under review

நன்னெறி

From Tamil Wiki
Revision as of 19:23, 5 March 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நன்னெறி (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) நீதி இலக்கிய நூல்களுள் ஒன்று. வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு நன்னெறிகளைக் கூறுவதால் நன்னெறி என்று பெயர் பெற்றது. இந்நூலில் 40 பாடல்கள் உள்ளன. நன்னெறியை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.

தோற்றம்

சங்கம் மருவிய காலத்தில் பல்வேறு அற நூல்கள் தோன்றியதைப் போலவே பிற்காலத்திலும் பல்வேறு அற நூல்கள் இயற்றப்பட்டன. அந்த வகையில் பொ.யு. பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய அற நூல் நன்னெறி. சிவப்பிரகாசர் என்று அழைக்கப்பட்ட துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் நன்னெறியை இயற்றினார்.

ஆசிரியர் குறிப்பு

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகரின் மகன். சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கண, இலக்கியம் கற்றார். பல்வேறு இலக்கண, இலக்கிய நூல்களை இயற்றினார்.

சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நூல்களில் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, நெஞ்சு விடு தூது, சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கையுலா, திருவெங்கைக் கோவை, திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதி, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணி மாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் கட்டளைக் கலித்துறை, பிரபுலிங்க லீலைக்கு விருத்தியுரை, வேதாந்த சூடாமணி, தர்க்க பரிபாஷை சதமணிமாலை, சிவப்பிரகாச விகாசம் போன்றவை குறிப்பிடத்தகுந்தன. இவர் தனது 32-ம் வயதில் காலமானார்.

நூல் அமைப்பு

நன்மைகளைத் தரும் ஒழுக்க நெறிகளைக் கூறும் நூல் என்பதால் நன்மை + நெறி = நன்னெறி என அழைக்கப்பட்டது. நூலில் இரண்டு அடிகளைக் கொண்ட கடவுள் வாழ்த்து இடம் பெற்றுள்ளது. அது தவிர்த்து 40 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உள்ளடக்கம்

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.

-எனும் விநாயகர் மீதான கடவுள் வாழ்த்து நூலின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து 40 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

நன்னெறி நூலில் நட்பு, இன்சொல் பேசுவதன் சிறப்பு, கல்வியின் சிறப்பு, மேன்மை, பெருமை, அறிஞர்களின் உயர்வு, அருங்குணம், பெரியோர்களின் பெருமை, நடத்தை, பிறருக்கு உதவிசெய்து வாழ்வதன் சிறப்பு, செருக்கற்று வாழ்வதால் கிடைக்கும் நன்மை எனப் பல்வேறு செய்திகள் பல்வேறு உவமைகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் நடை

நல்லோர் நட்பின் சிறப்பு

நல்லார் செயும்கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செயும்கேண்மை ஆகாதே - நல்லாய்கேள்
காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர்நாள்
போய்முற்றின் என்ஆகிப் போம்

வன் சொல்லும் இன் சொல்லாகும்

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதுஎன்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நல்நுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு

உதவியின் உயர்வு

கைம்மாறு கவாமல்கற் றறிந்தோர் மென்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று

அறிவின் பெருமை

ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்கு
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்
கவரார் கடலின் கடு

கற்றோர் அறிவின் மேன்மை

உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண்அளவாய் நின்றதோ காணும் கதிர்ஒளிதான்
விண்அளவா யிற்றோ விளம்பு

பெரியோர்களின் மேன்மை

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண்டு உள்ளம்
எரியின் இழுதுஆவர் என்க - தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக்
கண்டு கலுழுமே கண்

உசாத்துணை


✅Finalised Page