being created

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்

From Tamil Wiki

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பழமையான நுாலகங்களுள் ஒன்று. சரஸ்வதி மகால் நூலகம், கி.பி.1531-1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னா்களின் நூல் சேகரிப்பில் இருந்து தொடங்கப்பட்டது[1]. சோழர் காலம் முதலாகவே இருந்து வந்த சுவடிகளின் தொடர்ச்சியே இந்நூலகம் என்றும் கருதப்படுகிறது. தஞ்சாவூரை ஆட்சிசெய்த நாயக்கா் மற்றும் மராத்திய மன்னா்களின் 300 ஆண்டுகால சேகரிப்பு இந்த நூலகத்தில் உள்ளது. இரண்டாம் சரபோஜி மன்னர் (கி.பி.1798-1832) பல சுவடிகளையும், நூல்களையும், ஒவியங்களையும் சேர்த்துள்ளார். அவரது பங்களிப்பை நினைவுகூறும் விதமாக இந்த நூலகத்திற்கு சரபோஜி சரஸ்வதி மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது.

வரலாறு

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் தெலுங்கில் எழுதப்பட்ட பல சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை தஞ்சை நாயக்க மன்னா்கள் சேகரித்தனர். அதன் பின்னர் வந்த மராத்திய மன்னர்கள் ஆட்சியிலும் இந்த ஆவணக் காப்பகமும் நூலகமும் வளர்ச்சி பெற்றது. இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில், மேலை மொழியில் 5000 அச்சுப்புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. சுவடிகளை படியெடுக்கும் பணியும், தொகுக்கப்பட்ட சுவடிகளுக்கு உரிய அட்டவணையும் சரபோஜி மன்னர் காலத்தில்தான் முதல் முதலாகத் தயாரிக்கப்பட்டது.

இரண்டாம் சரபோஜி மன்னருக்குப் பின் பட்டத்துக்கு வந்த அவரது மகன் சிவாஜி காலத்திலும் சில நூல்கள் தொகுக்கப்பட்டன. சிவாஜி சந்ததி இன்றி இறந்த நிலையில் அவருடைய மனைவி காமாட்சிபாய் தஞ்சை ஆட்சியை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் வாரிசுக்காகக் காமாட்சி பாய் எடுத்துக் கொண்ட வளர்ப்பு மகனை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ளாததால் சரஸ்வதி மகால் உட்பட அனைத்து அரண்மனை சொத்துக்களும் கி.பி.1861 டிசம்பரில் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டன.

1868ல் ஆங்கிலேய அரசும் சென்னை மாகாண நிர்வாகமும் இந்திய நூலகங்களில் உள்ள சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்தல், தொகுத்தல் மற்றும் படியெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தின. அத்தொகுப்புகளின் அச்சிடப்பட்ட பட்டியல்களை தயாரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1868 டிசம்பரில் பிக்ஃபோர்ட் என்னும் சமஸ்கிருத அறிஞரின் மேற்பார்வையில் துவங்கிய இப்பணி மார்ச் 1870ல் அவர் நோயுற்று ஐரோப்பா திரும்பியதும் நின்று போனது.

அரசவை ஆஸ்தான கலைஞராக இருந்த கர்னாடக இசை வல்லுனர் வேங்கடமகியின் மகன் கோவிந்த தீக்ஷிதர் எழுதிய சங்கீத நூல் போன்ற பல அரிய நூல்கள் இங்கிருந்து களவுபோய் தனிநபர் தொகுப்புகளுக்கு சென்றுவிட்டன.

பின்னர் 1871ல் மாவட்ட நீதிபதியாக இருந்த மொழியியல் அறிஞர் ஆர்தர் கோக் பர்னல்[2] இப்பணியில் நியமிக்கப்பட்டார். “தஞ்சை அரண்மனையில் உள்ள சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளுக்கான வகைப்படுத்தப்பட்ட அட்டவணையை” 1878-1880 ஆண்டுகளில் மூன்று தொகுதிகளாக அவர் லண்டனில் வெளியிட்டார். தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ளது போன்ற ஒரு ஆவணத் தொகுப்பை உருவாக்குவது மிகவும் கடினமானதென்றும் இதுபோல ஒரு நூலகத்தை உருவாக்குவதற்கு அன்றைய மதிப்பில் பிரிட்டிஷ் பவுண்ட் 50,000க்கும் மேல் செலவு செய்ய வேண்ட்டியிருக்கும் எனவும் பர்னல் செய்த பரிந்துரையின் பெயரில் ஆங்கிலேய அரசின் கவனத்துக்கு இந்நூலகம் வந்தது. அதுவரை அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த நூலகம், அக்டோபர் 5, 1918-ம் தேதி பொது நூலகமாக மாற்றப்பட்டது. பல மொழி சுவடிகளுக்கும், ஆவணங்களுக்கும், நூல்களுக்கும் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டன.

