தினப்படி சேதிக்குறிப்பு (ஆனந்தரங்கம்பிள்ளை)
ஆனந்தரங்கம்பிள்ளையை தொடந்து ரெங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 – 1801) ஆகிய நால்வரும் தொடர்ந்து நாட்குறிப்புகள் எழுதினர். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமா நைநியப்பப் பிள்ளையின் மகனான குருவப்ப பிள்ளை என்பவரும், ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பியான திருவேங்கடம் பிள்ளை (1713-1754) என்பவரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். இந்த நாட்குறிப்பு ஒர் இயக்கம்போல கிட்டத்தட்ட முக்கால்நூற்றாண்டுக்காலம் நிகழ்தது.
1846-ல் பாண்டிச்சேரி மேயராக இருந்த கால்வா மாண்ட்பர்ன் அக்குறிப்புகளை கண்டெடுத்து ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். விட்டுப்போன சில பகுதிகள் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894-இல் ஜூலியன் வின்சென் முழுமையான குறிப்புகளை ஃப்ரெஞ்சு மொழியில் பதிப்பித்தார். 1896-இல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.
உள்ளடக்கம்editedit source
பிள்ளையின் நாட்குறிப்புகள் 25 ஆண்டு காலகட்டத்தை விவரிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேய-ஃப்ரென்சு கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு நடுவே அதிகாரப் போட்டி ஆரம்பித்திருந்தது. தமிழகம் ஆர்க்காடு நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. மதுரையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தஞ்சையில் மராத்தியர் அரசு. இவை பல அதிகார மையங்கள் தலைமைக்காக கடும் போட்டியில் இருந்த வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான ஆவணங்கள்.
அன்றைய அரசியல் நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. டில்லியில் நாதிர் ஷா படையெடுத்தது பற்றிய் செய்தி தெற்கே பாண்டிச்சேரியில் எப்படி கிடைத்தது, மராத்திய படைகள் ஒரு கிராமத்தை சூறையாடியது, ஆளுநர் டூப்ளேயின் மனைவி லஞ்சம் வாங்குவது என்று பல நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.
அன்றைய சமூக நிகழ்வுகளையும் உண்மையாக விவரிக்கின்றன. இந்தியர்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பின்னும் ஜாதிப் பிரிவினைகள் மறையாதது, ஹிந்து கோவில் ஒன்றின் மீது கிறிஸ்துவ சர்ச்சிலிருந்து கழிவுப்பொருட்கள் வீசப்பட்டது, சென்னையை ஃப்ரெஞ்சுப் படை வெற்றி கொண்டது பாட்டுகளோடு கொண்டாடப்பட்டது, அடிமை முறை, கடற்கரையில் காலைக்கடன்களை கழிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவு ஆகிய சிலவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
ஆனந்தரங்கர் மறைந்து சுமார் 85 ஆண்டுகளுக்குப் பிறகு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுச்சேரியில் பிரஞ்சு அரசின் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்த கலுவா மொம்பிரான் என்பவர், ஒருமுறை ஆனந்தரங்கரின் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றார். ஆனந்தரங்கரின் வாரிசுதாரர்கள் கலுவா மொம்பிரானிடம் வீட்டிலிருந்த பழைய சுவடிகளைக் காண்பித்தனர்; அவை பெரிய கணக்குப் பேரேடுகளையொத்த சுவடிகளாக இருந்தன. தமிழ் அறிந்த கலுவா மொம்பிரான் அவற்றைக் கூர்ந்து நோக்கினார். அவற்றுள் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு, அவரது தம்பிமகன் அப்பாவு என்றழைக்கப்பட்ட ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளையின் நாட்குறிப்பு மற்றும் வரலாற்றுத் தொடர்புடைய அரிய சாசனங்கள் பல இருப்பதைக் கண்டார். அது பெரும் வரலாற்றுப் புதையல் என்பதையும் உணர்ந்தார். அவற்றின் அருமையை உணர்ந்த கலுவா மொம்பிரான்,அவர்களது வீட்டிலிருந்த 1736 முதல் 1799 ஆண்டு வரையிலான 16 பதிவேடுகளையும் எழுத்தர்களை வைத்து நகல் எழுதிக் கொண்டார். 1846-இல் தாம் கண்ட ஆனந்தரங்கரின் நாட்குறிப்பை, 1849-இல் 16 பக்கங்கள் கொண்ட ஒரு பிரஞ்சுக் கட்டுரை மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்