திருத்தணிகைக் கந்தப்பையர்
திருத்தணிகைக் கந்தப்பையர் (கந்தப்ப தேசிகர், கந்தப்பையர்) (18 ஆம் நூற்றாண்டு பிற்பகுதி) பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த பதிப்பாளராகவும், தமிழ்ப் புலவராகவும் அறியப்படுகிறார்.
வாழ்க்கைக்குறிப்பு
பிறப்பு, கல்வி
இவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருத்தணியில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். இவர் தன் தந்தையிடம் ஆரம்பக்கல்வியும், இராமனுஜக் கவிராயர் என்பவரிடம் தமிழ் கல்வியும் கற்றார். பின்னர் கச்சியப்ப முனிவரிடம் சைவ சமய நூல்களைப் பயின்றார்.
குடும்பம்
இவருக்கு தெய்வானை, வள்ளி என்ற இரு மனைவிகள், இருவரும் சகோதிரிகள், இருவருக்கும் முறையே விசாகப் பெருமாள், சரவணப்பெருமாள் என்று இரு மகன்கள் பிறந்தனர். இருவரும் பல நூல்களை தமிழில் அச்சில் கொண்டுவந்ததில் முன்னோடிகளாக அறியப்படுகிறார்கள்.
வாழ்க்கைக் பதிவுகள்
இவருடைய குன்ம நோயை இவருடைய ஆசிரியர் திருத்தணிகை ஆற்றுப்படை என்ற பனுவல் மூலமாக குணப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.
பங்களிப்புகள்
இவர் பழமலை அந்தாதி, செந்தில் நிரொட்டக யமக அந்தாதி முதலிய நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார். மேலும் பஞ்ச லட்சண வசனம், பஞ்ச லட்சண வினாவிடை ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டார்.
கல்லார மகாத்மியம் என்ற வடமொழி நூலை தமிழில் தணிகாசலப் புராணம் என்ற நூலாக மொழிபெயர்த்துள்ளார்.
இவர் இயற்றிய திருத்தணிகை உலா எனும் நூலில்தான் முதன்முதலில் தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்
நந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்
நூல்கள்
இவர் இயற்றிய நூல்கள்
- திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
- திருத்தணிகை அந்தாதி
- திருத்தணிகைக் கலம்பகம்
- திருத்தணிகை உலா
- ஐங்கரமாலை
- தயாநிதி மாலை
- வேலாயுத சதகம்
- மயிற்பத்து
- சேவற்பத்து
- வேற்பத்து
- சீர்ப்பாதப்பத்து
- மலைப்பத்து
இந்த நூல்களில் உள்ள 648 பாடல்கள் அனைத்தையும் திருத்தணிகைச் சந்நிதி முறை என்ற ஒற்றை நூலாக திருத்தணி முருகன் கோவிலில் அரங்கேற்றினார்.
இவர் மொழிபெயர்த்த நூல்
- கல்லார மகாத்மியம்
இவர் எழுதிய மற்ற நூல்கள்
- பஞ்ச லட்சண வசனம்
- பஞ்ச லட்சண வினாவிடை
இவர் உரை எழுதிய நூல்கள்
- பழமலை அந்தாதி
- செந்தில் நிரொட்டக யமக அந்தாதி
உசாத்துணை
- கலைக்களஞ்சியம் - 3 வது தொகுதி - பக்கம் 191
- தினமலர் கட்டுரை - கந்தப்ப தேசிகர் -செப்டம்பர் 24, 2013
- திருத்தணிகைக் கலம்பகம் - மறுபதிப்பு வருடம் 2001 - தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
- திருத்தணிகைச் சந்நிதி - வருடம் 1880 Google book இணைப்பு
- திருத்தணி உலா - குறிப்பு - tamilvu.org
- தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம் - சு. அ. ராமசாமிப் புலவர்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.