தாயங்கண்ணியார்

From Tamil Wiki
Revision as of 16:24, 7 October 2022 by Siva Angammal (talk | contribs)

தாயங்கண்ணியார் சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூலான புறநானூறுவில் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

தாயங்கண்ணியார், புலவர்  தாயங்கண்ணனாரின்  மனைவி. தாயங்கண்ணியாரின் ஒரு பாடல்  புறநானூறு நூலின் 250- வது பாடலாக இடம் பெற்றுள்ளது.

பாடல்

தாயங்கண்ணியார் பாடிய புறநானூறு நூலின் 250- வது பாடல்;

புறநானூறு 250

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்

கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,

கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி,

அல்லி உணவின் மனைவியொடு, இனியே

புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்!

வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்

முனித்தலைப் புதல்வர் தந்தை

தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

எளிய பொருள்;

கண்ணீரோடு வந்தவர்க்கெல்லாம் தாளித்த துவையலோடு உணவு படைத்து அவர்களின் கண்ணீரைத் துடைத்த புரவலன் ஒருவன் இருந்துகொண்டிருந்த,  சிறப்பால் தனிமை பெற்று விளங்கிய தலை, இன்று பெருங்காடு சென்றுவிட்டது. அதனால், அந்த வளங்கெழு திருநகர் இன்று அந்தப் பந்தலில் அவனது புதல்வன், முனித்தலைப் புதல்வன், (தந்தை இல்லாமையால் தந்தை வரவேண்டும் என்று) அடம் பிடிக்கும் புதல்வன், வான்சோறாகிய தண்ணீரைப் பருகிவிட்டு, தாயிடம் தீம்பால் வேண்டுமென்று அழுகிறான். தாயோ தன் கூந்தல் கொய்யப்பட்ட நிலையில் அல்லி இலையில் போட்டு சிறதளவு உணவை உண்டு கொண்டிருக்கிறாள்.

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்

எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்;