தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பழமையான நுாலகங்களுள் ஒன்று. சரஸ்வதி மகால் நூலகம், கி.பி.1531-1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னா்களின் நூல் சேகரிப்பில் இருந்து தொடங்கப்பட்டது[1]. சோழர் காலம் முதலாகவே இருந்து வந்த சுவடிகளின் தொடர்ச்சியே இந்நூலகம் என்றும் கருதப்படுகிறது. தஞ்சாவூரை ஆட்சிசெய்த நாயக்கா் மற்றும் மராத்திய மன்னா்களின் 300 ஆண்டுகால சேகரிப்பு இந்த நூலகத்தில் உள்ளது. இரண்டாம் சரபோஜி மன்னர் (கி.பி.1798-1832) பல சுவடிகளையும், நூல்களையும், ஒவியங்களையும் சேர்த்துள்ளார். அவரது பங்களிப்பை நினைவுகூறும் விதமாக இந்த நூலகத்திற்கு சரபோஜி சரஸ்வதி மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது.
வரலாறு
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் தெலுங்கில் எழுதப்பட்ட பல சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை தஞ்சை நாயக்க மன்னா்கள் சேகரித்தனர். அதன் பின்னர் வந்த மராத்திய மன்னர்கள் ஆட்சியிலும் இந்த ஆவணக் காப்பகம் வளர்ச்சி பெற்றது. இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில், மேலை மொழியில் 5000 அச்சுப்புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. இரண்டாம் சரபோஜி மன்னருக்குப் பின் பட்டத்துக்கு வந்த அவரது மகன் சிவாஜி காலத்திலும் சில நூல்கள் தொகுக்கப்பட்டன. சிவாஜி சந்ததி இன்றி இறந்த நிலையில் அவருடைய மனைவி காமாட்சிபாய் தஞ்சை ஆட்சியை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் வாரிசுக்காகக் காமாட்சி பாய் எடுத்துக் கொண்ட வளர்ப்பு மகனை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ளாததால் சரஸ்வதி மகால் உட்பட அனைத்து அரண்மனை சொத்துக்களும் கி.பி.1861 டிசம்பரில் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டன.
அதுவரை அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த நூலகம், அக்டோபர் 5, 1918-ம் தேதி பொது நூலகமாக மாற்றப்பட்டது.
சேகரிப்புகள்
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற நம் நாட்டு மொழிகளில் மட்டுமன்றி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் முதலிய பல மொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் உள்ளன. சுமார் 4500 நூல்களை மன்னர் இரண்டாம் சரபோஜி சேகரித்து வைத்துள்ளார். பல நூல்களில் இவர் கையொப்பங்களும், அவற்றை வாங்கிய குறிப்புகளும் உள்ளன. இவர் 1820-1830 ஆண்டுகளில் காசிக்கு சென்றபோது, ஏராளமான சமஸ்கிருத நூல்களை கொண்டு வந்து சேர்த்தார்.
வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், தத்துவம், மூலிகைகள், மருத்துவக் குறிப்புகள், ஆன்மிகம், ஜோதிடம், ஓவியங்கள் முதலிய பல்வேறு துறை சார்ந்த நூல்களும் இடம்பெற்றுள்ளன.
சரஸ்வதி மகால் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் 24,165 ஓலைச்சுவடிகளும், 23,169 காகிதச் சுவடிகளும், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுதப் பட்ட 3 லட்சம் மோடி எழுத்து வடிவ ஆவணங்களும் உள்ளன (சரிபார்க்கப்படவேண்டும்)
சரஸ்வதி மகால் நூலகத்தில் நாற்பத்தொன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஓலை மற்றும் காகிதத்தில் எழுதப்பட்ட சுவடிகள் உள்ளன[2]. அதில் வடமொழிச் சுவடிகள் 39,000, தமிழ்ச் சுவடிகள் 4,200, மராத்தி ஓலைச் சுவடிகள் 3000, தெலுங்குச் சுவடிகள் 800 போன்றவை குறிப்பிடத்தக்கன. (சரிபார்க்கப்படவேண்டும்).
