திணைமாலை நூற்றைம்பது

From Tamil Wiki
Revision as of 14:52, 11 July 2022 by Siva Angammal (talk | contribs)

திணைமாலை நூற்றைம்பது, சங்கம் மருவிய கால நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. திணைமாலை நூற்றைம்பது  நூலை இயற்றியவர் கணிமேதாவியார். இதுவொரு அகப்பொருள் நூல்.

பெயர்க் காரணம்

திணைமாலை நூற்றைம்பது நூல் ஐந்திணை ஒழுக்கங்களை கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால்  'திணைமாலை' என்றும், பாடல் எண்ணிக்கை அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், பெயர் பெற்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

திணைமாலை நூற்றைம்பது நூலை இயற்றியவர் கணிமேதாவியார். இவரைக் கணி மேதையார் என்றும் அழைப்பர். கணித மேதை என்னும் தொடரினைக் கொண்டு சோதிடத்தில் வல்லவர் என்பர். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரின் காலம் நான்காம் நூற்றாண்டு. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம் பெற்றுள்ள ஏலாதி நூலையும் இவர் இயற்றியுள்ளார்.

பொருண்மை

கீழ்க்கணக்கு வரிசையில் அகப்பொருள் நூல்கள் ஆறு. அவற்றுள் இரண்டு நூல்கள் 'திணை' என்றும், வேறு இரண்டு 'ஐந்திணை' என்றும் பெயர் பெறுவன. இவற்றை 'நால் ஐந்திணை' என்றும் குறிப்பர். இந் நூல்கள் நற்றிணை நானூறு, அகநானூறு என வரும் சங்க நூல்களை ஒப்ப, பாடல்-தொகை அளவையும் உடன் கூட்டி வழங்கப் பெறுகின்றன.

திணை என்பது நிலம், ஒழுக்கம் முதலிய பலபொருள் படுவதோர் சொல். இங்கே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலம் பற்றி, அவ்வந்நிலத்திற்குரிய புணர்தல், பிரிதல், முதலிய ஒழுக்கங்கள் சிறப்பித்துப் பாடப் பெறுகின்றன. எனவே, இவற்றைத் 'திணை' என்றும், 'ஐந்திணை' என்றும் குறித்துள்ளனர்.

கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது திணைமாலை நூற்றைம்பது. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம், என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தியுள்ளது. நூற்றைம்பது என்னும் எண் வரையறைக்கு ஏற்ப, திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டிருத்தலே முறை. அங்ஙனமாக பாலை மற்றும் மருதத் திணைகளில் 30 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால்,   குறிஞ்சி, நெய்தல், முல்லை ஆகிய மூன்று திணைகளும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. இதனால், திணைமாலை நூற்றைம்பது நூலுள் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மிகுதியான மூன்று பாடல்களுக்கும் பழைய உரை உள்ளது. எனவே, உரைகாரர் காலத்திற்கு முன்பே இப்பாடல்கள் நூலினுள்  உள்ளமை தெளிவு. ஏனைய திணைமொழி ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது என்னும் நூல்கள் எல்லாம் குறித்தபாடல் அளவுக்கு விஞ்சாமல் அமைவுற்றிருக்க, திணைமாலை நூற்றைம்பது நூலில் மட்டும் மூன்று பாடல்கள் மிகுதியாகக் காணப்பெறுதல் ஐயுறத் தக்கதாகவே உள்ளது.

காம வேளின் ஐந்து அம்புகளைப் பற்றிய குறிப்பு ஒரு பாடலில் உள்ளது (8). இந் நூலிற் காணும் 'தாரா' (திணைமாலை 139: கைந்நிலை 40) என்னும் பறவை பழந் தமிழ் நூல்களில் காணப்பெறாதது. 'விருத்தி' என்னும் சொல் சாசனங்களில் வழங்கும் பொருளில் இந் நூலில் பயின்றுள்ளது (121). 'ஆடா அடகு' (4) 'தீத் தீண்டு கையார்' (5) என்னும் குறிப்பு மொழிகளும் திணைமாலை நூற்றைம்பது நூலுள் இடம் பெற்றுள்ளன. தவிரவும் அளகம் (2), வகுளம் (24), பாலிகை, சாலிகை (51), சுவர்க்கம் (62), அலங்காரம் (127) நாய்கர் (134), ஆட்டை (141), சிரம் (144) என வரும் பிற்காலச் சொற்களும் வடசொற்களும் இதில் பயின்று வந்துள்ளன. இவைகள் எல்லாம், இந் நூல் சங்க காலத்திற்குப் பிற்பட்டு, தேவாரம், சிந்தாமணி முதலிய இடைக் கால நூல்களின் காலத்தை ஒட்டித் தோன்றியதே என்பதைப் புலப்படுத்துவனவாம்.

