தி.ஜானகிராமன்

From Tamil Wiki
Revision as of 17:05, 2 March 2022 by SathishKorea (talk | contribs)
தி. ஜானகிராமன் , நன்றி விகடன்

தி. ஜானகிராமன் (28 பிப்ரவரி 1921 - 18 நவம்பர் 1982) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். "சக்தி வைத்தியம்" என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தமிழில் புகழ் பெற்ற நாவல்களான `மோகமுள்', `அம்மா வந்தாள்', `மரப்பசு', `உயிர்த்தேன்', `நளபாகம்' போன்றவற்றை எழுதியவர். முறையான சங்கீதப் பயிற்சி பெற்றிருந்தவர். சங்கீதம் பற்றிய விரிவான நுண் தகவல்கள் பலவற்றை தன் கதைகளில் எழுத்தாக்கியவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.

பிறப்பு, கல்வி

தி.ஜானகிராமன் 28 பிப்ரவரி 1921 அன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடிக்கு அருகிலுள்ள தேவங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை தியாகராஜ சாஸ்திரிகள் நல்ல சமஸ்கிருதப் புலமையும், சங்கீத ஞானமும் கொண்டவர், மேலும் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாசங்களை உபன்யாசம் செய்பவராகவும் இருந்திருக்கிறார். தி.ஜானகிராமனின் குடும்பம் தேவன்குடியிலிருந்து இடம்பெயர்ந்து கும்பகோணம், தஞ்சை போன்ற ஊர்களில் கொஞ்சகாலம் வசித்தபின், வலங்கைமானுக்கு அருகிலிருக்கும் கீழவிடையல் என்ற கிராமத்தில் குடியேறி நிலைபெற்றது.

ஜானகிராமனின் தஞ்சாவூரிலும், கீழவிடையலுக்கு அருகிலிருந்த கருப்பூரிலும் பள்ளிக்கல்வி பெற்றார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி.ஏ.வும் பயின்றார், சென்னையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் படித்துப் பட்டம் வாங்கினார்.

தனிவாழ்க்கை

தி.ஜானகிராமன், அவரின் மனைவி, மகள் உமா சங்கரி, மகன் ராதா ரமணன். நன்றி: கனலி

ஆசிரியர் பயிற்சிப்படிப்புக்குப் பின் 11 ஆண்டுகள் பள்ளியாசிரியராக வேலை பார்த்தார். இதில் ஓர் ஆண்டு கும்பகோணத்திலும், ஓர் ஆண்டு சென்னையிலும், 9  ஆண்டுகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டையிலும், குத்தாலத்திலும் பணியாற்றினார். ஜானகிராமனின் சில சிறுகதைகள் இந்த ஆசிரியர் வேலையைப் பின்புலமாகக் கொண்டிருப்பவை.

1954-இல், தன்னுடைய 33-ஆவது வயதில், அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில், கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பதவியேற்று, 1968 வரை – பதினான்கு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார். 1968-இல் பதவி உயர்வு பெற்று டில்லி வானொலி நிலையத்துக்கு மாற்றம் பெற்றார். அங்கு உதவித் தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணிபுரிந்தவர், பின் பதவி உயர்வு பெற்று 1974 - 1981 வரை தலைமைக் கல்வி அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.  அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி அவரை Emeritus Producer என்ற பதவி கொடுத்து ஆகாசவாணி கெளரவித்தது. அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் அசோகமித்திரனுக்குப் பின், ’கணையாழி’ பத்திரிகையின் கெளரவ ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியிருக்கிறார்.

ஜானகிராமனுக்கு சகோத்ராமன், ராதா ரமணன் என்று இரண்டு மகன்களும், உமா சங்கரி என்ற ஒரு மகளும் உண்டு. கனலியின் தி.ஜானகிராமன் நூற்றாண்டு சிறப்பிதழுக்காக மகள் உமா சங்கரியின் நேர்காணலிலிருந்து தி.ஜானகிராமனின் மனைவி , தி.ஜா எழுத்தாளர் என்பதில் பெருமை கொண்டிருந்ததாகவும் , அவரின் அனைத்து எழுத்துக்களையும் முழுதும் படித்திருந்ததாகவும் தெரிய வருகிறது.

இலக்கியவாழ்க்கை

தி.ஜானகிராமன் தன் ஆரம்ப காலங்களில் `கலைமகள்’ பத்திரிகையில் எழுதினார். `மணிக்கொடி’ இதழிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு `கொட்டு மேளம்’ 1954-ம் ஆண்டில் வெளிவந்தது. இரண்டாவது சிறுகதைத் தொகுதி `சிவப்புரிக்க்ஷா’ 1956-ல் வெளிவந்து ஜானகிராமனுக்கு புகழை சேர்த்தது. தி.ஜானகிராமனின் 17 வயதில், அவர் கல்லூரியில் படிக்கும் காலங்களிலே, கதைகள் எழுதத்தொடங்கி வெகுஜனப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. அப்போது கல்லூரியில் சீனியரான எம்.வி.வெங்கட்ராமுடன் ஏற்பட்ட நட்பு, அவரை தீவிர இலக்கியம் நோக்கி கொண்டுசென்றது. கும்பகோணத்திலிருந்த மணிக்கொடி எழுத்தாளரான கு.ப.ராஜகோபாலனோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டிருக்கிறது. தி.ஜானகிராமனுக்கு கு.ப.ராஜகோபாலன் நல்ல இலக்கிய வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அக்காலகட்டத்தில் கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி, ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஆகியோர் ஜானகிராமனின் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஜானகிராமனின் தீவிர இலக்கியச் செயல்பாடு கு.ப.ராவின் அறிமுகத்துக்குப் பின்னரே நிகழ்ந்திருக்கிறது. தன்னுடைய 24-ஆவது வயதில் அமிர்தம் என்ற முதல் நாவலை எழுதியிருக்கிறார். பத்து நாவல்களும், இரண்டு குறுநாவல்களும், மூன்று நாடகங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், மூன்று பயண நூல்களும் எழுதியிருக்கிறார். கடைசி நாவலான நளபாகம் 1982-இல் வெளியானது. 1979-ஆம் வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக வழங்கப்பட்டது. காலச்சுவடு நிறுவனம் சில தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ‘சிலிர்ப்பு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

