under review

ஞான பைரவர்

From Tamil Wiki
Revision as of 14:43, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
Gnana-bairavar2.jpg

ஞான பைரவர்: சிவனின் வடிவாகக் கருதப்படும் பைரவரின் ஒரு வடிவம். ஞானத்தையும், முக்தியையும் வழங்கும் துணை தெய்வம்.

பைரவர்

இலங்கை சிறுப்பட்டி ஞான பைரவர் கோவில்

சிவன் கோவில்களில் துணை தெய்வமாக வழிபடப்படும் கடவுள். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் கால பைரவராக வடக்கிழக்கு திசையில் தெற்கு நோக்கிய படி நின்றிருப்பார். கோவில் பாதுகாவலராகவும் கருதப்படுகிறார். சிவனின் ஐந்து புதல்வர்களுள் ஒருவர் பைரவர் என்ற கருத்தும் உள்ளது (கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார், பைரவர்). சிவனின் வடிவமாகவும் கொள்வர். பார்க்க: பைரவர்

ஞான பைரவர்

ஞான பைரவர் சிவன் முக்தீஸ்வரராக அமைந்த கோவில்களில் துணை தெய்வமாக உள்ளவர். இவர் ஞானத்தையும், முக்தியையும் வழங்கும் கடவுளின் வடிவமாகக் கருதப்படுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று தொழிலையும் செய்யும் சிவனின் வடிவமாகக் கருதப்படுகிறார். பைரவரின் கையில் உள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், கபாலம் காத்தல் தொழிலையும், உடலில் மேலுள்ள விபூதி அழித்தல் தொழிலின் குறியீடாகவும் உள்ளது. ஞான பைரவருக்கு யாழ் பாணத்தின் அருகே உள்ள மேற்கு சிறுப்பட்டி கிராமத்தில் தனி கோவில் உள்ளது. தமிழகத்தில் கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் துணை தெய்வமாக உள்ளார். திருகோஷ்டியூர் அடுத்துள்ள வையிரவன்பட்டி கிராமத்தில் மெய்ஞான சுவாமி சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலவர் லிங்க வடிவில் அமைந்த மெய்ஞான சிவன், இங்கே கோவிலின் வடக்கிழக்கு திசையில் தெற்கு நோக்கிய படி ஞான பைரவரின் சன்னதி உள்ளது. இங்குள்ள ஞான பைரவர் உக்ர மூர்த்தியாகவும், காபாலிகர்களால் வழிபடப்பட்ட கடவுளாகவும் கருதப்படுகிறார்.

வடிவம்

ஞான பைரவர் இருக்கரங்களில் வலது கையில் சிவனைப் போல் உடுக்கையையும், இடது கையில் பாசத்தையும் கொண்டுள்ளார். திருசூலமும், திருகலசமும் தாங்கிய நான்கு கை சிற்பங்களும் உள்ளன. காலில் சிலம்பும், நீலமேனியும் கொண்டுள்ளார். கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்திருக்கிறார். கால பைரவரைப் போல் ஞான பைரவருக்கு நாய் வாகனமாக இருப்பதில்லை. ஞான பைரவர் நின்ற கோலத்தில் உள்ளார்.

வழிபாடு

கோயம்புத்தூரில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் நாற்பத்தியெட்டு வாரம் விரதம் இருந்து பூஜை நிகழ்த்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜையும் உள்ளது. சரஸ்வதி வடிவாகவும், முக்தியை அருளும் சிவனின் வடிவாகவும் ஞான பைரவர் கருதப்படுகிறார். சனீஸ்வரரின் குரு ஞான பைரவர் என்ற கருத்தும் உள்ளது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page