ஞானரதம்

From Tamil Wiki
Revision as of 11:15, 13 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஜனவரி 1970இல் ஜெயகாந்தனை ஆசிரியராகவும் தேவ. சித்ரபாரதியை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு ஞானரதம் மாத இதழ் வெளிவரத் தொடங்கியது. ஜெயகாந்தன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவரையிலும் ‘மு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜனவரி 1970இல் ஜெயகாந்தனை ஆசிரியராகவும் தேவ. சித்ரபாரதியை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு ஞானரதம் மாத இதழ் வெளிவரத் தொடங்கியது. ஜெயகாந்தன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவரையிலும் ‘முன்னோட்டம்’, ‘உரத்த சிந்தனை’ (கேள்வி – பதில் பகுதி), கவிதைகள் தொடர்ந்து எழுதினார். அந்தக் காலகட்டத்தில் சில இதழ்களை ஞானக்கூத்தன், வல்லிக்கண்ணன், பரந்தாமன் ஆகியோர் தயாரித்தனர். ஒன்பது இதழ்களுக்குப் பின் ஒரு இடைவெளி. பிப்ரவரி 1972இல் பத்தாவது இதழிலிருந்து தேவ. சித்ர பாரதியின் ஆசிரியப் பொறுப்பில் இதழ் வெளிவரத் தொடங்கியது. கவிதைகளின் தேர்வில் கறாரான இலக்கியப் பார்வை இல்லை என்பதை இப்போது இதழ்களைப் புரட்டிப் பார்க்கும்போது தெரிகிறது. ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவல் தொடராக வெளிவந்தது. ஜி. என். சிறுகதைகள், கவிதைகளும் ஞானரதத்தில் எழுதினார். ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தார். ஞானரதம் வெளியிட்ட க. நா. சு., சி. சு. செல்லப்பா, ந. சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோரது மணி விழா மலர்கள் முக்கியமானவை.

ஆறாண்டுகள் இடைவெளிக்குப்பின் சுந்தர ராமசாமி எழுதிய ‘பல்லக்குத் தூக்கிகள்’ சிறுகதை ஞானரதம் ஆகஸ்ட் 1973 இதழில் வெளியானது. எழுத்தாளர்களின் ‘உரத்த சிந்தனை’ பகுதி தொடர்ந்து வெளியானது. அக். 1973 இதழில் ‘ரசமட்டம்’ பகுதியில் சுந்தர ராமசாமியின் ‘ஆந்தைகள்’ கவிதை பற்றி ந. முத்துசாமி எழுதியது சர்ச்சையைக் கிளப்பியது. அது தொடர்பாக நகுலன், சுந்தர ராமசாமி இருவரும் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தி எழுதவேண்டியதாயிற்று. மே – ஜூலை 1974இல் 37 – 39வது இதழுடன் ஞானரதம் நின்றது. மீண்டும் 1983இன் பிற்பகுதியில் இருமாதம் ஒருமுறை இதழாக வெளியீட்டைத் தொடங்கியது. 1985வரையிலான இந்தக் கால கட்டத்தில் இதழின் தரம் மிகவும் சாதாரணமாகவே இருந்தது. பின்னர் 1986இல் க. நா. சுப்ரமண்யத்தைச் சிறப்பாசிரியராகக் கொண்டு மாத இதழாக வெளிவரத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் அது இலக்கிய வட்டத்தின் சாயலையே கொண்டிருந்தது. க. நா. சுவின் வள்ளுவனும் தாமஸ§ம் நாவல் தொடராக வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் க. நா. சு., வண்ணநிலவன் இருவரின் பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்தவையாக இருந்தன. ஜனவரி 1987இல் மீண்டும் ஞானரதம் நிறுத்தப்பட்டது.