திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 20:04, 1 March 2022 by Subhasrees (talk | contribs) (திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாதஸ்வர இசைக்கலைஞர்கள் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை(டிசம்பர் 15, 1869 – நவம்பர் 16, 1903), திருப்பாம்புரம் சிவசுப்பிரமணிய பிள்ளை திருப்பாம்புரம் சகோதரர்கள் என்றழைக்கப்பட்டனர். கச்சேரியில் இரு நாதஸ்வரங்களை இணைந்து வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்த முன்னோடிகள்.

பிறப்பு, கல்வி

நடராஜசுந்தரம் டிசம்பர் 15, 1869 அன்று திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரத்தில் சுவாமிநாத பிள்ளை – பரிபூரணத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார்.

சுவாமிநாத பிள்ளையின் தந்தை குழந்தைவேல் பிள்ளை ஸாரந்தா இசைக்கலைஞர். சுவாமிநாத பிள்ளையின் தாத்தா சேஷப்பிள்ளை வீணைக்கலைஞர். இவர்கள் மாயவரத்துக்கு அருகே உள்ள கல்யாணசோழபுரம் என்னும் ஊரில் இருந்து திருப்பாம்புரத்துக்குக் குடியேறியவர்கள்.

நடராஜசுந்தரமும் அவரது தம்பி சிவசுப்பிரமணியமும் இஞ்சிக்குடி குமரப்பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றனர். அதன்பிறகு உமையாள்புரம் துரைசுவாமி ஐயர், சாத்தனூர் பஞ்சநாதய்யர் ஆகியோரிடம் கீர்த்தனைகளில் பயிற்சி பெற்றனர். உமையாள்புரம் துரைசுவாமி ஐயர் தியாகராஜரின் சீடர் வழி வந்தவர். சாத்தனூர் பஞ்சநாதய்யர் தீட்சிதரின் சீடர் வழி வந்தவர்.

தனிவாழ்க்கை

நடராஜசுந்தரத்திற்கு மூன்று மகன்கள் - மூத்த மகன் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை புல்லாங்குழல் கலைஞர். அடுத்த மகன் சோமசுந்தரம் பிள்ளை பழனி தேவஸ்தான நாதஸ்வர இசைக்கல்லூரியில் தலைவராக இருந்தவர். மூன்றாவது மகன் சிவசுப்பிரமணியம் பிள்ளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை ஆசிரியராக இருந்தவர்.

சோமசுந்தரம் பிள்ளையின் மகன் ஷண்முகசுந்தரம் மதுரை அரசு இசைக்கல்லூரியின் தலைவராக இருந்தவர்.

இசைப்பணி

நடராஜசுந்தரத்திடம் அவரது முன்னோரிடமிருந்து கிடைத்த முத்துஸ்வாமி தீட்சிதர் கீர்த்தனைகளின் சுவடி இருந்தது. அதனால் அதுவரை அதிகம் அறியப்படாத தீட்சிதர் கீர்த்தனைகளின் கருவூலமாக இவர் இருந்தார். தீட்சிதர் வடமொழிக் கீர்த்தனைகளில் 50 பாடல்களை தீட்சிதர் கீர்த்தனப் பிரகாசிகை எனும் பெயரில் முறையான பாட அமைப்பு கொண்ட நூலாக 1930ல் நடராஜசுந்தரம் பிள்ளை வெளியிட்டார்.

இவரது காலத்துக்கு முன்பு வரை நாதஸ்வரக் கச்சேரியில் ஒரு நாதஸ்வரமும் ஒரு தவிலும் வாசிக்கும் வழக்கமே இருந்தது. முதன் முதலாக இரு நாதஸ்வரங்கள் சேர்ந்து வாசிக்கும் முறைமையை நடராஜசுந்தரம் பிள்ளை, சிவசுப்பிரமணிய பிள்ளை சகோதரர்கள் தொடங்கி வைத்தனர்.

ராமநாதபுர சமஸ்தானம், சூணாம்பேடு ஜமீன், தண்ணீர் குன்னம் பண்ணை எனப் பல ஜமீன்களில் முதன்மைக் கலைஞர்களாக இருந்தார்கள்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருப்பாம்புரம் சகோதரர்களுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

  • ஸ்ரீவாஞ்சியம் கோவிந்தப் பிள்ளை
  • மன்னார்குடி பல்லுப் பக்கிரிப் பிள்ளை
  • அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை
  • வழிவூர் முத்துவீர் பிள்ளை

மாணவர்கள்

இரட்டை நாதஸ்வர வித்வான்கள் - திருவீழிமலை சுப்பிரமணிய பிள்ளை, நடராஜசுந்தரம் பிள்ளை

மறைவு

நவம்பர் 16, 1903 அன்று நடராஜசுந்தரம் பிள்ளை காலமானார்.