being created

தீபம் (இலக்கிய இதழ்)

From Tamil Wiki
Revision as of 23:44, 2 April 2024 by ASN (talk | contribs) (Para Added and Edited)
தீபம் - இலக்கிய இதழ்

தீபம் (1965) ஓர் இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் நா. பார்த்தசாரதி இதன் ஆசிரியர். தமிழின் மிக முக்கியமான படைப்புகள் சில தீபத்தில் தொடர்களாக வெளிவந்தன. 1987-ல், நா.பா.வின் மறைவுக்குப் பின் சில மாதங்களில் இவ்விதழ் நின்று போனது.

(பிற்காலத்தில் கல்கி குழும வெளியீடாக தீபம் ஆன்மிக இதழாக வெளிவந்தது)

பதிப்பு, வெளியீடு

இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த எழுத்தாளர் நா. பார்த்தசாரதி, ஏப்ரல் 1965 தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று தீபம் இதழைத் தொடங்கினார். தீபம் காரியாலயம், எண் 6, நல்லதம்பி செட்டித் தெரு, அண்ணாசாலை என்ற முகவரியிலிருந்து தீபம் இதழ் வெளிவந்தது. தீபம் எஸ். திருமலை அச்சிட்டு வெளியிடுபவராகவும், உதவி ஆசிரியராகவும் செயல்பட்டார்.

தொடக்க காலத்தில் தனிப்பிரதி இதழின் விலை 75 காசுகளாக இருந்தது. பின்னர் ஒரு ரூபாயாக உயர்ந்தது. ஆண்டு சந்தா இந்தியாவுக்கு 12 ரூபாயாகவும், இலங்கைக்கு 15 ரூபாய் ஆகவும், மலேயா, பர்மாவுக்கு 25 ரூபாயாகவும் இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு இதழின் சந்தா விலை ரூபாய் 25/- வெளிநாடுகளுக்குக் கடல் அஞ்சல் மூலம் (Sea Mail) இதழ் அனுப்பப்பட்டது. ஏர் மெயிலில் அனுப்பத் தனிக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.

எண்பது பக்கங்கள் கொண்ட இதழாக வெளிவந்த தீபம், ஆண்டு மலர்கள், தீபாவளி, பொங்கல் மலர்களை ஆண்டுதோறும் வெளியிட்டது. அவ்வப்போது சிறப்பிதழ்கள் சிலவற்றையும் வெளியிட்டது.

பொதுவாக இதழ்களில் குறிப்பிடப்படும் ‘இதழில் வெளியாகும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே’ என்ற கூற்றுக்கு மாறாக, தீபம் இதழில் பின்வரும் குறிப்பு இடம் பெற்றது. “தீபத்தில் வெளியாகும் கதை, கட்டுரைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஆனால் அதே சமயத்தில் அவை அவற்றைப் படைத்த இலக்கியச் சிற்பிகளின் பொறுப்பு என்கிற கம்பீரமான பலத்தைச் சார்ந்து நிற்பவையுமாகும்.”

1965 ஏப்ரல் முதல் 1979 செப்டம்பர் வரை தீபத்தின் ஆசிரியராக இருந்த நா. பார்த்தசாரதி, தினமணி கதிரின் ஆசிரியராகப் பொறுப்பேற்றதால், வல்லிக்கண்ணன், ஆ. மாதவன், நாஞ்சில் நாடன் ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

நோக்கம்

தீபம் இதழின் நோக்கம் குறித்து, நா.பா. முதல் இதழில் பின்வருமாறு குறிப்பிட்டார். “பரிசுத்தமான எண்ணங்களுடனும் தணியாத சத்திய வேட்கையுடனும் எல்லா இடங்களிலும் அறிவின் பிரகாசமும் உண்மையின் ஒளியும் துலங்க வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்துடனும் இன்று இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நான் ஓர் இலக்கியத் தீபத்தை பக்தி சிரத்தையோடு ஏற்றி வைக்கிறேன். இதன் பிரகாசத்தில் பகைமை, போட்டி, பொறாமை, இலக்கிய மாரீசம், நாட்டைக் கெடுக்கும் நச்சு இலக்கியப் புல்லுருவிகள் ஆகிய விதவிதமான இருள்களெல்லாம் அகன்று விலகி ஓடுமாக! தீபம் நல்லவர்களாகிய எல்லார்க்கும் ஒளியாகவும் தீயவர்களாகிய எல்லார்க்கும் சுடு நெருப்பாகவும் இருக்கும்; அப்படித்தான் இருக்கவேண்டும். இதன் குணம் பிரகாசம் என்பது மட்டும்தான் இங்கு நமக்குத் தேவையான உண்மை. எனவே அதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.”

நா. பார்த்தசாரதி, முதல் இதழின் தலையங்கத்தில், “இது இலட்சக்கணக்கில் பணம் முடக்கும் ஓர் 'காகித வியாபாரி' நடத்த முன்வரும் இச்சை பச்சை நிறைந்த கவர்ச்சிப் பத்திரிகை அல்ல. தன்மானமும், நேர்மையும் இருகரங்களென நம்பும் ஓர் அசல் எழுத்தாளரின் ஆத்ம சோதனைதான் இந்தப் பத்திரிகை” என்று கூறியிருந்தார். மேலும் அவர், “மனோதர்மமும் தன்னம்பிக்கையுமே எனது பலமான மூலதனங்கள். ஒரு காகித வியாபாரி பத்திரிகை தொடங்கும் போது அவர் விற்கும் காகிதத்தைப் போலவே மற்றொரு வர்ணக் காகிதமாகிய பணமும் அதிகாரமுமே அதற்கு மூலதனமாகலாம். ஆனால் ஓர் எழுத்தாளன் பத்திரிகை தொடங்கும்போதோ பணத்தைவிட மனோதர்மமே பெரிய மூலதனமாக அமைய முடியும். அப்படித்தான் நானும் அமைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதினார்.

