் கூட ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் கட்டுரைகள் எழுதும் சங்க ஆசிரியர்களுக்கு முதல் பரிசு 10 ரூபாயும், இரண்டாம் பரிசு 6 ரூபாயும் வழங்கி கல்விக்கு ஊக்கமளித்திருக்கின்றது நற்போதகம்.

கிறிஸ்தவக் கம்பன் என்று அழைக்கப்படும் ஹென்றி ஆல்பரட் கிருஷ்ணப்பிள்ளை, நற்போதகம் இதழில் தான் இயேசுவின் இறுதி வாழ்க்கையை மட்டும் கூறும், ‘இரட்சண்ய சரிதம்’ என்ற பகுதியை எழுதினார். அது நற்போதகம் இதழில் 1860 ஆகஸ்டு தொடங்கி 1861 மார்ச்சில் நிறைவுற்றது. இதுவே பின்னர் கிருஷ்ணப் பிள்ளை ’இரட்சணிய யாத்திரிகம்’ என்ற படைப்பை எழுதக் காரணமாக அமைந்தது. இரட்சணிய யாத்திரிகம் தொடர், நற்போதகம் இதழில், 1878 ஏப்ரலில் வெளியாகி, 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்து, 1891-ல் நிறைவுற்றது.. பின்னர் 1894-ல், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் மூலம் நூலாக வெளியானது.

இதழின் பங்களிப்பாளர்கள்

டோனாவூர் தலைமை மிஷனரி ரெவரண்ட் தாமஸ் உவாக்கர், ரெவரண்ட் ஈ.எஸ். கார் இருவரும் நற்போதகம் மாத இதழ் ஆசிரியர்களாகச் சிறப்புறப் பணிசெய்ததாகவும், இருவரும் இணைந்து திருமண்டல பள்ளிகளுக்கான சட்ட விதிகளை வகுப்பதில் முக்கிய பணியாற்றியதாகவும், திருமண்டல இருநூறாண்டு வரலாறு நூல் தெரிவிக்கிறது. 1890-ல் ரெவரண்ட் சாமுவேல் பவுல் நற்போதகம் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். அவருக்குப் பின் பல மிஷனரிகள் இதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து இதழ் வளர்த்தனர். எழுத்தாளர் ஆர்.எஸ். ஜேக்கப், நற்போதகம் இதழில் 12 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார்.

வரலாற்று இடம்

கிறிஸ்தவப் பரப்புரையை அக்காலத்து இதழ்கள் பல்வேறு வகைகளில் மேற்கொண்டன. நேரடியாக கிறிஸ்தவப் போதனையை மேற்கோள்ளாமல், கல்வி தொடர்பான இதழ்களின் மூலமும் கிறித்தவக் கருத்துக்கள் பேசப்பட்டன. நற்போதகத்திற்கும் அவ்வகைமையில் முக்கிய இடமுண்டு. தற்போது (2022) ரெவரண்ட் டாக்டர் ப்ரே. எஸ். ஜேம்ஸ், ரெவரண்ட் T.D.ஜெபகுமார், ரெவரண்ட் A.R.G.S.T. பர்னபாஸ் ஆகியோர் இணை ஆசிரியர்களாக இருக்கின்றனர். இதழில், மாதந்தோறும் பைபிள் செய்திகள், பிஷப்பின் மாதாந்திரக் கடிதம், பிஷப்பின் மாதாந்திர நிகழ்ச்சிகள், பைபிள் படிப்புகள், பைபிள் வினாடி வினா போன்றவை இடம்பெறுகின்றன. தேவாலயங்களில் நடக்கும் விழாக்கள், நிகழ்வுகளின் படங்களும், செய்திக் குறிப்புகளும் வெளியாகின்றன.  இதழுக்கு ஆண்டு சந்தா ரூபாய் 150/- வாழ்நாள் உறுப்பினர் சந்தா ரூபாய் 2000/-

1849 தொடங்கி கடந்த 173 ஆண்டுகளாக இடைவிடாமல் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழின் ஒரே இதழ் நற்போதகம் தான்.

உசாத்துணை