தி.வை. சதாசிவ பண்டாரத்தார்

From Tamil Wiki
தி.வை. சதாசிவ பண்டாரத்தார்

தி.வை. சதாசிவ பண்டாரத்தார் (திருப்புறம்பயம் வைத்தியலிங்கப் பண்டாரத்தார் மகன் சதாசிவப் பண்டாரத்தார்) (ஆகஸ்ட் 15, 1892 – பிப்ரவரி 2, 1960) தமிழறிஞர், தமிழக வரலாற்றாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி அறிஞர். சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் எழுதியவர். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.

பிறப்பு, கல்வி

சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் ஆகஸ்ட் 15, 1892-ல் மகனாகப் பிறந்தார். 1910 -ல் பள்ளிப்படிப்பை முடித்தார்.

ஆசிரியர்கள்

  • பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்
  • வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை

தனிவாழ்க்கை

1914-ல் பண்டாரத்தார் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள குறுக்கை என்ற ஊரைச் சேர்ந்த ஆத்மலிங்கராயரின் மகள் தையல்முத்து அம்மையாரை மணந்தார். பண்டாரத்தார் குடந்தையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது 1921-ல் அவரது மனைவியார் காலமானார். 1922-ல் எலத்தூரில் வாழ்ந்த சைவப்பெரியார் சதாசிவக் குருக்கள் என்பவரது மகளார் சின்னம்மாள் என்பவரை இரண்டாம் திருமணம செய்து கொண்டார்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தாலுகா அலுவலகத்திலும், கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1942-1953, 1953-60 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். சைவசமயப் பற்றாளராகத் திகழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பணியில் இருந்த பொது “செந்தமிழ்” என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின. 1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது. பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்கால சோழர் சரித்தரம்” என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, 51 மற்றும் 61 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். 1914-ல் ஆண்டில் செந்தமிழில் இவரெழுதிய ‘சோழன் கரிகாலன்’ என்னும் கட்டுரையே இவரது முதல் கட்டுரையாகும்.

அறிஞர் பண்டாரத்தார் தமிழ் வளரச்சிக்கழகம் வெளியிட்ட தமிழ்க்கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழுவிலும், தமிழ்ப்பொழில் இதழாசிரியர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றினார்.

இலக்கிய நண்பர்கள்

  • த.வே.உமாமகேசுவரம் பிள்ளை
  • வேங்கடசாமி நாட்டார்
  • அறிஞர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை,
  • பேராசிரியர் கோ.சுப்பிரமணியபிள்ளை,
  • அறிஞர் க.வெள்ளைவரணனார்
  • ச.சோமசுந்தரபாரதியார்,
  • திரு.வி.க,
  • உ.வே.சா,
  • கவிமணி,
  • ரா.பி.சேதுப்பிள்ளை,
  • தெ.பொ.மீ.,
  • வையாபுரிப்பிள்ளை

நூல்கள்

பண்டாரத்தார் தமது ஆசிரியர் வலம்புரி பாலசுப்பிரமணியபிள்ளையுடன் சேர்ந்து எழுதிய ‘சைவசமய சிகமாணிகள் இருவர்’ என்னும் நூலும், கும்பகோணத்தில் இருந்தபோது எழுதிய கருணாகரத் தொண்டைமான் பற்றி எழுதிய நூலும் வெளிவரவில்லை.

இவர் எழுதிய முதல்குலோத்துங்க சோழன் என்ற நூல் 1930-ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலை கல்வெட்டாய்வாளர் வி.ரெங்காச்சாரியார், உ.வே.சா., திரு.வி.க. முதலிய அறிஞர் பெருமக்களாலும், செந்தமிழ், நவசக்தி முதலான இதழ்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 1940-ஆம்; ஆண்டில் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவ்விரு நூல்களும் தமிழ்ப்பொழில் இதழில் வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிஞர் பண்டாரத்தார் திருப்புறம்பயத் தலவரலாறு, செம்பியன் மாதேவித் தலவரலாறு, காவிரிப்பூம்பட்டினம், திருக்கோவலூர் புராணம், தொல்காப்பியப் பாயிரவுரை ஆகிய நூல்களையும் எழுதினார்

சோழர் சரித்திரம்

பிற்கால சோழர் சரித்திரம்

1942 -ல் அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அவர் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள கல்வெட்டாய்வு நூல்களைப் பயன்படுத்தி பிற்காலச் சோழர் சரித்திரத்தின் முதல் பாகம் 1949-ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 1951-ஆம் ஆண்டிலும் பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன.