இரண்டாவது இதழின் தலையங்கத்தில், “மெய்வருத்தம் பாராமல் பசி நோக்காமல் கண் துஞ்சாமல் எவ்வெவர் தீமையும் போட்டியும் பொறாமையும் பாராமல் கருமமே கண்ணாக நான் என் 'தீபத்தை' மேலும் மேலும் நன்றாகப் பிரகாசிக்கச் செய்யும் காரியங்களைச் செய்து விடாப்பிடியாக முயன்று கொண்டிருக்கிறேன். எனக்கு இன்றும் - இனி என்றும் இது ஒரு நோன்பு-தவம்.” என்று எழுதினார்.

உள்ளடக்கம்

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

தெளிந்த நல்லறிவு வேண்டும்

-என்ற பாரதியின் வரிகள் ஒவ்வோர் இதழின் முகப்பிலும் இடம்பெற்றன.

நேர்காணல்கள்

தீபம் இதழ் கீழ்க்காணும் இலக்கியவாதிகள் உள்பட பலரது நேர்காணல்களை வெளியிட்டது

  • மௌனி
  • கி.வா. ஜகந்நாதன்
  • கி. சந்திரசேகரன்
  • லா. ச. ராமாமிர்தம்
  • நாரண துரைக் கண்ணன்
  • ந. சிதம்பர சுப்ரமண்யன்
  • மணிக்கொடி சீனிவாசன்
  • டி. எஸ். சொக்கலிங்கம்
  • வெ. சாமிநாத சர்மா
  • திருலோக சீதாராம்
  • தி. ஜ. ரங்கநாதன்
  • தொ.மு.சி. ரகுநாதன்
  • பி. எஸ். ராமையா
  • நா. வானமாமலை
  • பெரியசாமி தூரன்
  • தெ. பொ. மீனாட்சிசுந்தரம்
  • க.நா. சுப்ரமண்யம்
  • தி. ஜானகிராமன்
  • ஜெயகாந்தன்
  • அ. சீனிவாசராகவன்
  • க. கைலாசபதி
  • கன்னட எழுத்தாளர் கே.வி. புட்டப்பா
  • சாகித்ய அகாடமி செயலாளர் டாக்டர் பிரபாகர் மாச்வே

இந்திய மொழி எழுத்தாளர்கள் பலரது நேர்காணல்கள் தீபம் இதழில் வெளியாகின.

எழுத்தும் படைப்பும்

நானும் என் எழுத்தும்' என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து குறித்தும், படைப்புகள் குறித்தும் எழுதினர். சுந்தர ராமசாமி, நகுலன், கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன் உள்ளிட்ட பலர் தங்களது படைப்பிலக்கியம் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மொழிபெயர்ப்பு

தீபம், மொழிபெயர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவமளித்தது. குறிப்பாக, குறிஞ்சிவேலன், மலையாள இலக்கியங்கள் மற்றும் இலக்கியவாதிகள் குறித்து எழுதிய 'முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்' தொடர் வாசக வரவேற்பைப் பெற்றது. வைக்கம் முகது பஷீர், முகுந்தன் போன்றோரின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. குஜராத்தி, உருது, வங்காளம், இந்தி, கன்னடம் என்று பிற இந்திய மொழிக் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் சர்வதேசப் படைப்புக்களையும் வாசகருக்கு அளித்தது. ஜான் பால் சார்ட்ரே எழுதிய 'ஈக்கள்' (The Flies), ஜார்ஜ் ஆர்வெல்லின் 'மிருகப் பண்ணை' (Animal Farm) போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

தொடர்கள்

தீபம் இதழில் தொடராக வெளிவந்த 'மணிக்கொடி காலம்’ (பி. எஸ். ராமையா), 'சரஸ்வதி காலம்' (வல்லிக்கண்ணன்), 'புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' (வல்லிக்கண்ணன்), 'பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை (வல்லிக்கண்ணன்), தமிழில் சிறு பத்திரிகைகள் (வல்லிக்கண்ணன்), ’எழுத்து அனுபவங்கள்’ (சி.சு. செல்லப்பா), ‘கதைக்கலை’, ’எழுத்தும் வாழ்க்கையும்’ (அகிலன்), 'திரைக்கு ஒரு திரை' (ஜெயகாந்தன்) போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தன.

ஆதவனின் காகிதமலர்கள், அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், இந்திரா பார்த்தசாரதியின் தந்திர பூமி, தி. சா. ராஜுவின் காளியின் கருணை, மலர்மன்னன் எழுதிய மலையிலிருந்து வந்தவன், ஆர். சூடாமணியின் தீயினில் தூசு, நாஞ்சில்நாடனின் மாமிசப் படைப்பு, தேவகோட்டை வா. மூர்த்தியின் ஜொலிக்கும் வைரங்கள் போன்றவை தீபத்தில் வந்த குறிப்பிடத்தகுந்த நாவல் தொடர்கள்.

பங்களிப்பாளர்கள்

இலக்கிய இடம்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.