ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 76: | Line 76: | ||
* https://tamilnation.org/hundredtamils/nallaswami_pillai.htm | * https://tamilnation.org/hundredtamils/nallaswami_pillai.htm | ||
[[Category:Ready for Review]] | [[Category:Ready for Review]] | ||
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --> | |||
{{being created}} | |||
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --> | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 09:17, 25 January 2022
ஜே. எம். நல்லுச்சாமிப்பிள்ளை [ஜே.எம்.நல்லசாமி பிள்ளை] சைவசித்தாந்த ஆராய்ச்சியாளர், இதழாளர், சொற்பொழிவாளர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சைவ மீட்பு இயக்கத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். மாவட்ட நீதிபதியாகப் பணிபுரிந்தார்
வாழ்க்கை
ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை திருச்சியில் 1864 ஆம் ஆண்டு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் மாணிக்கம்பிள்ளைக்கு மூன்றாம் மகனாகப் பிறந்தார். [அவருடைய பெயர் பிற்கால ஆங்கில நூல்களில் நல்லசாமிப்பிள்ளை என பிழையாக அளிக்கப்பட்டிருக்கிறது ] அவருடைய தந்தை மாணிக்கம் பிள்ளை மாவட்ட காவல்துறையில் எழுத்தராகப் பணிபுரிந்தார். திருச்சி எஸ்.பி.ஜி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின்னர் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்தார். சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்து 1884ல் பி.ஏ பட்டம் பெற்றார். 1886ல் பி.எல் பட்டமும் பெற்றார். கல்வியில் மிகச்சிறந்த மாணவராக இருந்த நல்லுச்சாமிப்பிள்ளை முதலிடத்திலேயே வெற்றிபெற்று வந்தார்.அவருடைய இரு ஆசிரியர்கள் டாக்டர் டி.டங்கன், திரு பில்டர்பெக் ஆகியோர் அவரைப்பற்றி மிக உயர்ந்த மேதமையை வெளிப்படுத்தும் மாணவன் என பதிவுசெய்திருக்கிறார்கள். கல்லூரியில் தத்துவம், தர்க்கவியல், வரலாறு ஆகியவற்றை முதன்மைப்பாடங்களாகக் கற்றார்.
1887ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். மதுரையில் சர்.எஸ்.சுப்ரமணிய ஐயரின் கீழ் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றினார். பின் திருப்பத்தூர் மாவட்ட முன்சீப் ஆக 1893ல் பதவியேற்றார். இருபதாண்டுகள் வெவ்வேறு ஊர்களில் பணியாற்றினார். பொதுவாக பல வழக்குகளில் ஆங்கில அரசுக்கு ஒத்துப்போகும் நிலையை அவர் எடுக்கவில்லை என்பதனால் அவர் விசாரணைசெய்யப்பட்டார். ஆகவே 1912ல் பதவியை உதறிவிட்டு மீண்டும் மதுரையிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
தனிவாழ்க்கை
ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை 1884ல் தன் உறவினர் பரசுராம பிள்ளையின் மகள் லட்சுமியம்மாளை மணந்தார். இவருக்கு ஒருமகன் மூன்று பெண்கள். இவரது மகன் ராமநாதன் சைவ சித்தாந்தத்தின் ஆர்வம் உடையவராக அறியப்பட்டிருந்தார்.
இறப்பு
ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை 1920 ஆகஸ்ட் 11 ஆம் நாள் மதுரையில் தன் ஐம்பத்தாறாம் வயதில் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.
பங்களிப்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாக்ஸ்முல்லர் போன்ற ஐரோப்பிய இந்தியவியலாளர்களால் இந்திய தத்துவ-சமய நூல்கள் ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் மொழியாக்கம்செய்து வெளியிடப்பட்டன. அதை ஒட்டி நாடெங்கும் படித்த இந்தியர் மத்தியில் இந்திய தத்துவங்களைப்பற்றிய விழிப்புணர்வு உருவானது .வேதாந்தம், விசிஷ்டாத்வைதம் போன்ற தரப்புகளை முன்வைக்கும் இதழ்களும் பல்வேறு வரலாற்று ஆராய்ச்சி இதழ்களும் உருவாகின.
இக்காலகட்டத்தில் இந்திய சிந்தனையைப்பற்றிய மனவரைபடம் ஒன்று உருவானபோது அதில் சைவ சித்தாந்தத்துக்கு இடம் இருக்கவில்லை. காரணம், முன்னோடிகளான மாக்ஸ்முல்லர் மோனியர் வில்லியம்ஸ் போன்றவர்கள் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. இதற்குக் காரணம் காஷ்மீர சைவம், வீர சைவம் போன்ற வழிபாட்டுமுறைகளாகவே சைவம் அறியப்பட்டிருந்தது என்பதே. சைவத்துக்கு தனித்துவம் கொண்ட ஒரு தத்துவ அமைப்பு தமிழகத்தில் இருந்ததை இந்திய அளவில் முன்வைக்க எவரும் இருக்கவில்லை. அந்த வரலாற்றுப் பாத்திரத்தை ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை நிறைவுசெய்தார். அதற்கு சித்தாந்த தீபிகை பெரும் பங்களிப்பை ஆற்றியது.
ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை மூன்று வகையில் சைவசித்தாந்த மறுமலர்ச்சிக்கு பெரும்பங்களிப்பை ஆற்றினார். பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர்.
பேச்சாளர்
ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த மேடைப்பேச்சாளர். அவரைப்பற்றி எழுதிய அனைவருமே அந்த மேடைப்பேச்சுக்களைப்பற்றி பதிவுசெய்திருக்கிறார்கள். சைவ மறுமலர்ச்சி இயக்கம் என்பது முதன்மையாக மேடைப்பேச்சை சார்ந்தது. அதன் முன்னோடிகள் அனைவருமே மேடைப்பேச்சில் வல்லவர்கள் ஜெ.எம்.நல்லுசாமிப் பிள்ளை மேலைநாட்டு தத்துவ எழுத்துக்களை ஆழ்ந்து கற்றவர். மேலைநாட்டு மேடைப்பேச்சு முறையையும் கூர்ந்து பயின்றவர். சென்னை வழக்கறிஞர் சோமசுந்தர நாயக்கர் ஜெ.எம்.நல்லுசாமிப் பிள்ளையின் மேடைப்பேச்சு முறைக்கு முன்னோடி என்று சொல்லப்படுகிறது.
அக்கால ஹரிகதை, புராணப்பிரசங்கம், தர்க்க விளக்கம் போன்ற முறைகளுக்கு மாறாக கருத்துக்களைச் சங்கிலித்தொடர் போல நீதிமன்ற வாதங்களின் பாணியில் எடுத்துரைப்பது .எம்.நல்லுசாமிப்பிள்ளையின் முறை என்கிறார்கள். அதில் இருந்த நவீன நோக்கும் புதிய வாதமுறைகளும் அக்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரும் கவர்ச்சியை உருவாக்கின. மறைந்த அ.ச.ஞானசம்பந்தம் வரையிலான தமிழறிஞர்கள் பலர் அவரால் கவரப்பட்டவர்கள் என பதிவுசெய்திருக்கிறார்கள்.
ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை வாழ்ந்த காலகட்டத்தில் உலகமெங்கும் சமயங்களைப்பற்றிய விவாதம் உருவாகியது. பலநூறு சமயக்கருத்தரங்குகளும் விவாத அரங்குகளும் உலகமெங்கும் நிகழ்த்தப்பட்டன. ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை பல முக்கியமான இந்திய சமயமாநாடுகளில் பங்கெடுத்து சைவத்தின் தனித்தன்மையைப்பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். 1908 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த சமய மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும் 1911 ல் அலஹாபாத் பலசமயப்பேரவையில் ஆற்றிய உரையும் முக்கியமான சமய ஆவணங்கள் என்று சொல்லப்படுகின்றன.
