ஞானசம்பந்தம் (இதழ்)
சைவ சமயத்தின் சிறப்பைக் கூறும் இதழாக 1941 டிசம்பரில் தொடங்கப்பட்ட இதழ் ஞானசம்பந்தம். தருமபுர ஆதினம் 24வது மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்த இதழைத் தொடங்கினார்.
பதிப்பு, வெளியீடு
சைவ சமயத்தின் சிறப்பு, வேதத்தின் பெருமை, ஆகமத்தின் முக்கியத்துவம், குருஞான சம்பந்தரின் பெருமை போன்றவற்றை ஆன்மிக ஆர்வலர்கள் உணர்ந்து கொள்வதற்காக 1941, டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது ஞானசம்பந்தம். இதனை தருமபுர ஆதினகர்த்தராக இருந்த சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். தருமபுர ஆதின மடம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது.
உள்ளடக்கம்
சைவ சமயத்தின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்வதற்காக வெளிவந்த இதழ் ’ஞானசம்பந்தம்’ என்கிறது இதழின் குறிப்பு. ஞானசம்பந்தம் இதழை ஒடுக்கம் ஸ்ரீ சிவகுருநாதத் தம்பிரான் ஆசிரியராக இருந்து வழிநடத்தினார். தருமை ஆதினத் தலைவரின் கட்டுரைகளும், அருளுரைகளும் ஆன்மிக விளக்கத் தொடர்களும் இதழில் வெளியாகின. தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் இவ்விதழில் கட்டுரைகள் இடம்பெற்றன. சைவ சமயத்தின் பெருமை, வேதத்தின் மேன்மை, ஆகமத்தின் முக்கியத்துவம், தருக்கசங்கிரக விளக்கம் என பல்வேறு செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது.