under review

திடோங்

From Tamil Wiki
திடோங் மக்கள்

திடோங் பழங்குடிகள் சபா மாநிலத்தில் வாழும் பழங்குடி மக்கள்.

இனப்பரப்பு

இந்தோனேசியாவின் கலிமந்தான் எல்லையோரப் பகுதியுடன் ஒட்டியிருக்கும் சபா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியான தாவாவ், கலாபாக்கான், மெரொத்தாய், பூம் பாலாய், செபாத்திக் ஆகிய மாவட்டங்களில் பரவி வாழ்கின்றனர்.  கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் திடோங் மக்கள் மீன் பிடித் தொழிலும் வேளாண்மைத் தொழிலும் புரிந்து வருகின்றனர்.

சமயம்

திடோங் இனமக்கள் இசுலாமியச் சமயத்தைக் கடைபிடிக்கின்றனர்.

மொழி

திடோங் மக்கள் திடோங் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர். திடோங் எனப்படும் சொல் குன்று அல்லது மலை ஆகிய பொருள்களை உடையது. திடோங் மொழியின் முதன்மையான வட்டார வழக்குகளாக திடோங் தராக்கான், திடோங் செசயாப், திடோங் செம்பாக்குங் ஆகியவை கருதப்படுகின்றன. இம்மூன்று வழக்குகளும் சொற்களின் உச்சரிப்பு அடிப்படையில் நுண்ணிய மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன.

திருமணச் சடங்குகள்

திருமணம்புரியவிருக்கின்ற திடோங் இன மணமக்கள் திருமணத்துக்கு முன்பு சந்திப்பது விலக்கப்படுகிறது. இசுலாமியச் சமயத்தைத் தழுவிய திடோங் மக்களின் திருமணச்சடங்குகள் பெரும்பாலும் உள்ளூர் இசுலாமியச் சமய மக்களின் சடங்குகளை ஒத்ததாகவே அமைந்திருக்கிறது. திருமணத்துக்கு முன்பதாக அளிக்கப்படும் சீர்தொகை, பொருட்கள் ஆகியவை திருமண நிச்சயத்தின் போது உறுதி செய்யப்படுகிறது. திருமணத்துக்கு முன்பாகக் கடுமையான சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன. புதிதாக மணம்புரிகின்ற திடோங் இணையர்கள் மூன்று நாட்களுக்கு சிறுநீர், மலம் கழிக்காமல் வீட்டிலே இருக்கவேண்டும் என்ற விநோதமான சடங்கைக் கொண்டிருக்கின்றனர். இந்த மூன்று நாட்களிலும் மிகக்குறைந்த அளவேயான உணவையும் நீரையும் மட்டுமே மணமக்கள் பருக அனுமதிக்கப்படுகின்றனர். திருமணத்தன்று மணமகனைப் படகு வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் பல்லாக்கில் உட்காரச் செய்து மணமகளின் வீட்டுக்கு ஊர்வலமாய் அழைத்து வருவர். திருமண நிச்சயத்தின் போது மணமகனின் தாயாரே மணமகளின் விரலில் மோதிரத்தை அணிவிப்பார். திடோங் இன மக்களின் திருமணத்தின் போது மணமகன் பாஜு மெலாயு எனப்படும் ஆடையையும் காபுல் எனப்படும் காற்சட்டை மீதணியப்படும் துணியையும் அணிந்து கொள்கின்றார். மணமகள் பட்டுத்துணியிலிருந்து நெய்யப்படும் இந்திக் சுமா எனப்படும் ஆடையை அணிந்து கொள்கின்றார்.

குழந்தை நலச்சடங்கு

திடோங் இனத்தில் பிறந்த மூன்று மாதமான குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பசாக் இன்டங்கோர் எனப்படும் சடங்கு செய்யப்படுகிறது. இச்சடங்கின் போது, குழந்தையைப் பிரசவித்த தாய் மண்ணில் கால் வைத்து குடி மூத்தார் தயாரித்தளிக்கும் நீரைப் பருக வேண்டும். மூன்று மாதக்கால பத்தியக்காலம் நிறைவைக் குறிப்பதற்காக இச்சடங்கு செய்யப்படுகிறது. மடிக்கப்பட்ட ஏழு கைலித் துணிகளால் போர்த்தப்பட்ட தாலத்தில் குழந்தையை மருத்துவச்சியும் குடி மூத்தார்களும் ஏந்துவர். கைலித்துணியில் குழந்தையை வைத்து தாலத்தின் மேலிருந்து ஏழு முறை குழந்தையை ஊஞ்சலாட்டுவர். இச்சடங்கின் போது, திடோங் குழுவின் வாழ்த்துப்பாடல்களைப் பாடுவர். அதன் பின்னர், குழந்தையின் முடியை இறக்குவர்.

கலை

திங்கதாலு நடனம்
திங்கதாலு நடனம்

திடோங் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனம் திங்கதாலு எனப்படுகிறது. ஆண்கள் மட்டுமே திங்கதாலு நடனத்தை ஆடுகின்றனர்.  கும்பிடுபூச்சியின் அசைவுகளை ஒத்ததாக திங்கதாலு நடனம் அமைந்திருக்கிறது. திடோங் மக்களின் திருமண விழாக்களிலும் நன்னாட்களிலும் இந்நடனம் ஆடப்படுகிறது. திங்கதாலு நடனத்தை ஆடுபவர்கள் பல வண்ணங்களிலான மலாய் மக்களின் பாரம்பரிய ஆடையான பாஜு மெலாயுவை அணிந்து கொண்டு ஆடுவர்.

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.