திணைமாலை நூற்றைம்பது நூலைக் குறித்துப் பாடப்பெற்ற 'முனிந்தார் முனிவு ஒழிய' என்னும் சிறப்புப்பாயிரச் செய்யுள் நூலின் இறுதியில் காணப்படுகிறது. இப்பாடல் அகப்பொருளை வெறுத்த சிலர் விரும்பி, ஏற்று, கற்றுப் புலமை எய்தும் வண்ணம்  ஆசிரியர் இந் நூலை ஆக்கினார் என்பதைத் தெரிவிக்கிறது. பிற்காலத்து எழுந்த அகப்பொருள் நூல்களுள் இது சிறப்பு வாய்ந்தது. சங்க நூல்களில் விரிவாகச் சிறப்பித்துப் பாடப் பெறுகின்ற அகப்பொருள் நிகழ்ச்சிகள் எல்லாம் சுருக்கமாய் எளிய வெண்பாக்களாக இந் நூலில் அமைந்துள்ளது.

இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலியோர் தம் உரையினுள் திணைமாலை நூற்றைம்பது நூல் பாடல்களை மிகுதியாக மேற்கோள் காட்டியுள்ளனர். இந் நூலின் 127-ஆம் பாடல் வரையே பழைய உரை உள்ளது. அதற்கு மேலுள்ள பகுதிக்கு உரை கிடைக்கவில்லை. உரையுள்ள பகுதி வரையில் எல்லாப் பாடல்களுக்கும் பழைய  துறைக் குறிப்புகளும் காணப்படுகின்றன.

பிற நூல்களில் பயின்றவை

திணைமாலை நூற்றைம்பது நூலில், கடலுக்கும் கானல் சேர் வெண் மணலுக்கும் மாயவனையும் பலராமனையும் உவமையாக கூறப்பட்டுள்ளது.

"மாயவனும் தம்முனும் போலே, மறிகடலும்

கானலும் சேர் வெண் மணலும் காணாயோ?" (58)

என இந்நூலில்  கூறப்பட்டுள்ள கருத்தை ஒத்த வருணனைகள் பிற நூல்களிலும் காணப்படுகின்றன. இருளுக்கும் நிலவுக்கும் மாயவனையும் பலராமனையும் இந் நூலில் மற்றொரு இடத்திலும் உவமைகாட்டுதலையும் (96, 97) காணலாம்.

"இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்:

உம்மையே ஆம் என்பார் ஓரார்காண்" ( தி.மா.நூ. 123)

'செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே'

சுந்தரர் தேவாரம்(7: 35 : 4)

"வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன் ; கண்டாளாம்,

தண்சுடர் அன்னாளைத் தான்" ( தி.மா.நூ. 89)

"ஆண்டான் அரு வரை ஆளியன்னானைக் கண்டேன்: அயலே

தூண்டா விளக்கு அனையாய்! என்னையோ, அன்னை சொல்லியதே?"

திருக்கோவையார் (244)

நிரை திமில் களிறு ஆக, திரை ஒலி பறை ஆக,

கரை சேர் புள்ளினத்து அம் சிறை படை ஆக,

அரைசு கால்கிளர்ந்தன்ன உரவுநீர்ச் சேர்ப்ப! கேள்:

கலித்தொகை (149)

இந் நூலின் 52,53- ஆம் பாடல்கள் அமைந்துள்ளன

"எண்ணாது, சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளைக்

காவார் கயிறுரீஇ விட்டார்" ( தி.மா.நூ. 47)

"வண்டு அலர் கோதை வாட் கண் வனமுலை வளர்த்த தாயர்

கண்டு உயிர் உண்ணும் கூற்றம் கயிறுரீஇக் காட்டியிட்டார்"

சீவகசிந்தாமணி (இலக்கணை. 80).

திணைமாலை நூற்றைம்பது,  சீவகசிந்தாமணி இரு  நூல்களிலும், 'கயிறுரீஇவிடுதல்' என்னும் மரபுத் தொடர் பயின்று வருதலும் நோக்கத்தக்கது. இங்ஙனமாக, இடைக்கால நூல்களோடு ஒத்த பகுதிகள் சிலசில காணப் பெறுதலின், இதுவும் இடைக்காலத்து எழுந்த நூல் என்றே கொள்ளலாம்.

திருக்குறளில் பயின்றுள்ள செம்பாகம் (குறள் 1092:திணைமாலை 9), ஒருவந்தம் (குறள் 563, 593 : திணைமாலை 103) என்ற சொல் வழக்குகள் இந் நூலிலும் உள்ளன.