1920 இல் ப்ரெஞ்சு, லத்தீன், இத்தாலியன் மற்றும் கிரேக்க மொழிகளில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. 1925 இல் நூலகத்தில் உள்ள தமிழ் கையெழுத்துப் பிரதிகளின் முதல் இரண்டு தொகுதிகள் வெளியிடப்பட்டன. 1930 முதல் 1936 வரை சென்னை மாகாண அரசின் உதவியுடன் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மராட்டி என நான்கு மொழிகளில் இந்நூல் நிலையத்தில் உள்ள நூல்களின் அட்டவணைகள் வெளியிடப்பட்டன.

சேகரிப்புகள்

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற நம் நாட்டு மொழிகளில் மட்டுமன்றி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் முதலிய பல மொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் உள்ளன. சுமார் 4500 நூல்களை மன்னர் இரண்டாம் சரபோஜி சேகரித்து வைத்துள்ளார். பல நூல்களில் இவர் கையொப்பங்களும், அவற்றை வாங்கிய குறிப்புகளும் உள்ளன. இவர் 1820-1830 ஆண்டுகளில் காசிக்கு சென்றபோது, ஏராளமான சமஸ்கிருத நூல்களை கொண்டு வந்து சேர்த்தார்.

வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், தத்துவம், மூலிகைகள், மருத்துவக் குறிப்புகள், ஆன்மிகம், ஜோதிடம், ஓவியங்கள் முதலிய பல்வேறு துறை சார்ந்த நூல்களும் இடம்பெற்றுள்ளன. அக்காலத்தில் தாக்கரே என்னும் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் அடங்கிய இங்கிலாந்தில் பிரசுராமன பல இதழ்கள் சரபோஜி மன்னர் கையெழுத்துடன் இருக்கின்றன. ஆசிய ஐரோப்பியவைச் சேர்ந்த பல்வேறு மொழிகளின் அகராதிகளும் இலக்கண நூல்களும் இங்கு இருக்கின்றன.

சரஸ்வதி மகால் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் 24,165 ஓலைச்சுவடிகளும், 23,169 காகிதச் சுவடிகளும், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுதப் பட்ட 3 லட்சம் மோடி எழுத்து வடிவ ஆவணங்களும் உள்ளன (சரிபார்க்கப்படவேண்டும்)

சரஸ்வதி மகால் நூலகத்தில் நாற்பத்தொன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஓலை மற்றும் காகிதத்தில் எழுதப்பட்ட சுவடிகள் உள்ளன[3]. அதில் வடமொழிச் சுவடிகள் 39,000, தமிழ்ச் சுவடிகள் 4,200, மராத்தி ஓலைச் சுவடிகள் 3000, தெலுங்குச் சுவடிகள் 800 போன்றவை குறிப்பிடத்தக்கன. (சரிபார்க்கப்படவேண்டும்).


சமஸ்கிருத அறிஞர்கள் குடும்பம் ஒன்றில் தலைமுறைகளாகத் தொகுக்கப்பட்ட பல அரிய மதிப்புமிக்க கையெழுத்துப் பிரதிகள் ’ஜம்புநாத பட் லண்டகை தொகுப்பு’ என்ற பெயரில் 1921ல் சேர்க்கப்பட்டன. காகல்கர் தொகுப்பு மற்றும் பட்டாங்க அவதூதர் தொகுப்பு (1922) என மேலும் இரு முக்கியமான தொகுப்புகள் இந்நூலகத்தில் சேர்க்கப்பட்டன. இம்மூன்று தொகுதிகள் மட்டுமே 2181 கையெழுத்துப் பிரதிகள் கொண்டவை, பனைஓலைச் சுவடிகளிலும் காகிதத்திலும் எழுதப்பட்டவை. 24000க்கும் மேற்பட்ட சம்ஸ்கிருத மொழி கையெழுத்துச் சுவடிகள் கொண்ட சரஸ்வதி மகால் நூலகம் இந்தியாவிலேயே மிக அதிகமான சமஸ்கிருத மொழித் தொகுப்பு கொண்டது எனப்படுகிறது.