மறைவு

தி.ஜானகிராமன், நன்றி: யாவரும்.காம்

தி.ஜானகிராமன் தன்னுடைய 62-ஆவது வயதில் 18 நவம்பர் 1982 அன்று  காலமானார். இறக்கும்போது சென்னை திருவான்மியூர் வீட்டுவசதி வாரியம் வீட்டில் குடியிருந்தார்.

இலக்கிய இடம்

தி.ஜானகிராமனின் படைப்புகள் பெரும்பான்மை வாசகர்களின் வசீகரிப்புக்கும் அதேசமயம், தீவிர இலக்கிய வாசகர்களின் ஈர்ப்புக்கும் இடமளித்தவை. தி.ஜானகிராமனின் படைப்புகளை பற்றி வெங்கட் சாமிநாதன் கூறுகையில் "ஜானகிராமனின் நாவல்கள், சிறுகதைகள் எல்லாமே அவர் பிறந்த தஞ்சை ஜில்லாவின் மத்திய தர பிராமணர்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பவை; அந்த வாழ்க்கைகொண்ட மதிப்புகளின் உச்சங்களையும் சீர்கேடுகளையும் பிரதிபலிக்கும் ஆவணம். ஜானகிராமன் படைக்கும் உலகம் லட்சியவாதிகளால் நிறைந்தது. அவர்கள்தாம் தமக்கு விதித்துக்கொண்டுள்ள லட்சியங்களைக் காக்க எப்போதும் வாழ்க்கையின் வதைக்கும் யதார்த்தங்களையும் சூழ்நிலையையும் எதிர்த்து போராடிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.

தி.ஜானகிராமனின் படைப்புகளை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகையில் "தி.ஜானகிராமனின் படைப்புகள் உணர்ச்சிகரமான கற்பனாவாதத்தன்மை கொண்டவை. ஆனால் அவற்றின் மையத்தரிசனம் எப்போதும் காமத்தைப்பற்றிய யதார்த்தம் சார்ந்த ஒரு விவேகமாகவே உள்ளது. மிகச்சிறந்த உதாரணம் ’மோகமுள்’ . நுண்மையான ஒரு காதலைச் சொல்லிச்செல்லும் அந்நாவல் அதைக் காமத்தின் நுண்வடிவம் மட்டுமே என்று சொல்லி அமைகிறது." என்கிறார்.

மெய்மறக்க வைக்கக்கூடிய உணர்வுநிலைகளை கதைகளில் வெளிப்படுத்துவதே தன் இலக்கிய அளவுகோலாக தி.ஜானகிராமன் குறிப்பிடுகையில்``உணர்வு இல்லாமல் இயந்திரரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை காட்டி நம்மைப் பிரமிக்கவைக்க முடியும். ஆனால், மெய்ம்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள்" என்று குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

நாவல்கள்

  • அமிர்தம் (1945)
  • மலர்மஞ்சம் (1961)
  • அன்பே ஆரமுதே (1963)
  • மோகமுள் (1964)
  • அம்மா வந்தாள் (1966)
  • உயிர்த்தேன் (1967)
  • செம்பருத்தி (1968)
  • மரப்பசு (1975)
  • அடி (1979)
  • நளபாகம் (1983)

குறுநாவல்கள்

  • கமலம் (1963)
  • தோடு'' (1963)
  • அவலும் உமியும் (1963)
  • சிவஞானம் (1964)
  • நாலாவது சார் (1964)
  • வீடு

சிறுகதைத் தொகுதிகள்

  • கொட்டுமேளம் (1954)
  • சிவப்பு ரிக்ஷா (1956)
  • அக்பர் சாஸ்திரி (1963)
  • யாதும் ஊரே (1967)
  • பிடிகருணை (1974)
  • சக்தி வைத்தியம் (1978)
  • மனிதாபிமானம் (1981)
  • எருமைப் பொங்கல் (1990)
  • கச்சேரி (2019)

நாடகம்

  • நாலுவேலி நிலம் (1958)
  • வடிவேல் வாத்தியார் (1963)
  • டாக்டர் மருந்து

பயண நூல்கள்

  • உதயசூரியன் (ஜப்பான் பயண நூல்) 1967
  • அடுத்த வீடு ஐம்பது மைல்
  • கருங்கடலும் கலைக்கடலும் 1974
  • நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாக பயணம்)    

மொழியாக்கம்

  • அன்னை (மூலம்: கிரேசியா டெலடா - நோபல் பரிசு பெற்றது)
  • அணு உங்கள் ஊழியன் , ஹென்றி ஏ. டன்லப், ஹான்ஸ் என் டச்
  • பூமி எனினும் கிரஹம், ஜார்ஜ் காமோ

உசாத்துணை