standardised

ஜோஹான் பிலிப் பப்ரிஷியஸ்

From Tamil Wiki
Revision as of 18:26, 21 April 2022 by Tamaraikannan (talk | contribs)
ஜோஹான் பிலிப் பப்ரிசியஸ்

ஜோஹான் பிலிப் பப்ரிஷியஸ் (ஜனவரி 22, 1711 - ஜனவரி 23, 1791) ஜெர்மனி நாட்டு கிறித்தவ மதப் போதகர், தமிழறிஞர். ஆங்கில-தமிழ் அகராதி, தமிழில் கிறித்தவ வேதாகமம் எழுதியது முக்கியமான பங்களிப்பு.

பிறப்பு, கல்வி

ஜெர்மனி நாட்டில் பிராங்க்ஃபர்ட்டில் கிலீபெர்க் என்ற ஊரில் பிறந்தார். யூறா, ஹாலே பல்கலைக்கழகங்களில் பயின்று அக்டோபர் 28, 1739-ல் கிறித்தவ மத போதகர்களுக்கான குரு பட்டம் பெற்றார். இந்தியாவில் கிறித்தவ சமயத்தை வளர்க்கும் நோக்கத்துடன் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவரைப் பற்றிய செய்திகளை, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "அற்புதநாதர்" லுத்தரன் ஆலயச் சுவரிலுள்ள கல்வெட்டில் உள்ளன. இவரை ‘சன்னியாசி குரு’ என்று அழைத்தனர். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர் சபையின் பொருளாளராக இருந்தார். பணத்தை வட்டிக்குக் கொடுத்து லாபம் சம்பாதிக்கும் காரியத்தில் தோல்வியடைந்ததால் இவரின் வாழ்நாளின் கடைசி 13 ஆண்டுகளில் அடிக்கடி சிறை செல்ல வேண்டியிருந்தது.

1746-ல் பிரான்ஸ் நாட்டினர் சென்னையைக் கைப்பற்றியதால் ஜெர்மானியரான பப்ரிஷியஸ் பழவேற்காட்டுக்குத் தப்பியோட வேண்டியதாயிற்று. இவர் திரும்பி வருவதற்குள் இவர் கட்டிப் பராமரித்து வந்த சில பள்ளிக்கூடங்கள் கத்தோலிக்கக் குருக்களால் கையகப்படுத்தப்பட்டது. 1757, 1767, 1780 ஆகிய ஆண்டுகளில் பப்ரிஷியஸ் தன் இருப்பிடத்தை விட்டு அகன்று வேறு இடங்களில் அடைக்கலமாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் யுத்தத்தினால் ஏற்பட்ட பஞ்சங்களால் இவரும், இவருடைய சபையாரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சென்னை அற்புத நாதர் ஆலயத்திலுள்ள கல்வெட்டு

ஆன்மீகப்பணி

செப்டம்பர் 8, 1740 - டிசம்பர் 4, 1742 வரை தரங்கம்பாடியில் கிறித்தவ மதப்பணிகளைச் செய்தார். தரங்கம்பாடி லுத்தரன் சபையைச் சேர்ந்த குருக்கள் இவரை சென்னையில் நடத்தி வந்த ஊழியத்திற்கு தலைமைப் பொறுப்பேற்கச் செய்தனர். 49 ஆண்டுகள் சென்னையில் கிறித்தவ சமயத் தொண்டாற்றினார். சென்னையில் இவருடைய சபையில் பல்வேறு நாட்டினர் இருந்ததால், அவர்களிடையே பிரசங்கம் செய்வதற்காக ஜெர்மன், டச்சு, போர்ச்சுக்கீசியம், ஆங்கிலம், தமிழ் ஆகிய ஐந்து மொழிகளிலும் பிரசங்கம் செய்தார். இந்த சபை பிரசங்கம் தவிர, வெளி ஊர்களுக்கும் சென்று பல நாட்கள் தங்கியிருந்து கிறித்தவ சமயப் பணியைச் செய்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழில் இலக்கியங்களையும், செய்யுட்களையும் கற்றறிந்தார். இவர் ஒன்பதாயிரம் சொற்கள் கொண்ட ஆங்கில-தமிழ் அகராதியை எழுதி வெளியிட்டார். அதன் பிறகு கிறித்தவ வேதாகமத்தில் சீகன்பால்க் மொழிபெயர்ப்பு சரியில்லாத காரணத்தாலும், ஜூல்ச் ஐயரின் மொழிபெயர்ப்பில் அதிகமான பிழைகள் காணப்பட்டதாலும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக ஒரு தமிழ் கிறித்தவ வேதாகமம் சபையாருக்குத் தேவை என்பதை உணர்ந்து 1752-ல் வேதாகம மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கினார். 20 ஆண்டுகள் செயல்பட்டு 1772-ல் தமிழ் வேதாகமத்தை உருவாக்கினார். சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் கூடச் செய்து தான் மொழிபெயர்த்த பகுதியை உபதேசியார் மூலம் வாசித்துக் காட்டச் சொல்லி அவர்களுக்கு விளங்காதது ஏதாவது இருந்தால் அதைத் திருத்தி எளிய மொழிபெயர்ப்பை உருவாக்கினார். இறுதியாக தரங்கம்பாடியிலுள்ள சீகிலின் ஐயருக்கும், தானியேல் என்பவருக்கும் அனுப்பி பரிசீலித்தார். 1772-ல் சென்னை கிறித்தவ மார்க்க கல்வி அபிவிருத்திச் சங்க SPCK அச்சகத்தில் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டது.

வேதாகமத்தில் ஒத்த வாக்கியக் குறிப்புகள் பக்கங்களின் கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தன. புதிய ஏற்பாடு முடிந்ததும், பப்ரிஷியஸ் பழைய ஏற்பாட்டு வேலையைத் தொடங்கினார். இந்த மொழிபெயர்ப்பு இன்று வழக்கில் இல்லை. ஆனால் இதற்குப்பின் வந்த மொழிபெயர்ப்புகளில் இதன் தாக்கம் உள்ளது. பழைய ஏற்பாடு பாகம் பாகமாய் அச்சிடப்பட்டது. 1777-ல் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரை, 1782-ல் ரூத் முதல் யோபு வரை, 1791-ல் சங்கீதங்கள் முதல் உன்னதப்பாட்டு வரை, 1796-ல் தீர்க்கதரிசன நூல்களும் அச்சிடப்பட்டன.

மறைவு

ஜனவரி 23, 1791-ல் பப்ரிஷியஸ் காலமானார். அவர் இறந்தபோது அவருடைய உடலை லுத்தரர்கள் சென்னையில் அவர்களின் ஆளுகையில் இருந்த சிற்றாலய வளாகத்தில் நல்லடக்கம் செய்தனர்.

நூல் பட்டியல்

  • வேதாகம மொழிபெயர்ப்பு
  • ஆங்கில-தமிழ் அகராதி

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.