மொழிபெயர்ப்பாளர்
ஜெ.எம்.நல்லுசாமிப் பிள்ளை சைவ மூலநூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து வெளியிட்டார். 1895ல் சிவஞானபோதம் நூலின் ஆங்கில மொழியாக்கத்தை அவர் லண்டனில் வெளியிட்டார். அப்போது அவருக்கு முப்பது வயதுதான். 1850லேயே ஹொய்சிங்டன் என்ற கிறித்தவ போதகர் சிவஞான போதத்தை மொழியாக்கம் செய்திருந்தாலும் அது சிறந்த மொழியாக்கமாக இல்லை. ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளை 1897ல் திருவருட்பயனை மொழியாக்கம்செய்து வெளியிட்டார். சிவஞான சித்தியார் நூலை 1902ல் நூலாக வெளியிட்டார். 1897 முதல் 1911 வரை பதிநான்கு ஆண்டுகாலம் தொடர்ச்சியாக திருமூலரின் திருமந்திரம் அவரால் அவரது இதழில் மொழியாக்கம்செய்து வெளியிடபப்ட்டது. 1913 முதல் அவர் எழுதிய சிவஞான சித்தியார் உரையே அவருடைய மிகச்சிறந்த படைப்பு என்று கருதப்படுகிறது. பல சிறிய சைவ நூல்களை மொழிபெயர்த்து தன் இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டார் ஜெ.எம்.நல்லுசாமிப் பிள்ளை. பெரியபுராணத்தையும் அவர் மொழியாக்கம்செய்ததாகவும் அது வெளிவரவில்லைஎன்றும் சொல்லபப்டுகிறது. இந்நூல்கள் வழியாக சைவம் குறித்த ஒரு விரிவான சித்திரத்தை இந்திய மெய்ஞானவிவாதப்பரப்பில் உருவாக்க அவரால் முடிந்தது
இதழாளர்
ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை நடத்திய ‘சித்தாந்த தீபிகை’ என்ற இதழ் சைவ மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. 1897 முதல் சித்தாந்த தீபிகை வெளிவந்தது. பெரும்பாலும் சொந்தப்பணத்தைச் செலவிட்டே இதழை ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை நடத்தினார். அவரே மெய்ப்பு நோக்கி அச்சுவேலைகளையும் பார்த்துக்கொண்டார். அவரது செல்வம் முழுக்க அதிலேயே செலவானது. அதில் அவர் நிறைய எழுதினார். பிற ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்தன. சைவத்தமிழறிஞர்களின் கட்டுரைகளை ஆங்கிலத்தில் அவரே மொழியாக்கம்செய்து வெளியிட்டார். அதற்காக பதினெட்டு ஆண்டுகள் அவர் கடும் உழைப்பை மேற்கொண்டிருக்கிறார். அவரது மைந்தர் ராமநாதன் 1911ல் அவரது அனைத்து சைவக்கட்டுரைகளையும் ‘Studies on Saiva Sithaantha’ என்ற பேரில் வெளியிட்டார். இன்றும் சைவசித்தாந்தம் சார்ந்த ஆய்வுகளுக்கு அது ஒரு முக்கியமான மூலநூலாக உள்ளது. விவேகானந்தரின் சிந்தனைகளில் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் பங்களிப்பு கணிசமானது. அவர்கள் இருவரும் விரிவான நேரடி உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்
தத்துவப் பார்வை
ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை சைவசித்தாந்த அறிஞர். வழிபாட்டு முறையிலும் தீவிரமான சைவர். ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் சைவ நோக்கு வடக்கு -தெற்கு, வடமொழி- தென்மொழி, பிரா¡மணர்- பிராமணரல்லாதவர் என்ற பிரிவினைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவருக்கு வடமொழியில் ஆழ்ந்த பயிற்சி இருந்தது. அவரது சித்தாந்த தீபிகை இதழில் முக்கியமான சைவ வடமொழி ஆகமங்கள் மொழியாக்கம்செய்து வெளியிடப்பட்டன. சைவ சித்தாந்தத்தில் பெரும்பங்களிப்பாற்றிய வீ.வீ. ரமண சாஸ்திரி போன்றவர்களை ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை முன்னிலைப்படுத்தினார்.
ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் பங்களிப்பை மிகச்சுருக்கமாக, இரு அடிப்படைக் கருத்துக்களாகச் சொல்லலாம். இந்தியச் சூழலில் சைவம் ஒரு வழிபாட்டு மரபாக மட்டுமே அறிமுகமாகியிருந்தது. அதற்குரிய தத்துவப்பின்புலம் அறிமுகமாகியிருக்கவில்லை. ஆகவே சைவத்தின் லிங்கவழிபாடு, சிவன் சுடலைநீறணிந்து புலித்தோல் உடுத்தது, யானைத்தோல் உரித்து போர்த்தியது போன்ற பல புராணக்கூறுகளை வைத்து அதை ஒரு தொல்சமயமாக , பழங்குடி வழிபாட்டுமுறையில் இருந்து மேலெழாத ஒன்றாக, காணும் மனப்பாங்கு அறிஞர் நடுவே இருந்தது. ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை அந்த மனப்போக்குடன் தீவிரமாக வாதிட்டார் சைவத்தின் புராணக்கதைகளை தொன்மையான ஒரு சமயத்தின் ஆழ்படிமங்கள் மற்றும் குறியீடுகள் மட்டுமே என்று வாதிட்டு, அதன் தத்துவ அடிப்படைகளை நிறுவினார். அவரது உரைகளில் பெரும்பகுதி இதற்கே செலவிடப்பட்டிருக்கிறது. இதை அவர் கடுமையான உழைப்பு செலுத்தி சைவ நூல்களை ஆழக்கற்று உரிய ஆதாரங்களுடன் நிறுவுகிறார். சிவலிங்க வழிபாடு, நடராஜ தத்துவம், முப்புரமெரித்தல் போன்றவற்றைப்பற்றிய ஜெ.எம்.நல்லுசாமிப் பிள்ளையின் ஆய்வுகளும் விளக்கங்களும் முன்னோடித்தன்மை கொண்டவை.