அரிய நூல்கள்

ஆர்தர் கோக் பர்னல் மற்றும் ஜோஹன் ஜார்ஜ் புஹ்லெர்[4] போன்ற சமஸ்கிருத மற்றும் இந்திய மொழி அறிஞர்கள் . சரஸ்வதி மகால் நூலகம் குறித்து ’உலகிலேயே மிகப் பெரியதும் முக்கியத்துவம் வாய்ந்த நூலகம்’ என்றும், ’பல பயனுள்ள மற்றும் மிகவும் அரிதான தனித்துவமான புத்தகங்கள் உள்ளன, அவற்றில் பல அறியப்படாதவை அல்லது பெரும் சிரமம் மற்றும் பொருட்செலவில் மட்டுமே வாங்கக்கூடியவை’ என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம் மற்றும் திருக்குறள் முதலிய பல்வேறு பழமையான நூல்கள், 300 ஆண்டுகளுக்கு முன்னர் படியெடுத்து எழுதப்பட்டு இங்கு சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளன. 1719ஆம் ஆண்டு முதல் எழுதப்பட்ட கம்பராமாயணத்தின் ஏழு காண்டங்கள் அடங்கிய ஓலைச்சுவடி, மிகச்சிறிய ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ள பஞ்சபட்சி சாஸ்திரம், பர்மிய எழுத்தில் உள்ள சமஸ்கிருதச் சுவடி, வங்க எழுத்தில் எழுதப்பட்ட தத்துவ சிந்தாமணி என்ற சமஸ்கிருதச் சுவடி, ஒரிய எழுத்தில் எழுதப்பட்ட ஏகாம்பர புராணம் என்ற சமஸ்கிருதச் சுவடி போன்ற பல அரிய சுவடிகள் இங்கு இருக்கின்றன.

தேவநகரி, நந்திநகரி, தெலுங்கு மற்றும் கிரந்த லிபியில் எழுதப்பட்ட பனைஓலைச் சுவடிகளும் காகித கையெழுத்துப் பிரதிகளும் இருக்கின்றன. சயனர் உரையுடன் கூடிய ரிக்வேதம் இங்குள்ள சுவடிகளில் கிடைத்தது. கிருஷ்ணதேவராயர் எழுதிய ஜாம்பவதி பரினயா, அப்பய தீக்‌ஷிதரின் சில ஆக்கங்கள், அகஸ்த்ய பண்டிதர் எழுதிய கிருஷ்ணசரிதம்[5], ராமபத்ராம்பா என்னும் பெண் கவி புரவலர் ரகுநாத நாயக்கர் குறித்து எழுதிய வரலாற்றுக் கவி, சதாசிவ பிரம்மேந்திரர் எழுதிய பாடல்கள் போன்ற நூல்கள் உள்ளன.

சரபோஜி சேகரித்த சாமுத்ரிகா சாஸ்திர நூல்களில் பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட அரிய நூல் ஒன்றும் இருக்கிறது. விலங்குகளின் முகங்களும் பல்வேறு விதமான மனிதர்களின் முகங்களும், உடல் அமைப்பைக் கொண்டு குணத்தை விளக்கும் முறைமையும் கொண்ட நூல் இது.

மராத்திய ஏட்டுப்பிரதிகள்

கருப்பூர் ஆடைகள் எனப்படும் அரக்குச் சாயமிட்டு நெய்யப்படும் துணிகளால் பல மூட்டைகளில் மராத்திய மொழியில் எழுதப்பட்ட கையெழுத்து ஏட்டுப்பிரதிகள் கட்டப்பட்டிருந்தன. தத்துவ சாஸ்திரம், மருத்துவம், இலக்கியம், சங்கீதம், விஞ்ஞானம் எனப் பல துறை சார்ந்த ஏடுகள் இவற்றில் இருக்கின்றன. சரபோஜி மன்னர் எழுதிய ’தேவேந்திர குறவஞ்சி’ என்னும் பூமி வர்ணனை நூலும் இத்தொகுப்பில் இருக்கிறது. மராத்திய ஏட்டுப்பிரதிகளில் மகாபாரதமும் பாகவதமும் முக்கியமானவை. இவற்றின் முதலேடுகளில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் அவர்களின் சீடரும், ஏகநாத் மகராஜ் அவர்களின் வழி வந்தவரும் மாயூரத்தில் வாழ்ந்தவருமாகிய மாதவஸ்வாமி என்பவரால் எழுதப்பட்ட பாரத நூல் இது.

