under review

டி.எஸ். செளந்தரம்

From Tamil Wiki
Revision as of 13:00, 26 March 2024 by Ramya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
டி.எஸ். சௌந்தரம்

டி.எஸ். சௌந்தரம் (சௌந்தரம் அம்மா) (ஆகஸ்ட் 18, 1904 - அக்டோபர் 21, 1984) மருத்துவர், காந்தியவாதி, சமூக செயற்பாட்டாளர். சட்டமன்ற உறுப்பினர் , மத்திய அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர் என பதவிகள் வகித்தவர். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், கஸ்தூரிபாய் மருத்துவமனை, காந்திகிராம அறக்கட்டளை ஆகியவற்றை நிறுவியவர். மதுரையில் இருக்கும் காந்தி அருங்காட்சியகம் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். பெண்கள், குழந்தைகள், பட்டியலின மக்கள், கிரமப்புற மக்களின் வாழ்வுக்காக செயல்பட்டவர். காந்திக்கு அணுக்கமானவர்.

பிறப்பு, கல்வி

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி எனும் ஊரில் டி.வி. சுந்தரம் அய்யங்கார், லட்சுமி இணையருக்கு ஆகஸ்ட் 18, 1904-ல் பிறந்தார். தந்தை டி.வி. சுந்தரம் தென்னிந்தியாவின் பிரபலமான டி.வி.எஸ் குழுமத்தின் நிறுவனர். தாய் லட்சுமி சமூக சேவகர். சௌந்தரம் திருக்குறுங்குடியில் உள்ள பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். முத்தையா பாகவரிடம் வீணை இசை கற்றார். பத்தாவது வயதில் வாய்ப்பாட்டிலும் வீணையிலும் தேர்ச்சி பெற்றார். மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1928-ல் தில்லியில் உள்ள ஹார்ட்டின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்றார். 1936-ல் மருத்துவராகப் பட்டம் பெற்றார்.

டி.எஸ். செளந்தரம், ஜி. ராமச்சந்திரன்

தனி வாழ்க்கை

டி.எஸ். சௌந்தரம் (நன்றி: தினமணி)

பன்னிரெண்டாம் வயதில் டாக்டர் சுந்தரராஜனுடன் திருமணம் நடந்தது. சுந்தரராஜன் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தபோது பிளேக் நோய் தாக்கி உயிரிழந்தார். கணவரின் இறுதி ஆசைப்படி மருத்துவம் படித்து முடித்தபின் சௌந்தரம் மதுரையில் சொந்தமாக இலவச மருத்துவமனையை ஆரம்பித்தார். கல்லூரியில் சுசீலா நாயரின் நட்பின் மூலம் காந்தியின் தொடர்பு கிடைத்தது. கிராமப்பகுதிகளில் காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த அரிஜன சேவை சங்கத்தைச் சேர்ந்தவரும், காந்தியின் சீடருமான கேரளத்தைச் சேர்ந்த ஜி. ராமச்சந்திரனைக் காதலித்து காந்தி முன்னிலையில் சீர்திருத்த முறையில் திருமணம் செய்தார். இந்திராகாந்தியின் தோழி.

இந்திரா காந்தி, டி.எஸ். செளந்தரம், நேரு

அரசியல் வாழ்க்கை

விடுதலைப் போராட்டத்தில் காந்திய வழியில் போராடினார். அந்நியத்துணி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களை ஒருங்கிணைத்தார். 1952-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 1952-ல் சென்னை மாகாண உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை மாவட்ட சமுதாய திட்ட அலுவலராகப் பதவி வகித்தார். பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார். 1956-ல் இந்திய-சீன நட்புறவுக் கூட்டமைப்பின் சார்பில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஊரக வளர்ச்சித்திட்டங்கள் குறித்து கற்றறிந்தார்.

1957-ல் சட்டப்பேரவைத்தேர்தலில் திண்டுக்கல் வேடச்சந்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962-ல் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967வரை ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அமைச்சரவையில் மத்தியக் கல்வித்துறை துணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். பெண்களுக்கான கிராமப்புற மையத்தை இந்தூரில் தொடங்கினார். கட்டாய இலவச ஆரம்பக்கல்வியை அறிமுகம் செய்தார். 1960-ல் காதி மற்றும் கிராமத்தொழில் வாரியத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார்.

அறம் வளர்த்த அம்மா

சமூக செயற்பாட்டாளர்

டி.எஸ். சௌந்தரம் மருத்துவராகப் பகலில் பணிபுரிவார். இரவில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களைச் சந்தித்து அந்தத் தொழிலை விட்டுவிடும்படி கேட்பார். விதவைப் பெண்களுக்கான மையத்தை நடத்தினார். மீனாட்சி விடுதி ஒன்று அவர்களுக்கான தங்கும் இடமாக மதுரையில் இருந்தது.

டி.எஸ். சௌந்தரம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு காந்தியடிகளின் அரிஜன இயக்கத்தில் இணைந்தார். பெண்களின் வளர்ச்சிக்கும், கிராமப்புற குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பங்காற்றினார். முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து சென்னையில் குழந்தைகளுக்கான அவ்வை -ல்லத்தையும் கிராமப்புற மக்களுக்கான அவ்வை நல்வாழ்வு மையத்தையும் தொடங்கினார். கஸ்தூரிபாயின் மறைவுக்குப் பின் தொடங்கப்பட்ட "கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளைக்கு" காந்தி மாகாண வாரியாக ஆலோசனை அமைக்க முடிவு செய்தார். செளந்தரத்தை தென்னிந்தியப் பிரதிநிதியாக நியமித்தார். கஸ்தூரிபாய் அறக்கட்டளை வெள்ளிவிழா கண்டபோது மதிப்பீட்டுக்குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காந்தி கிராமம்

டி.எஸ். செளந்தரம் அஞ்சல்தலை

செளந்தரம் 1942-ல் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் கிராமிய உயர்கல்வி நிறுவனத்தை நிறுவினார். அவ்வாறு தொடங்கிய காந்தி கிராம அறக்கட்டளை 1976-ல் தன்னாட்சி பெற்ற காந்திகிராம பல்கலைக்கழகமாக மாறியது. காந்திகிராமத்தில் கல்வி, உடல்நலம் மற்றும் குடும்ப நலத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். காதி மற்றும் கிராமத்தொழில் மேம்பாட்டிற்கு உதவினார். காந்திகிராம வளாகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் காப்பகம் ஏற்படுத்தினார். காந்தி கிராமத்தில் கஸ்தூரிபாய் மருத்துவமனையை நிறுவினார். டி.எஸ். சௌந்தரம் ஜனவரி 3, 1980 முதல் அக்டோபர் 21, 1984 முடிய காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தார்.

விருதுகள்

டி.எஸ். செளந்தரம் பத்மபூஷன் விருது பெறும்போது
  • 1962-ல் பத்மபூஷன் விருது பெற்றார்.
  • இந்திய அரசு 2005-ல் டி.எஸ். சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டது.
  • 1971-ல் குடும்பநல சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதால் கஸ்தூரிபாய் மருத்துவமனை தேசிய விருது பெற்றது.

மறைவு

டி.எஸ். சௌந்தரம் அக்டோபர் 21, 1984-ல் காலமானார். அவரின் கண்கள் அரவிந்த் கண் மருத்துவனைக்கு தானமாகக் கொடுக்கப்பட்டு பார்வையிழந்தவருக்கு பொருத்தப்பட்டது.

டி.எஸ். செளந்தரம்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page