சுவடிகளை படியெடுக்கும் பணியும், தொகுக்கப்பட்ட சுவடிகளுக்கு உரிய அட்டவணையும் சரபோஜி மன்னர் காலத்தில்தான் முதல் முதலாகத் தயாரிக்கப்பட்டது.
அரிய நூல்கள்
ஆர்தர் கோக் பர்னல்[3] மற்றும் ஜோஹன் ஜார்ஜ் புஹ்லெர்[4] போன்ற சமஸ்கிருத மற்றும் இந்திய மொழி அறிஞர்கள் . சரஸ்வதி மகால் நூலகம் குறித்து ’உலகிலேயே மிகப் பெரியதும் முக்கியத்துவம் வாய்ந்த நூலகம்’ என்றும், ’பல பயனுள்ள மற்றும் மிகவும் அரிதான தனித்துவமான புத்தகங்கள் உள்ளன, அவற்றில் பல அறியப்படாதவை அல்லது பெரும் சிரமம் மற்றும் பொருட்செலவில் மட்டுமே வாங்கக்கூடியவை’ என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம் மற்றும் திருக்குறள் முதலிய பல்வேறு பழமையான நூல்கள், 300 ஆண்டுகளுக்கு முன்னர் படியெடுத்து எழுதப்பட்டு இங்கு சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளன. 1719ஆம் ஆண்டு முதல் எழுதப்பட்ட கம்பராமாயணத்தின் ஏழு காண்டங்கள் அடங்கிய ஓலைச்சுவடி, மிகச்சிறிய ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ள பஞ்சபட்சி சாஸ்திரம், பர்மிய எழுத்தில் உள்ள சமஸ்கிருதச் சுவடி, வங்க எழுத்தில் எழுதப்பட்ட தத்துவ சிந்தாமணி என்ற சமஸ்கிருதச் சுவடி, ஒரிய எழுத்தில் எழுதப்பட்ட ஏகாம்பர புராணம் என்ற சமஸ்கிருதச் சுவடி போன்ற பல அரிய சுவடிகள் இங்கு இருக்கின்றன.
ஓவியங்கள்
இந்திய, ஐரோப்பிய நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படங்கள், உடற்கூறு, தாவரம் முதலிய பல நிறப்படங்கள், சிறந்த ஓவியங்கள் முதலியவை உள்ளன.
மருத்துவ சுவடிகள்
மோடி எழுத்து
மராத்திய மன்னர்களின் ஆட்சியில் அரசாங்க அலுவல்களில் உபயோகிக்கப்பட்டு வந்தவை மோடி எழுத்து எனப்படும் வகை. இந்த மோடி எழுத்தில் எழுதப்பட்ட காகிதச்சுவடிகள் உள்ளன.
அருங்காட்சியகம்
பல்வேறு அரிய ஓவியங்கள், ஓலைச்சுவடிகள், மன்னர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நூலகப் பதிப்புகள்
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் இதுவரை 500க்கும் மேற்பட்ட அரிய சுவடிகளை புத்தகங்களாகப் பதிப்பித்துள்ளது. இங்குள்ள தமிழ் சார்ந்த ஆவணங்களில் மிகச்சிறு பகுதியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது, மேலும் பல ஆவணங்கள் இன்னும் அச்சுக்கு வரவில்லை.
உசாத்துணை
சரஸ்வதி மஹால் ஓர் கண்ணோட்டம் - S. கோபாலன்
THE SARASWATI MAHAL, TANJORE Dr.Raghavan. Professor of Sanskrit, (Retd) University of Madras
அடிக்குறிப்புகள்
- ↑ THE TANJORE MAHARAJA SARFOJI’S SARASVATI MAHAL LIBRARY, TANJORE - Ms.P.P.S. SASTRI, B.A (OXOD), M.A., M.R.A.S.MADRAS
- ↑ http://www.tmssmlibrary.com/
- ↑ தென்னிந்தியாவில் உள்ள சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை, குறிப்பாக தஞ்சை அரசவைத் தொகுப்புகளில் உள்ளவற்றை தொகுத்துப் பட்டியலிட்டவர்
- ↑ பிரகிருத மொழி அகராதி வெளியிட்டவர்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.