தெலுங்கு நூல்கள்

தஞ்சை சரஸ்வதி மகால் நூல் தொகுப்பில் நாயக்க மன்னர்கள் தொகுத்த தெலுங்கு நூல்களைத் தவிர மராத்தியர் காலத்திலும் பல தெலுங்கு நூல்கள் எழுதப்பட்டன, தொகுக்கப்பட்டன. யக்‌ஷகானங்கள் எனப்படும் பல தெலுங்கு நாடகங்கள் இவற்றில் அடங்கும். தெலுங்கு எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள், நாகரத்திலும் தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்ட தெலுங்கு நூல்கள் எனப் பல வகைகள் உள்ளன.

தெலுங்கு தொகுப்பில் ‘ரகுநாதநாயகாப்யுதயமு’ என்னும் நூலும் ’கட்டவரதராஜுவின் ராமாயணமும்’ முக்கியமானவை. ரகுநாதநாயகாப்யுதயமு நூலில் இருந்து தஞ்சை அரண்மனையிம் வர்ணனை, சரஸ்வதி மகாலின் காலம் போன்ற தகவல்கள் கிடைக்கின்றன. கம்பராமாயணத்துக்கு நிகராக தெலுங்கில் கருதப்படும் கட்டவரதராஜுவின் ராமாயணத்தின் ஏட்டுப்பிரதி சரஸ்வதி மகால் நூலகம் தவிர வேறெங்கும் கிடைக்கவில்லை.

தமிழ்ச் சுவடிகள்

உரையுடன் கூடிய திருச்சிற்றம்பலக் கோவையார், திருவாய்மொழிவாசகமாலை, மூன்று உரைகளுடன் கூடிய நாலடியார், பெருந்தேவனார் பாரதம், திருக்குறள் உரையின் பாடபேதங்கள் போன்ற பல நூல்கள் இங்கு உள்ளன. இங்கு கிடைக்கும் விஞ்ஞானம், மருத்துவம், ரசாயன சாஸ்திரம்(வேதியியல்) தொடர்பான தமிழ்ச் சுவடிகள் மிக முக்கியமானவை.

சமஸ்கிருதச் சுவடிகள்

சரஸ்வதி மகால் நூலகத்தின் மிகப் பெரிய தொகுப்பு சமஸ்கிருதச் சுவடிகள். வேதங்கள், தத்துவம், மருத்துவம், மந்திரம், சங்கீதம், நடனம், விஞ்ஞானம் எனப் பல துறைகள் சார்ந்த சமஸ்கிருதச் சுவடிகள் இங்குள்ளன. பல கலைஞர்களும், வல்லுனர்களும், நாயக்க, மராத்திய மன்னர்களும், கோவிந்த தீக்ஷிதர் த்ரயம்பகராயமகி போன்ற அரசவையின் ஆஸ்தானக் கலைஞர்களும் எழுதிய அரிய நூல்களின் தொகுப்பு இவை. உதாரணமாக ‘ஆனந்த கந்தம்’ என்னும் நூல் ரசவாத வினைகள் குறித்த விரிவான வேதியியல் நூல்.

காகித ஆவணங்கள்

சரஸ்வதி மகால் நூலகத்தில் அலங்கரிக்கப்பட்ட காகிதப் படைப்புகள், நுண்ணோக்கி உதவியுடன் காணவேண்டிய அதிநுட்பமான எழுத்துக்கள் கொண்ட ஏடுகள் என பலவற்றின் தொகுப்பு உள்ளது.

