தாண்டவராய முதலியார்

From Tamil Wiki
Revision as of 00:00, 11 March 2022 by Thirumalai.p (talk | contribs) (பங்களிப்பு)

தாண்டவராய முதலியார் (வித்வான் தாண்டவராய முதலியார்) (மறைவு - 1850) என்ற இவர் தமிழ் இலக்கண நூல்களை பதிப்பித்தவர்களில் முன்னோடி, மற்றும் பொது வாசகர்களுக்கான உரைநடை நூல்களை எழுதி வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு,கல்வி

இவர் செங்கல்பட்டு அருகே உள்ள வில்லியம்பாக்கம் என்ற வில்லி நல்லூரில் கந்தசாமி முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை மரணமடைந்த பிறகு செங்கல்பட்டுக்கு அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் இவரின் அம்மாவின் தம்பியான குமாரசாமி உபாத்தியாயரின் பாதுகாப்பில் வளர்ந்தார். இவரிடம் நெடுங்கணிதம், எண்சுவடி போன்றவைகளைக் கற்றார். பின்னர் வீரராகவ முதலியார் வழிவந்த உழலூர் வேலப்ப தேசிகரிடம் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.

இவர் சென்னைக்கு சென்று புதுவை விஸ்வநாதப் பிள்ளை, கூனிமேடு இராமானுஜ முதலியார் ஆகியவர்களிடம் தமிழ் இலக்கியங்களைப் பயின்றார். மேலும் இவர் தொல்காப்பிய இலக்கணத்தை வரதப்ப முதலியார், சீர்காழி அருணாச்சலக் கவிராயர் வழிவந்த சீர்காழி வடுகநாத தம்பிரான் என்பவரிடம் கற்றார்.

இவர் வடமொழி, தெலுங்கு, கன்னடம், உருது, மாராட்டி (மகராஷ்டிரம்), ஆங்கில மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

தனிவாழ்க்கை

இவரின் புலமையை அறிந்த தமிழக அரசு இவரை சென்னைக் கல்விச் சங்கத்தின் (The College of Fort St. George -1812-1842) தமிழ் புலவராக நியமித்தார்கள். பின் இந்தச் சங்கம் கலைக்கப்பட்டப் பிறகு 1843 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியில் அமர்த்தப்பட்டார்.

பங்களிப்பு

நன்றி-archieve.org

இவர் சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்த கிளார்க் அவர்களின் விருப்பப்படி இலக்கண வழிகாட்டி என்ற நூலை உரைநடையில் எழுதி இந்த சங்கத்தின் சார்பில் 1820 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இவர் பொது வாசகர்களுக்கான நூலாக பஞ்ச தந்திர வசனம் என்ற நூலை மாராட்டியிலிருந்து (மகாராஷ்டிரம்) தமிழுக்கு முதன் முதலில் மொழி பெயர்த்து உரைநடை நூலாக 1824 ஆம் ஆண்டு வெளியிட்டார். இதன் ஐந்தாவது தொகுதியை கொஞ்சம் கடுமையான மொழி நடையில் எழுதி வாசகர்களின் உரைநடை அறிவை கவிதை நடைக்கு முன்னேற்ற முனைந்தார். பின்னர் தமிழகத்தில் வழங்கிவந்த வாய்மொழி கதைகளைத்தொகுத்து கதாமஞ்சரி என்ற உரைநடை நூலை 1826 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இவர் கிருத்துவப் பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க பைபிள் (விவிலியம்) நூலை விமர்சித்து எழுதிய புரசைப் பொன்னம்பல அடிகளாரின் நூலான வேதவிகற்பம் என்னும் நூலை எதிர்த்து வேதவிகர்ப்ப திக்காரம் என்னும் கண்டன நூலை எழுதி கொடுத்தார். இது வேறு ஒருவருடைய பெயரில் வெளிவந்தது.

பதிப்புப்பணி

இவர் இலக்கண நூல்களான இலக்கணப் பஞ்சகம் (நன்னூல் மூலம், அகப்பொருள் மூலம், புறப்பொருள் வெண்பா மாலை) என்ற நூலை 1835 ஆம் ஆண்டும், சூடாமணி நிகண்டு (முதல் பத்துப்பகுதி), சேந்தன் திவாகரம் (முதல் எட்டுப் பகுதி) போன்ற நூல்களை பிழை திருத்தி முதன் முதலில் பதிப்பித்தார்.

இவர் வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் மூன்று பகுதியை 1824-இல் அச்சிட்டு வெளியிட்டார்.

மறைவு

இவர் 1850 ஆம் ஆண்டு மறைந்தார்.

வாழ்க்கைப் பதிவுகள்

இவர் இவருடைய காலத்தில் வாழ்ந்த இராமானுஜக் கவிராயருடனும் அவருடைய மாணவராகிய சரவணப் பெருமாளையருடனும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி வாதம் செய்தார்.

படைப்புகள்

இவர் இயற்றிய நூல்கள்

  • பஞ்ச தந்திர வசனம்
  • கதாமஞ்சரி
  • திருத்தணிகை மாலை
  • திருப்போரூர்ப் பதிகம்
  • இலக்கண வினாவிடை
  • வேதவிகற்பதிக்காரம்

இவர் பதிப்பித்த நூல்கள்

  • சேந்தன் திவாகரம் (முதல் எட்டுப் பகுதி)
  • சூடாமணி நிகண்டு (முதல் பத்துப் பகுதி)
  • வீரமா முனிவரின் சதுரகராதி (முதல் மூன்று பகுதி)

உசாத்துணை

தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், 1955

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

பதிப்பித்த நூல்கள்