கலித்தொகையில் வரும் வயந்தகம் (கலி. 79: திணைமாலை 128), வந்தையா (கலி. 63: திணைமாலை 138) என்னும் சொற்கள் இரு நூல்களிலும் உள்ளன. இவற்றால் திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், கலித்தொகை நூல்களுக்கு பின்னர் தோன்றியது என  ஆராய்ச்சியாளர்கள் சிலர்  கருதுகின்றனர்.

உதாரணப் பாடல்கள்

குறிஞ்சித் திணை

வினை விளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்

பனை விளைவு நாம் எண்ண, பாத்தித் தினை விளைய,-

மை ஆர் தடங் கண் மயில் அன்னாய்! - தீத் தீண்டு

கையார் பிரிவித்தல் காண்! (தி.மா.நூ- 5)

பொருள்;

மை போன்ற பெரிய கண்களை உடையவளே! நாம் களவுப்புணர்ச்சியினை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அதற்கு இடையூறு செய்வதுபோல செல்வம் ஒருவனுக்குப் பெருகுவது போல பயிரானது விளைந்து, கொய்ய வேண்டிய நாள் வந்துவிட்டதென்று நம்மவர்க்கு அறிவித்து, நம்மைத் தலைவனிடம் இருந்து பிரியச் செய்தலைக் காண்பாயாக.

நெய்தல் திணை

முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு' என்றே

குருகு வாய்ப் பெய்து, இரை கொள்ளாது, உருகி மிக

இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப! நீ

மன்னா வரவு மற! (தி.மா.நூ- 36)

பொருள்;

நாரை, தாழையின் மொட்டுகளைத் தன் குஞ்சுகள் என்று எண்ணி, தாம் கொண்டு வந்த இரையை அவைகளுக்குப் புகட்டும், அவை உண்ணாததைக் கண்டு வருந்தி, அவற்றைச் சூரியன் கதிர்கள் படாதபடி சிறகால் பாதுகாக்கும். இத்தகைய நாட்டை உடையவனே! நீ வந்து போவதை மறப்பாயாக. நிலையான வரவை மேற்கொள்வாயாக.

பாலைத் திணை

வெறுக்கைக்குச் சென்றார், விளங்கிழாய்! தோன்றார்;

'பொறுக்க!' என்றால், பொறுக்கலாமோ? - ஒறுப்பபோல்

பொன்னுள் உறு பவளம் போன்ற, புணர் முருக்கம்;

என் உள் உறு நோய் பெரிது! 67 (தி.மா.நூ- 67)

பொருள்;

அணிகளை அணிந்தவளே, முருக்க மரங்கள் என்னை வருத்த வந்தவை போன்று பூத்தன. அவற்றால் என் துன்பம் மிக்கது. பொருள் தேடும் பொருட்டுச் சென்ற தலைவர் வேனிற் பருவம் வந்தும் திரும்பி வரவில்லை. இத்தகைய நிலையில் என்னைப் பார்த்து நீ பொறுத்துக் கொள் என்றால் பொறுத்துக் கொள்ள இயலுமோ.

முல்லைத் திணை

வீயும் - வியன் புறவின் வீழ் துளியான், மாக் கடுக்கை;

நீயும் பிறரொடும் காண், நீடாதே; - ஆயும்

கழல் ஆகி, பொன் வட்டு ஆய், தார் ஆய், மடல் ஆய்,

குழல் ஆகி, கோல் சுரியாய், கூர்ந்து. (தி.மா.நூ-98)

பொருள்;

கொன்றை மரமானது நீர்த்துளிகளால் சிறுமியர் விளையாடும் காயாகத் தோன்றி, பொன்னால் செய்யப்பட்ட சூதாடு கருவியாக முதிரச் செய்து, பூமாலை போன்று மலர்ந்து, பெண் கூந்தல் போல காய்க்கச் செய்து முடிவில் கொம்பாய் மாறி அழியச் செய்துவிடும். நீ உடனே சென்று பார்ப்பாயாக.

மருதத் திணை

மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று

உண்ணாப் பூந் தாமரைப் பூ உள்ளும்; - கண் ஆர்

வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்,

மயல் ஊர் அரவர் மகள்.

(தி.மா.நூ- 140)

பொருள்;

மண்ணில் படிந்த குலையினை உடைய வாழை மரத்திடையே வைக்கப்பெற்ற தேனினை நம்முடையது என்று உண்டு மயக்கமுற்ற மருத நிலத்தூரனின் மகள் மருத நிலத்தலைவன் அழகைக் கண்டு மாலையைத் தொடுப்பாள்.

உசாத்துணை

  • திணைமாலை நூற்றைம்பது, தமிழ் இணையக் கல்விக் கழகம் https://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
  • திணைமாலை நூற்றைம்பது, சென்னை நூலகம்; https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai1502.html