under review

தூயன்

From Tamil Wiki
Revision as of 21:29, 17 May 2022 by Ramya (talk | contribs) (Created page with "தூயன் (மே 16, 1986) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி வரும் எழுத்தாளர். மருத்துவத் துறையில் பணியாற்றுபவர். பிறப்பு, கல்வி தூயனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தூயன் (மே 16, 1986) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி வரும் எழுத்தாளர். மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்.

பிறப்பு, கல்வி தூயனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரிமளம். பெற்றோர் ராணி, முனுசாமி. சகோதரி நிலா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கிண்டி கிங் அரசு ஆய்வுக்கூட கல்லூரியில் தொழிற்கல்வியும் காரைக்குடி அழகப்பா பல்கலையில் முதுநிலை நுண்ணுயிரியலும் முடித்திருக்கிறார். தனி வாழ்க்கை தூயன் ஜூன் 2014ல் பவித்ராவை மணந்தார். இவர்களுக்கு லெவின் என்னும் மகனும் இதா என்னும் மகளும் உள்ளனர். தற்போது புதுக்கோட்டை ESI மருத்துவமனை ஆய்வகத்தில் பணிபுரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இவரது முதல் கதை கணைாழியில் 2012 ல் வெளியானது. அதைத் தொடர்ந்து தீராநதி, உயிர் எழுத்து, காலச்சுவடு, மணல்வீடு போன்ற இதழ்களில் கதைகள் வெளியாகின. சாருநிவேதிதாவும் ஜெயமோகனும் தன்னை தீவிர இலக்கியத்தின் பால் ஈர்த்தவர்களாய் குறிப்பிடுகிறார். தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களாய் பா.வெங்கடேசன், புதுமைப்பித்தன், உம்பர்டோ ஈகோ, மிலன் குந்தேரா ஆகியோரைக் குறிப்பிடுகிறார். தூயனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘இருமுனை’ 2016ல் யாவரும் பதிப்பகத்தால் வெளியாகி பரவலாக கவனத்திற்கு உள்ளானது. முதல் நாவலான ‘கதீட்ரல்’ 2021ல் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘டார்வினின் வால்’ 2021ல் எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கட்டுரைகளும் இலக்கிய விமர்சனங்களும் தொடர்ந்து எழுதி வருகிறார். பரிசோதனை இதழுக்காக Etger Keret குறுங்கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

இலக்கிய இடம் தூயனின் இருமுனை சிறுகதைத் தொகுப்பை மதிப்பிடும் எம்.கோபால கிருஷ்ணன் “தூயனின் கதைகள் அடர்த்தியானவை. சற்றும் ஆசுவாசத்தைத் தராமல் தொடர்ந்து வாழ்வின் இருண்ட மலினம் நிறைந்த பகுதிகளின் துயரையும் கசப்பையும் திரட்டித் தருபவை. கதைகளினூடாகச் சொல்லப்படும் துல்லியமான தகவல்களும் அவற்றின் சித்தரிப்பும் கதையின் மையத்தை மேலும் கூர்மையடையச் செய்கின்றன. மனம் கூசச் செய்யும் தருணங்கள் பலவும் கட்டற்ற மூர்க்கத்துடன் வெளிப்படுகின்றன” எனக் குறிப்பிடுகிறார். கதீட்ரல் நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கோடை மலையின் செண்பகனூர் கிறிஸ்துவ தேவலாயமொன்றில் நீட்ஷன் எனும் பாதிரியார் நிகழ்த்தும் இரகசிய ஆராய்ச்சிகளை கதைக்களமாய் கொண்டது. “வழக்கமான நேர்கோட்டு விவரிப்பு முறையினின்றும் விலகி உள்ளடுக்குகள் கொண்ட மலரொன்று அலர்வதைப் போல நிதானமாக விரியும் இச்சிறு நாவல் நிறைவானதொரு வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது” என மோகனரங்கன் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

நாவல்

கதீட்ரல் (2021)

சிறுகதைகள்

இருமுனை (2016) டார்வினின் வால் (2021)

உசாத்துணை

  • தூயன் வலைத்தளம்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.