  • ராமாயணம் : சித்திரங்களுடன் கூடிய தெலுங்கு அச்சுரு கொண்டது. 3 பழைய தாள்கள் மற்றும் ஒரு புதுப்பிக்கப்பட்ட தாள்கள். ஒவ்வொரு தாளும் ஒரு காண்டத்தை விளக்குகிறது. முதல் மூன்று காண்டங்களான பாலகாண்டம், அயோத்திகாண்டம், ஆரண்யகாண்டம் ஆகியவை சித்தரிக்கப்பட்டுள்ளன
  • புருஷசுக்தம் : கரிய பின்புலத்தில் வெண் எழுத்துக்கள் கொண்டது.
  • பாரதம் - வனபர்வம் : இந்திய மென் காகிதத்தில் எழுதப்பட்டது. சம்வத் 1667ல்(பொ.யு 1610) எழுதப்பட்டதாக குறிப்பிருக்கிறது.
  • மராத்தியில் ஒரு காகித கையெழுத்துப் பிரதி - "சிவா" என்ற வார்த்தையின் நுண்ணிய எழுத்துக்களால் மட்டுமே எழுதப்பட்டவை. உரையின் சொற்கள் மற்றும் அனைத்து அலங்காரங்களும் சிவா என்ற வார்த்தையை நுண்ணிய சிறிய எழுத்துக்களில் எழுதி உருவாக்கப்பட்டவை
  • அலோகா: ஜெயதேவ மிஸ்ராவின் சிந்தாமணியின் உரை, பனை ஓலை வடிவத்தில் தயாரிக்கப்பட்ட காகித கையெழுத்துப் பிரதி.
சித்தரிப்புகளுடன் கூடிய காகித கையெழுத்துப் பிரதிகள்
  • ரிக் வேதம் - சம்ஹிதபாதம்: ஒளிரும் எல்லைக் கோடுகள் மற்றும் படங்கள் கொண்ட நூல். 1830 இல் எழுதப்பட்ட இந்தக் கையெழுத்துப் பிரதி முழுவதும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ளது. நாற்புறமும் பொன்னிழை மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முதல் பக்கத்திலும் நவீன இந்து புராணங்களில் இருந்து ஒரு படம் இடம்பெற்று உள்ளது.
  • அஸ்வ சாஸ்திரம்: குதிரைகள் குறித்த சாஸ்திர நூல். சாலிஹோத்ரர், தினபதி, கர்க்கர், நகுலன் மற்றும் கணதேவர் ஆகியோரின் உபதேசங்களைக் கொண்ட நூல். குதிரையின் 82 உடற்பாகங்கள், அதன் குணநலன்கள், நிறம், நடை, கணைப்பு, மணம், தோலின் பொலிவு, பிடரியின் அடர்த்தி என பல தலைப்புகளில் குதிரை குறித்து விரிவாகப் பேசும் நூல்.
  • கஜ சாஸ்திரம்[6]: யானைகள் குறித்த சாஸ்திர நூல். பாலகாத்ய முனிவரால் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. பக்கங்களின் மேல் பகுதிகளில் சமஸ்கிருத உரையும், கீழ் பகுதிகளில், மேலே உள்ள உரையின் மராத்தி மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளது. இந்நூலின் பெரும் பகுதி புராணம் சார்ந்ததாக இருக்கிறது, மேலும் யானையின் ஒன்று முதல் பத்து வயது வரையிலான வளர்ச்சி நிலைகள், அதன் வாழ்நாள் தசாப்தங்களாக பிரிக்கப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன. யானைகளைக் கைப்பற்றும் ஐந்து வழிமுறைகள், அதன் வாசனை, அழைப்பு முறை, அங்க லட்சணங்கள் என பல குறிப்புகள் கொண்ட நூல்.
  • சகுனங்கள் குறித்த நூல்: விலங்குகள் பறவைகள் முதலியவை காட்டு சகுனங்கள் குறித்து நகரி எழுத்துக்களில் பெரிய எழுத்துக்கள் கொண்ட நூல், படங்களுடன் கூடியது.
  • பாலபோத முக்தாவளி - ஈசாப் கதைகளின் மராத்தி மொழிபெயர்ப்பு வண்ணப்படங்கள் கொண்டது. சரபோஜி மன்னரின் ஆணைப்படி தொகுக்கப்பட்ட இப்புத்தகத்தில் ஒவ்வொரு கதையின் முடிவிலும் மராத்தி மொழியில் அதன் நீதியும், சமஸ்கிருதத்தில் அது குறித்த ஓரிரு வரிகளும் இடம் பெற்றன.
  • மதிப்புமிக்க முகலாயக் கலை வடிவம் : முகம்மது கஜினி குறித்து பாரசீக மொழியில் ஓவியங்களுடன் எழுதப்பட்ட நூல்.
  • பறவை சாஸ்திரம் : முழுத்தாள் அளவில் பைண்ட் செய்யப்பட்ட மராத்தி மொழி கையெழுத்து நூல். பஜா என்ற பறவை குறித்த விவரிப்பு கொண்டது. புஜங்கராவ் ஹரிராவ் என்பவர் குதிரைகள் வாங்குவதற்காக ஹைதராபத் சென்றபோது, உதயகிரி நவாப்பிடம் இருந்து 1233 ரூபாய்க்கு சரபோஜி மன்னருக்காக இப்பறவை வாங்கப்பட்டது.
பழமையான காகித கையெழுத்துப் பிரதிகள்
  • பாமதி: இந்நூலகத்தின் மிகப் பழமையான நூல் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத நூலாகிய பாமதி - சங்கராச்சாரியாரின் பாஷ்யத்துக்கு வாசஸ்பதி மிஸ்ரா சம்வாத் 1525ல் (பொ.யு. 1468) எழுதிய உரை. 500 வருடங்களுக்கு முற்பட்ட இந்தக் காகிதநூல் நல்ல நிலையில் உள்ளது. காசியில் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.
  • வாமன புராணம்: சம்வாத் 1578 (பொ.யு. 1521)ல் எழுதப்பட்டது. புராணங்களின் தொகுப்பில் உள்ளது.
  • தத்வோத்யத விவரணா: ஜயதீர்த்தர் எழுதியது. சக ஆண்டு 1479 (பொ.யு. 1557). மாத்வ மதத் தொகுப்பில் உள்ளது
  • கால நிர்ணயா: ஹேமாத்ரி பரிசேசகண்டா எழுதிய நூல் 4820 கிரந்தங்கள் கொண்டது. சக ஆண்டு 1497 (பொ.யு. 1575)ல் எழுதப்பட்டது. தர்மசாஸ்திரம் பகுதியில் உள்ளது.
  • பாரதம் - பீஷ்ம பர்வம்: சம்வாத் 1642 (பொ.யு. 1585)ல் பெனராசில் எழுதப்பட்டது என்ற குறிப்பு இருக்கிறது. பாரதம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • பாரதம் - கூட பர்வம்: சம்வாத் 1646 (பொ.யு. 1589)ல் எழுதப்பட்டது. பாரதம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
பனையோலைச் சுவடிகள்