இரண்டாவதாக, சைவ சித்தாந்தத்தை உயர்தத்துவதளத்தில் அத்வைத வேதாந்தத்தின் எளிய மறுபதிப்பாகக் காணும் ஒரு போக்கு அன்றிருந்தது. அதற்கான முகாந்தரம் சைவ சித்தாந்தத்தில் உண்டு என்பது ஒருபுறமிருக்க, அன்றைய பிராமணர் அதில் தேவைக்குமேற்பட்ட ஆர்வமும் காட்டிவந்தனர். தத்துவ நோக்கில் சைவசித்தாந்தத்தின் தனித்துவத்தை நிறுவும் பணியில் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை தொடர்ந்து ஈடுபட்டார். பிரம்மம்,[பதி] ஆத்மா[பசு] மாயை [பாசம்] என்ற கட்டுமானத்தில் சைவ சித்தாந்தம் அத்வைத வேதாந்தத்துக்கு ஒத்துப்போனாலும் மிக முக்கியமான ஒரு வேறுபாடு அதை ஒரு படி மேலே கொண்டுசெல்கிறது என்பது ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் வாதமாகும்.
அத்வைத வேதாந்தம் பிரபஞ்ச உருவாக்கத்துக்கான காரணமாகக் காண்பது மாயையை. அதாவது பொய்த்தோற்றத்தை. இந்த பொய்த்தோற்றம் ஜீவாத்மாவின் தரப்பில் இருந்து உருவாகக்கூடியது. இந்தக் கருதுகோளை அது பௌத்தத்தின் விகல்பம் என்ற கருதுகோளில் இருந்து பெற்று வளர்த்துக்கொண்டது. பிரபஞ்சம் என்பது ஆத்மாவின் கட்சி மயக்கமே என்ற கருத்தை நிராகரிக்கும் சைவ சித்தாந்தம் அது பிரம்மத்தின் விளையாட்டே என்று சொல்கிறது. சிவசக்திநடனமாக அதை விளக்குகிறது.
மாயைக்கோட்பாடு காரணமாக அத்வைத வேதாந்தத்தில் ஒரு உலகநிராகரிப்பும், சோர்வும் உள்ளது என்று சொல்லும் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை சைவசித்தாந்தத்தின் சிவசக்தி நடனக் கோட்பாடு அல்லது அலகிலா ஆடல் என்ற தரிசனம் பிரபஞ்ச இயக்கத்துக்கு மேலும் கவித்துவமும் பொருத்தமும் கூடிய விளக்கத்தை அளிக்கிறது என்கிறார். நம்மைச்சுற்றி நிகழ்பவை நம்முடைய மாயத்தோற்றங்களே என்பதை காட்டிலும் பிரபஞ்சசாரமான ஒன்றின் களியாடலே என்பது வாழ்க்கையை மேலும் முழுமையானதாக ஆக்குகிறது என்கிறார். இந்த இரு பங்களிப்புக்காகவும் ஜெ.எம்.நல்லுசாமிப் பிள்ளை சைவசித்தாந்த மரபில் என்றென்றும் நினைக்கத்தக்கவர்.
வாழ்க்கை வரலாறு
ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் வரலாற்றை கெ.எம்.பாலசுப்ரமணியம் 'The Life and History of J.M.Nalluswami Pillai’ என்றபேரில் நூலாக்கியிருக்கிறார்.
நூல்கள்
- Studies in Saiva-Siddhanta. with an Introduction by V.V. Ramana Sastrin
- Sivagnana Botham of Meykanda Deva
- Thiruvarutpayan: of Umapathi Sivacharya by Umapathi Shivachariyar and J.M.Nallaswami Pillai
- Ivaja Siddhiyr of Arunandi Ivchrya. Translated with Introd., Notes, Glossary Etc. by J.M. Nallaswmi Pillai
- Pura-Porul “The Objectives” (T.A. - Vol. 1 Pt. 6): v. 2, Pt. 6by G.U. ; Nallaswami Pillai J.M. Pope
- சிவஞான போதம் ( Sivagnana Botham ) (Tamil Edition)
- சைவ சித்தாந்த ஆராய்ச்சி ( Saiva Siddhanta Aaraaichi ): உயிரின் தன்மை (Tamil Edition)
இணைப்புகள்
- Siddhanta Deepika - Complete 14 Volumes
- J M Nallaswami Pillai - A trail blazer in Saiva Siddhanta, V. Sundaram, News Today, 19 February, 2008
- ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை: சைவசித்தாந்த முன்னோடி, ஜெயமோகன், மார்ச் 1, 2016
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.