இதனைத் தொடர்ந்து சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகத்தையும், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15-ஆம் நூற்றாண்டுகள்) ஆகிய நூல்கள் 1955 -ஆம் ஆண்டு பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன. 1955-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தபொழுது சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் அவரால் எழுதப்பெற்று 1961-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது.

அறிஞரின் பிற்காலச் சோழர் வரலாறு தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல்நூல் என்ற சிறப்பிற்குரியதாகும். இந்நூல் வெளிவந்த பின்னர்தான் பிற்காலச் சோழர்களின் பெருமைகளைத் தமிழுலகம் அறியத் தொடங்கியது எனலாம். பண்டாரத்தார் அவர்களின் சோழர் சரித்திரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர்களுக்குப் பாடநூலாகவும் வைக்கப்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதழ்கள்

  • கும்பகோணத்தில் அறிஞர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது 1933 முதல் 1938 வரை ’யதார்த்த வசனி’ என்ற இதழின் துணை ஆசிரியராக இருந்து எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார்.

எழுதிய இதழ்கள்

  • செந்தமிழ் இதழில்
  • தமிழ்ப்பொழில்
  • செந்தமிழ்ச்செல்வி
கல்வெட்டுகள் கூறும் உண்மைகள்

கல்வெட்டாராய்ச்சியாளர்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கல்வெட்டுக்களின் வரலாறு பற்றியும், அவற்றை ஆராய்வதன் பயன்களைப் பற்றியும் வகுப்புகளில் அடிக்கடி கூறி வந்ததைக் கேட்டு பண்டாரத்தார் கல்வெட்டாராய்ச்சியில் ஈடுபாடு கொண்டார். கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் இணைத்து ஆய்வு செய்து இலக்கிய வரலாறு, நாட்டு வரலாறு, சமுதாய வரலாறு ஆகியவற்றை எழுதியவர் பண்டாரத்தார். ஆய்வுலகில் பலராலும் ஏற்கத்தக்க வகையில் தமக்கென்று ஓர் ஆராய்ச்சி நெறிமுறையை வகுத்துக்கொண்டு நடுநிலையுடன் செயல்பட்ட அறிஞர் பண்டாரத்தார்

சொற்பொழிவாளர்

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில், ‘‘கல்லாடமும் அதன் காலமும்’’ என்ற தலைப்பில் பண்டாரத்தார் உரையாற்றினார். தமிழோடு தொடர்புடைய பல மாநாடுகளிலும் அறிஞர் பண்டாரத்தார் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழகப் புலவர் குழுவானது முதன் முதலாகத் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் கூடியபொழுது அதன் முதல் கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கி நடத்தினார். தஞ்சாவூரில் ஜே.எம்.சோமசுந்தரம்பிள்ளை இராசராசன் விழாவை முதன் முதலாக ஆரம்பித்தபொழுது பண்டாரத்தார் அக்கூட்டத்தில் முதற் சொற்பொழிவினை நிகழ்த்தினார்.

அரசியல்

பண்டாரத்தார் நீதிக்கட்சியின் கருத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அக்கட்சி நடத்திய ஒவ்வொரு மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

விருதுகள்

  • இவருடைய ஆய்வுத் திறமையைக் கண்ட மதுரைத் திருவள்ளுவர் கழகம் 1956-ஆம் ஆண்டு மாரச் 29-ஆம் நாள், ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
  • அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை எழுத்தாளர் சங்கம் தனது நான்காம் ஆண்டுவிழாவில் அப்போதைய கல்வி அமைச்சர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்களைக் கொண்டு பண்டாரத்தாருக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது.

இறுதிக்காலம்

1959-ஆம் ஆண்டு ஜுலை மாதம் அறிஞர; பண்டாரத்தார் நோய்வாய்ப்பட்டார். தமது உடல் நோயுற்ற காலத்திலலும் கல்வெட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடும் நினைவாற்றலும் கொண்டவராக அறிஞர் காணப்பட்டார். தமது இறுதிக் காலத்திலும் தொடர்ந்து ஆய்வுப் பணி செய்துவந்தார்.

1960-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் நாள் உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். அறிஞர் பெருமக்களான கி.ஆ.பெ.விசுவநாதம், கரு.முத்துத்தியாகராயர், தந்தைப் பெரியார், முதறிஞர் வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்டோர் இரங்கல் செய்திவிடுத்தனர்.

உசாத்துணை