வெகு சில பனையோலைச் சுவடிகளில் தான் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது. டாக்டர் பர்னலின் குறிப்புகளின்படி சரஸ்வதி மகால் நூலகத்தின் மிகப் பழமையான ஓலைச்சுவடிகள்:

சமஸ்கிருதம்:

  • கத்யசிந்தாமணி[7] - வாதிபசிம்ஹ சூரி என்னும் ஜைனர் எழுதிய நூல். தேதி குறிப்பிடப்படவில்லை
  • ஃபாலபதி - ஜைமினி சூத்திரத்தின் விளக்க நூல், சில ஓலைகள் கிடைக்கவில்லை. பொ.யு.1600ஐச் சேர்ந்ததாக இருக்கலாம்ம் என டாக்டர் பர்னல் குறிப்பிடுகிறார்
  • ராமாயணத்தை சித்தரிக்கும் ஒரு சுவாரசியமான பனைஒலைச் சுவடி

தமிழ்:

  • சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர் எழுதிய சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் உரையுடன் சக ஆண்டு 1550ல் எழுதப்பட்டது (பொ.யு. 1628)
ஓவியங்களும் படங்களும்

இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில் பல நூல்களைத் தவிர சிறந்த ஓவியங்களையும் வாங்கி சேகரித்தார். இந்திய, ஐரோப்பிய நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படங்கள், இமயமலையின் இயற்கை சித்திரங்கள், உடற்கூறு, தாவரம் முதலிய பல நிறப்படங்கள் எனப் பல ஓவியங்கள் உள்ளன. இது தவிர தன் சமஸ்தானத்தைச் சேர்ந்த தேர்ந்த ஓவியர்களைக் கொண்டு தான் வளர்த்த குதிரைகள், பறவைகள், மற்றும் மெய்க்காப்பாளரின் உடைகள் போன்றவற்றை வரையச் செய்தார்.

  • இந்திய தாவரங்கள்: மூன்று தொகுதிகள் உள்ளன.
  • பறவைகளின் படங்கள் - 26 பக்கங்கள்
  • அரண்மனைக் குதிரைகளின் படங்கள் - 30
  • இனவியல் சார்ந்த வண்ண ஒவியங்கள் - 14 பக்கங்கள்
  • தஞ்சை ராணுவ உடைகள் - 17
  • பல்லக்குகளின் படங்கள் - 5
மருத்துவ சுவடிகள்

’சரபேந்திர வைத்திய முறை’ என்னும் வைத்திய நூல் பதினெட்டு பாகங்களைக் கொண்டது. சரபோஜி மன்னர் ’தன்வந்தரி மஹால்’ என ஒரு மருத்துவசாலையை ஏற்படுத்தி ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் எனப் பல நிபுணர்களை வரவழைத்து பல மருத்துவ முறைகளைப் பரிசோதனை செய்வித்து பதினெட்டு பாகங்களாகப் பதிவு செய்ய வைத்திருக்கிறார். இவற்றில் குன்மம், பிளவை, க்ஷயம், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கான மருத்துவ முறைகள் இதில் விளக்கப்பட்டிருக்கின்றன.

மோடி எழுத்து

மராத்திய மன்னர்களின் ஆட்சியில் அரசாங்க அலுவல்களில் உபயோகிக்கப்பட்டு வந்தவை மோடி எழுத்து எனப்படும் ஒருவகையான சுருக்கெழுத்து வகை. மராத்திய மன்னர்களின் அன்றாட அரசவை நிகழ்வுகள் குறித்த எண்ணற்ற ஆவணங்கள் இந்த மோடி எழுத்தில் எழுதப்பட்ட காகிதச்சுவடிகளாக உள்ளன.

அருங்காட்சியகம்

பல்வேறு அரிய ஓவியங்கள், ஓலைச்சுவடிகள், மன்னர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நூலகப் பதிப்புகள்

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் இதுவரை 500க்கும் மேற்பட்ட அரிய சுவடிகளை புத்தகங்களாகப் பதிப்பித்துள்ளது. இங்குள்ள தமிழ் சார்ந்த ஆவணங்களில் மிகச்சிறு பகுதியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது, மேலும் பல ஆவணங்கள் இன்னும் அச்சுக்கு வரவில்லை.

உசாத்துணை

A Descriptive Catalogue Of The Telugu Manuscripts in the Tanjore Maharaja Serfoji's Sarasvati Mahal Library

சரஸ்வதி மஹால் ஓர் கண்ணோட்டம் - S. கோபாலன்

THE TANJORE MAHARAJA SARFOJI’S  SARASVATI MAHAL LIBRARY, TANJORE - Ms.P.P.S. SASTRI, B.A (OXOD), M.A., M.R.A.S.MADRAS

THE SARASWATI MAHAL, TANJORE Dr.Raghavan.  Professor of Sanskrit, (Retd) University of Madras

Serfoji Rajah’s Contribution to the Sarasvati Mahal Library by Shri.P.Perumal, The Conservator, Sarasvati Mahal Library

Saraswati Mahal Library: In conversation with Dr. Perumal

https://tamil.news18.com/photogallery/thanjavur/highlights-of-tanjore-saraswathi-mahal-library-812991.html

https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-feb-2020/39776-2020-02-28-06-18-30

அடிக்குறிப்புகள்

  1. THE TANJORE MAHARAJA SARFOJI’S  SARASVATI MAHAL LIBRARY, TANJORE - Ms.P.P.S. SASTRI, B.A (OXOD), M.A., M.R.A.S.MADRAS
  2. தென்னிந்தியாவில் உள்ள சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை, குறிப்பாக தஞ்சை அரசவைத் தொகுப்புகளில் உள்ளவற்றை தொகுத்துப் பட்டியலிட்டவர்
  3. http://www.tmssmlibrary.com/
  4. பிரகிருத மொழி அகராதி வெளியிட்டவர்
  5. The Krishna Charita Of Agastya Pandita
  6. கஜ சாஸ்திரம்
  7. கத்யசிந்தாமணி


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.